முன்பு மேனேஜராக 40 வயதைக் கடந்திருக்க வேண்டும். இன்று,
பலர் 40-ல் ஓய்வுபெறுவதை லட்சியமாகச் சொல்கிறார்கள். 30
வயதில் எம்.டி, சி.ஈ.ஓ
என ஆகிறார்கள். இப்படிப் பல நம்பிக்கைகள் நாம் வாழும் காலத்திலேயே
நீர்த்துப்போவதைப் பார்க்கிறோம். இருந்தும் பல அபிப்பிராயங்களைவிடாமல்
பிடித்துவைத்துக்கொண்டு இருக்கிறோம். இப்படி இறுகிப்போன எண்ணங்கள்தான் பல
ஏமாற்றங்களுக்குக் காரணம். அபிப்பிராயங்கள் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?
இருக்கலாம். ஆனால், அவற்றை அடிக்கடி சோதனை செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம்.
நாம் பார்க்கும் வேலையும் நம் சூழலும் பல எண்ணங்களை
உறுதிப்படுத்தும். அது இயல்புதான்.
போலீஸ்காரர்கள் எதையும் சந்தேகத்தோடுதான் பார்ப்பார்கள். எங்களைப் போன்ற
சைக்காலஜிஸ்ட்டுகள் ‘இவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்றால்..?’
என்று ஆரம்பிப்பார்கள். விஞ்ஞானிகளும் நீதிபதிகளும்
எல்லாவற்றுக்கும் சாட்சிகள் கேட்பார்கள். குவாலிட்டி ஆசாமிகள் சுலபமாகத் தவறுகள்
கண்டுபிடிப்பார்கள். ஆனால், இவை நம் எண்ணங்களை முழுவதுமாக மாற்றிவிடாது. அடிப்படை
எண்ணங்கள் நம்முடையவைதான். அதனால்தான் ஒரே தொழிலில் உள்ள இருவர் இரு வேறு
சிந்தனைகளுடன் செயல்பட முடிகிறது.
நாம் தொடந்து சிந்திக்கும் எண்ணங்கள்தான் ஒரு கதைபோல
ஆழ்மனதில் பதிகிறது. இதை, ‘டிரான்சாக்ஷனல் அனாலிசிஸ் ஸ்க்ரிப்ட் (Transactional Analysis Script)’
என்பார்கள். இந்த ஸ்க்ரிப்ட்தான் நம் வாழ்க்கையை வழி
நடத்திச்செல்கிறது. இந்த உள் மனக் கதை ஓட்டத்துக்கு ஏற்றபடி நம் எண்ணங்கள்,
உணர்வுகள்,
செயல்கள் அனைத்தும் இயங்க
ஆரம்பிக்கும்.
என் நண்பர் ஒருவருக்கு எங்கு வேலைக்குச் சென்றாலும்
முதலாளியிடம் மோசமான உறவு இருக்கும். அவர் ஸ்கிரிப்ட் அப்படி. முதலாளிகளிடம்
கோளாறு இல்லை. இத்தனைக்கும் ஒவ்வொருமுறையும் புது வேலைக்குச் செல்லும்போது,
‘இங்கு முதலாளியுடன் எந்த பிரச்னையும்
கூடாது!’ எனச் சபதம் எடுத்துக்கொண்டுதான் செல்வார். இவர் எடுக்கும் எதிர்மறை
சபதமே, அவர் ஸ்க்ரிப்ட்டின் எதிரொலிதான். எது நடக்கக் கூடாது என்று நினைத்துப்போகிறோமோ அது
நிச்சயம் நடக்கும். அதுதான் கவர்ச்சி விதி.
ஆசையோடு திருமணம் செய்வதற்கும், விவாகரத்து ஆகக் கூடாது என்ற நினைப்போடு செய்யும்
திருமணத்துக்கும் வேறுபாடு உள்ளது அல்லவா? இதை கிரிக்கெட்டில் அடிக்கடி பார்ப்போம். ஜெயிக்க வேண்டிய
மேட்சை ‘தோற்கக் கூடாது’ என்ற எண்ணத்துடன் மிக ஜாக்கிரதையாக விளையாடித்
தோற்போம். எண்ணங்களின் வலிமை அறிய பல ஆய்வுகளை நடத்தி உள்ளனர் உளவியலாளர்கள்.
விளையாட்டு உளவியலில் ‘காக்னிடிவ் சைக்காலஜி’ எனப்படும் சிந்தனை சார்ந்த
உளவியலை அதிகம் பயன்படுத்துவார்கள்.
களம் இறங்கி பேட்ஸ்மேன் சந்திக்கும் முதல் பந்து. சென்ற
பந்தில் விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் அபாயகரமாக ஓடிவருகிறார். அயல்நாட்டு
பார்வையாளர்கள் எல்லாம் அவருக்கு ஆதரவாக, ஆரவாரமாகக் கூச்சலிடுகிறார்கள். பின்னால்,
கெட்ட வார்த்தை சொல்லி விக்கெட் கீப்பர் ஸ்லெட்ஜிங்
செய்கிறான். எதிரில் மட்டை பிடித்துள்ள தோழன் ‘இந்த ஓவர் மட்டும் பார்த்து ஆடு!’
என எச்சரித்து இருக்கிறான். பந்து சீறி வருகிறது முகத்துக்கு நேரே... சொல்லுங்கள்
என்ன நடக்கும்?
இவை எல்லாமும் வெளிப்புற உண்மைகள். ஆட்டக்காரனின் உள் மன
உரையாடல்தான் அவன் அவுட் ஆகப்போகிறானா அல்லது சிக்ஸர் அடிக்கப்போகிறானா எனத்
தீர்மானிக்கும். இப்படித்தான், வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் எண்ணங்கள் செயல்களைத்
தீர்மானிக்கின்றன.
மனிதகுலத்தின் மகத்தான கண்டுபிடிப்பே, மனம் மாறினால் வாழ்க்கை மாறும் என்பதுதான். மெய்ஞானம் முதல் விஞ்ஞானம் வரை கண்டு சொன்ன உண்மை. மனம்
மாறுமா? மாற்றித்தான்
பார்ப்போமே... வாருங்கள்!
நம் கவலைகள் பலவற்றுக்கு யாரையாவது காரணம் சொல்வோம். ‘அந்த ஒருவரால்,
அல்லது சிலரால்தான் எல்லா
பிரச்னையும்’ என்போம். ‘அவர்கள்
மாறினால் எல்லாம் சரியாகும்’ என்று சத்தியம் செய்வோம். பிறர் மாற எல்லா
முயற்சிகளையும் எடுக்கிறோம்.
என் பயிற்சி வகுப்புகளுக்கு வரும் பலர் தவறாமல் கேட்கும்
கேள்வி, ‘இதை எல்லாம் முதலில் எங்க பாஸுக்குச் சொல்லித்தர முடியுமா’, ‘இதைவைத்து என் மனைவியின் குணத்தை மாற்ற முடியுமா?’,
‘என் குழந்தைகள் இதை எல்லாம்
புரிஞ்சுப்பாங்களா? அவங்களுக்கு எப்படி புரியவைப்பது?’
நாம் எல்லாருமே பிறரை மாற்ற வழிமுறைகளைத்
தேடிக்கொண்டிருக்கிறோம். கடவுள் முதல் கடைக்காரர் வரை எல்லோரிடமும் இதைத்தான்
விசாரித்துக் கொண்டிருக்கிறோம். எல்லா உறவுப் பிரச்னைகளுக்கும் காரணம் நம்
எதிர்பார்ப்புகள்தான்.
சென்ற வருடம் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தபோது,
தெரிந்தவர் ஒருவர் தொலைபேசியில் அவசரமாக அழைத்தார். ‘பொண்ணுக்கு
மார்க் குறைஞ்சுபோய் வீட்டில் ஒரே ரகளை. கையை வெட்டிக்கிட்டு,
ஆஸ்பத்திரியில சேர்த்து,
இப்பத்தான் டிஸ்சார்ஜ்
செஞ்சு வீட்டுக்குப் போயிட்டிருக்கோம். உங்களை உடனே பார்க்கணும்’ என்று மூச்சிரைத்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில்
குடும்பமே வந்தது. ப்ளஸ் டூ எழுதிய பெண் துள்ளிக்கொண்டு வந்தாள். பின் வந்த அம்மா
கையில் கட்டு. மகள் மதிப்பெண் குறைவாக வாங்கியதில் மானம் போய்விட்டதாம். கையை
அறுத்துக்கொண்டது மகள் அல்ல தாய்.
இதையும் மிஞ்சிவிட்டார் இன்னொரு தந்தை. ‘அவளுக்கு நீங்க
டீம் ஒர்க், மோட்டிவேஷன், ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் எல்லாம் சொல்லித்தரணும்.
அக்காடமிக்ஸ் தவிர, நாலு கிளாஸ் போறா. ஆனா, இன்னமும் அவளை காம்ப்பிடேட்டிவாக நான் எதிர்பார்க்கிறேன்...’ என்று அடுக்கியவரிடம், ‘பெண்ணுக்கு என்ன வயது?’
என்று கேட்டேன். ‘எட்டு’ என்றார்.
தற்கொலைகள் முதல் ஆணவக் கொலைகள் வரை அனைத்துக்கும்
எதிர்பார்ப்புகள்தான் காரணம். துருப்பிடித்த எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டுதான்
இத்தனை சேதாரங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
இந்தியா போன்ற ஏழை நாட்டில் ஏன் இவ்வளவு தங்க நகைகள் போட்டு,
சக்திக்கு மீறிய ஆடம்பரத் திருமணங்கள் செய்கிறோம்?
‘இவை ஊராரின் எதிர்பார்ப்புகள்’ எனச்
சொல்வோம். ஆனால், இவை நம் எதிர்பார்ப்புகளே. படிப்பு,
வேலை,
கல்யாணம்,
குடும்பம் பற்றிய எல்லா
எதிர்பார்ப்புகளும் நம்முடையவை. பிறர் பாதிப்புகள் இருந்தாலும் இறுதி முடிவு
நம்முடையவைதான். எது நியாயமான
எதிர்பார்ப்பு, எது
அதீதமான அல்லது தவறான எதிர்பார்ப்பு என்பதை நிர்ணயம் செய்வதில்தான் சிக்கல்
உள்ளது. அதனால்தான், பிறர் எதிர்பார்ப்புகள் மிகையாகவும் நம் எதிர்பார்ப்புகள்
இயல்பாகவும் தெரிகின்றன. எவ்வளவு அன்பு இருந்தாலும் எதிர்பார்ப்புகள் அதிகமாக
அதிகமாக அவை நிச்சயம் சிக்கல்களைத்தான் ஏற்படுத்தும்.
பரஸ்பர எதிர்பார்ப்புகள் கணக்குப் பார்த்து,
பேரங்களைப் பேசச் செய்யும். ‘நான் இவ்வளவு செய்தேன்;
நீ என்ன செய்தாய்?’ என்று கேட்க வைக்கும். எல்லா ஏமாற்றங்களுக்கும் எதிராளியைக்
குற்றவாளியாக்கும். ‘எவ்வளவு செஞ்சு என்ன ஆச்சு? எல்லாம் என் தலை எழுத்து’ எனத் தன்னைத் தியாகியாக நினைத்து,
தத்துவம் பேசவைக்கும். மற்றவர்களிடம் இருந்து பெறுவதைக்
குறைத்து மதிப்பிடுவதும், அவர்கள் செய்யாததைப் பூதாகரமாகப் பார்ப்பதும்தான்
பிரச்னைகள். இப்படித்தான் நம்
எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் ஏற்றவாறு செய்திகளைத் தேடித் தேடிச்
சேகரித்து, ‘நம் நம்பிக்கைகள்தான் உலகளாவிய உண்மைகள்’ என வாதாடுவோம்.
ஒவ்வொரு சிக்கலான உறவையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
அவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்பதையும், அதை அவர்கள் நிறைவேற்றத் தவறினால் எப்படி உணர்கிறீர்கள்
என்பதையும், அதேபோல
அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுகிறீர்களா என்பதையும்
எழுதுங்கள்.
பிறகு, உங்கள் எதிர்பார்ப்புகளில் எத்தனை விஷயங்களைக்
குறைத்துக்கொள்ளலாம் எனப் பட்டியலிடுங்கள். அதேபோல, அவர்கள் நிறைவேற்றாமல் போகும்போது, அதை எவ்வளவு மென்மையாகச் சொல்ல முடியும் என்று பாருங்கள்.
எதிர்பார்ப்புகளே இல்லாமல் அன்பு செலுத்த முடியுமா?
என்று யோசியுங்கள். பிறந்த குழந்தையின் மேல் தாய்கொள்ளும்
அன்பு அது. ‘நீ எப்படி இருந்தாலும் நான் தரும் அன்பு இதுதான். நான் உனக்குச்
செய்வது இதைத்தான்’ என்ற நிலை அது. உங்கள் எதிர்பார்ப்புகள் குறையும்போது,
எதிராளியின்
எதிர்பார்ப்பும் குறைந்துபோயிருக்கும். எதிராளியின் மனதை மாற்றும் சூட்சுமம்
உங்கள் மனம் மாறுவதில்தான் உள்ளது!
நாம் உபயோகிக்கும் மொழி, பிறரின் மனநிலையை, உறவுகளை எப்படி எல்லாம் பாதிக்கிறது தெரியுமா?
சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள் எத்தனை தவறான அர்த்தங்களை
உற்பத்தி செய்கின்றன என நீங்கள் அறிவீர்களா?
‘உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது!’,
‘உங்கிட்ட மனுஷன் பேசுவானா?’,
‘இப்படி ஒரு வாழ்க்கை வாழ்றதுக்கு
எங்கேயாவது போய், பிச்சை எடுக்கலாம்!’, ‘என்னை மாதிரி வேதனைப்பட்ட தகப்பனை நீ உலகத்திலேயே
பார்த்திருக்க மாட்டே!’, ‘ஒரு பைசாவுக்கு மரியாதை கிடையாது!’, ‘நான் எல்லாத்தையும் பண்ணிப் பார்த்துட்டேன்;
எதுவும் நடக்கலை!’
இவை அனைத்தும் அதீத வாக்கியங்கள். ஒரு விஷயத்தை
அழுத்திச் சொல்ல, அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தியோ குறைத்தோ சொல்கிறோம். இது, எதிராளியின் புரிதலைச் சிக்கலாக்குகிறது. எதிராளியையும் இப்படி ஓர் அதீத வாக்கியத்தைச்
சொல்லவைக்கிறது. பின், ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு இருவரையும் தள்ளி, இடைவெளியைப் பெரிதாக்குகிறது. அது பேச்சுவார்த்தையைக்கூட
நிறுத்தவைக்கும்.
உணர்ச்சிவசப்பட
வைப்பதுதான் மூளையின் எளிதான வேலை. அதுவும் பயம், கோபம் இரண்டையும் வரவழைப்பது அதற்கு மிகச் சுலபம்.
