Showing posts with label உறக்கம். Show all posts
Showing posts with label உறக்கம். Show all posts

நல்ல தூக்கம் நல்ல வாழ்க்கை (ஆடியோ தொடர்)


தூக்கம் முக்கியம்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்,  ஆனா அந்த தூக்கம் வந்தாதானேன்னு நம்மள பல பேர் நினைப்போம். நிம்மதியான தூக்கம் நிம்மதியான சிந்தனைகளை தரும். அது நம்ம வாழ்க்கையை நிம்மதியான பாதையை நோக்கி செயல்பட வைக்கும். அப்படிப்பட்ட தூக்கத்தை அடைய இந்த ஆடியோ புக்ல பல டிப்ஸ் சொல்லப்பட்ட இருக்கு. முழுவதையும் கேளுங்க.



ரு மனிதனோட அடிப்படைத் தேவையில் மிக முக்கியமான ஒன்று தூக்கம். படுத்ததுமே தூக்கம் வர்றதெல்லாம் ஒரு வரம்னு சொல்ற அளவுக்கு தற்போதைய உலகம் மாறிவிட்டது. ஏன்னா இப்ப பாதி பேரோட பெரிய பிரச்சனையே தூக்கமா தான் இருக்கு. தூக்கத்துக்கு பின்னால இருக்குற ரகசியத்தைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா கண்டிப்பா அத நீங்க ஃபாலோ பண்ணுவீங்க. உதாரணத்துக்கு நாள் ஃபுல்லா ரொம்ப டயர்டாகிற அளவிற்கு வேலை பார்த்தாலும் தூங்கி எழுந்ததுக்கு அப்புறம் ரொம்ப புத்துணர்ச்சியா இருக்குற மாதிரி நாம் பீல் பண்ணுவோம். டயர்டா இருந்தா நமக்கு ஆட்டோமேட்டிக்கா நமக்கு தூக்கம் நல்லா வரும். தூங்கி எந்திரிச்சா ஒரு புது உற்சாகம் கிடைக்குது. இதுக்கு பின்னால இருக்குற அறிவியலைப் பத்தி கண்டிப்பா நாம தெரிஞ்சுக்கணும். அப்ப தான் நம்ம உடலும் மனசும் தூங்குறப்ப என்ன மாதிரி நிலைக்கு போகுதுங்கறத புரிஞ்சுக்க முடியும். அப்படி நாம புரிஞ்சுக்கிறப்ப நம்மளுடைய நல்வாழ்க்கைக்கும் செயல்பாட்டிற்கும் தூக்கம் எவ்வளவு அவசியம் என்பதை நாம் உணர்வுபூர்வமா உணர முடியும்.

உங்க தூக்கத்தோட தரத்தை மேம்படுத்துவதற்கு பல வழிகள் இருக்கு. நிலையான தூக்க அட்டவனையை உருவாக்குவதில் ஆரம்பித்து இருந்து உங்க வாழ்க்கையில் அன்றாட வழக்கமா கொண்டு வர வரைக்கும் உங்க அன்றாட வாழ்க்கையில ஈஸியா நுழையக்கூடிய சில உதவி குறிப்ப இப்ப நாம பார்க்கலாம்.

முதல்ல தூங்குறதுக்கு தகுந்த சூழலை உருவாக்கணும். சில பேருக்கு கொஞ்சம் சத்தம் கேட்டா கூட தூக்கமே வராது. சில பேருக்கு வெளிச்சம் இருந்தால் தூக்கம் வராது. இன்னும் சில பேருக்கு இருட்டா இருந்தா தூக்கம் வராது. அதனால முதல்ல உங்களுக்கு என்ன மாதிரியான இடம் இருந்தா தூங்க முடியும் அப்படிங்கிறத தெரிஞ்சுக்கனும். அப்பத்தான் உங்க தூக்கத்தை கெடுக்கிற விஷயங்கள எப்படி சமாளிக்கிறது என்பதை உங்களால் தெரிஞ்சுக்க முடியும். அதிலும் குறிப்பாக தூங்க போறதுக்கு முன்னாடி மனச எப்படி லேசா வச்சிக்கிறது அப்படின்னு தெரிஞ்சிக்க முடியும். ஏன்னா சும்மா கண்ண மூடிட்டு படுத்து இருந்தா மட்டும் அது தூங்குறதோட சேராது இல்லையா? ரிலாக்ஸா இருக்குறப்ப மட்டும் தான் நம்மளால நிம்மதியா தூங்க முடியும்.

அடுத்து மனசு ரிலாக்ஸா இருக்குறப்ப உங்க உடம்பும் ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கும். காலையில் புத்துணர்ச்சியா இருக்குறத தாண்டி நல்லா ரெஸ்ட் எடுக்கிறப்ப நம்ம மனசும் உடம்பும் ஆரோக்கியமாக பீல் பண்ணும். குறிப்பா நம்ம அறிவாற்றல் சிறப்பா இருக்கும். அதாவது தெளிவா யோசிக்க முடியும். ரொம்ப தெளிவா பேச முடியும். தூக்கம் இல்லாதப்ப உங்களோட நினைவாற்றல் ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கும். அதுவே நல்ல தூக்கம் உங்க நினைவாற்றலை பலப்படுத்தும். உங்களுடைய கற்பனை திறனையும் அதிகப்படுத்தலாம். நம்ம மனச கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன்னா நம்ம வாழ்க்கையில பல நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சில தப்பான முடிவுகள நாம எடுத்துவிடுகிறோம் இல்லையா? இது எல்லாத்துக்கும் கூட தூக்கம் ஒரு காரணமா இருக்கு. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாறதுக்கும் தூக்கம் வரும் முக்கியமான காரணம்.

