Showing posts with label 09. ஹலோ அலோபதியா?. Show all posts
Showing posts with label 09. ஹலோ அலோபதியா?. Show all posts

நலம் நலமறிய ஆவல் - 09. ஹலோ, அலோபதியா?

 

   





ஒரு பயிற்சி டாக்டரின் அனுபவம்

எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு பயிற்சி மருத்துவராக அவர் இருந்தார். அவரோடு படித்த இன்னொரு நண்பரும் உடன் இருந்தார். அவர்களோடு ஒரு சீனியர் டாக்டர். ஆக, மூன்று பேர். சீனியர் டாக்டர் பத்து நோயாளிகளைப் பார்த்து முடித்திருந்தார். ஆனால் நம் நாயகரோ, ஒரேயொரு நோயாளியோடு மல்லாடிக் கொண்டிருந்தார். ஐந்து ஆண்டுகள் படித்ததெல்லாம் மறந்துபோன மாதிரி இருந்தது. ஒன்றும் ஓடவில்லை. அவர் திண்டாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த செவிலியர், அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே சென்றனர். அந்த ஏளனச் சிரிப்பு அவருக்கு அவமானமாக இருந்தது. அப்போதுதான் படிப்பை முடித்திருந்த இளைஞர்கள் இருவரும் செய்வதறியாது திகைப்பதைப் பார்க்க அவர்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.

திடீரென்று அவர்கள் பக்கம் திரும்பிய சீனியர் டாக்டர், ‘என்னப்பா, என்ன செய்கிறீர்கள்? நானும் உங்கள மாதிரிதான் இருந்தேன். சரி சரி, நான் சொல்ற மாதிரி மருந்து எழுதிக்கொடுங்க’ என்றார். தூரத்தில் இருந்தே மருந்தையும் சொன்னார். இளைஞர்கள் இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆஹா, ‘சீனியர் டாக்டர் என்றால் சீனியர் டாக்டர்தான்’ என்று இருவரும் வியந்தனர்.

அடுத்த நோயாளி வந்து தன் பிரச்னைகளைச் சொன்னபோதும் அந்த இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அதைக் கவனித்த சீனியர் டாக்டர் அடுத்து வந்த நோயாளிக்கும் மருந்தைச் சொன்னார். ஆனால், என்ன ஆச்சரியம்! முதலில் சொன்ன அதே மருந்துதான்! அதுமட்டுமல்ல, அடுத்தடுத்து வந்த நோயாளிகளுக்கும் அதே மருந்துதான்!

கூட்டிக் கழித்து, வந்துபோன ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அந்த மூன்று டாக்டர்களும் கொடுத்த மருந்துகள் நான்குதான்! SDT, APC, Gelusil, Deriphyllin! அவ்வளவுதான்!

சளி, இருமல், காயம், புண்கள் என்று சொன்னால் SDT. வலி, ஜுரம் ஆகியவற்றுக்கு APC. வயிற்றுத் தொந்தரவுகளுக்கு Gelusil. மூச்சிரைப்பு, ஆஸ்துமா என்று சொன்னால் Deriphyllin என்று சொல்லி, “ஐந்து வருடப் படிப்புக்கு நான்கே நிமிடத்தில் முற்றுப்புள்ளி வைத்தார்” சீனியர் டாக்டர்!

இதைச் செய்வதற்கு ஏன் ஐந்து ஆண்டுகள் மெனக்கெட்டுப் படிக்க வேண்டும் என்ற கேள்வி, மனசாட்சியுள்ள அந்த இளம் மருத்துவருக்கு ஏற்பட்டது. “இவ்வளவுதானா எம்.பி.பி.எஸ்.? அப்படியானால் இதை ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் சொல்லிக்கொடுத்து, ஒவ்வொருவர் வீட்டுக்கும் மாதாமாதம் ரேஷனைப்போல மாத்திரைகளைக் கொடுத்துவிடலாமே” என்று அங்கலாய்க்கிறார் அந்த டாக்டர். அவர் வேறு யாருமல்ல, நாம் ஏற்கெனவே சந்தித்த டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான்தான்! தன் அனுபவங்களை ஒளிவு மறைவின்றி “நீங்களும் ஆங்கில மருத்துவராகுங்கள்” என்ற தனது நூலில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்!