முதுகுத்தண்டின் மேல் பாகத்துடன் இணைந்துள்ள பகுதி, புராதன மிருக மூளை. மிருகத்தின் வேலை உயிர் காத்தல்,
உணவு சேகரித்தல் இரண்டும்தான். அதனால்,
போட்டியும் சண்டையும் ஓட்டமும் அன்றாடத் தேவைகள். அதற்கு
ஏற்ற அமைப்புதான் பின் மூளையான மிருக மூளை. பரிணாம வளர்ச்சியில் மூளையின்
மடிப்புகள் வளர்ந்து, முன்னுக்குத் தள்ளி மிகச் சமீப காலமாக (சில பல்லாயிரம் ஆண்டுகளாக)
ஏற்பட்டதுதான் மனித மூளை. பகுத்தறிவு, தர்க்கம், பேசும் திறன், நகைச்சுவை, நிர்வாகம் என அனைத்தும் இந்த முன் மூளையில்தான்
இயக்கப்படுகின்றன.
பிரச்னை என்னவென்றால், லட்சக்கணக்கான ஆண்டுகளாக உள்ள மிருக மூளையின் செயல்பாடுதான்
முதலில் அனிச்சையாக வேலை செய்யும். அதனால்தான், உணர்ச்சிவசப்படுதல் முதலில் ஏற்படும். அது முற்றிலும்
தணிந்த பிறகுதான், அறிவார்ந்த சிந்தனை சீராகச் செயல்பட ஆரம்பிக்கும்.
எத்தனை முறை நாமே ஒரு வாக்குவாதத்தில் தவறாகச் சொன்ன ஒரு
வார்த்தைக்காகப் பின்னர் வருந்தியிருக்கிறோம்? உணர்ச்சிகள் அதிகரிக்கும்போது,
தீவிரச் சொற்களை அதிகம்
உபயோகிப்போம். ஒவ்வோர் அதீத
வாக்கியத்தையும் அது சொல்ல நினைக்கிற செய்தியுடன் இணைத்துப் பார்த்தால்,
இந்தத் திரிபு நிலை புரியும்.
‘உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது.’ (உன் கருத்து வேறு;
என் கருத்து வேறு.)
‘உங்கிட்ட மனுஷன் பேசுவானா?’ (உன்னுடன் பேசி, உனக்குப் புரியவைப்பது சிரமமாக உள்ளது.)
‘இப்படி ஒரு வாழ்க்கை வாழுறதுக்கு எங்கேயாவது போய் பிச்சை
எடுக்கலாம்.’ (நான் என் வாழ்க்கையை வாழும் விதம் திருப்தியாக இல்லை.)
‘என்னை மாதிரி வேதனைப்பட்ட தகப்பனை நீ உலகத்திலேயே
பாத்திருக்க மாட்டே.’ (ஒரு தகப்பனாக நான் வேதனை கொள்கிறேன்.)
‘ஒரு பைசாவுக்கு மரியாதை கிடையாது.’ (எனக்குத் தேவையான
மரியாதையை நீ சில நேரங்களில் அளிக்கத் தவறுகிறாய்.)
‘நான் எல்லாத்தையும் பண்ணிப் பார்த்துட்டேன்;
எதுவும் நடக்கலை.’ (என் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.)
ஓர் அலுவல் மொழியில் சிந்திக்கவோ, பேசவோ முடியாதுதான். யோசித்துப்பாருங்கள். ஒருவர் உங்கள்
காலை, கனத்த
காலணிகொண்ட கடோத்கஜக் காலால் தவறி மிதித்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். என்ன
வார்த்தைகள் வாயில் இருந்து வரும்? ‘யோவ்
அறிவில்லை? இப்படி
ஷூ காலை வெச்சு மிதிக்கிறியே. கண்ணு தெரியலை?’ என்று கேட்காவிட்டாலும் குறைந்தபட்சம் மனதுக்குள் ஒரு கெட்ட
வார்த்தையை உதிர்ப்போம்தானே. சிக்கலில் உள்ளபோது அதீத வார்த்தைகளை
உபயோகிக்காமல் இருப்பதுதான் நிஜமான அறிவு. இதனால், பல உணர்ச்சிகள் தவிர்க்கப்படும்;
பல உறவுகள்
பாதுகாக்கப்படும்.
சுலபமாகச் சொன்னால், உணர்ச்சி வசப்படுகையில் பேச்சைக் குறைப்பது நல்லது. ஒன்றைச்
சொல்லியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதை மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ள மாதிரி சொல்லப்பாருங்கள்.
‘நான் எல்லாத்தையும் செஞ்சு பாத்துட்டேன். அவன் ஒரு
இன்ச்கூட நகரலை!’ என்ற வாக்கியத்தில் உள்ள மிகைகளைப் பாருங்கள். ஆரோன் பெக்
என்ற உளவியலாளர் இதை ‘மிகையாக்கம் மற்றும் குறைவாக்கம் (Maximizations
and Minimizations) ’ என்பார்.
குறிப்பாக, குடும்பப் பிரச்னைகளில் இந்த மிகைகள்,
உறவுகளைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
‘வார்த்தையில் என்ன இருக்கிறது?’ என நினைக்காதீர்கள். தகாத சொல்,
சேதாரம் விளைவிக்கும்.
சரியான சொல், சண்டையை முடிக்கும். அமங்கலச் சொற்களுக்கும் பலன் உண்டு. மந்திரச்
சொற்களுக்கும் பலன் உண்டு. மனம் தரும் சொற்கள் உங்கள் வாழ்க்கையை மட்டும் அல்ல;
உங்கள் உறவுகளின்
வாழ்க்கையைக்கூட மாற்றக்கூடியவை!
நம் எண்ணங்கள் என்பவை உள்மன விவாதங்களே. ஒவ்வொரு செயலுக்கு முன்னும் பின்னும்
இந்த விவாதங்கள் பலமாக நடக்கும். இவையே நம் செயல்களுக்குக் காரணங்களையும் புதிய
அர்த்தங்களையும் கொடுக்கவல்லவை. நடக்கும் காரியத்தை எதிர்பார்ப்பதும்,
நடந்தவற்றில் இருந்து
பாடம் கற்பதும் இந்த எண்ணங்களை வைத்துத்தான்.
‘நான் காத்திருக்கும்போது மட்டும் எனக்கு பஸ் வராது’,
‘நான் சொன்னா யார் கேட்பா?’,
‘நம்ம ராசி, எல்லாமே ஏறுமாறாத்தான் அமையும்’... இப்படி,
நமக்குள் பேசிக் கொண்டிருக்கிறோம்.
பெண்ணுக்குக் கல்யாணம் எனப் பத்திரிகை கொடுக்க வருகிறார்
ஒருவர். ‘பையன் அமெரிக்காவில் கிரீன் கார்டு ஹோல்டர்’ என்று சொல்கிறார். உடனே,
நம் மனம் விவாதத்தைத் தொடங்கிவிடும். ‘நான் வேலைக்குச்
சேர்ந்தப்ப, இவன்
ஜஸ்ட் டெம்பரரி கிளார்க். ஐஸ்ஹவுஸ் அருகே ஒண்டுக்குடித்தனத்தில் இருந்தான். இனி
இவனும் அமெரிக்கா போய் செட்டில் ஆயிடுவான். நாம மட்டும் இப்படியே இருக்கோம்.
எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும். ஹூம்!’
இப்படி, ஒவ்வொரு நிகழ்வுக்கும் நமக்குள் ஒரு டயலாக் ஓடும். அந்த
எண்ண ஓட்டம் நேர்மறையானதா எதிர்மறையானதா என்பதைப் பொறுத்துத்தான் நம் வாழ்வின் சகல
முடிவுகளும் இருக்கும். குறிப்பாக, நாம் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதும் இல்லாததும் இந்த
எண்ணங்களினால்தான். இந்த எண்ணங்களைத்
தொடர்ந்து கண்காணித்தல், உங்கள் மனநலத்தை உங்களுக்கு எடுத்துரைக்கும்.
வாழ்க்கையின் சந்தோஷத்துக்கு இரு காரணங்கள்தான் உள்ளன.
உங்கள் வாழ்வில் என்ன நிகழ்கிறது என்பது ஒன்று. அவற்றை நீங்கள் எப்படிக்
கையாளுகிறீர்கள் என்பது இரண்டு. இதில், மகிழ்ச்சியை நிர்ணயிப்பதற்கு முதல் காரணம் 10 சதவிகிதம்.
இரண்டாவது 90 சதவிகிதம்.
இல்லாததை நினைத்து மருகுவதைவிட கிடைத்ததை மகிழ்வோடு
ஏற்றுக்கொள்வதுதான் ஒரு முதிர்ந்த மனதின் வெளிப்பாடு. நமக்கு நம் வாழ்வில் இல்லாதது அனைத்தும் தெளிவாக,
வரிசையாகத் தெரியும். ‘நான் குள்ளம்’,
‘என் நிறம் சற்று கறுப்பு’,
‘எனக்கு ஆங்கிலம் வராது’,
‘என்னால் பணம் சம்பாதிக்க முடியவில்லை’,
‘என் வாழ்க்கைத்துணையால் நிம்மதி
இல்லை’, ‘என் வேலையில் உயர்வு இல்லை’, ‘என் பிள்ளைகள் மதிப்பது இல்லை’, ‘உடல் உபாதைகள் என்னைப் படுத்துகின்றன’,
‘என் வாழ்க்கை முழுத் தோல்வி’...
இப்படியெல்லாம் அடிக்கடி புலம்புகிறோம். ஆனால்,
கிடைத்தவற்றுக்கு நன்றி சொன்னோமா...
அதனால் மகிழ்கிறோமா...
இன்றும் உயிரோடு வாழ்தலே மிகப்பெரிய கொடை என்று உணர்ந்து நன்றி சொன்னோமா?
கிடைத்ததை நினைக்காத மனம்,
இல்லாததை நேரம் தவறாமல்
நினைக்கும்.
உடலில் ஒரு பாகம் பழுதடையும்போது, அது சீராக இயங்கினாலே போதும் என ஒவ்வொரு விநாடியும்
துடிக்கிறோம், இல்லையா?
அது சரியான மறுநாளே, அதை மறந்துவிடுகிறோம். சரியாக இயங்கும் அங்கங்களுக்கு
நன்றி செலுத்த மாட்டோம். ஆனால், அவை பழுதுபட்டால் அதன் மீது முழுக் கவனம் செலுத்துவோம்.
இதுதான் மனதின் செயல்பாடு.
மகன் படிக்கவில்லை என்றால், புலம்புவோம், வேண்டுவோம், பிரார்த்திப்போம், சண்டை போடுவோம். ஆனால், அவன் முதல் இடம் பிடித்தால், அந்தச் சந்தோஷம் சிறிது நேரம்தான். பின் மனம் அடுத்த கவலையை
நோக்கி நகர்ந்துவிடும். ‘இவ்வளவு மார்க் வாங்கியிருந்தாலும் ஸீட் கிடைக்கணுமே?’,
‘வெளியூர் காலேஜ்னா சாப்பாடு
கஷ்டம்!’... இப்போது புரிகிறதா, நம் நிஜமான எதிரி எது என்று? புறக் காரணங்களைத் தேடித்தேடிக் குற்றம் சொல்வோர் ஒன்றை
மறந்துவிடுகின்றனர். புறக் காரணங்களை பரிசீலனை செய்யும் எண்ணங்களும் அது எடுக்கும்
முடிவுகளும்தான் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன.
‘எனக்கு ஓவியம் கற்றுக்கொடுக்க யாரும் இல்லை.
இருந்திருந்தால் நானும் ஓவியராகியிருப்பேன்’ என்று சொல்பவர்கள் உண்டு. கைகள்
இல்லாமல் காலால் ஓவியம் வரைபவர்கள் உண்டு. எது உந்து சக்தி என்று நீங்களே
முடிவு செய்துகொள்ளுங்கள்!
உங்கள் மனம் உள்ளே போடும் இரைச்சலால் நீங்கள் வெளியில் உள்ள
அமைதியை அனுபவிக்கத் தவறுகிறீர்கள். உங்களுக்குள் ஒலிக்கும் குரல்,
உங்களை அன்பாக நடத்தினால்
நீங்கள் பிறரை அன்பாக நடத்துவீர்கள். உங்கள் உள் மன எண்ணங்கள் நேர்மறையாக
இருந்தால் வாழ்க்கை நம்பிக்கையோடு நகரும்.
உங்களால் உங்கள் புற உலகை மாற்றுவது சாத்தியம் இல்லை;
உங்கள் அக உலகை மாற்றுவது சாத்தியம்;
அவசியம். உங்கள் அக உலகம் மாறினால், உங்கள் புற உலகம் தானாக மாறும்.
வன்முறை பெருகிவிட்டது. டி.வியில், பத்திரிகைகளில், அக்கம் பக்கத்தில் எங்கும் வன்முறை பற்றிய செய்திகள்தான்
நிரம்பி வழிகின்றன. கொலை, தாக்குதல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என எல்லா செய்திகளிலும்
வன்முறை தான் ஓங்கி நிற்கின்றன. அரசியல் செய்திகளில்கூட சொற்களால் கருத்துக்களால்
மோதல்கள்தான் வியாபித்து இருக்கின்றன.
வெளி உலகத்தை விட்டுத்தள்ளுங்கள். நம் பணியிடம்,
நம் குடும்பம், நம் சுற்றம் என்று எடுத்துக்கொண்டாலே இங்கு எத்தனை
ஆக்கிரமிப்பு, வன்முறை,
வலி, சேதாரம். உடல் சார்ந்த வன்முறையைவிட மனம் சார்ந்த வன்முறை
ஏராளம். குடும்ப உறவுகளில்தான் எத்தனை வன்முறை? உடலில் ஒரு கீறல் இல்லாமல் எத்தனை வலிகள் தருகிறோம்?
பெறுகிறோம்? எண்ணங்களும் சொற்களும் போதுமே! வன்முறைக்குக் கத்தியும்
துப்பாக்கியும் வேண்டுமா என்ன? சொற்களே போதும்.
“இத்தனை செஞ்சிருக்கேன்... என்ன செஞ்சீங்க எனக்குன்னு
கேக்கறான்?”, “அவன் உறவுக்காரங்களை முன்னாடி நிற்கவெச்சிட்டு மரியாதைக்குக்கூட நம்ம ஆட்களை
முன்னாடி வாங்கன்னு கூப்பிடலை!”, “வீட்டுக்குப் போனப்ப முகம் கொடுத்துக்கூட பேசலை” - இப்படி
நிராகரிப்புகள், ஓரவஞ்சனைகள்,
அவமானங்கள், அத்துமீறல்கள் என அனைத்தையும் ஆராய்ந்தால்,
யாரோ சிலரின் வன்முறை தெரியும்.