உதாரணத்துக்கு மருந்து சாப்பிட்டு தூங்குனா தான் அது ஒழுங்கா வேலை செய்யும். அதனால்தான் மாத்திரை சாப்பிட்டால் குறைந்தது 2 மணி நேரமாவது தூங்கணும்னு டாக்டர் சொல்றாங்க. நம்முடைய ஒட்டு மொத்த ஆயுளையும் நிர்ணயிக்கிற சக்தி தூக்கத்துக்கு இருக்கு. அடுத்து நம்ம ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை பார்க்கலாம். ஏன்னா தூக்கம் என்பது நமது செயலற்ற நிலை மட்டும் கிடையாது. நம்மளோட ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முக்கியமான செயல்பாடு உடைய ஒரு செயல்முறை. ரொம்ப நாளா தூங்காம இருக்க இருகிறதோட விளைவா நாள்பட்ட நோய்கள் வர வாய்ப்பு இருக்கு. குறிப்பா அறிவாற்றல் குறைபாடு மனநல கோளாறு மாதிரியான சில விஷயங்கள் கூட வர வாய்ப்பு இருக்கு. போதுமான தூக்கம் இல்லாம இருந்தா என்னெல்லாம் ஆகும்னு தெரிஞ்சுகிட்டா தான் நமக்கு தூக்கத்தை விட அவசியம் இன்னும் ஆழமா புரியும்.

இப்ப பல பேர் தூங்குறதே கிடையாது. அதுலயும் இப்ப வீட்டுக்கு ஒருத்தர் விடிய விடிய ஸ்மார்ட் போன பாத்துட்டு தூங்காம தான் இருக்காங்க. யாரும் சரியா தூங்குறதே இல்லை. ஒரு மனுஷனுக்கு குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூங்குறது நம்ம எல்லாருக்குமே தெரியும். அப்படி நீங்க தூங்காதப்ப உங்க மூளையிலிருந்து இதயம் வரைக்கும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கு. சரியா தூங்கலைன்னா உங்களால புதுசா ஒரு விஷயத்தை கத்துக்கவே முடியாது. ஏன்னா கவனம் இல்லாம நம்மளால எதையுமே கத்துக்க முடியாது. ஒரு நாள் முழுக்க நீங்க தூங்கலைன்னா உங்க மூளை தூக்கத்துக்காக மட்டும் தான் போராடும் ஏங்கும். அப்படி இருக்குறப்ப நீங்க  ஏதாவது செய்ய முயற்சி பண்ணாலும் அதில உங்களால முழு மனசா செயல்பட முடியாது. தூக்கத்துக்கு பின்னாடி உடல் ரீதியான மாற்றங்கள் மட்டுமல்ல மன ரீதியான மாற்றங்களும் இருக்கு.

எல்லாருக்கும் ஒரு ஸ்லீப்பிங் பேட்டர்ன் இருக்கும் இல்லையா அது என்னன்னு தெரிஞ்சுக்கணும். ஏன்னா எல்லாராலையும் நைட் 9 மணிக்கு படுத்து காலைல நாலு மணிக்கு எந்திரிக்க முடியாது. சில பேருக்கு வேலை முடியறதுக்கு நைட்டு பத்து மணி ஆகும். சிலருக்கு நைட்டு தான் வேலையேஇருக்கும். உங்க வாழ்க்கையில என்ன மாதிரியான வளக்கத்தை பாலோ பண்றீங்க அப்படிங்கறதை நீங்க முதல்ல பாக்கணும். அதுவே உங்களுக்கு போதுமானதாக இருக்கா? இல்ல அந்த வழக்கத்தை இன்னும் கொஞ்சம் மாத்தணுமான்னு முதல்ல உங்கள நீங்களே கேட்டுக்கோங்க. அது சரியா இல்லைன்னு தோணுச்சுன்னா கண்டிப்பா அத மாத்த ட்ரை பண்ணனும்.

இன்னும் தூக்கத்தை பத்தி நிறைய விளக்கமா அடுத்த எபிசோட்ல மிஸ் பண்ணாம கேளுங்க.



தூக்கத்தோட தரத்தை அதிகப்படுத்த வேண்டுமென்றால் முதலில் தூங்குவதுக்கு ஏற்ற மாதிரியான சூழலை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று இப்போது பார்க்கலாம். நம் மனது எப்போதுமே நாம் பார்ப்பதை, நம்மை சுற்றி இருக்குற விஷயங்களை வைத்துதான் முதலில் யோசிக்கும். உதாரணத்திற்கு நீங்கள் ரொம்ப ஆரோக்கியமாக இருந்தாலும் மருத்துவமனைக்குள் செல்லும்போது ஒருவித பயம் தானாகவே உருவாகும். அது பயம்ன்னு கிடையாது அங்கு இருக்கிற சூழல் உங்கள் மனதை கையாள ஆரம்பிக்கும். இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் உங்கள் கூடவே இருக்கும் ஒருவர் சோகமாக இருந்தாரென்றால் தானாகவே நீங்களும் சோகமாக மாறிடுவிடுவீர்கள். அப்படித்தான் நம் பெட்ரூமும், தூங்குவதற்கு ஒரு நல்ல சூழலில் இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். 

பெட்ரூமில் ஜன்னல்

குறிப்பாக பெட்ரூமில் ஜன்னல் இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியமான ஒன்று. ஏனென்றால் வெளிக்காற்று உள்ளே வரும்போதுதான் உள்ள இருக்கும் இறுக்கம் கொஞ்சம் குறையும். முடிந்த அளவிக்கு உங்கள் பெட்ரூமை உங்களுக்கு பிடித்த மாதிரி வைத்துக்கொள்வது நல்லது. உங்களுக்கு பிடித்த கலரில் பெயின்ட் பண்ணுறதுல ஆரம்பித்து மனதிற்கு அமைதியை கொடுக்கின்ற வார்த்தைகளை, படங்களை அங்கு வைக்கலாம். குறிப்பாக உங்கள் மனதை தொந்தரவு செய்கிற எந்தவொரு விஷயத்தையும் உங்கள் பெட்ரூமில் வைக்காதீர்கள். எவ்வளவு மன அழுத்தத்தோடு உங்கள் வீட்டிற்கு வந்தாலும் பெட்ரூமிற்குள் நுழைந்தவுடன் உங்கள் மனது ஓய்வாக உணரவேண்டும். அதுக்கு பெட்ரூமில் உள்ள பொருட்களை எல்லாம் கண்ட இடத்தில் தூக்கி போடக்கூடாது. எது எது எந்த இடத்தில் இருக்குமோ அது அது அந்த இடத்தில் வைக்கிற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