இன்றைக்கு உலகெங்கிலும் பரவியிருக்கின்ற, படித்தவர்களாலும் படிக்காதவர்களாலும் மிகுந்த மரியாதையுடன் நம்பப்படுகிற அலோபதி மருத்துவம் பற்றி அவ்வப்போது ஆங்காங்கே பார்த்துக் கொண்டுதான் வந்தோம். அலோபதியின் ‘கவனிப்பில்’ சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகள் எவ்விதம் மோசமாகின்றன என்றும் பார்த்தோம். அலோபதியின் இயங்கு முறை பற்றி இங்கே இன்னும் கொஞ்சம் விலாவாரியாகப் பார்க்க இருக்கிறோம்.

மனிதனுக்கு சேவை செய்ய வரும் எல்லா மருத்துவமும் மரியாதைக்குரியதுதான். சந்தேகமே இல்லை. இன்று ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, குறிப்பாக பெரு நகரங்களில், 24 மணி நேர க்ளினிக்குகளும், எல்லா வசதிகளும் கொண்ட மருத்துவமனைகளும் பெருகிவிட்டன. அவற்றில் நோயாளிகளாக இருக்க ‘விரும்பி வரும்’ மனிதர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேதான் போகிறது. ‘அமெரிக்கர்கள் சந்திரனுக்கு அப்போலோவை (ராக்கெட்டை) அனுப்புகிறார்கள். ஆனால் நாம், அப்போலோவுக்கு சந்திரனை (நோயாளியின் பெயர்) அனுப்புகிறோம்’ என்று நகைச்சுவை ததும்ப ஓர் உண்மையைச் சொன்னார் ஒரு பேராசிரிய அண்ணன்!

மருத்துவமனைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தமாதிரி, நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டு போவதுதான் வாழ்க்கை நமக்குக் காட்டும் முரண். இயற்கையின் ஏளனப் புன்னகை! ரொம்ப நுட்பமானது. அதை நாம் கவனிப்பதே இல்லை!

எதிர்மறையான கருத்துகளெல்லாம் இருக்கட்டும். அலோபதி மருத்துவம் மனிதனை முற்றிலுமாகக் குணப்படுத்துகிறதா என்ற கேள்விக்கு, இன்று தேசிய அளவிலும், உலக அளவிலும் புகழ் பெற்றிருக்கும் பல அலோபதி மருத்துவர்கள் சொல்லும் ஆணித்தரமான, அழுத்தமான பதில், ‘இல்லவே இல்லை’ என்பதுதான்!

நான் எந்த மருத்துவத்துக்கும் எதிரான கருத்தை முன்வைக்கவோ, முன்முடிவுகளுடனோ இதை எழுதவில்லை. ஆனால் என் மனத்தில் எழும் கேள்விகளுக்கும், அறிவுள்ள, மனசாட்சியுள்ள மனிதர்களின் மனங்களில் எழும் கேள்விகளுக்கும் அலோபதி நியாயமான பதில் சொல்லுமா என்று தெரியவில்லை. ஏற்கெனவே நான் சொன்னதுபோல, அச்சத்தை வைத்து லட்சங்களில் அமோகமாக வியாபாரம் நடக்கிறது என்பதுதான் அலோபதி காட்டும் நிஜம். நியாயமான எந்தக் கேள்விக்கும் பதில் கிடையாது. விஷத்தன்மையுள்ள வேதிப்பொருள் கலக்காத ஒரு மாத்திரைகூட அலோபதியில் கிடையாது என்பதுதான் சத்தியம். அலோபதி பற்றிய ஆழமான புரிந்துகொள்ளலை ஏற்படுத்தவே நான் முயன்றுகொண்டிருக்கிறேன்.