வன்முறைக்குப் பதில் என்ன? வன்முறைதான். “அதுக்கப்புறம் அவன்கூட பேசறதையே
நிறுத்திட்டேன்”, “நானும் நல்லா திருப்பிக் கொடுத்திட்டேன்”,
“அவளைப் பத்தி புட்டுப்புட்டு
வெச்சிட்டேன்!”, “என்ன ஆனாலும் இனி கிட்டக்கூட போக மாட்டேன்.”
‘பழிக்குப் பழி’ சினிமாவில்தான் உள்ளதா என்ன?
நம் வீடுகளில் காணாத பழி உண்டா? ஆனால், அத்தனை மென்மையாக நாசூக்காகச் செய்கிறோம். எப்படிச்
செய்தாலும் வன்முறை அருவருப்பானது... ஆபத்தானது. அது உடல் சார்ந்து இருந்தாலும்
உள்ளம் சார்ந்து இருந்தாலும். வன்முறை கொண்ட மனம் தனக்குத் தெரிந்த ஆயுதத்தை
எடுத்துக்கொள்கிறது. சிந்தனைக் கூர்மையும் சொல்திறனும் இல்லாதவன் ஓங்கி அறைகிறான்.
அவனுக்கு உடல் பலம்தான் ஆயுதம். புத்திசாலி அறிவால் செயல்படுகிறான்.
மொட்டைக்கடுதாசி, உள்குத்து அரசியல், போட்டுக்கொடுத்தல் எல்லாமே வன்முறைதான். நளினமான
ஆங்கிலத்தில் வரும் அழகான மின்னஞ்சல்களில் இவற்றை நாம் அலுவல்களில் பார்த்ததது
இல்லையா என்ன? ஒரு
சொல்கூட சொல்லாமல் தீவிர வன்முறையை நிகழ்த்த முடியும். இன்றைய தகவல் சார்ந்த
உலகில் ஒரு செய்தியைத் திரித்தும், மறைத்தும், காலம் தப்பியும் வெளியிடுவதிலும் வன்முறையை நிகழ்த்த
முடியும்.
அடிப்படையில் வன்முறையைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
அமைதிகொள்ள இயலாத மனம்தான் வன்முறையை நம்புகிறது. அமைதி இல்லாதது மட்டும்
இன்றி அன்பும் குறையும்போது, அங்கு ஒரு பற்றாக்குறை உருவாகிறது. அலைபாயும் மனம் எதையாவது
செய்து அமைதிகொள்ள நினைக்கிறது. கிளர்ச்சி அடைந்த மனம் வெளி உலகக் கிளர்ச்சியையும்
கலகத்தையும் பெரிதுபடுத்திப் பார்க்கும். “என்கிட்டயே அப்படி நடந்தா நான் யார்னு
காட்ட வேண்டாம்?” என்று அகந்தைகொள்ளும். பழிஉணர்ச்சி மூலம் கணக்கைச் சரிசெய்ய உளவியல்
ஆட்டங்களில் ஈடுபடும். எண்ணத்தில் உள்ள குரோதமும் ஆக்கிரமிப்பு உணர்வும்,
சொல்லில் மற்றும் செயலில் வெளிப்படத் துவங்கும்.
பின், இது சங்கிலித்தொடராய் மனிதர்கள் இடையில்,
மக்கள் கூட்டங்கள் இடையில், தேசங்கள் இடையில் தொடரும். பின், இவை இறுகிப்போன எண்ணங்களாய் மாறும். இப்படி,
குடும்பப் பகையால், சாதிச் சண்டையால், தேசங்களுக்கிடையே நடந்த போரால் பாதிக்கப்பட்டு வன்முறைக்கு
இரையானவர்கள் எத்தனை எத்தனை பேர்?
வன்முறையின் விலை மிகமிக அதிகம். நம் வாழ்க்கையையே
விழுங்கும் அளவு கொடுமையானது. தூக்கத்தின் மதிப்பு உணர்ந்தவர்கள் தூக்கம் வராது
தவிப்பவர்கள்தான். அதேபோல அமைதியின் மதிப்பை உணர்ந்தவர்கள் அமைதியை
இழந்தவர்கள்தான். ஒரு முறை நீதிமன்றம், சிறைச்சாலை, மனநலக் காப்பகம், அநாதை ஆசிரமம், மருத்துவமனையால் பாதிக்கப்பட்டோரிடம் பேசிப்பாருங்கள்.
வன்முறையின் சேதாரங்கள் புரியும்.
வன்முறையைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
முதலில், வன்முறை என்பது வெளியில் இல்லை. அது நம் மனங்களில் உள்ளது
என்று புரிந்துகொள்ளுங்கள். வெளி
உலகு உங்களை என்றும் வன்முறைக்குத் தள்ளாது. நீங்கள்தான் அதை வடிகட்டிப்
பெற்றுக்கொள்கிறீர்கள் எனப் புரிந்துகொள்ளுங்கள். வன்முறை நிறைந்த படத்தையும்,
கதையையும்,
செய்திகளையும்,
சீரியல்களையும்
விரும்பிப் பார்க்கக் கட்டாயப்படுத்துவது யார்?
பின்னால் வந்து இடித்த கார் டிரைவர் மீது பேய் கோபம்
வருகிறது. அந்த காரை ஓட்டியது உங்கள் மகன் என்று தெரிந்தால்,
அந்தக் கோபம் மாயமாய் மறைகிறதே, எப்படி அது? மன்னித்தலும் மறத்தலும்தான் வன்முறையான மனதுக்கு
சிகிச்சைகள். உங்களையும் மன்னியுங்கள். பிறரையும் மன்னியுங்கள். எல்லோரும் தவறு
செய்யக்கூடியவர்கள். திருந்தக் கூடியவர்களும்கூட. உங்களைப் போலவே. அமைதிகொண்ட
மனதில் அன்பு சுரக்கும். அன்பு தவறுகளைப் பார்க்காது. உறவுகளைப் பார்க்கும்.
தன்னையும் பிறரையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் பிறரையும் அன்பு வழிக்கு மாற்ற
முயற்சிக்கும்.
ஒரு புன்னகையும், அணைப்பும் சாதிக்காததை உங்கள் கடும் வார்த்தைகளும்
செயல்களும் சாதிக்காது. மன்னித்தலும் மறத்தலும்தான் மனதை மாற்றும் மாமருந்துகள்!
அச்சமும் கோபமும் நம் ஆதாரக் குணங்கள். அதனால்தான் யாரையும் எளிதில் அச்சப்படவோ,
கோபப்படவோ வைத்துவிட முடியும். திடுக்கிடும் செய்திகளால்
நிச்சயம் அச்சம் அல்லது கோபம் வரும். உங்கள் கவனம் அதில் திரும்பும். இந்த
சூட்சமத்தை வைத்துக்கொண்டுதான் செய்தி ஊடகங்கள் அனைத்தும் பகீர் பகீர் என்று “ஆ”
என்று உங்களைச் சொல்லவைக்கும் செய்திகளாகப் பார்க்கவைத்து,
படிக்கவைத்து அவர்கள்
வணிக நோக்கில் வெற்றி கொள்கிறார்கள்.
‘உங்கள் குழந்தை தன் சிறுநீரில் விளையாடினால்,
கிருமிகள் தொற்றும்’ என்றால், உடனே அவர்கள் சொல்லும் பொருளை வாங்கத் தயாராகிறோம். ‘உங்கள்
பிள்ளை சரியாகச் சாப்பிடுவதில்லையா?... அது ஆரோக்கியத்தை எவ்வளவு பாதிக்கும் தெரியுமா?’
என்று ஒரு விளம்பரதாரர் அலறினால், அவர்கள் சொல்லும் பொருள் நிச்சயம் விற்கும். எந்த தாய் தன் குழந்தை சரியாகச் சாப்பிடுவதாக
ஒப்புக்கொள்வார்? ‘உங்கள் உணவில் உள்ள சத்துக்கள் போதவே போதாது’ என்று
சொல்லும்போது, ஒவ்வொரு
தாயும் தாழ்வுமனப்பான்மையுடன் பயத்துடன் அந்த செய்தியை நம்பத் துவங்குகிறாள். இது
ஓர் உளவியல் உத்தி. இவற்றில் உண்மை இருப்பதைவிட அச்சப்படும் பொழுது இவை ‘அந்த
நேரத்து நிஜங்களாக’ மாறிவிடுகின்றன.
‘உங்களின் நிறம் கறுப்பா? சிவப்பழகு வேண்டாமா?’,
‘உங்கள் பிள்ளை ஆங்கிலம் பேசத்
தயங்குகிறானா?’, ‘உங்கள் எடை உங்களுக்குப் பிரச்னையா?’, ‘உங்கள் உணவில் எல்லா சத்துக்களும் சரிவிகிதம் உள்ளனவா?’,
‘உங்கள் முடி உதிர்கிறதா?’
இப்படி எதைக் கேட்டாலும் முதலில் உங்களைத் தாக்குவது
அச்சம்தான். தர்க்கரீதியாக யோசித்து உண்மை அறிதல் சாத்தியமே இல்லை.
புரிந்துகொள்ளுங்கள்.
கறுப்புத் தோல்தான் ஆரோக்கியத்தின் அறிகுறி. தவிர எந்த
பசை தடவியும் இது வரை யாரும் நிறம் மாறியது இல்லை.
ஆங்கிலம், அறிவு அல்ல. ஒரு மொழி. உலகில் பல நாடுகளில் ஆங்கிலமே
கிடையாது. தவிர, முயற்சித்தால்
யார் வேண்டுமானாலும் கற்கலாம்.
எடைக்குறைப்பு அவசியம்தான். ஆனால்,
இந்த விளம்பரங்கள்
சொல்லும் திடீர் குறைப்பு வழிமுறை இல்லாமல் நிரந்தரமாக,
படிப்படியாகக் குறைக்கும்
வழிகள் உள்ளதே.
நம் பாரம்பரிய வீட்டு உணவில் அனைத்துச் சத்துக்களும் சம
அளவில் உள்ளன. அதைச் சரிவர சமைத்து உண்டால் போதும். இந்த டப்பாக்கள் ஒருபோதும்
வீட்டு உணவுக்கு மாற்றாகாது.
முடி உதிர்வதற்குப் பல காரணங்கள். எல்லா காரணங்களுக்கும்
உங்கள் எண்ணெய் மட்டுமே தீர்வாகுமா?
உங்களால் இப்படி எல்லாம் தர்க்கரீதியாக யோசிக்க முடியும்.
ஆனால், அச்சம் விடாது. அந்தப் பொருளை வாங்க வைக்கும். இதுதான்
மனதின் செயல்பாடு.
கோபமும் இதே போலத்தான். அந்த அமைச்சர் 1,000 கோடி ஊழல்
என்று படித்தால், பற்றிக்கொண்டு வருகிறது. இளம் பெண் பாலியல் வன்முறை என்று செய்தி படித்தாலே,
நெஞ்சு கொதிக்கிறது. காற்றில் உள்ள மாசு அதிக்கப்பட்டதாய்
படித்தால், இதைக்
கவனிக்காத அரசாங்கம் மேல் கோபம் வருகிறது. ஆனால், கோபம் இல்லாமல் யோசித்தால் இன்னமும் சரியாகச் சிந்திக்க
முடியும்.
ஊழலைத் தடுக்க முதலில் நாம் செய்யும் சின்னச்சின்னத்
தவறுகளைத் தவிர்க்கலாமே. வேலை நடக்க நாம் எவ்வளவு சமரசம் செய்கிறோம். அதை
நிறுத்தலாமே.
பெருகி வரும் பாலியல் வன்முறைக்கு நாமும் ஒரு காரணமே.
பெண்கள் பற்றிய சரியான மதிப்பீடுகளை நாம் வீட்டில் சொல்லி வளர்க்கிறோமா?
பெண்களை பொருட்களாக
விற்கும் சினிமா, விளம்பரங்கள் மற்றும் இதர ஊடகங்களை என்றாவது கண்டிக்கிறோமா?
காற்று மாசுபடுவதைத் தடுக்க வாகன ஓட்டத்தைக் குறைக்க நாம்
என்ன செய்தோம்? ஆளாளுக்கு
வண்டிகள் வாங்குவதுதான் மாசு ஏற்படக் காரணம் என்று உணர்ந்தால்,
அரசு மீது மட்டும் கோபம் வருமா?
குற்றங்கள் அனைத்துக்கும் காரணம் அச்சத்தில்,
கோபத்தில் நொடிப்பொழுதில்
செயல்பட்டதே. சம்பவங்களுக்கு எதிர்வினை செய்யும் முன்,
ஒரு முழு நிமிடம்
யோசியுங்கள். உடனடி உணர்வுக்குத் தீனியாகாமல், உங்கள் வாழ்க்கையைப் பகுத்தறிவுக்குத் திருப்புங்கள். இது ஒரு முயற்சி. இது ஒரு பரிணாம வளர்ச்சி.
செய்துபாருங்களேன். அச்சமும் கோபமும் விலக விலக, மனம் மலரும். வாழ்க்கை வசப்படும்!
அச்சத்தின் பிள்ளைதான் பதற்றம். இன்றைய நவீன வாழ்க்கையில்
பதற்றம்கொள்ளத்தக்க நிகழ்வுகளும் காரணிகளும் நம் கண் முன்னே ஏராளமாக இருக்கின்றன.
‘இப்படி நடந்தால் என்னவாகும், அப்படி நடந்தால் என்னவாகும்?’ என, மனம் ஏதேனும் ஒரு விபரீதத்தைக் கற்பனை செய்துகொண்டே
இருக்கிறது.
‘படிக்கிறான்... ஆனால், இந்த மார்க்குக்கு ஸீட் கிடைக்காதே... அந்த கோர்ஸ்
கிடைக்கலைன்னா என்ன செய்றது?’, ‘ஒருவேளை கம்பெனியில் லேஆஃப் செய்தால்,
அடுத்த மாத ஈ.எம்.ஐ-யை எப்படிக் கட்ட?’,
‘வர்ற மருமகள் மதிக்கலைன்னா?’,
‘வயசான காலத்துல பெரிய வியாதி வந்தா
செலவுக்கு என்ன பண்றது?’... என நீளும் இந்தக் கவலைகளில் நியாயங்கள் இல்லாமல் இல்லை. அனைத்துப்
பதற்றங்களுக்கும் காரணங்கள் நிச்சயம் உள்ளன. மறுப்பதற்கு இல்லை.
ஆனால், பதற்றப்படுவதால் என்ன ஆகும்? உடலின் எதிர்ப்பு சக்தி குறையும்;
நோய் வரும்;
குணம் கெடும்;
உறவுகள் சிரமப்படுத்தும்;
வாழ்க்கை மேலும்
பதற்றமாகும்.
‘அதுக்காக இதை எல்லாம் யோசிக்காம இருக்க முடியுமா?’