மெத்தை தலையணை

இரவு நன்றாக தூங்க வேண்டுமென்றால் உங்கள் மெத்தை தலையணை எல்லாம் வசதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் உடம்பிக்கு என்ன தேவையென்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். இன்னும் சில பேருக்கு தரையில் படுத்தால் தான் தூக்கமே வரும். சில பேருக்கு மெத்தை எல்லாம் மென்மையானதாக சுத்தமாக இருக்க வேண்டும். சூடாக இருக்க கூடாது. இப்படி எல்லாம் எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக நம் தலையணையை  கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் ரொம்ப பெரிய தலையணையை பயன்படுத்தினால் சிலருக்கு கழுத்து வலி ஏற்படும். சிலருக்கு முதுகு வலி ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு இருக்கு. அதனால் நம் உடலிற்கு தேவையான ஒரு படுக்கை அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

சுத்தம்

அடுத்து சுத்தம். சுத்தம்கறது ஒரு முக்கியமான விஷயம். சுத்தம் அப்படிங்கிறதிலேயே வெளிச்சம் காற்றோட்டம் வெப்பநிலை இவை எல்லாமே வந்துவிடும். சிலர் வீட்டை குப்பை மாதிரி வைத்திருப்பார்கள். அவர்கள் அதிலேயே படுத்தும் பழகி இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் அவர்களது தூக்கத்தை ரொம்ப தொந்தரவு செய்யும். தூங்குறதால அவர்களுக்கு அது தெரியாது அவ்வளவுதான். மற்றபடி சுத்தமில்லாத இடத்தில் தூங்குகிறபோது நாம் சுத்தம் இல்லாத காற்றை சுவாசிக்கிற நிலைக்கு தள்ளப்படுவோம். என்னதான் தூங்கிட்டு இருந்தாலும் அங்க நாம் சுவாசித்து கொண்டுதானே இருப்போம். அதனால் பெட்ரூம் சுத்தமாக இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.

இரைச்சல்

அடுத்து இரைச்சல் இல்லாமல் பார்த்துக்கனும். அதாவது டிவி பாத்துகிட்டே தூங்குறது பாட்டு கேட்டுட்டு தூங்குறது இதெல்லாம் சில பேருக்கு பழக்கமா இருக்கும். இனிமையான இசையை  கேட்டுக்கொண்டே தூங்குவது நல்ல விஷயம் தான் ஆனால் டிவி பாத்துக்கொண்டே தூங்குவது ரொம்ப தப்பு. நீங்கள் தூங்கினாலும் வெளியில் இருந்து கேட்கிற சதம் உங்கள் மூளைய விழிப்புடனே வைத்திருக்கும். அதனால் உங்கள் மூளைக்கு போதிய ஓய்வெடுப்பதற்கான நேரம் கிடைக்காமல் போய்விடும். தேவையில்லாத சிந்தனை, கனவு இதெல்லாம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். 

வெப்பநிலை

அடுத்தது ரூமோட வெப்பநிலை நார்மலாக இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். ரொம்ப குளிரா இருந்தாலும் நம் தூக்கத்தைக் கெடுக்கும். ரொம்ப வெப்பமா இருந்தாலும் நம்ம தூக்கத்தை பாதிக்கும். 

அரோமா தெரப்பி

தூங்குறதுக்கு சில தெரப்பி எல்லாம் உள்ளது. அதை கூட நாம் முயற்சிக்கலாம். உதாரணத்திற்கு அரோமா தெரபி போன்ற சில விஷயங்களை நாம் தூங்குவதற்கு முன்னால முயற்சி பண்ணலாம். அரோமா தெரப்பிக்கும் தூக்கத்துக்கும் என்ன சம்பந்தம்? அப்படிங்கறத பாக்குறதுக்கு முன்னாடி அரோமா தெரப்பினா என்ன என்பதை பார்த்துவிடலாம். நல்ல வாசனை பிடிக்காதவங்கன்னு யாருமே இருக்க மாட்டாங்க. அதுலயும் சில வாசனையை நுகரும்போதே நம் மனது சேர்ந்து அமைதியாகும் அல்லவா? அதுலயும் நமக்கு பிடித்த வாசனையை சுவாசிக்கிறபோது நாம் வேற ஒரு உலகத்துக்கே போயிட்டு வர்ற மாதிரி இருக்கும். அப்படி சில அற்புதமான வாசனைகளை ஸ்பிரே மூலமாக கூட தூங்குறதுக்கு முன்னாடி சுவாசிக்கலாம். இப்ப கேண்டில் மாதிரி கூட வந்திருக்கு. அந்த மாதிரி நல்ல வாசனையை சுவாசிக்கிறப்ப உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும். அது மட்டும் இல்லாமல் இதெல்லாம் உங்களுடைய மன உளைச்சல் மன அழுத்தத்தை குறைக்கும்னு அறிவியல் பூர்வமா நிரூபித்திருக்கிறார்கள். எனவே உங்கள் பெட்ரூம் வாசனையாக இருக்கிறதும் அவசியமான ஒன்று. அதேநேரம் சில பேருக்கு அதிக வாசனை தலைவலியை உண்டாக்கிவிடும். சில பேருக்கு சில ஸ்மெல் அலர்ஜியைக் கொடுக்கும். அதனால உங்களுக்கு ஏற்ற மாதிரியான வாசனை திரவியத்தை உபயோகிக்க வேண்டியது மிக மிக முக்கியமான ஒன்று.