மெக்காலேயின் விஷக்கருத்துகள்

இந்திய மரபில் ஆயுர்வேதம், சித்தா, இயற்கை மருத்துவம் போன்ற பாரம்பரிய மருத்துவங்கள் இருந்தன; இருக்கின்றன. அதேபோல யூனானி, ஹோமியோபதி, அக்குபஞ்சர் போன்ற மருத்துவங்களும் இருக்கின்றன. ஆனால், இன்று எல்லாவற்றிலும் அலோபதியின் தாக்கம் இல்லாமலில்லை. இந்திய அக்குபஞ்சரைத் தவிர.

மனித உடலை அலோபதி கூறுபோட்டுப் பார்க்கிறது. ஆங்கிலேயர்களைப் போல அலோபதியும் ‘பிரித்தாளும் தொழில்நுட்ப’த்தையே கடைப்பிடிக்கிறது. குருடர்கள் யானையைப் பார்த்த மாதிரி, அலோபதி உடலை அணுகுகிறது. பகுதி பகுதியாக, உறுப்பு உறுப்பாக. பல்லைப் பிடுங்க வேண்டுமென்றால் அதற்கு இ.என்.டி. மருத்துவர் தேவை. ஆனால் நோயாளிக்கு இதயத்தில் பிரச்னை இருக்குமானால் பல்லைப் பிடுங்கலாமா வேண்டாமா என்று ‘கார்டியாலஜிஸ்ட் ஒபினியன்’ பெற்ற பிறகுதான் செய்யமுடியும்! ஏனெனில், பல் மருத்துவருக்கு இதயத்தைப் பற்றி எதுவும் தெரியாது! அதேபோல இதய நிபுணருக்கு பல்லைப் பற்றி எதுவும் தெரியாது! இதுதான் நடைமுறை.

பல்லில் உள்ள உயிரணுக்களும், இதயத்தில் உள்ள உயிரணுக்களும் வேறு வேறான கூறுகளையும், அமைப்பையும் கொண்டவை அல்ல. ஒரு உயிரணு எப்படி உருவாகிறதோ அதேபோலத்தான் நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உயிரணுக்களும் உருவாகியுள்ளன. செய்யும் வேலையும், இடமும், தோற்றமும்தான் வித்தியாசமாகத் தெரிகிறதே தவிர, அடிப்படை அமைப்பில் எந்த வித்தியாசமும் இல்லை. கண் என்றால் அது பார்க்கிறது. காது என்றால் அது கேட்கிறது. மற்றபடி கண்ணின் உயிரணுக்களுக்கும் காதின் உயிரணுக்களுக்கும் அடிப்படை வித்தியாசம் எதுவும் இல்லை. ஒரு மருத்துவருக்கு ஒரு ‘செல்’லில் உள்ள நோயை குணப்படுத்தத் தெரிந்தால், அவரால் உடல் முழுவதையும் குணப்படுத்த முடிய வேண்டும். சாப்பிடும்போது நாம் இட்லியின் இந்தப் பகுதி கண்ணுக்கு, இந்தப் பகுதி கல்லீரலுக்கு என்றா சாப்பிடுகிறோம்? ஒட்டுமொத்த உடலுக்குமாகத்தானே எல்லாம் நடக்கிறது! எனவே, தனித்தனி உறுப்புகளுக்கென்று தனித்தனி ஸ்பெஷலிஸ்ட்டுகள் தேவையில்லை என்கிறார் ஹீலர் பாஸ்கர்! அவர் கேள்வியில் உள்ள நியாயம் இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஒரு யூனானி மருத்துவரிடம் சென்றால்கூட, அவரும் அலோபதி மருந்துகளைக் கொடுப்பவராகவும் ஊசி போடுபவராகவும்தான் உள்ளார். முழுக்க முழுக்க தூய யூனானி, தூய சித்தா, தூய ஆயுர்வேதா இன்று கிடையாது என்பதுதான் நிதர்சனம்.