என்கிறீர்களா? யோசனை வரும்தான். ஆனால், அந்த எண்ணத்தை எப்படிக் கையாள்வது எனத்
தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
ஒரு காலத்தில் நம் முன்னோர்களுக்கு எழுந்துகொள்ள அலாரம்
கிடையாது. வாசல் கூட்டுவது முதல், பின்கட்டில் அம்மி அரைப்பது வரை அனைத்துமே வானிலையைப்
பொறுத்துத்தான். விறகு அடுப்பைப் பற்றவைக்கவே நிறையப் பிரயத்தனங்கள் வேண்டும்.
வீட்டில் இவ்வளவு பொருட்களும் வசதிகளும் அப்போது கிடையாது.
வெளியே சென்றால் பஸ் வரக் காத்திருக்க வேண்டும்.
விவசாயத்தில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது. வருமானமும்
அப்படித்தான். உடலுக்கு பாதிப்பு வந்தாலும் எந்தப் பெரிய மருத்துவ வசதியும்
கிடையாது. காப்பீடு, உடனே பறந்து வரும் ஆம்புலன்ஸ் எதுவும் கிடையாது. இந்தக் காலத்தின் பதற்றமே
அப்போது கிடையாது.
இன்று, எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. அனைத்தும்
கையடக்கமாக, ஆளுக்கொன்றாக,
குறைவான விலையில் புதிது புதிதாகக் கிடைக்கின்றன.
அவற்றைக்கொண்டு பல விஷயங்களைத் திட்டமிடலாம்; கட்டுப்படுத்தலாம்; விரைவாகச் செய்யலாம். போனில் கூப்பிட்டால் கார் வரும்.
வங்கிக் கையிருப்பு தினம் எஸ்.எம்.எஸ்ஸில் தெரிகிறது. பணப் பரிமாற்றம் விரல்
நுனியில் நடக்கிறது. சமைக்கப் பிடிக்காவிட்டால், ஒரு மணி நேரத்துக்குள் மணக்க மணக்க உணவு வீட்டுக்கே
வருகிறது. எல்லா இடத்துக்கும்
விரைவாக, சொகுசாகச்
செல்ல முடிகிறது. பிறரின் தேவை இல்லாமல் தனியாக, ஒரு வசதியான வாழ்க்கை வாழ முடிகிறது.

இங்கு பிரச்னையே அதுதான். தனியாக எல்லாவற்றையும் செய்ய
முடிவதால், நாம் பிறருடன் இசைந்து செல்லும் திறனை இழந்து வருகிறோம். இந்த வாழ்க்கைமுறைக்குத் தொடர்ந்து சம்பாதிக்க,
வேகமாக ஓட ஆரம்பிக்கிறோம். இதைவிட ஆபத்தானது,
‘எல்லாவற்றையும் நம் கட்டுக்குள்
கொண்டுவர முடியும்’ என்று வாழ்க்கையை மிகத் தவறாகப் புரிந்துகொள்வது. இந்த
எண்ணம்தான் வாழ்க்கையின் அனைத்துப் பதற்றங்களுக்கும் காரணம். நம்
கட்டுப்பாட்டில் அனைத்தும் உள்ளதை நினைக்கும்போது அகந்தை வளர்கிறது. அது,
அடிபடும்போது பதற்றமும் கோபமும் வருகின்றன. நாம் திட்டமிட்ட
வாழ்க்கையை மட்டும் வாழ நினைக்கிறோம். எதிர்பாராது ஏதாவது வந்துவிடுமோ என்று
அஞ்சுகிறோம். வந்தால் உடைந்துபோகிறோம். இதுதான் பிரச்னை.
வசதி படைத்தவர்கள், ஒருமுறை ஏதேனும் ஒரு குப்பத்தில் நுழைந்து,
ஒரு சுற்று வந்தால் புத்தருக்கு வந்ததுபோல ஞானம் வரும்.
குறிப்பாக, ஒரு
சாவு வீட்டுக்குப் போய்வர வேண்டும் என்பது விண்ணப்பம். அடைசலாகக்கிடக்கும் அவர்கள்
வீடுகளிலும் வாழ்க்கையிலும் மக்களின் நெருக்கம் தெரியும். சாலையை மறித்து மேடை
போட்டு எல்லா மக்களும் வேலையை, வருமானத்தைத் துறந்து, துக்கம் கொண்டாடி, பணம் வசூலித்துக் கோலாகல வழியனுப்புதல் நடக்கும். மரணத்தை
வாழ்வில் ஓர் அங்கமாக எண்ணி ஏற்றுக்கொள்வதால், அங்கு நடனமும் பட்டாசும் சாத்தியமாகின்றன.
நாம், உறவினர் இறந்தால்கூட லீவு எடுக்கத் தயங்குகிறோம் பின்,
போனிலேயே துக்கம்
விசாரிக்கிறோம். அடுத்த 10-வது நிமிடம் வேறு கதை பேசுகிறோம். இங்கு
பகிர்தல் இல்லை. கல்யாணத்துக்குச் சென்றாலும் வரிசையில் நின்று பரிசு கொடுத்து,
போட்டோ எடுத்து முடித்து, பந்திக்கு முந்தி, காரை வரச்சொல்லி வீட்டுக்குப் பறக்கிறோம்.
தனிமையான வாழ்க்கையின் அடையாளம் பதற்றம். யாரையாவது
எதையாவது பற்றிக்கொண்டால், பதற்றம் குறையும். அது, உறவுகளாக இருக்கலாம், இறைவனாக இருக்கலாம். இயற்கையாக இருக்கலாம். எதிலாவது
பற்றுக்கொண்டு நம்பிக்கைவைத்தால், வலி நீங்கி, வழி பிறக்கும்.
உடலும் மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அதனால்தான் உடல் சரியில்லை
என்றால், மனம்
பாதிக்கிறது. மனம் பாதித்தால், உடல் நலம் கெடுகிறது.
உடல் சரியில்லை என்றால், முன்னுரிமைகள் மாறிவிடுகின்றன. வாழ்க்கையின் கண்ணோட்டமே
மாறிவிடுகிறது.
“பாயில் படுத்து நோயில் விழுந்தால் காதல் கானல் நீரே” என்று
கண்ணதாசன் எழுதியிருப்பார். காதல் ஏற்பட உடலும் ஒத்துழைக்க வேண்டும்
என்பதில் அறிவியல் இருக்கிறது.
தன் கடைசிக் காலங்களில் மருத்துவமனையில் சிகிச்சை
பெறும்போது கவிஞர் வாலி இப்படிச் சொன்னாராம் “கருணாநிதி வந்தது,
கமலஹாசன் வந்தது எல்லாம் சரி, வெளிக்கி வரலேயே.” இந்த நகைச்சுவையில் வலி உள்ளதைப்
பார்க்கலாம். வலியிலும் நகைச்சுவைகொள்ளும் அளவு பக்குவப்பட்டவர் வாலி
என்றும் கொள்ளலாம்.
படுக்கையில் விழுந்தால் பாதி நம்பிக்கை போய்விடுகிறது.
வாழ்க்கை மிக வித்தியாசமாகத் தென்பட ஆரம்பிக்கிறது. மனநிலை மாற்றங்கள்
ஏற்படுகின்றன.
ஒரு (ஹார்ட்) அட்டாக் வந்தவுடன் குணம் மாறிப் பேசுபவர்களைப்
பார்க்கிறோம். “எல்லாத்தையும் விட்டுட்டேன் சார். எதுக்கு இப்படி ஓடறோம்னு தோணுது.
என்ன கொண்டுட்டு போகப்போறோம்? அதனால யார் கிட்டயும் கோவிச்சுக்கறதுகூட கிடையாது” என்று துறவி
போல பேசுவார்கள். எத்தனை நாட்களுக்கு இப்படி இருப்பார்கள் என்று தெரியாது.
ஆனால், உடனடியாக
ஒரு மாற்றம் ஏற்படுவது நிஜம்.
உடலின் ரசாயன மாற்றங்கள் மன மாற்றங்களை ஏற்படுத்தும்.
அதுபோல மன மாற்றங்கள் உடலில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த இணைப்பைப்
புரிந்துகொள்ளுதல் முக்கியம்.
ஒரு தோல் மருத்துவ நண்பர் ஒரு சொரியாஸிஸ் கேஸ் பற்றிச்
சொல்லிக் கொண்டிருந்தார். 12 வயதுப் பையனுக்கு ஐந்து ஆண்டுகளாகத் தீராத தோல்
பிரச்னை. மனஅழுத்தம் எதுமே இல்லை எனச் சாதித்தனர் பெற்றோர். ஐந்து வருடங்களுக்கு
முன் என்ன நடந்தது என்று ஆராய்ந்ததில் ஊர் மாறியதால் பள்ளி மாற்றம் நிகழ்ந்தது
தெரியவந்தது. வயது வந்தோருக்கு இட மாற்றம் செய்யும் பாதிப்புகளைவிட குழந்தைகளுக்கு
அதிகம். பள்ளி மாற்றம், ஆசிரியர் மாற்றம், நட்பு வட்டம் மாற்றம், நெருங்கிய உறவுகளின் பிரிவு எல்லாம் சில குழந்தைகளுக்குப்
பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கடைசியில் மன சிகிச்சையுடன் கூடிய தோல் சிகிச்சையில்தான் அந்தப் பையன் குணமானான்.

பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு உளவியல் குறைபாடுகளும்
நோய்களும் அதிகம் என்றால் நம்புவீர்களா? குழந்தைகளுக்கான மனநலக் குறைபாடுகள் (Childhood
Psyciatric Disorders) வயது வந்தோர்களுக்கு
வரும் பாதிப்புகளைவிட இரு மடங்கு அதிகம். பிள்ளைப் பருவத்தில் சிறுவர்களுக்கு
சிறுமியர்களைவிட பிரச்னைகள் அதிகம். ஆனால், வயதாக வயதாக ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் பாதிப்புகள்
வருகின்றன. இந்தச் செய்திகள்
சொல்லும் சமூகக்கூறுகளை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.
உடலும் மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றால்,
இரு வழிகளிலும் பாதிப்பு
ஏற்படுவது இயற்கை. ஆனால், இதை நவீன மருத்துவம் கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொண்டாலும்,
நோய் கண்டுபிடிப்பு
முறைகளிலும் சிகிச்சைமுறைகளிலும் பெரிதாகக் கண்டுகொள்வது இல்லை.
எந்த ஆய்விலும் உடல் காரணங்கள் எதுவும் இல்லை என்றாலோ,
மற்ற சிகிச்சைகள் பலன்
அளிக்காமல் போனாலோ, அது மனம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று முடிவு
செய்வதற்குள் நோயுற்றவர் கொள்ளும் செலவுகளும், வாழ்வியல் சோதனைகளும் மனஉளைச்சலும் ஏராளம்.
உடலில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றதும் உடனே
அடுத்தத் துறைக்கு அனுப்பும் முன், சற்று நேரம் பேசினாலே நிறையத் தகவல்கள் தெரியவரும். சித்தா,
ஆயுர்வேதம் போன்ற
பாரம்பரிய முறைகள் அதனால்தான் ஒரு மனிதனை முழுமையாக உணர்ந்து,
அறிந்து ஒரு ஒட்டுமொத்த
நலத்திட்டத்தை முன் வைக்கின்றன. ஓர் அங்கத்தைக் குணப்படுத்துவதைவிட ஓர் உயிரைக்
குணப்படுத்தும் சித்தாந்தத்தைக் கொண்டவை அவை.
பேசுதல் முக்கியம். கேட்டல் முக்கியம். அடுத்த மனிதனின்
வாழ்வை அறிந்துகொள்ளுதல் முக்கியம். இந்த நோயின் முழு உடல் - மன - சமூகத்தன்மை
அறிந்து குணப்படுத்துதல் முக்கியம்.
ஒரு தலைவலி என்றால்கூட கையில் கிடைத்த மாத்திரையை
விழுங்குவதற்கு முன், நம்பிக்கைக்குரிய மனிதர் ஒருவரிடம் மனசுவிட்டுப் பேசுங்கள்.
பல நேரங்களில் அதுவே குணப்படுத்திவிடும்.
எந்த மனநோயும் இல்லாமல், தனக்குத்தானே பேசிக்கொண்டு செல்லும் பலரைப் பார்க்கிறோம்.
என்ன காரணம்? நம் மனக்குமுறலைச் சொல்ல ஒரு வடிகால் தேவைப்படுகிறது. உறவோ நட்போ கிடைத்தால்
நல்லது. உள்ளே உள்ள வேதனைகள் நோய்களாக மாறும். வாய்விட்டுப் பேசுதல் முக்கியம். பல
பிரச்னைகள் தீராவிட்டாலும், பேசினாலே மனம் லேசாகி நம்பிக்கை பெற்று அடுத்த வேலையைப்
பார்க்கப் போய்விடுகிறோம்.
பேசுவோம். மனம் மாறுவோம். சுகம் பெறுவோம்!
எந்த உணர்வால், உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்துவருகிறது.
நவீன மருத்துவம் இதில் அக்கறை காட்டுவதற்கு முன்னர், உளவியல், இறையியல், பழங்குடி வைத்தியம் எனப் பல்வேறு முறைகள் இதற்கான தேடலில்
இருந்தன. மருத்துவ அறிவியலும் உளவியலும் கைகோத்து உலகுக்கு வெளியிட்ட முதல் பெரும்
அறிவிப்பு ‘இதயநோய்களுக்கு சில ஆளுமைப் பண்புகள் பெரும் காரணமாகின்றன’
என்பதுதான்.
‘டைப் ஏ பர்சனாலிட்டி’ என்று இதை அழைக்கிறார்கள்.
இதயநோய் வருபவர்களுக்கு என சில பிரத்யேகப் பண்புகள் உள்ளன. மரபியல் காரணங்கள்
மட்டும் அல்ல; உணவில்
கொழுப்பு மட்டும் அல்ல; சில ஆளுமைப் பண்புகளும்தான் நோயை உருவாக்குகின்றன. அதனால், ‘அடைப்பை நீக்க மருந்துகள் தருவதோடு,
இந்த ஆளுமை குணங்கள்
மாறவும் ஆலோசனை தர வேண்டும்’ என்று
வலியுறுத்தினார்கள்.
முதலில், டைப் ஏ ஆளுமைப் பண்புகள் என்னென்ன என்று பார்ப்போம்.
பட்டியல் பெரிது என்பதால், முக்கியமான மூன்று குணங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்.
முதலாவது, போட்டி மனப்பான்மை. வாழ்வில் எல்லா நிகழ்வுகளையும் போட்டியாக நினைத்து,
வெற்றிகொள்ள துடிப்பது. ‘முதல் இடம் பிடிப்பது
முக்கியம். ஜெயிப்பது மானப் பிரச்னை. அதற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ஓடத்
தயார்’ என்ற மனநிலை. இதனால், எல்லோரையும் போட்டியாளராகக் கருதி, போராட்டத்துடனேயே வாழ்வது. வரிசையில் நிற்கக்கூட
முந்துவார்கள். இருவர் இருக்கையில் பொதுக் கைப்பிடியை விட்டுத்தர மறுப்பார்கள்.