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள்

அடுத்து நாம பார்க்கப் போற பாயிண்ட் ரொம்ப முக்கியமான விஷயம். நிறைய பேர் பின்பற்றாத விஷயம் இதுதான். பெட்ரூம்ல எலக்ட்ரானிக்ஸ் சாதனத்திற்கு அனுமதியே கொடுக்கக் கூடாது. டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் இது மாதிரி எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அது உங்கள் தூக்கத்தை கண்டிப்பா கெடுக்கும். குறைந்தது தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடி அவற்றையெல்லாம் நம்மை விட்டு தள்ளி வைத்துவிட வேண்டும். இதை நாம் யாரும் செய்வதே கிடையாது. மொபைல்ல மூஞ்சிக்கு நேரா வச்சுட்டு தான் பெட்ரூமிற்கே வருவோம். அப்படியே படம் பார்த்துட்டு தூங்குவோம். ஆனால் இதெல்லாம் ரொம்ப தப்பான விஷயம். ஏனென்றால் இந்த எலக்ட்ரானிக் பொருளை பார்ப்பதால் அதன் தாக்கம் நம்மிடம் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இருக்கும். அந்த இரண்டு மணி நேரம் நிச்சயமாக உங்களால் நிம்மதியாக தூங்க முடியாது. கண்ணை மூடி இருக்கிற மாதிரி தெரிஞ்சாலும் உங்க ஆள் மனசு தூங்காமல் விழித்துக்கொண்டுதான் இருக்கும். அதனால் கண் சம்பந்தமாக பிரச்சனைகள் வருவதற்கும் அதிகமான வாய்ப்பிருக்கு. தூங்குவதற்காக இவ்வளவு பண்ணனுமான்னு நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக தூங்வதற்கு இதையெல்லாம் பண்ணித்தான் ஆக வேண்டும். 

இன்னும் தூக்கத்தை பத்தி மாதிரி நிறைய விஷயங்களை விளக்கமா அடுத்த எபிசோட்ல மிஸ் பண்ணாம கேளுங்க.



தூங்குவதற்கு தகுந்த மாதிரியான ஒரு சூழ்நிலையை உருவாக்கினாலும் கூட பலரால் சீக்கிரமாக தூங்க முடிவதில்லை. என்ன செய்தாலும் நான் தூங்குவதற்கு 12 மணிக்கு மேலாகிறது என்று பலர் கேட்கலாம். ஏனென்றால் பலர் எத்தனை மணிக்கு தூங்கச் சென்றாலும் தாமதமாகத்தான் தூக்கம் வருகின்றது என்று கூறுகிறார்கள். அவர்களுக்கான சில டிப்ஸ் இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

நீங்கள் சீக்கிரமாக தூங்குவதற்கு என்ன பண்ணனும், அதற்கு என்னவெல்லாம் தொழில்நுட்பம் இருக்கிறதென்பதை இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம். சில பேருக்கு தூக்கத்தில் இருந்தால் கூட சுற்றி நடக்கின்ற விஷயங்கள் அவர்கள் கவனத்தில் இருந்து கொண்டே இருக்கும். ஒரு சின்ன அசைவுகூட அவர்களை தூங்க விடாமல் தொந்தரவு பண்ணும். அவர்கலெல்லாம் தூக்கத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். சுவாச பயிற்சி தியானம் போன்றவை அவர்களது தூக்கத்துக்கு உதவியாக இருக்கும். அதனால் தூங்குவதற்கு முன் இந்த மாதிரி தியானம் பண்ணுவதால் அவர்களது உடம்பும் சரி மனதும் சரி ரொம்ப அமைதியா உணரும். பொதுவாகவே நாம் குழப்பமாக இருக்கும்போது தூக்கமே வராது. அதுலயும் யார் மேலயாவது கோபம் வெறுப்பு இப்படி ஏதாவது இருந்தால் சுத்தமா தூக்கமே வராது. அந்த மாதிரி நேரத்தில் நாம் தியானம் யோகா போன்றவற்றை பண்ணும்போது நமது மனது அமைதியாகிவிடும். அதன்பிறகு நம்மால் நிம்மதியாக தூங்க முடியும். 

கோபத்தை கட்டுப்படுத்துவதும் தூங்குவதற்கு அவசியமான ஒன்று!

நீங்கள் அடிக்கடி கோபப்படுவீர்களென்றால் அது உங்கள் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும். எனவே கோபத்தை எப்படி நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு விஷயம் உங்கள் மனதில் ரொம்ப நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறதென்றால் அதை உடனே சரி பண்ணிட்டு தூங்குங்கள். என்ன செய்தாலும் இப்போதைக்கு அந்த பிரச்சனை தீராதென்றால் உங்கள் மனதிக்கு முதலில் புரிய வையுங்கள். நாம் யோசிப்பதால் ஒரு விஷயம் நடக்காதென்றால் அதை கொஞ்சம் தள்ளி வைக்கலாமல்லவா... ஏனென்றால் அமைதியாக படுத்து தூங்கினால் தான் தெளிவான ஒரு மனநிலை நமக்கு உருவாகும். 

எல்லாமே நம்மிடம் தான் உள்ளது!

நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக நாம் மகிழ்ச்சியாகத்தான் இருப்போம். அதனால முடிந்தவரை எல்லாவற்றையும் நேர்மறையாக எதிர்கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. அவ்வாறு நீங்கள் இருக்கும்போது உங்கள் மனதும் பதற்றப்படாமல் இருக்கும். சில பேரு எதற்கெடுத்தாலும் ரொம்ப பதற்றப்படுவார்கள், ரொம்ப கோவப்படுவார்கள். ஒரு சின்ன விஷயத்தை கூட ரொம்ப பெரிதாக்குவார்கள். அப்படியெல்லாம் நீங்கள் இருந்தீர்களென்றால் கண்டிப்பாக அந்த குணத்த மாற்றிக்கொள்ள வேண்டியது உங்களது பொறுப்பு. நடந்து முடிந்த ஒரு விஷயத்தை நினைத்து நினைத்து கவலைப்படுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஏனென்றால் அது நடந்து முடிந்து விட்டது. என்ன செய்தாலும் அது நடக்காதது போல் நம்மால் மாற்ற முடியாது. இதை மட்டும் மனதில் நன்றாக பதிவு செய்துகொண்டால் உங்களால் எப்போதும் நிம்மதியாக இருக்க முடியும். 

இரவில் ஸ்மார்ட்போனை தள்ளி வைத்து விட்டாலே தானாகவே தூக்கம் வர ஆரம்பித்துவிடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ரொம்ப முக்கியமான விஷயம் சாப்பாடு!