அடிப்படைத் தத்துவமும் அணுகுமுறையும் தவறாக இருக்கும் அலோபதியைச் சேர்த்துக் கொடுக்கும் எந்த மருத்துவ முறையும் தவறான விளைவுகளைக் கொடுக்கும் சாத்தியங்கள்தான் அதிகம். பாத்திரத்தின் நடுவில் கொட்டப்பட்ட சோற்றைப்போல அலோபதியும், ஓரத்தில் வைக்கப்பட்ட ஊறுகாய் மாதிரி நம் பாரம்பரிய மருத்துவங்களும் ஆகிப்போனது துரதிருஷ்டமே. இதிலிருந்து எப்படி மீள்வது? அலோபதியை ஆழமாகப் புரிந்துகொள்வதுதான் வழி. ஒரு எதிர்மறையான விஷயத்திலிருந்து முற்றிலுமாக விடுபடுவதற்குச் சிறந்த வழி அதை எதிர்த்து, அதனுடன் போராடுவதல்ல. அதை ஆழமாகப் புரிந்துகொள்வதுதான் சரியான வழி. புரிந்துகொள்ளலே விடுதலை. அந்த விடுதலையை நோக்கிச் செல்வோமா, வாருங்கள்.

அலோபதி இங்கே வேறூன்றுவதற்கு அடிப்படையாக ஆங்கிலம் இங்கே வேறூன்றியதைப் பார்க்க வேண்டும். இந்தியா சுதந்தரம் அடைந்ததைப் பற்றிய ஒரு கவிதையில் கவிக்கோ அப்துல் ரகுமான் இப்படிச் சொல்வார்...

விலங்குகள் இன்னும் கழற்றப்படவில்லை
சாவிகள்தான் கை மாறின!

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! அலோபதியின் இந்திய வருகைக்கும் ஆங்கில மொழியின் இந்திய வருகைக்கும் தொடர்புண்டு. பின்னதின் விளைவாக முன்னது. அது மெக்காலே என்ற மோசமான ஆங்கிலேயனின் மூளையில் தோன்றிய விஷ வித்து. ஆங்கிலத்தை இந்திய மண்ணிலும் கலாசாரத்துக்குள்ளும் புகுத்த அவன் செய்த வேலைகள், நம்மை என்றென்றும் அடிமைப்படுத்த வல்லவை. மெக்காலேயின் கருத்துகளின் அடிப்படையில் எப்போது இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனி மூன்று மருத்துவக் கல்லூரிகளை 1857-ல் நிறுவியதோ, அப்போதிருந்தே மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கல்வியை நாம் ஊக்குவிக்க ஆரம்பித்துவிட்டோம். சுயமாகச் சிந்திப்பதிலிருந்து விடுபட்டுவிட்டோம்.

இந்தியாவில் ஆங்கிலம் வேறூன்றுவதற்கும், சமஸ்கிருதம், அரபி, பாரசீகம் ஆகிய மொழிகள் பயன்பாட்டில் இல்லாமல் போனதற்கும் காரணமாக இருந்தது லார்டு மெக்காலே ஹௌஸ் ஆஃப் காமன்ஸில் பிப்ரவரி 1835-ல் பேசிய இந்த பேச்சுதான்...

இந்தியா முழுவதும் நான் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்துள்ளேன். ஒரேயொரு பிச்சைக்காரனையோ அல்லது திருடனையோ நான் பார்க்கவில்லை. அப்படியொரு செல்வச் செழிப்பும், உயர்ந்த பண்புகளும், சிறப்புகளும் கொண்ட நாடு அது. அந்த நாட்டின் முதுகெலும்பை உடைத்தாலன்றி அந்த நாட்டை நம்மால் வெற்றிகொள்ளவே முடியாது என்றே நினைக்கிறேன். அதன் ஆன்மிக, கலாசார பாரம்பரியம்தான் அந்த முதுகெலும்பு. அதனால், இந்தியாவின் பண்டைய கல்வி முறையை அடியோடு களைந்து மாற்றிவிட வேண்டும். அப்போதுதான் அந்நியத்தன்மை கொண்ட எதுவும், குறிப்பாக ஆங்கிலமும், ஆங்கிலக் கல்வியும், தம் நாட்டினதைவிட எல்லா வகையிலும் உயர்ந்தது என்று இந்தியர்கள் நினைப்பார்கள். அப்படி ஒரு நினைப்பை அவர்களிடம் விதைத்துவிட்டால், அவர்கள் நாளடைவில் தம் சுயமரியாதையையும், பண்பாட்டையும் நிச்சயம் இழப்பார்கள். அதன்பிறகு, நாம் விரும்புவதைப்போல, நம் அடிமை நாடாக மாறிவிடுவார்கள்”. மெக்காலேயின் பேச்சின் நீட்சியாகத்தான் நான் அலோபதி மருத்துவத்தைப் பார்க்கிறேன்.