(சுந்தர ராமசாமியின் ‘மீறல்’ எனும்
சிறுகதையில் இந்த உளவியல் அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கும்.)
இரண்டாவது, எல்லா நேரமும் அவசரத்தனம். எழும்போதே, ‘ஐயோ நேரமாச்சே’ என்று ஓட ஆரம்பிப்பார்கள். எட்டு மணி வண்டிக்கு ஆறு மணிக்குக் கிளம்ப
அவசரப்படுவார்கள். ஒரு வேலை முடிந்தால், ஒரு கணம்கூட திருப்திப்படாமல், அடுத்த வேலை பற்றி அவசரம் காட்டுவார்கள்;
பொறுமை தவறுவார்கள்; கோபப்படுவார்கள். வாழ்க்கையே பெரும் ஓட்டம் இவர்களுக்கு.
மூன்றாவது, ஒரே நேரத்தில் பல வேலைகலைச் செய்வது. ஒரே நேரத்தில் அனைத்தையும் செய்ய முயற்சிப்பார்கள்.
எதையும் முழுமையாக, திருப்தியாகச் செய்ய மாட்டார்கள். சாப்பிடும்போது மொபைலில் பேசியவாறு அருகில்
உள்ளவர்களுடன் பேசுவார்கள்.
10 வேலைகளில் ஈடுபட்டவாறு, 11-வது வேலையைப் பற்றி யோசிப்பார்கள். (தசாவதானிகள் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.)
‘இது, இன்று நகரத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும்
பொருந்துவதுபோல உள்ளதே?’
என நினைக்கிறீர்களா? நிஜம்தான் நகர வாழ்க்கையின் நியதிகள் எல்லோரையும் டைப்
ஏ-வாக மாற்ற எத்தனிக்கின்றன. பள்ளி காலத்திலேயே முதல் இடத்துக்கான வேட்டைத்
தொடங்குகிறது. ‘ஓடு, நேரம் இல்லை. சீக்கிரம் சாதிப்பதுதான் வெற்றி’ என்று, பணியிடத்தில் சொல்லப்படுகிறது.
உலகமயமாக்கமும் நுகர்வுக் கலாசாரமும் நம்மை ஒரு பெரும்
ஓட்டத்துக்குத் தயார் செய்துவிட்டன. இந்தியா வல்லரசாக வேண்டும் என்று பேச
ஆரம்பித்தோம். இன்று, உலக நாடுகளில் முதன்மை பெற்றுள்ளது இந்தியா. எதில் தெரியுமா?
இதய நோய்களில்.
டைப் பி ஆளுமை என்றால் என்ன? எதையும், தன் போக்கில் அமைதியாக எடுத்துக்கொண்டு, பொறுமை இழக்காமல், ஒரு வேலையை முடித்து, அடுத்த வேலைக்கு நிதானமாகச் செல்லும் ஆசாமிகள். நம் சமூகம் இவர்களை எருமை மாடுகள் சாலையை மறிப்பதுபோலப்
பார்க்கிறது. ஆனால், இவர்களுக்கு இதயநோய்களின் ரிஸ்க் குறைவு. நிறுவனங்களிலும் இவர்களின் வெற்றிக்குக் குறைவில்லை
என்பதும் ஆச்சர்யமான உண்மை.
இதேபோல, சர்க்கரை நோய், வயிற்றுப்புண் எனப் பல சைக்கோ சோமேடிக் டிஸ்ஆர்டர்ஸ்
பற்றி ஆராய்கிறார்கள். மருத்துவ ஆய்வுகள் கண்டு சொன்னதைவிட,
ஆன்மிக வழியில் சுகமளிக்கும் லூயிஸ் ஹேவின்
கண்டுபிடிப்புகள் அபாரமானவை. ‘உடலின் அனைத்து உபாதைகளுக்கும் உளக் காரணங்கள்
உள்ளன’ என்கிறார். தன் புற்றுநோயை அவர் குணப்படுத்தியதைப் படிப்பது ஒரு
பரவசமான அனுபவம்.
சுருக்கமாகச் சொன்னால், அனைத்து உணர்வுகளும்
உடலில் பதிவுசெய்யப்படுகின்றன. அவை ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்களுக்கு ஏற்பதான்
நம் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது. காரணங்கள் எதுவாகிலும் யாராகிலும், உங்கள் உடல்நலம் உங்கள்
உணர்வுகள் சார்ந்தவை. நல்ல உணர்வுகள் சுகப்படுத்தும். நல்லது அல்லாதவை நோய்களை
ஏற்படுத்தும். மனசை லேசாகவைத்திருக்கக் கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கையின் சிறந்த பாடம். திருப்தியும்
மகிழ்ச்சியும் கொண்ட மனம், பிற மனதை நோகடிக்காது; குற்றங்கள் நிகழ்த்தாது; நிஜமான வளர்ச்சியின்
தொடக்கமும் அதுதான்.
மாவு அரைக்கப் போன பையன் திருடன் போல மெள்ளப் பதுங்கியபடி அடி எடுத்து நடந்துகொண்டிருந்தான். வழி மறித்த பெரியவர்
காரணம் கேட்க, “அம்மா, மாவை
நைஸா அரைச்சிட்டு வரச்சொன்னாங்க... அதான்” என்றானாம்.
இதைப் படித்துவிட்டு மொக்கை ஜோக் என்கிறீர்களா அல்லது ஒரு
விநாடி உங்களை மறந்து சிரிக்கிறீர்களா? எதுவாகினும், அது உங்கள் மனவளத்தைப் பிரதிபலிக்கிறது என்பதுதான் உண்மை.
நகைச்சுவை உணர்வு மிக நுட்பமானது. சிரிக்கத் தெரிந்தவர்கள்
வாழத் தெரிந்தவர்கள். எவற்றையும் நகைச்சுவையாகப் பார்க்கும்தன்மை வாழ்வின் அனைத்து
வலிகளுக்கும் நிவாரணம் அளிக்கக்கூடியது. நகைச்சுவையால், மனமும் உடலும் இலகுவாகின்றன. நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள்
மனநலத்தைப் பேணுவது எளிது. மனஉளைச்சலை சமாளிப்பது எளிது. துயரங்களில் இருந்து
மீள்வது எளிது.
காரணமே இல்லாமல் சிரிப்பவர்களை என்ன சொல்ல?
அவர்கள் காரணம் நமக்குப் புரியவில்லை என்பதுதான் உண்மை.
“இதில் சிரிக்க என்ன இருக்கு?” என்று யாராவது சொன்னால், அவர்கள் மனம் அங்கு இறுகிப்போயிருக்கிறது என்றுதான் பொருள்.
சிரிப்பவர்கள் பிறரைச் சிரிக்கவைக்கத் தெரிந்தவர்கள். பிறரை மகிழ்விப்பதைவிட
மிகப்பெரும் மனித சேவை ஏது?
நண்பர் ஒரு பெரும் வாழ்க்கைத் துயரை
விவரித்துக்கொண்டிருந்தார். திடீரென டி.வியில் ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படம்
வந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதிர அதிர சிரிக்க ஆரம்பித்தார். நானும் அவரும்
இந்தப் படத்தை ஆறு முறையாவது பார்த்திருப்போம். முதல் முறை பார்ப்பது போல
ரசித்துப் பார்த்தோம். காட்சிகள் முடிந்தும் (ஆனந்தக்) கண்ணீரை துடைத்துக்கொண்டு
“எங்கிருந்து எங்கே வந்திட்டோம் பாருங்க” என்றார் சிரித்தவாறு.
பிறரைப் பார்த்துச் சிரிப்பதைவிட தன்னைப் பார்த்துச்
சிரிப்பது மிகப்பெரிய ஆளுமைகளுக்கே சாத்தியம். உலகின் அனைத்து சிறந்த
நகைச்சுவையாளர்களும் தன்னையே கிண்டலடித்துக் கொள்பவர்கள்தான். தன் தவறை ஏற்று,
அதை எந்தத் தற்காப்பு உணர்வும் இன்றி ரசமாகப்
பகிர்ந்துகொள்ளும் மனிதர்களை யாருக்குத்தான் பிடிக்காது? இதை, திரையில் மட்டும் அல்ல. நிஜ வாழ்க்கையிலும் பார்க்கிறோம்.
சிலரை எல்லோருக்கும் பிடிக்கிறது என்றால் அதற்கு அவர்களின் நகைச்சுவை உணர்வுதான்
முக்கியக் காரணமாக இருக்கும்.
எவ்வளவு அழகான முகமாக இருந்தால் என்ன,
சிரிக்காத முகத்தில் என்ன களை இருக்கும்?
எல்லாம் தெரிந்தும் நகைச்சுவை உணர்வைத் தொலைத்து வருகிறோம்.
இயந்தரகதிக்கு வாழ்வைத் தள்ளி, வாழ்வின் இருண்ட பக்கங்களைப் பூதக் கண்ணாடி வைத்துப்
பார்க்கிறோம். தகவல் அறிவு என்று எல்லா குப்பைகளையும் தலைக்குள் கொட்டி,
நிறையத் தெரிந்துகொண்டு நிறையப் பயப்படுகிறோம்.
இயல்புத்தன்மையையும் வாழ்க்கையை அதன் போக்கில் பார்க்கும் தன்மையையும் இழந்து,
நோயாளிகளாகி வருகிறோம்.
வசதிகள் பொருட்களைக் குவிக்கும் அளவுக்கு நல்ல உணர்வுகளைக்
குவிக்கிறதா என்று பாருங்கள். மனிதர்களைத் தனிமைப்படுத்தி மனஉளைச்சல்களுக்கு
ஆளாக்குகிறது. நான் சொல்வதை நம்ப முடியவில்லை என்றால், ஒரு சின்ன ஆய்வு நடத்துங்கள். ஊரைச் சுற்றிலும் யார்
யாரெல்லாம் வாய்விட்டு சிரிக்கிறார்கள் என்று ஒரு நாள் முழுவதும் பட்டியல்
போடுங்கள். அவர்கள் வயது, தொழில், வசதி என்று எல்லாவற்றையும் குறித்துக்கொள்ளுங்கள். காரில்
போகாமல் எல்லா மக்களையும் காணும் வகையில் பொது வாகனத்தில் செல்லுங்கள். நிறைய
உண்மைகள் புரியும். நான் பார்த்தமட்டில் மாணவர்கள், தொழிலாளர்கள், செல்போனுக்கு வசதி இல்லாத பள்ளி மாணவர்கள்,
குப்பத்தில் வசிப்பவர்கள், இடநெருக்கடியில் வாழ்பவர்கள் எல்லாம் நகைச்சுவையை அதிகம்
பகிர்ந்துகொள்வார்கள். கூர்ந்து நோக்கினால் ஒன்று புரியும். இவர்கள்,
வாழ்க்கையை சகல இன்னல்களுடனும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சின்ன
விஷயங்களை ரசிக்கக் கற்றுக்கொண்டுள்ளனர்.
ஆயுள் கூடிக்கொண்டே போகிறது. வசதிகள் பெருகப் பெருக
நோய்களும் பெருகிக்கொண்டே வருகின்றன. தனிமையும் மனஉளைச்சலும்தான் மனித இனம் இன்று
சந்திக்கும் பெரும் பிணிகள். அதற்கு நகைச்சுவையைவிட சிறந்த மருந்து ஏது?
இன்று எதையும் உடனடியாகத் தருவித்துக்கொள்ள எல்லா வசதிகளும்
உள்ளன. ஆனால், மகிழ்ச்சியாக
வாழ வழி தெரியாமல் தவிக்கிறான் மனிதன். காரணம், உடனடி சுகங்களில் பெரிய மகிழ்ச்சி நிலைப்பது இல்லை. மாறாக,
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் மிஞ்சுகின்றன. வாழ்க்கையை
அதன் போக்கில் ரசித்து, நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை சுவாரசியமாகப் பார்க்கத்
தெரிந்தாலே போதும். நம்பிக்கையும் நல்ல உணர்வுகளும் தானாக வந்து சேரும்.
நல்ல நகைச்சுவை என்பது எது? உங்களை சகலத்தையும் மறக்கச்செய்து, ஒரு நொடியாவது வேறு உலகத்துக்குக் கடத்திச்செல்வது எதுவோ
அதுதான். பார்த்த படத்தைப் பாருங்கள்; பழகிய நண்பர்களைப் பாருங்கள்; பழைய விசயங்களை அசைபோடுங்கள்; சிரிக்க முடியும் அனைத்துத் தருணங்களையும் தவறவிடாதீர்கள்.
வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொள்வது நல்லது!

உணவு என்பது உடலை மட்டும் பேண அல்ல. உள்ளத்தையும்தான். எல்லா
மாற்றங்களும் உணவில்தான் தொடங்குகின்றன. எல்லா மதங்களும் உணவுக் கட்டுப்பாடுகளை
வலியுறுத்துகின்றன. சில நாட்கள், சில பொழுதுகள் கண்டிப்பாக உண்ணாநோன்பு
பரிந்துரைக்கப்படுகிறது. சில உணவுகள் தவிர்க்கப்படுகின்றன. சில உணவுகள்
அவசியமாகின்றன. எதை உண்பது, உண்ணக் கூடாது என்பதில் வேண்டுமானால் பேதங்கள் இருக்கலாம்.
ஆனால், விரதம் இருப்பதிலும், பிறருக்குப் பகிர்ந்து அளித்து உண்ண வேண்டும் என்பதிலும்,
எல்லா மதங்களிலும்
ஒற்றுமை உள்ளது. இன்று,
மதத்தைவிட மருத்துவமே உணவு பற்றி அதிகம் பேசுகிறது. உணவு
பற்றி நிறைய பேசவும், எழுதவும், விவாதிக்கவும்
செய்கிறோம். ஆனால், உணவு பற்றிய குறைகளும் குழப்பங்களும் இல்லாத குடும்பங்களே இல்லை என்று
சொல்லலாம்.
‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற ரீதியில்
ஒரு வயதுச் சிறுகுழந்தைக்கே நியூட்ரீஷியன் அட்வைஸ் பெறாமல் உணவு தருவது இல்லை
அம்மாக்கள். கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் என்று எல்லா உணவுகளையும் பிரித்து அலசுகிறோம். புதிது
புதிதாகப் படித்துவிட்டு, புதிது புதிதாகப் பயப்படுகிறோம்.
வளர்ந்த நாடுகளில் உடல் பருமன் பெரும் வியாதி. அனெரெக்ஸியா
வந்து சாப்பிட்டதை வாந்தி எடுத்து, பட்டினியில் உடல் இளைக்கும் வியாதி இன்னொரு புறம். இவை நம்
தேசத்திலும் பெருகிவருவது கவலைக்குரியது.