இரவு நேரத்தில் சில உணவுகளை சாப்பிடவே கூடாது. அதே மாதிரி சாப்பிட்ட உடனே படுக்கவும் கூடாது. உங்கள் இரவு சாப்பாட்டுக்கும் தூக்கத்துக்கும் இடையில குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவேளை இருக்க வேண்டும். அதிகமான எண்ணெய் உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். கீரையை இரவு நேரத்தில் தவிர்ப்பது ரொம்ப நல்லது. எப்பவுமே காலையில் சாப்பிட வேண்டும். மதியம் கொஞ்சம் அளவா சாப்பிடணும். இரவு எளிதில் ஜீரணிக்கக்கூடிய ணவை உட்கொள்வது நல்லது. அதிலும் மெக்னீசியம் அதிகம் உள்ள பொருட்களை இரவு எடுத்துக்கொள்வது தூக்கத்துக்கு ரொம்ப நல்லது. இரவு சாப்பாட்டில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்று. அதேபோல் பகலில் தூங்குவதைவிட இரவு தூங்குவதுதான் நல்லது. பகலில் தூங்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பகலில் தூங்கிவிட்டால் இரவு கண்டிப்பாக தூக்கம் வராது.

தூங்குறதுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கணும்!

எப்பவுமே இந்த நேரம் உங்களுக்கு தூக்கம் வந்தாலும் தூக்கம் வரவில்லை என்றாலும் தூங்குவதற்காக ஒரு நிலையான நேரத்தை ஒதுக்கிவிட்டால் தானாகவே அந்த நேரம் வந்தவுடன் உங்களுக்கு தூக்கம் வர ஆரம்பித்துவிடும். ஆரோக்கியத்துக்கு பிரச்சினை வராத மாதிரி ஒரு நேரத்தை தூங்குவதற்கு ஒதுக்கிக் கொள்ளுங்கள். இதை ஆரம்பத்துல செய்வதற்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். அதை நீங்கள் வாடிக்கையாக பின்பற்றும்போது நமக்கு பழகிவிடும். தூக்கத்தை எப்பவுமே எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. என்றைக்காவது ஒரு நாள் தூங்காமல் வேலை பார்த்தால் தப்பில்லை. அதற்காக தினமும் அப்படி பண்ணா ரொம்ப பெரிய தப்பு. ஏனென்றால் தற்போது ஏற்படுகிற பல நோய்க்கு காரணமே சரியாக தூங்காமல் இருப்பதுதான். தூக்கமே வரவில்லை என்றால் கூட இது ஓய்வெடுப்பதற்கான நேரம் என்று ஒதுக்கிக்கொள்ளுங்கள். தூங்காமல் படுத்திருந்தால் கூட சில சமயம் நன்றாக இருக்கும்.

வெறுமைநிலை!

வெறுமைநிலை தூக்கத்திற்கு பெரிய எதிரி என்று கூட சொல்லலாம். காரணமே இல்லாமல் கவலையாக இருப்பது. ஏதாவதொன்று நம் மனதை போட்டு குழப்பி கொண்டே இருக்கும். அதற்கு சரியான காரணம் நமக்கு தெரியாது. அதற்கான காரணம் நாம் எது மேலையும் ஒரு பிடிப்பு இல்லாமல் இருப்பது. இன்னைக்கான நாள்ல நீங்க உருப்படியா எதுவுமே செய்யலன்னா இந்த பிரச்சனை வரும். எனவே எந்த நாளையும் வீணாக்காமல் முடிந்த வரைக்கும் ஏதாவது ஒரு புது விஷயத்தை கற்றுக்கொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒரு விஷயத்தை சாதித்துவிட்டோம் என்று நாம் உணர்ந்தால் அது கூட நமக்கு ஒரு நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும். இரவு தூங்கச் செல்லும் முன் பேய் படம் பார்க்கிறது ஆக்சன் படம் பாக்குறது இப்படியெல்லாம் பார்பதற்கு பதிலாக புத்தகங்களை படிப்பது, குடும்பமாக உட்கார்ந்து பேசுவது போன்ற சில நல்ல பழக்க வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். 

எண்ணம் போல் தான் வாழ்க்கை என்று நாம் கேள்விப்பட்டிருக்கோம். எனவே நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இன்னும் நமக்கு தெரியாத பல விஷயங்கள் தெரிந்துகொள்ள அடுத்தடுத்த அத்தியாயங்களை பாருங்கள் கேளுங்கள்.



தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று

இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினத்துக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்று. சில உயிரினங்கள் பகலில் தூங்குற வழக்கத்தை வைத்திருக்கும். சில உயிரினங்கள் இரவில் தூங்கும். இமைகளே இல்லாத மீன்களும் தூங்க தான் செய்யும். அதோட வடிவமைப்பு மற்றும் தேவைகளுக்கு தகுந்த மாதிரியான ஒரு தூக்க அட்டவணையை பின்பற்றுகிறது.

மனிதர்களின் தூங்கும் நேரம்

மனிதர்களை எடுத்துக்கொண்டோமானால் ஒவ்வொரு வயதில் உள்ளவர்களின் தூங்கும் நேரம் மாறுபடும். உதாரணத்திற்கு மூன்றிலிருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைங்கள் கண்டிப்பாக பதிமூன்றிலிருந்து பதினான்கு மணி நேரம் வரைக்கும் கண்டிப்பாக தூங்க வேண்டும். ஆறிலிருந்து பன்னிரண்டு வயது வரை உள்ள குழந்தைகள் குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் தூங்க வேண்டியது அவசியமான ஒன்று. பதிமூன்றிலிருந்து பதினெட்டு வயது வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கு குறைந்தது 10 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியமான ஒன்று. அதன்பிறகு சராசரியாக குறைந்தது 8 மணி நேரமாவது எல்லா மனிதர்களும் தூங்கவேண்டும். சில பேரு சீக்கிரமாக தூங்கிவிடுவார்கள். ஆனால் நாலு மணி நேரம் ஐந்து மணி நேரத்தில் எல்லாம் எழுந்துவிடுவார்கள். சீக்கிரமாக தூங்குவது முக்கியமான ஒன்றுதான். ஆனால் சரியான அளவு தூங்குவதும் ரொம்ப முக்கியம். உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரமாவது தூங்கியே ஆகவேண்டும். அதுவும் தொடர்ந்து தூங்குவது இன்னும் நல்லது. ஏனென்றால் சில பேருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை காரணமே இல்லாமல் முழிப்பு வரும். அந்த மாதிரி பிரச்சனை எல்லாம் இருக்குன்னா அதை எப்படி சரி பண்றதுன்னு இப்ப பார்க்கலாம்.