1857-ல் லண்டன் பல்கலைக் கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எம்.பி.பி.எஸ். படிப்புக்கான பாடத்திட்டம், சுதந்தரம் பெற்ற பிறகான இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் மாறவில்லை. பாடத்திட்டத்தில் நிறைய தகவல்கள் உள்ளன. நோயாளிகளைப் பார்த்து, அவர்களைப் படித்துக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பே ஒரு மாணவருக்கு வாய்ப்பதில்லை. மனித உடல் சூழலுக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால் ஆங்கில மருத்துவமோ, ஒரே நேர்க்கோட்டில் செல்லும் தன்மை கொண்டது. 16-ம் நூற்றாண்டில்தான் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் மூலமாக மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை புகுந்தது. ஆனால், அலோபதி மருத்துவமானது ‘‘விஞ்ஞான அடிப்படையில் அமைந்த ஒரு கலையாகும்” என்கிறார் டாக்டர் ஹெக்டே.

ஆங்கில மருத்துவம் எப்படிச் செயல்படுகிறது என்று ஒருசில அனுபவ உதாரணங்களின் மூலம் பார்க்கலாமா?

டாக்டர் தீபக் சோப்ரா

இவர் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அலோபதி டாக்டர் (Neuro Endocrinologist). மாற்று மருத்துவ ஆலோசகராகவும், புகழ்பெற்ற எழுத்தாளராகவும், ஆன்மிகத்தையும் க்வாண்டம் விஞ்ஞானத்தையும் இணைத்துப் பேசும் பேச்சாளராகவும் இருக்கிறார். ஆயுர்வேதத்தின் கோட்பாடுகளையும் அலோபதியையும் இணைத்துப் பார்க்கும்போது உடலுக்கும் மனத்துக்கும் இடையிலான உறவை சிறப்பாகப் புரிந்துக்கொள்ள முடியும் என்று இவர் கூறுகிறார். கேன்ஸர் நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த, தீவிரமான சிகிச்சை கொடுத்தால் மட்டுமே கொஞ்ச காலம் உயிர் வாழலாம் என்றும் சொல்லப்பட்ட, ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட சில நோயாளிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திட்ட உணவும் (டயட்), தியானமும் கொடுத்து குணப்படுத்தியிருக்கிறார். அந்த அனுபவங்களை அவர் தன் Quantum Healing என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். 


எல்லா அலோபதி மருந்துகளும், அது Valium 5 போன்ற சின்ன மாத்திரையாக இருந்தாலும் சரி, வேதிப்பொருள்கள்தான். அவை நம் உடலில் உள்ள உயிரணுக்களுக்கு அந்நியமானவை என்று அடித்துக் கூறுகிறார். மனமானது ஆரோக்கியத்தை ஏற்படுத்தவல்லது என்று எழுதியும் பேசியும் வருகிறார். கேன்சர் நோயாளிகளை குணப்படுத்த அலோபதியை மட்டுமல்ல, ஆயுர்வேதத்தையும் அவர் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனத்தின் ஆற்றல் பற்றி அவர் சொல்லும் ஒரு தகவல் சிந்திக்கத்தக்கது. குறிப்பிட்ட வயதில், உதாரணமாக முப்பது என்று வைத்துக்கொள்வோம். மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சிலர் பல ஆண்டுகள் அங்கே இருந்து பின்பு குணமடைந்து திரும்பினர். ஆனால் அவர்களுக்கு வயதாகவே இல்லை! அதாவது, பத்து இருபது ஆண்டுகள் கழிந்த அடையாளம் அவர்கள் உடலில் எங்குமே இல்லை. அதற்குக் காரணம், தங்களுக்கு வயதாகிவிட்டது, அல்லது வயதாகிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணமே அவர்களுக்கு வந்ததில்லை. ஏனெனில், மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு அது தெரியாது! காப்பகத்துக்குள் வந்தபோது எந்த நிலையில் உடல் இருந்ததோ அதே நிலையில்தான் அவர்கள் வெளியே சென்றார்கள் என்கிறார்!