இவற்றை முதலில், ஈட்டிங் டிஸ்ஆர்டர் (Eating disorder)
என்றுதான் சிகிச்சை கொடுத்துவந்தார்கள். இன்று,
உளவியலாளர்கள் இவற்றை ‘பாடி இமேஜ் டிஸ்ஆர்டர்’ (Body
Image disorder) என்கிறார்கள். அதாவது, சுயமதிப்புக் குறைவு என்பதால், இவை வருவதைக் கண்டுபிடித்து மனசிகிச்சை
கொடுத்துவருகிறார்கள்.
நீங்கள் உண்ணும் உணவை, ருசி கருதியோ தேவை கருதியோ மட்டும் அல்ல... உங்கள் மனநிலை
கருதியும்தான் உண்கிறீர்கள். அதனால்தான், உங்கள் உணவுப்பழக்கமும் செரிமானமும் உங்கள் மனநலம்
சார்ந்தவையாக இருக்கின்றன.
எல்லாவற்றையும் சுலபமாக உண்ண முடிந்து,
நன்கு செரிமானம் ஆகி,
இயல்பாக அவை
வெளியேற்றப்பட்டால் மனம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். உணவுகளில் அதீத விருப்பு, வெறுப்பு, செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல் போன்றவை இருந்தால், உடல் நலம் மட்டும் அல்ல ஒட்டுமொத்த நலமும்
பாதிக்கப்பட்டுள்ளது என்று அறியலாம்.
சாலை ஓரத்தில் மண்ணில் விளையாடும் கட்டடத் தொழிலாளியின்
பிள்ளைக்கு, சாலை
ஓரக் கடையின் இட்லியும் டீயும் எதுவும் செய்வது இல்லை. ஆனால்,
வசதி படைத்த பிள்ளைகளுக்கு ஆயிரம்
ஒவ்வாமைகள். ஊர் ஊராய்
சாப்பிடுபவர்களுக்கு எல்லாம் செரிக்கிறது. ஆனால், தண்ணீருக்குப் பதில் வெந்நீராய் குடிப்பவருக்கு ‘ஃபுட்
பாய்ஸன்’ ஏற்படுகிறது. இதற்குக் காரணம் நம் மன இயல்புதான்.
உணவு என்பது அனுபவங்களை உட்கொள்வதன் குறியீடு என்று
கொண்டால், செரிமானம்
என்பது ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் குறிக்கிறது. மலம் வெளியேறுவது பழையதைக்
கழித்து, புது
அனுபவத்துக்குத் தயாராவது. பசி என்பது வாழ்வின் ஊக்க சக்தி.
எந்த சிக்கலான உணர்வு ஏற்பட்டாலும் முதலில் தடைபடுவது
உணவுதான். நடப்பவற்றை ஏற்கும்போது செரிமானம் நன்றாக நடக்கிறது. பழையதை
மறக்காவிட்டால் மலம் வெளியேறும் பாதையில் பிரச்னை ஏற்படுகிறது. கோபம்
என்றால், உணவுக்குழாயில் கட்டி வருகிறது. இதுதான்,
உணவு பற்றிய உளவியல்
பகுப்பாய்வு.
நாம் உண்ணும்போது உள்ளத்தின் உணர்வையும் உணவுடன் கலந்தே
உண்கிறோம். எனவே, பயமோ, பதற்றமோ,
கோபமோ ஏற்படும்போது உணவு உண்பதைத் தவிர்க்கலாம். உண்ணும்போது
மனதுக்கு இதமான, மெல்லிய இசை கேட்பது நல்லது. தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டு உண்பது கேடானது.
உணவு கிடைத்ததற்கு, உண்ண முடிவதற்கு நன்றி சொல்லிவிட்டு உண்ணுங்கள். கிடைத்ததில் சிறந்த உணவை உட்கொள்ளுங்கள். உடல் உழைப்புக்கு
ஏற்ற உணவை உண்ணுங்கள். மெளனமாக உண்பது நல்லது. சூரிய உதயத்தில் முதல்
உணவும் சூரிய அஸ்தமனத்தில் கடைசி உணவும் உண்ணுதல் உத்தமம். முடியாவிட்டால்,
கடைசி உணவு, அளவு குறைந்ததாய் இருக்கட்டும்.
உணவைப் பழிக்க வேண்டாம். நீங்கள் ஒதுக்கும் உணவில் சில
மனிதர்களும் பல நூறு ஜீவராசிகளும் பசியாறும். உணர்ந்து உண்ணுதல் பேரானந்தம்!
உடல் நலனைப் பேணுவதில் எத்தனையோ வகைகள் உள்ளன. “ஒழுங்காக மெடிக்கல் செக்அப்
செய்ய வேண்டும்”; “சத்தான உணவு சாப்பிட வேண்டும்”; “உடற்பயிற்சி செய்ய வேண்டும்”; “சுத்தமாக இருக்க வேண்டும்”; “அறிகுறிகள் வந்தாலே டாக்டரைப் பார்க்க வேண்டும்...” என
வரிசையாக சில நடைமுறைகள் வைத்திருக்கிறோம்.
ஒரு பிரச்னை என்றால், அது சார்ந்த சிறப்பு நிபுணரைப் பார்க்கிறோம். பிறகு,
அவர் வேறு ஒரு துறைக்கு பரிந்துரைத்தால்,
அதையும் பார்க்கிறோம். பின்பு, மாற்று சிகிச்சைகள் பற்றி யோசிக்கிறோம். முதலும் கடைசியும்
அலோபதிதான். இடையில், ‘குணம் தெரிகிறது’ என்று வேறு சிலவற்றை முயற்சிக்கிறோம். ஓர்
இடத்தில் தெரிவிக்காமல், வேறொரு இடத்தில் சிகிச்சை மேற்கொள்கிறோம். நோயின்
வீரியமும் அது குறித்த நமது பயமுமே நம் தேடல்களை நிர்ணயிக்கின்றன.
அலோபதி ஒரு இடத்தில் நிற்கும். “உடல்ல ஒண்ணுமே இல்லை.
மனசுலதான் ஸ்ட்ரெஸ்” என்று சொல்லி, வாழ்வில் தெரியும் காரணங்களை வைத்து,
‘இதனாலா?’ என்று கேட்பார்கள். பெரும்பாலானவர்கள்,
டாக்டரின் குறுகிய நேர
விசாரணையில் சரியாகப் பதில் சொல்வது இல்லை. தவிர, நோய் அவதியில் இருப்பவருக்குச் சரியாகச் சிந்தித்துப் பதில்
சொல்லவும் முடியாது. இதனால், சில மருத்துவர்கள் பதற்றத்துக்கு மருந்து எழுதித் தருவது
உண்டு. மனநல மருத்துவர்களிடம் அனுப்புபவர்களும் இருக்கிறார்கள்.
தீவிர மனநோய் இல்லையென்கிற பட்சத்தில்,
நம்மில் பலருக்கு சைக்கியாட்ரிஸ்ட்டுகளிடம்
போகப்பிடிப்பது இல்லை. கவுன்சலிங் செய்பவர் பற்றிய தர நிர்ணயமும் தெளிவும் குறைவு.
உடலில் எந்தக் கோளாறும் இல்லை என்றாலும், பிரச்னை உடலின் மூலம்தான் தெரிவிக்கப்படுகிறது. இதை, எப்படித் தீர்ப்பது என்று தெரிவது இல்லை.
தீராப் பிரச்னையை, வேறு வழியின்றி, “இதை ஒன்றும் செய்ய முடியாது. அவ்வப்போது வந்து போகும்!”
என்று தன்னோடு பிணைத்துக்கொண்டு சகித்துச் செல்பவர்களும் இருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், உடலை வெறும் பௌதிகப் பொருளாகக் கருதி,
‘உடலைச் சரிசெய்தால் எல்லாம்
சரியாகிவிடும்’ என்கிற அரைகுறை
நம்பிக்கைதான்.
உடலில் பிரச்சனை என்றால், என்ன என்று கண்டுபிடித்துச் சொல்லிவிடலாம். ஆனால்,
உடலை இயக்கும் மனதைத் துல்லியமாக அளக்க முடியாது.
மனங்களுக்கிடையேயான வேறுபாடுகளின் பாதிப்பை உணரலாம். ஆனால்,
அந்த வேறுபாடுகளை அளவிடுதல் கடினம். காரணம்,
மன மாறுதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. மனம்
உடலைவிட அதிவேகமாக மாறும் தன்மை உடையது. அதனால்தான், மன பாதிப்புகளை அறிய முடிகிறதே தவிர,
மன இயக்கங்களைத் துல்லியமாக அறிய முடிவது இல்லை.
எனவேதான் மனதையும், ஆன்மாவையும், வாழ்க்கை முறையையும் கணக்கிடாமல்,
வெறுமனே உறுப்பை மட்டும்
சரிசெய்யும் சிகிச்சைகள் முழுமை இல்லாதவை என்கிறோம். நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால்,
அதை வெறும் உடல்
சம்பந்தப்பட்ட பிரச்னையாகப் பார்க்காமல், நமது மனமும் அந்தப் பிரச்னைக்கு ஒரு காரணமாக இருக்க
முடியும் என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.
ஒவ்வொரு உணர்வு நிலையின்போதும் உடல் எப்படி மாறுகிறது என்று
கவனியுங்கள். கோபம் வருகையில், உடல் படபடக்கிறதா? பயம் வந்தால் கை கால் நடுங்குகின்றனவா?
மிதமிஞ்சிய மகிழ்ச்சி என்றால் என்னவாகிறது?
அமைதியாக உள்ளபோது உடலின் தன்மை என்ன?
இதை ஒரு அடிப்படைத் தகவல் போலக் குறித்துவையுங்கள்.
ஒவ்வொரு நபருடன் பழுகும்போதும் நம் உடல் ஒவ்வொரு விதமாக
மாறுகிறது. அதேபோல், ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு விதமாக மாறுகிறது. இந்த வேறுபாடுகளை எந்த அளவு
விரிவாகவும் துல்லியமாகவும் உங்களால் உணர முடிகிறது என்று பாருங்கள். குறிப்பாக,
தீவிர பாதிப்புகள் என்ன என்று பட்டியல் இடுங்கள்.
தொண்டை காய்கிறது; வயிறு பிசைகிறது; தோல் நிறம் மாறுகிறது; தலை பாரமாகிறது; தசைகள் இறுகுகின்றன; குரல் நடுங்குகிறது; பார்வை மங்குகிறது; மார்பு துடிக்கிறது; ரோமக் கால்கள் சிலிர்த்து நிற்கின்றன.
இப்படி, உங்களுக்கு ஏற்படும் எல்லா உணர்வுகளுக்கும்,
சூழ்நிலைகளுக்கும் உங்கள் உடலில் உண்டாகும் மாற்றங்களைப் பற்றி
உங்களால் தெளிவாகப் புரிந்துகொண்டு விவரிக்க முடியுமா? ஆம் என்றால், இது முதல் நிலை. இதற்கு அடுத்த நிலையில் எந்த எண்ணம்,
எந்த உடல் நிலையோடு
தொடர்புடையது என்று அறிவது. இவை,
மனிதருக்கு மனிதர் வேறுபடும். பொது விதி கிடையாது.
மனதின் செயல்பாடுகள்தான் உடல்மொழியாக வெளிப்படுகிறது என்கிற
அறிவுதான் நமது ஆரோக்கியம் பற்றிய மொத்த புரிதலின் முதல் படி! அதைத் தெளிவாக உணர்ந்தாலே, நல்ல மாற்றங்களுக்கு நாம் தயாராகி விடுவோம்.
ஆழ்நிலையில் மனம் அமைதியாகும்போது உடல் சுகமாகிறது. மேல் நிலையில் உணர்வுகளின்
தடுமாற்றங்கள் ஏற்படும்போது உடல் நோய்வாய்ப்படுகிறது. இதனால்தான்,
மனதை அமைதிப்படுத்தும் நோக்கோடு,
எல்லா மதங்களும்
சுகமளிக்கும் சிகிச்சைகளை, பயிற்சிகளை வலியுறுத்துகின்றன.
மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள உங்கள்
சுவாசத்தைக் கவனித்தாலே போதும். மகனிடம் கோபம்கொள்ளும்போது,
மேலதிகாரி உங்களைக் கடிந்துகொள்ளும்போது,
மனைவி உங்களைப் புரிந்து கொள்ளாமல் விரக்தியடையச்
செய்யும்போது, நண்பர்
குழாமில் வாய்விட்டுச் சிரிக்கும்போது, அழகான பெண் உங்களைக் கடந்து செல்லும்போது என ஒவ்வொரு
தருணத்திலும் மூச்சைக் கவனியுங்கள். உங்கள் மன அலைவரிசையைக் காண்பிக்கும் கருவி
சுவாசம் என்பது புரியும்.
நல்ல தூக்கத்தில் மூச்சு ஆழமாக இருப்பதால் சீரான,
ஆழமான, நிதானமான சுவாசத்தை நாம் விழித்திருக்கும் நேரத்திலும்
மேற்கொள்வதற்குத்தான் ‘பிராணாயாமம்’ எனும் மூச்சுப் பயிற்சி உதவுகிறது.
அப்படி என்றால் மூச்சுப் பயிற்சி உடலுக்கா?
மனதுக்கா? இரண்டுக்கும்தான்.
நம் மரபில், மூச்சு என்பது உடல் இயக்கத்தின் ஒரு பகுதி அல்ல. அலோபதி
அணுகுமுறையில்தான் மூச்சை ரெசிப்ரேட்டரி சிஸ்டம் (Respiratory
system) என்று
உடலின் பல இயக்கங்களில் ஒன்றாகப் பாவிக்கிறார்கள். ஆனால், நாம் சுவாசத்தை உடலுக்கு அடுத்த மேல் தட்டில் வைக்கிறோம்.
சுவாசத்துக்கு மேல் தட்டில் மனம் உள்ளது. ‘மூச்சைக் கட்டுப்படுத்தினால்,
கீழ்த் தட்டில் உடலும்
சுகமடையும்; மேல் தட்டில் உள்ள மனமும் அமைதி பெறும்’ என்கிறார்கள்.
உடலை நம் கட்டுப்பாட்டில் கொண்டுவர உணவு மாற்றம்,
உடற்பயிற்சி,
மருந்துகள் போன்ற வழிகள்
உள்ளன. ஆனால், மனதை மாற்ற வழிகள் குறைவு. மனதை மாற்றும் சக்தி,
சுவாசத்துக்கு
மட்டும்தான் உண்டு. பதற்றமாக உள்ளபோது
கொஞ்சம் மூச்சு எடுத்துக்கொண்டு பேசுவது இதனால்தான்.
சுவாசத்தைச் சீராக்கும்போது மனம் மாறுகிறது.
அமைதியுறுகிறது. உடலை இலகுவாக்க ஆசனம். மூச்சை சீராக்கப் பிராணாயாமம். மனதை
அமைதிப்படுத்த தியானம்.