ஏன் தூக்கம் பாதியிலேயே தடப்படுகிறது?

முதலில் என்ன காரணத்தால உங்கள் தூக்கம் பாதியிலேயே தடப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது ரொம்ப முக்கியம். அதே நேரத்தில் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள் என்று நீங்களே பரிசோதிக்க வேண்டும். அடுத்து காலையில் எழும்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை நீங்களே கவனிக்க வேண்டும். ஏனென்றால்  சில பேருக்கு இரவு தூக்கத்தில் நடந்த எதுவுமே பெரிதாக ஞாபகத்தில் இருப்பதில்லை. அவர்களே அவர்களை நன்றாக தூங்கிவிட்டோம்மென்று நினைத்துக்கொள்வார்கள். நீங்கள் நன்றாக தூங்கியிருந்தீர்களென்றால் அடுத்தநாள் எழும்போது ரொம்ப புத்துணர்ச்சியாக ஆரோக்கியமாக உணர்வீர்கள். அதுவே ஏதோ ஒரு காரணத்தால் நீங்கள் சரியாக தூங்கவில்லையென்றால் ரொம்ப அசதியாக இருக்கும், கண்ணெல்லாம் ரொம்ப எரிச்சலாக இருக்கும், தூங்கிய மாதிரியே இருக்காது. அப்படி நீங்கள் உணர்ந்தீர்களென்றால் கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில உங்கள் தூக்கம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். மேலோட்டமாக தூங்குறது கண்டிப்பாக நீங்கள் தூங்கும் நேரத்தில் சேரவே சேராது. 

தூங்குவதில் மூன்று நிலை

இன்னும் எளிமையாக சொல்வேண்டுமென்றால் நீங்கள் தூங்குவதில் மூன்று விதமான நிலை இருக்கிறது. முதலில் நம்மைச்சுற்றி இருக்கும் சத்தம் வெளிச்சம் போன்றவற்றை நம்மால உணர முடியும். அதன்பிறகு நம்மையே மறந்துவிடுவோம். ஆனாலும் நமது மூளை ஓரளவுக்கு செயலில் தான் இருக்கும். அடுத்து கடைசி கட்டம் தான் நீங்கள் ஆழ்ந்து உறங்குவது. அந்த நிலையில்தான் உங்கள் மூளை முதற்கொண்டு அனைத்துமே ஓய்வெடுக்க ஆரம்பிக்கும். அதே மாதிரி மூளை நீங்கள் தூங்கும் நேரத்தில்தான் இன்றைக்கு நாள் பூராவும் என்னவெல்லாம் நடந்தது அதன் தகவமைப்பை மறுசீரமைக்கும். அதற்கான நேரத்தை நீங்கள் அதற்கு கொடுத்து தான் ஆகவேண்டும். அப்போதுதான் அடுத்த நாள் அது மறுபடியும் அதன் வேலையை ஒழுங்காக ஆரம்பிக்கும். உதாரணத்திற்கு பகல் முழுக்க உட்கார்ந்து ஒரு பாடத்தை மனப்பாடம் பண்றீங்கன்னு வைப்போமே. அன்று இரவு நீங்கள் நன்றாக தூங்கினால்தான் நீங்கள் படித்த விஷயங்களை எல்லாம் மூளையில் பதிய வைப்பதற்கான நேரம் மூளைக்கு கிடைக்கும். அதை விட்டுவிட்டு சரியாக தூங்காமல் படித்தீர்களென்றால் அது சீக்கிரமாகவே உங்கள் நினைவிலிருந்து அழிவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

போதுமான அளவு தூக்கம் ரொம்ப ரொம்ப அவசியம்

சிலர் இரவு நேரத்தில் அத்தியாவசிய தேவைக்காக அடிக்கடி எழுந்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் முடிந்த அளவிற்கு படுக்கைக்கு போறதுக்கு முன்பே அவற்றையெல்லாம் முடித்துவிட்டு தூங்கச்செல்வது ரொம்ப ரொம்ப நல்லது. வெளிச்சம் குளிர் இதனால் பாதியிலேயே நீங்கள் எழுந்திருப்பீர்களென்றால் அதை சரிசெய்ய என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெலாம் தூங்குவதற்கு முன்பே செய்துவிடுங்கள். எவ்வளவு முயன்றாலும் ஐந்து மணி நேரத்துக்கு மேல் உங்களால் தூக்க முடியவில்லையென்று வருந்துகிறீர்களென்றால் முதலில் நீங்கள் பண்ண வேண்டியது தூக்கமே வரவில்லை என்றால் கூட படுக்கையைவிட்டு எழுந்திரிக்காமல் கண்ணமூடி படுத்துக்கொள்ளுங்கள். அப்படி நீங்கள் பண்றப்ப அது உங்க உடம்புக்கு நல்ல ஓய்வைக் கொடுக்கும்.

நாம் பண்ணவே கூடாத விஷயம்

தூக்கம் வரவில்லை என்றால் கூட மொபைலை எடுக்கவே கூடாது. நீங்கள் பாதி தூக்கத்தில் எழுந்துவிட்டீர்கள் என்றால் முதலில் எப்படி தூங்குவது என்று தான் யோசிக்க வேண்டுமேதவிர மொபைலை எடுத்து Facebook, Whatsapp, Youtube, Instagram போன்றவற்றை பார்க்கக் கூடாது. அது உங்கள் தூக்கத்தை இன்னும் தான் கெடுக்கும். 24 மணி நேரத்தில் நீங்கள் எத்தனை மணி நேரம் தூங்கவில்லையோ அதை ஆடுத்தநாள் கூடுதலாக தூங்கவேண்டும்.