இப்படித்தான் யோகக் கலையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இளைய வயதினர் ஆசனங்களை
அதிகமாக செய்ய வேண்டும். வயது ஏற ஏற, ஆசனங்களைவிட பிராணாயாமம், தியானம் ஆகியவை செய்யலாம்.
உடலையும் மனதையும் சம நிலைக்குக் கொண்டுவர நம்மை அறியாமலேயே
பெருமூச்சு விடுகிறோம். அதாவது, நுரையீரலுக்கு அதிகம் ஆக்சிஜன் தேவை. எனவேதான்,
ஏமாற்றமோ கோபமோ உண்டாகும்போது, மனமும் உடலும் சுகம் கெடுவதை உணர்ந்து,
உடல் தன்னைத்தானே சீர் செய்துகொள்ளும் வழிமுறைதான்
பெருமூச்சு.
உடல் உழைப்பு தேவைப்படும்போது மூச்சு வேகமாகவும்
மேலோட்டமாகவும் ஆகிறது. பின்பு, ஓய்வெடுக்கையில் மூச்சு மெதுவாகவும் ஆழமாகவும் ஆகிறது. உடல் உழைப்பு அதிகம் இருக்கும்போது,
வேலையும் ஓய்வும் மாறி மாறி இருந்தால் மூச்சுப் பயிற்சி
இயல்பாக நடைபெறுகிறது.
இன்று உடல் உழைப்பு குறைந்துவிட்டதால்,
மனிதர்கள் செய்யும் வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன.
மூச்சு விட முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு அவசரசிகிச்சைப் பிரிவில்
வென்டிலேட்டர் வைப்பது உண்டு. ஆனால், தினமும் வென்டிலேட்டர் வைத்துக்கொள்ள முடியாது.
அதற்குத்தான் பிராணாயாமம் பயிற்சி அவசியப்படுகிறது.
ஒரு கருத்தரங்கில் பேசிய பள்ளிக்கூட உடற்பயிற்சி ஆசிரியர்
சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்தது. இன்று, நகரில் உள்ள வசதியான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு
ஒரு பந்தைத் தூக்கி எறியும் வலு கூடக் குறைந்து வருகிறதாம். 60 வயதுள்ள ஒருவர்
எறியும் தூரத்துக்குக்கூட 15 வயதுப் பிள்ளைகளால் பந்தை எறிய முடியவில்லை என்றார்.
உடல் உழைப்பு, நீங்கி
வருவதுதான் இதற்குக் காரணம்.
குனிந்து, நிமிர்ந்து வேலை செய்த காலத்தில், அனைவரது ஆரோக்கியம் மேம்பட்டிருந்தது. இன்று,
ஸ்மார்ட் கிச்சனும், பாக்கெட் உணவுகளும், ஆன்லைன் வசதிகளும் உடல் உழைப்புகளை குறைத்துவிட்டதால்
நடக்கவே சிரமப்படுவதும், அதீத உடல் எடை, வலிகள், சோம்பல் பெருகுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டன.
ஒரு
நாள், பாரம்பரியமாகச்
சமைத்துப் பாருங்கள். உரலில் இடித்தும், அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைத்தும்,
மோர் கடைந்தும் அனைத்தையும் உடல் உழைப்பால் செய்து
பாருங்கள். உங்கள் சுவாசத்தை அப்போது கவனித்தால், மனதின் பெருமிதத்தை உடலில், சுவாசத்தில் உணர்வீர்கள். பெண்கள் மட்டும் அல்ல,
ஆண்களும் இணைந்து
சமைத்துப் பாருங்கள். உடல், மூச்சு, மனம் அனைத்தும் சுகமாக இயங்குவது தெரியும். உறவுகள்
வலுப்படும். ஆனந்தம் பெருகும். நோய்கள் பறந்துபோகும்.
ஓய்வு நேரங்களில்
சோர்ந்து இருக்காதீர்கள். ஓடுங்கள், விளையாடுங்கள், வாய்விட்டுச்
சிரியுங்கள். செல்லப்பிராணிகளைக் கொஞ்சுங்கள், தோட்டத்தைப்
பராமரியுங்கள்; மரம், செடி, கொடிகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள், துடிப்பாக, காதலுடன் உடலுறவு கொள்ளுங்கள். எதைச் செய்தாலும்
உங்கள் மூச்சைக் கவனியுங்கள். நன்கு மூச்சு விடக் கற்றுக்கொள்ளுங்கள். கடைசி வரை
உங்கள் உடல், மன ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது அதுதான்.
மூன்று கண்டுபிடிப்புகள் உலகைப் புரட்டிப்போட்டதாகச் சொல்வார்கள். ஒன்று,
உலகம் உருண்டை என்ற கண்டுபிடிப்பு. இரண்டாவது,
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது. இவை இரண்டும்
மிகவும் பிரபலமானவை. மூன்றாவதைப் பற்றித்தான் பேசப்போகிறோம். அதைச் சொன்னவர் சிக்மண்ட்
ஃப்ராய்ட்.
“மனிதன் அடைந்த அனைத்து முன்னேற்றங்களுக்கும் காரணம்,
அவனது தகாத இச்சைகளையும்
மூர்க்கத்தனத்தையும் சமூகம் ஒப்புக்கொள்ளும் செயல்களாக மாற்றியதுதான்” என்பது அவர் கண்டுபிடிப்பு. இதை அவர் உயர்வாக்கம்
(Sublimation) என்றார்.
கடலில் மிதக்கும் ஐஸ் பாறையுடன் மனதை ஒப்பிடுவார்
ஃப்ராய்ட். மேலெழுந்தவாரியாக உள்ள மனதை ‘விழிப்பு மனம்’ (Conscious
Mind) என்கிறார்.
இதை, பனிப்பாறை
நுனி எனலாம். நீருக்கு மேல் புலப்படும் ஐஸ்கட்டி எவ்வளவு தெரியுமோ,
அவ்வளவுதான் நம் மனதைப் பற்றி நமக்குத் தெரியும். சற்று
முயன்றால் நமக்குப் புலனாகும் மனதை ‘நனவு மனம்’ (Subconscious
Mind) என்கிறார்.
நீரின் அசைவில் ஐஸ்பாறையின் அடிப்பாகம் சற்று வெளியே தெரிவது போன்றது இது. நீரில்
மூழ்கியுள்ள ஐஸ்கட்டிபோல நமக்குச் சுத்தமாகப் புலப்படாத மனதை ‘நனவிலி மனம்’
(Unconscious Mind) என்கிறார். இதன் செயல்பாடுகள் எதுவும் நமக்கு விளங்காது. நம்
மனதை நாம் அறிவது என்றால், இந்த ஆழ்மனதை அறிவதுதான்.
இந்த ஆழ்மனது, பெரும்பாலும் இச்சைகளாலும் மூர்க்கத்தனங்களாலும்
நிறைந்திருக்கும். இவற்றை மேல் மனம் ஏற்காது. காரணம், இவை குடும்பம், மதம், சமூகம் போன்றவை போதிக்கும் ஒழுக்கத்துக்கு எதிரானவை. அதனால்,
அவை அழுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஆனாலும்,
அவை தொடர்ந்து மேல் எழுந்து வர முயற்சித்துக்கொண்டே
இருக்கும். இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால் செக்ஸ் உணர்வு மற்றும்
ஆக்கிரமிப்பு இரண்டும்தான் நம் மனதை வியாபித்துக் கொண்டிருப்பவை. இவற்றை அப்படியே
வெளிப்படுத்துவது அசிங்கம், அநாகரிகம், அவமானம் என நமது கலாசாரம் போதிப்பதால்,
மனம் இவற்றைச் சற்று வேறுவிதமாக மாற்றிச் சமூகம்
அங்கீகரிக்கும் வண்ணம் செய்கிறது.
உதாரணத்துக்கு, கட்டுக்கடங்காத காம உணர்ச்சி. இதை நிறைவேற்றுவது அல்ல...
சொல்வதேகூட தகாதது ஆகிவிடுகிறது. அப்படியானால், இந்தக் காம உணர்ச்சியை என்னதான் செய்ய?
ஓர் அற்புதமான காதல் கவிதை எழுதலாமே!
உங்கள்
மேலதிகாரியின் செயல் கண்டு உங்களுக்குக் கண்மண் தெரியாத கோபம் வருகிறது. அவரைக்
கீழே தள்ளி மிதிக்க வேண்டும் போல ஆக்ரோஷம் வருகிறது. ஆனால்,
செய்ய முடியாது. இந்த உணர்ச்சிக்கு என்ன வடிகால்?
பந்தை உதைத்து விளையாடலாம்.
உடலுக்கு நல்ல பயிற்சி. உடல் அசதி
அடையும்போது மூர்க்கத்தனமும் குறைந்திருக்கும்.
ஃப்ராய்டின் மற்ற கருத்துக்களை எதிர்ப்பவர்கள்கூட இதை
ஒப்புக்கொள்வார்கள். நம் கலைகளும் விளையாட்டுகளும் கட்டுக்கடங்காத ஆழ் மன
வக்கிரங்களின் ஒப்பனை செய்யப்பட்ட வெளிப்பாடுகளே என்பது அவரின் கருத்து.
உச்சஸ்தாயியில் பாடும்போதோ, விளையாட்டில் விக்கெட் எடுத்தாலோ, கோல் போட்டாலோ, அம்மனிதர்களின் உணர்வுகளும், உடல் நிலை, மனநிலைகளும் உடலுறவின் உச்ச கட்ட உணர்வுக்கு ஒப்பானவை
என்கிறார் அவர்.
சாகச விளையாட்டுகள் முதல், எல்லா விளையாட்டுகளுமே மூர்க்கத்தனத்துக்கான
வடிகால்கள்தான். அதனால்தான், வாகனத்தில் வேகமாகச் செல்வதைப் பயம் கலந்த கிளர்ச்சியுடன்
செய்கிறோம். எல்லா விளையாட்டிலும் வெற்றி பெறுகையில் பாராட்டும் பெருமையும்
சேர்கிறது. முக்கிய விதி இதுதான். ஆழ்மனதில் உள்ள தீவிரமான உணர்வுகளை அப்படியே
பூட்டிவைத்தால் அது உடலை, மனதை, உறவைப் பாதிக்கும். அதைச் சமூகம் ஒப்புக்கொள்ளும் செயலாக
மாற்றுவதில்தான் சூட்சுமம் உள்ளது. இதை
மனம் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக தானாகவே செய்யும். இந்த ரசவாதச் செயலை
அனுமதித்தாலே போதும். மனம் ஆரோக்கியமாகத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும்.
நம் வாழ்க்கையில் கலைகளும் விளையாட்டும் தொலையத் தொலைய,
மன நோய்கள் பெருகும்.
மேலோட்டமாகப் பார்த்தால், எந்த விளையாட்டிலும், எந்தக் கலையிலும் பெரிய அர்த்தம் தெரியாது. அவற்றின்
முக்கியத்துவம் புரியாது. ஆனால், மனம் தன்னைச் சீராக இயக்கிக்கொள்ள இவை அவசியம். கோபம்
வருகையில் ஓடுங்கள். களைத்து உட்காரும்போது கோபம் தணிந்திருக்கும். ஏதாவது ஓர்
உடல் சார்ந்த விளையாட்டை விளையாடுங்கள். அது மூர்க்கத்தனத்தைக் குறைக்கும். அதே போல ஏதாவது ஒரு கலை,
இசை வடிவத்தை நெருக்கமாக
வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கலையில்
தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்பது இல்லை; நல்ல ரசிகராக இருந்தால்கூடப் போதும்.
எனக்குத் தெரிந்த ஓட்டுநர் ஒருவர் இருக்கிறார். ஓட்டும்
நேரத்தைவிடக் காத்திருக்கும் நேரம் அதிகம். ஆனால், என்றும் குன்றாத மகிழ்ச்சியில் இருப்பார். என்ன காரணம்? காலையில் துடிப்பான எம்.ஜி.ஆர் பாடல்கள்,
மதியம் புதுப் பாடல்கள், மாலையில் சிவாஜியின் தத்துவப் பாடல்கள்,
இடை இடையே வானொலி என்று சதா சங்கீத மழையில் திளைத்துக் கொண்டிருப்பார்.
காருக்கு வெளியே இருந்தாலும், மொபைலில் பாட்டுக் கேட்பார். வேலை,
குடும்பம் இவற்றுக்கு
இணையாக, இசையுடன் நேரம் செலுத்துவார்.
உங்கள் ஆழ் மனத்
தேவைகளுக்கான வடிகால்கள் உள்ளனவா? எது என்ன செய்யும் என்று புரியாவிட்டாலும், உடலும் மனமும் தன்னைப்
புதுப்பித்துக்கொள்ள கலையும் விளையாட்டும் அவசியம்.
ஜங்க் ஆர்ட் (Junk Art) என்று ஒரு வகைக் கலை
வடிவம் உண்டு. வேண்டாத குப்பைகளை வைத்துக்கொண்டே அற்புதமான கலைப் பொருட்கள்
செய்வார்கள். நம் மனம் அந்த வேலையைத்தான் தினமும் செய்ய முயற்சி
செய்துகொண்டிருக்கிறது. அதை அனுமதிப்போம்; ஆனந்தம் அடைவோம்!
எனக்கு இப்படி ஆகும்னு நான் நினைச்சதே இல்லை!’ - எதிர்பாராத துயர்களை
எதிர்கொள்ள நேரிடும்போதெல்லாம் நம்மில் பெரும்பாலானோர் உதிர்க்கும் வார்த்தை இது. மனம்
ஒரு விபத்தைச் சந்திக்கையில், அதிர்ச்சி அடைகிறது. நடந்ததை நம்ப மறுக்கிறது. ‘இது
உண்மைதான்’ என்று அறிந்தவுடன், அது அகந்தையைத் தாக்குகிறது. உடனே, ‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?’
என்று சுய பச்சாதாபம் கொள்ளவைக்கிறது. ‘எல்லாம் இருந்தும்
எனக்கு இப்படி நடக்கலாமா?’ என்று தர்க்கம் செய்கிறது.
ரொம்ப விவரமான ஆள். பணத்தில் கெட்டி. அவர் பண விஷயத்தில்
ஏமாறும்போது, பண
நஷ்டத்தைவிட மான நஷ்டம்தான் அவரைப் பெரிதும் பிடுங்கித் தின்கிறது. பெரிய
பக்திமான்; கோயில்
கோயிலாகச் சென்று பூஜைகள் செய்தவர்; அவர் வாழ்வில் பெரும் சோகம் நடக்கிறது. உடனே,
அவர் தனது பெருமை குலைந்ததாகக் கருதிக்கொள்கிறார்.
போதாக்குறைக்கு சுற்றமும் நட்பும், “உனக்கு இப்படியொரு நிலை வந்திருக்க வேண்டாம்” என்றும்,
“ஐயோ, பாவம்! த்சொ... த்சொ...” என்றும் பிறர் சொல்கையில் ஆறுதல்
கிடைப்பதுபோல் தோன்றினாலும், உள்ளே கழிவிரக்கம் மேலிடுகிறது. உடனே,
இயற்கை தனக்கு அநீதி இழைத்துவிட்டதாக நினைக்கிறார். கடவுளை
நிந்திக்கிறார். விரக்தியின் உச்சத்துக்குப் போகிறார்.
தர்க்கரீதியாக யோசிப்போம். நமக்கு இது நடக்கக் கூடாது
என்றால், யாருக்கு
நடக்கலாம்? மற்றவர்களைவிட நாம் உயர்ந்தவர், மேலானவர்; எனவே, இது நமக்கு நடக்கக் கூடாது என்று நினைக்கும் அதிகாரத்தை
யார் நமக்குக் கொடுத்தது?
விபத்தில் குடும்பத்தினர் மரணம்; தீவிரவாதத் தாக்குதலில் சிறு பிள்ளைகள் பரிதாபச் சாவு;
சுனாமி, பூகம்பம், பெருவெள்ளம் என இயற்கைச் சீரழிவில் கொத்துக் கொத்தாக
மாண்டுபோதல்... இவையெல்லாம் ஆட்களைத் தரம் பிரித்தா நடக்கின்றன?
யாராக இருந்தால் என்ன? இயற்கையைப் பொறுத்தவரை எல்லாருக்கும் ஒரே நிலைதான்.
“இதெல்லாம் நம்மை மீறியவை என்று தெரியும். இருப்பினும், சொந்த சோகங்களை எப்படிப் பார்ப்பது?” என்று நீங்கள் கேட்கலாம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான துயரம். இவை அனைத்தும்,
அவரவரின் மகிழ்ச்சியை, கர்வத்தை, நிம்மதியைக் குலைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால், ‘இந்த நிகழ்வுகளில் எனக்குத் துளியும் ‘பங்கே இல்லை’ என யாராவது தன்
மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல முடியுமா?
நமது பிரச்னையே ஒப்பீடுகளில்தான் உள்ளது. “அவன் பையன் படிப்புல மக்கு. அவன் கெட்ட கேடுக்கு யு.எஸ்
போயிட்டான். நான் இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் என் மகன் பெரிசா வரலையே” என
ஏங்குகிற அப்பாக்களைப் பார்த்திருக்கிறோம். நம் பிரச்னைகளை நாம் எப்படிப்
பார்க்கிறோம் என்பதில்தான் நிம்மதிக்கான சூட்சுமம் அடங்கியுள்ளது.
கணவனின் அகால மரணமும், அவர் வாங்கி வைத்திருந்த கடன்களும், ஆறு குழந்தைகளின் எதிர்காலமும் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை
தடாலென்று புரட்டிப்போட்டன. ஆனால், அந்தப் பெண்மணி சற்றும் நிலைகுலையாமல்,
கணவனின் கண்டுபிடிப்பை மூத்த மகனிடம் கொடுத்துத் தொழிலாய்
செய்யச்சொன்னார். கடன்காரர்களை அழைத்து, அத்தனை பேரின் கடனையும் குறிப்பிட்ட காலத்துக்குள்
அடைப்பதாய் நம்பிக்கை வாக்குறுதி தந்து அனுப்பினார். தன் சிறு பள்ளியை இன்னும்
கவனமுடன், அர்ப்பணிப்புடன்
நடத்தி, தன்
வாழ்க்கையை மட்டும் அல்ல, தன் பிள்ளைகளின் வாழ்க்கையையும் கம்பீரமாகத் தூக்கி
நிறுத்தியவர் மறைந்த ஹேமலதா சென்னிகிருஷ்ணன். ‘வெல்வெட்’ சாஷே
ஷாம்பு மூலம் தொழிற்புரட்சி செய்த குடும்பத்தின் அன்னை.
அவரின் வாழ்க்கை வரலாற்றை அண்மையில் படித்தேன்.
ஓரிடத்தில்கூடக் குற்றம் சொல்லுதல் இல்லை; சுயபச்சாதாபம் இல்லை; கிடைத்த வாழ்க்கையை ஏற்று, அதைச் செம்மையாகச் செய்யும் பக்குவம்தான் தெரிந்தது.
‘எக்கார்ட் டோலே’ என்னும் தத்துவ ஆசிரியர்
சொல்வார்... ‘எல்லா பிரச்னைகளிலும் உங்களுக்கு மூன்றே மூன்று வழிகள்தான் உள்ளன.
ஒன்று, அதை மாற்றுதல்; இரண்டாவது, கைவிட்டு ஓடுதல்; மூன்றாவது, ஏற்றுக்கொள்ளுதல்.’
முதல் இரண்டும் முடியாது என்னும் பட்சத்தில்,
பிரச்னைகளை ஏற்றுக்கொள்ளுதல்தான்
முதிர்ச்சிக்கான அடையாளம். அதுவே, நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். தன்னை, பிறரை, விதியை, கடவுளைக் குற்றம் சொல்லுதல், உங்களை அந்தப் பிரச்னையுடன் காலம் முழுவதும் கட்டிவைக்கும்.
குற்றம் சொல்லுதல் என்பது
காலில் கல்லைக் கட்டிக்கொண்டு ஓடுவதற்குச் சமம். அது பெரும் சுமை! காலில் கட்டிய
கல்லைக் கழற்றி எறிந்துவிட்டுக் காலாற நடந்து பாருங்கள். வாழ்க்கை இனிக்கும்!
நம் வாழ்க்கை என்பது நம்முடன் தினசரி அதிக நேரம் பழகும் முக்கியமான சில
மனிதர்களின் எண்ணங்களின் தொகுப்பு எனச் சொல்லலாம். எப்படி?
நீங்கள் உங்கள் வாழ்க்கையையே எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களோடு அதிக நேரம் செலவு செய்யும் நபர்கள் யார், யார்? வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், மேலதிகாரி, உடன்
பணியாற்றுபவர்கள், பணியாட்கள், வாடிக்கையாளர்கள்...
இப்படி ஒரு பட்டியல் போடுங்கள். அதில், யார் யாருடைய எண்ணங்கள் எல்லாம் உங்களை அதிகம் பாதிக்கிறது எனப் பாருங்கள். நீங்கள் அதிக நேரம் செலவழிக்கும் முதல்
ஐந்து நபர்களின் பாதிப்பு உங்களிடம் நிச்சயம் இருக்கும். உங்களை அறியாமல்
அவர்களின் உணர்வுகள், எண்ணங்கள், பழக்கங்கள், பாவனைகள் என எல்லாவற்றையும் அவர்கள்,
உங்கள் மீது மெள்ளத்
திணிக்கிறார்கள். அது உங்களுக்கு மட்டும் அல்ல; அவர்களுக்கும் தெரியாது. (அதேபோலத்தான் நீங்களும் அவர்களைப் பாதிக்கிறீர்கள் என்பது
வேறு விஷயம்!)

எவ்வளவு சுய சிந்தனை இருந்தாலும், தனித்துக் கிடந்தாலும் நாம் அனைவருமே சமூக விலங்குகள் தான்.
பிறரைப் பார்த்து, கவனித்து இந்த உலகத்தைக் கற்றுக்கொள்கிறோம். அவர்களுக்கும்
நமக்கும் இடையே வேறுபாடுகள் தெரிந்தால், ஒன்று நாம் நம்மை மாற்றிக்கொள்ள நினைப்போம்;
அல்லது,
அவர்களை மாற்ற
முயற்சிப்போம். நமக்குள் ஒற்றுமைகளை
வளர்ப்பது நம் உறவுகளுக்கு நல்லது; நாம் கூட்டாக வளர்ந்த காலம் முதல் நமக்குள்
பொதிந்துகிடக்கும் ஒரு சமூக உளவியல் செய்தி இது. அதனால்தான் நாம் யாரிடமிருந்தும்
எதை வேண்டுமானாலும் நகலெடுக்கத் தயாராக இருக்கிறோம்.
கையில் காசு இல்லை என்றாலும், கடன் வாங்கியாவது தீபாவளிக்கு அதிக விலையில் புடவை
எடுக்கும் பணிப்பெண் நம்மைப் பாதிக்கிறார். ‘நாம மட்டும் இப்படிச் சேர்த்துச்
சேர்த்துவெச்சு என்னத்தைக் கண்டோம். இந்த முறை போனஸ் பணம் முழுக்கப் போட்டாவது,
அந்தக் கல்வெச்ச வளையலை வாங்கிடணும்’ என முடிவு செய்வோம்.
டார்கெட்டில் குறியாக இருக்கும் பாஸ் உங்கள் பிராணனை
வாங்குகிறார். எவ்வளவு சபித்தாலும், அவரின் நிர்வாகத் திறனை உள்ளூர வியக்கிறீர்கள். உங்கள்
பிள்ளைகளைத் திட்டுகையில், அவர் வார்த்தைகளை இரவல் வாங்கிக்கொள்வீர்கள். ‘எனக்கு
டிஸிப்ளின் முக்கியம்!’, ‘எனக்கு ரீசன்ஸ் வேண்டாம்; ரிசல்ட்தான் வேணும்!’.
உங்கள் நாத்தனார் கேரளா சென்று, ஆயுர்வேத சிகிச்சை பெற்றுப் புத்துணர்ச்சியோடு
திரும்புகிறார். உடனே, ‘அலோபதிக்குப் பதிலா நாமும் ஆயுர்வேதம் ட்ரை பண்ணிப்
பார்த்தா என்ன?’ என்ற சிந்தனை உங்கள் உள்ளத்தில் ஓடும்.
விற்பனை
உளவியலில் ஒரு கூற்று உண்டு. பொருளை விற்க சக்தி வாய்ந்த விளம்பரமுறை,
அந்தப் பொருளை வாங்கிப்
பயன்படுத்தியவர் அது நன்றாக உள்ளதாகச் சொல்லும் வார்த்தைகள் தரும் நம்பிக்கைதான். இதைத்தான் ‘மவுத் பப்ளிசிட்டி’ என்பார்கள்.
தினசரி நீங்கள் பேசிப் பழகும் சிலரால் உங்கள் எண்ணங்கள்
பாதிக்கப்படுகின்றன என்றால்,
அதைத் தவிர்ப்பது எப்படி? ஒன்று, அவர்களின் எண்ணங்களைத் தொடர்ந்து தர நிர்ணயம்
செய்துபார்ப்பது ஒரு வழி; அல்லது, நல்ல எண்ணங்கள் உள்ளவர்களைத் தேடிச் சென்று அணுக்கமாதல்
இன்னொரு வழி.
உங்கள் எண்ணங்களைப் பாதிக்கிறவர்களை நீங்கள் நேரில்
பார்த்திருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. தொலைபேசி முதல் தொலைக்காட்சி
வரை இன்று பிறர் கருத்துக்களை நம்மிடம் கொண்டு வந்து குவிக்கின்றன.
ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் பல நேரங்களில் நம் மூளையைக் குப்பைக் கூடமாகவே
மாற்றிவிடுகின்றன.
இதனால், ஓர் ஆய்வு செய்வது அவசியமாகிறது. உங்கள் கருத்துக்களைப்
பாதிப்பவர்கள் யார், எந்த வழியில் பாதிக்கிறார்கள் என்று பட்டியல் போட்டு எழுதுங்கள். அவர்களை
நெருக்கமாகவோ, தள்ளியோ
வைக்கும் வசதி உள்ளதா என்றும் கணக்குப் போடுங்கள். உங்கள் மனதுக்குள் குப்பை
போட, யாரையும் அனுமதிக்காதீர்கள்.
சில உறவுகளை விலக்குவது கடினம். உங்கள் தந்தையோ,
கணவனோ, எப்போதும் நெகட்டிவ்வாகப் பேசும் நபராக இருக்கலாம்.
அவர்களைத் தவிர்க்க இயலாது. ஆனால், அவர்களின் இந்தத் தன்மையை உணர்ந்து,
அவர்கள் சொல்வதில் சற்று
வடிகட்டி ஏற்கப் பழகிக்கொள்ளுங்கள். சொந்தங்கள், சுற்றம், நட்பு,
அலுவலகத் தொடர்புகள், பஸ் சிநேகிதம் போன்றவற்றில் கூடுமான அளவு ஆரோக்கியமானதாகத்
தேர்ந்தெடுத்து உறவாடுவது நல்லது. அவசியமானால், பிறர் மனம் நோகாதவாறு சற்று விலகிக்கொள்ளவும் செய்யலாம்.
அதே நேரம், அற்புத எண்ணங்களையும், உணர்வுகளையும், செயல்களையும் கொண்ட மனிதர்களோடும், அமைப்புகளோடும், இயக்கங்களோடும் தூரத்திலிருந்தாவது தொடர்பு
ஏற்படுத்திக்கொள்ள முயலுங்கள். நெருங்கி உறவாடக்கூடத் தேவை இல்லை;
ஆனால், அவர்களின் எண்ணங்களை உள்வாங்கிக் கொள்ளலாம். நல்ல
புத்தகங்கள், நல்ல தொண்டு நிறுவனங்கள், நல்ல நிகழ்ச்சிகளைத் தேடிச் செல்லுங்கள். இவைதான் நல்ல மனச்
செயல்பாட்டுக்கான மூலதனங்கள்.
இசையும் இலக்கியமும் விளையாட்டும் இயல்பாக நல்ல உணர்வுகளைத்
தரவல்லவை. இவை போக, உங்கள் ஆர்வத்துக்கும் திறமைக்கும் ஏற்ற வகையில் இன்னும் ஏராளமான விஷயங்கள்
உள்ளன. தேடிச் சென்று சிலவற்றைப் பற்றிக்கொள்ளுங்கள். அவைதான் சின்ன மனிதர்களின்
சின்ன எண்ணங்களை மாற்றக்கூடிய மாமருந்துகள்.
மனிதர்களோ, ஊடகமோ, நிகழ்ச்சிகளோ... எதுவானாலும், வருவதை எல்லாம் வாரிச்சுருட்டிக் கொள்ளாதீர்கள்.
தேர்ந்தெடுத்து இணைத்துக் கொள்ளுங்கள். நம் மனம், தானாக வருவதில் எல்லாம் நேரம் பார்க்காமல்
திளைத்துக்கிடக்கும். தேடிப்போகச் சொன்னால், நேரம் பார்க்கும். யோகா வகுப்பு என்றால்,
‘எங்கே அதுக்கெல்லாம் நேரம்?’
என்று சாக்குச் சொல்லும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
என்றால், நேரம்
தானாக முளைக்கும். எனவே, உங்கள் எண்ணங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் ஊற்றுக்கள் எவை
என்பதைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருங்கள். உங்கள் எண்ணங்களின் பலம்தான்,
உங்கள் வாழ்க்கையின் பலம்!