உதாரணத்திற்கு இன்றைக்கு முக்கியமான வேலை காரணமாக ஒரு ஐந்து மணிநேரம்தான் தூங்கிருக்கீறீர்கள் என்று வைத்துக்கொண்டால் அடுத்தநாள் நீங்கள் 11 மணி நேரம் தூங்கவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு போன ஆற்றல் மீண்டும் கிடைக்கும். இல்லையென்றால் உங்களால் ஆற்றல் மிக்கவராக உணரவே முடியாது. நீங்கள் தூங்கவில்லையென்றாலும் சரி உங்களால் தூங்க முடியவில்லையென்றாலும் சரி ரெண்டுமே உங்கள் ஆரோக்கியத்தை தான் கெடுக்கும். 

தூக்கத்தை தொடர்வதற்கான எளிமையான வழி

நம் கனவோட பயணிக்கிறதுதான் நம் தூக்கத்தை தொடர்வதற்கான எளிமையான வழி. ஏனென்றால் கனவு வரும்போது நாம் கனவு உலகத்தில்தான் இருப்போம். எங்கேயோ இருக்கிற மாதிரி இருக்கும். ஆனால் நம்மளால் அதை உணர முடியும். அப்படி எல்லாம் கனவு வந்துச்சுன்னா அதுகூட அப்படியே பயணியுங்கள். ஏனென்றால் பல அறிவாளிகள் அவர்களுக்கு வாழ்க்கையில் வரும் சிக்கல்களை கணவுகள் மூலமாக தீர்த்திருக்கார்கள். 

உதாரணமாக சில காணொளிகள்

கனவில் வந்த காட்சியால் தையல் மிஷினை கண்டுபிடிக்கும் போது ஏற்பட்ட சிக்கல் சரியானது!


தர்க்க பூர்வமாக யோசித்தபோது கிடைக்காத விடை அரைகுறை தூக்கத்தில் எப்படி கிடைக்க முடியும்?


எனவே கனவுகளுடன் பயணிக்கிறபோது நம் தூக்கத்தையும் தொடர முடியும் படைப்பாற்றலையும் அதிகப்படுத்த முடியும். 

இன்னும் தூக்கத்தை பற்றி நிறைய சுவாரசியமான விஷயங்களை தெரிஞ்சுக்க அடுத்தடுத்த அத்தியாயங்களை பாருங்கள் கேளுங்கள்.







பொதுவாகவே நாம் காலையில் என்ன மனநிலையோடு எழுந்திரிக்கிறோமோ அந்த நாளும் அதே மாதிரி தான் அமையும். அதனால் முடிந்த அளவுக்கு நாம் காலை பொழுதை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் ஆரம்பிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். காலையில் எழும்போதே ரொம்ப சோர்வாக உணர்ந்தால் அன்றைக்கு நாளும் ரொம்ப சோர்வாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு காலையில் நீங்கள் ஏதோ ஒரு பாட்டை கேட்டிருப்பீங்கள். அதை நீங்கள் விரும்பி கூட கேட்டிருக்க மாட்டீர்கள் ஆனாலும் உங்களுக்கே தெரியாம அந்த நாள் முழுக்க அந்த பாட்டையே மூணுமுணுத்துக் கொண்டிருப்பீர்கள். அப்படித்தான் என்னதான் நாம் சுறுசுறுப்ப்பாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் நீங்கள் காலையில மட்டும் ரொம்ப சோர்வாக உணர்ந்தீர்களென்றால் கண்டிப்பாக அந்த நாள் ரொம்ப மந்தமாகத்தான் போகும். எப்படி உற்சாகமாக எழுந்திருப்பது? அதற்கு என்ன வழி? என்று நாம் பார்க்கலாம்.

அதற்கு சின்னதா ஒரு கேள்வியோட ஆரம்பிக்கலாம். நாளைக்கு உங்க வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயம் நடக்க போகுதுன்னு வைத்துக்கொள்ளுங்கள்.  எப்படா நாளைக்கு வரும்னுதான் நமது மனம் யோசிக்கும். சில சமயம் அதை நினைத்தே நம்மால் ஒழுங்காக தூங்க முடியாது. என்னதான் தூங்கினாலும் அடுத்த நாள் உங்கள் உடம்பு சோர்வா இருந்தாலும் உங்க மனசு கண்டிப்பா ஆரோக்கியமா தான் இருக்கும். இதுவே அன்றைக்கு நீங்கள் ஒழுங்காக தூங்கியிருந்தால் உங்கள் மனது சந்தோஷப்படுகிற மாதிரி உங்க உடம்பும் உங்களுக்கு ஒழுங்காக ஒத்துழைப்பு கொடுத்திருக்கும். அப்ப அடுத்த நாளைக்கான வெற்றி இன்றைக்கான தூக்கத்தில்தான் இருக்கிறது. அதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்து நாளைக்கு நாம் என்னவெல்லாம் பண்ண போறோம்ன்னு நீங்க முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொண்டால் நீங்கள் எழும்போதே உங்கள் மூளை ரொம்ப சுறுசுறுப்பாக உற்சாகமாக இருக்கும்.

அதே நேரம் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு பிடித்தமான விஷயத்துக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். ஏனென்றால் எப்போதுமே வேலை வேலைன்னு ஓடிக்கொண்டே இருந்தால் நம்மையும் அறியாமல் ஒரு சலிப்பு ஏற்படும். அதுவே உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்யம்போது உங்கள் மனது ஒருவித சந்தோஷத்தை உணரும். எனவே உங்களுக்கு ஒரு படம் வரைய பிடிக்குமென்றால் அதற்கென ஒரு மணி நேரத்தை ஒதுக்குங்கள். ஏனென்றால் அந்த ஒரு மணி நேரம் உங்களுடைய அத்தனை மன அழுத்தத்தையும் குறைத்துவிடும். காலையில் சுறுசுறுப்பாக உற்சாகமாக இருக்கவேண்டுமென்றால் அன்றைக்கான நாளில் உங்களுக்கு பிடித்தமான விஷயத்தை செய்ய போறோம் என்று யோசித்துக்கொள்ளுங்கள். அப்படி யோசிக்கிறபோது நம் மனது தானாகவே அதைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கும். 

நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும்!

நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்ள காலையில் எழுந்ததும் சில நல்ல புத்தகங்களை படிக்கலாம் அல்லது நல்ல சிந்தனைகளை கொடுக்கிற மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்கலாம் அல்லது உங்கள் மனதை உற்சாகப்படுத்துகிற மாதிரியான பாடல்களோடடு உங்கள் நாளை ஆரம்பிக்கலாம். ஏனென்றால் வைத்திருக்கும் ரிங்டோனை வைத்துக்கூட நமது மனநிலையை சொல்ல முடியும். காலையில் நாம் பார்க்கிற சின்ன சின்ன விஷயங்கள் கூட அந்த நாளையே ரொம்ப அழகானதாக மாற்றலாம். எப்பவுமே வீட்டுக்குள்ளேயே இருப்பது கூட ஒருவித மணஅழுததைக் கொடுக்கும். அப்படிப்பட்ட சூழலில் காலையில் எழுந்து வாக்கிங் ஜாக்கிங் போகலாம். ஒரு நாலு பேரை பார்க்கிறபோது தானாவே சில விஷயங்களை நம்மால் கற்றுக்கொள்ள முடியும். அப்புறம் காலைலயே நியூஸ் பேப்பர் படிக்கிற பழக்கம் கூட ஒரு மாதிரியான நல்ல விஷயம் தான். இதெல்லாம் கூட நம்ம மனநிலையை உற்சாகமாக மாற்றுவதற்கு உதவும். 

போதுமான அளவு தூக்கம்

போதுமான அளவுக்கு தூங்குறது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அளவுக்கு மீறி தூங்குறதும் ரொம்ப தப்பு. அப்போ காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பது ரொம்ப நல்ல பழக்கம். அந்த பழக்கத்தை வழக்கமாக்க வேண்டும். காலையில கிடைக்கிற சூரிய ஒளி காற்று இதெல்லாம் நம்ம மனதுக்கும் ரொம்ப ரொம்ப நல்லது. அது போக உடற்பயிற்சி காலையில் பண்றது இன்னும் நல்லது. அது உங்கள் சோர்வை நீக்குவதற்கு உதவியா இருக்கும். நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்திரிக்க வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டாலே நாம் தானாகவே இரவு சீக்கிரமாக தூங்கச் சென்றுவிடுவோம். 

அலாரம் தேவையில்லை

தினமும் அலாரம் செட் பண்ணி தான் எழுந்திரிக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. நம் மனதில் இத்தனை மணிக்கு எழுந்திரிக்க வேண்டும்னு முடிவு பண்ணிட்டாலே தானாகவே அத்தனை மணிக்கு நமக்கு முழிப்பு வந்துவிடும். ஆனால் இதெல்லாம் முதல் நாளே வராது நீங்கள் தொடர்ந்து ஒரு பத்து நாள் அலாரம் வச்சு ஐந்து மணிக்கு எழுந்தீர்கள் என்றால் அடுத்த நாளிலிருந்து அலாரம் வைக்காமலே உங்களால் எழுந்திரிக்க முடியும். 

காலை உணவு

இரவு உணவு நீங்க தூங்குவதற்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் காலையில் சுறுசுறுப்பா இருக்க ஆரோக்கியமாக சாப்பிட வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். நம்மில் பலர் பண்ற தப்பு காலையில் சாப்பாட்டை தவிர்ப்பதுதான். காலையில் தாமதமாக எழுந்திருப்பது தான் அதற்கான முக்கிய காரணம். அவசர அவசரமாக பள்ளிக்கோ அலுவலகத்திற்கோ போகின்ற காரணத்தினாலே காலையில் சாப்பிடாமல் கிளம்பிவிடுவோம். ஆனால் அது அந்த நாளையே ரொம்ப மோசமானதாக மாற்றிவிடும். நாம் மத்தியானம் கூட சாப்பிடாமல் இருக்கலாம் ஆனால் காலையில் சாப்பாட்டை நாம் கண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும். நம் உடம்பிற்கு தேவையான ஊட்டச்சத்து இருந்தால் தான் அன்றைக்கு முழுவதும் நம்மளால ஓட முடியும். ஏனென்றால் தூங்குவது நம் உடம்பை ரீசெட் பண்றது மாதிரியான ஒரு செயல்முறை தான். அப்ப நம்ம உடம்பில் இருக்கின்ற ஆற்றல் எல்லாம் முழுமையாக குறைந்துவிடும். அப்புறம் மறுபடியும் நாள் ஆரம்பிக்கிறதுக்கு நமக்கு ஆற்றல் தேவைப்படும். நாம் காலையில் சாப்பாடு சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடும்போது நமக்கு தூக்கம் வராமல் இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கு. இதெல்லாம் கூட நம்ம ஆரோக்கியத்தை மட்டும் இல்லாம நம்ம தூக்கத்தையும் சேர்ந்து பாதிக்கும். 

புத்துணர்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் நாம் கண்டிப்பாக இந்த விஷயங்களையெல்லாம் பின்பற்றித்தான் ஆகவேண்டும். அடுத்து என்ன நடந்தாலும் அது நம்ம நல்லதுக்கு அப்படிங்கிற மாதிரி ஒரு மனப்பக்குவத்தை வளர்த்துக்க வேண்டும். 

இன்னும் தூக்கத்தை பற்றி நிறைய சுவாரசியமான விஷயங்களை தெரிஞ்சுக்க அடுத்தடுத்த அத்தியாயங்களை பாருங்கள் கேளுங்கள்.





தொடரும்...


"கழிவின் தேக்கம் வியாதி; கழிவின் வெளியேற்றம் குணம்"

நோயின்றி ஆரோக்கியமாக வாழ புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!



கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!