மனத்தில் தோன்றும் நம்பிக்கையின் வலிமை பற்றி The Unconditional Life என்ற நூலில் தீபக் சோப்ரா சொன்னதை ஏற்கெனவே பார்த்தோம். நாற்பது ஆண்டுகளாக ஒருவருக்கு ரத்தம், யூரியா, நைட்ரஜன் ஆகிய மூன்றும் 90-க்கு மேல் இருந்தது. அப்படி ஒருவருக்கு இருக்குமானால், சிறுநீரகம் போன்ற முக்கிய உள்ளுறுப்புகள் கெட்டுப்போகும், அவர் இறந்துவிடுவார் என்பது அலோபதியின் கருத்து. ஆனால், நாற்பது ஆண்டுகளாக தன் பிரச்னையை மறந்துவிட்டு சந்தோஷமாக இருந்தார் ஹெரால்டு என்ற அந்த நோயாளி.
மூன்று ஆண்டுகள்கூட தாங்கமுடியாது என்று அலோபதி கணித்திருக்கும்போது, ஹெரால்டால் எப்படி நாற்பது ஆண்டுகள் ‘நார்மலாக’ இருக்க முடிந்தது? அதை ‘மறக்கின்ற ஞானம்’ என்று சொல்வார் என் குருநாதர். ஆமாம். இருக்கும் நோயை மனத்திலிருந்து சுத்தமாகத் துடைத்துவிட்டு நீங்கள் காரியங்கள் ஆற்ற முடியுமெனில், அந்த நோய் உடல் ரீதியாக எந்தப் பிரச்னையும் கொடுக்காது என்று முடிக்கிறார் தீபக் சோப்ரா!

இன்னும் பார்க்கலாம்…



இவரைப் பற்றியும் இவரது தகுதிகள் பற்றியும் ஏற்கெனவே கொஞ்சம் சொல்லிவிட்டேன். 1956-ல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியைத் துவங்கிய ஹெக்டே, உலகின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் பயின்று இன்று ஹார்வர்டில் இதயவியல் ஆலோசகராகவும் இருக்கிறார். அலோபதி மருத்துவராக வாழ்வைத் துவங்கி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் பணியாற்றிய இவர், மருத்துவத் துறைக்கான பி.சி.ராய் விருது, பத்மபூஷன் போன்ற விருதுகளைப் பெற்றவர். மணிபால் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய இவர், இப்போது ஊர் ஊராகச் சென்று ஆங்கில மருத்துவத்துக்கு எதிராகப் பேசி வருகிறார்! ஆயுர்வேதம்தான் ‘மருத்துவ ஞானத்தின் தாய்’ என்று கூறுகிறார்!


உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் ஒன்று இறந்துவிடுவீர்கள், அல்லது உயிருடன் இருப்பீர்கள். உயிர் பிழைத்த பிறகு இதயவியல் நிபுணரின் ஆலோசனை பெற்று செயல்பட்டாலோ, மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்ந்துகொண்டாலோ இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு என்கிறார்! மாரடைப்பை மீறி நீங்கள் உயிருடன் இருந்து, அலோபதி டாக்டர்கள் யாரையும் பார்க்கவில்லை என்றால், மூன்று மாதங்களில் உங்களுக்கு புதிய, ஆரோக்கியமான இதயம் கிடைத்துவிடும் என்கிறார்! 


Modern Science and Spirituality என்ற அவரது காணொளி உரையை யூ-ட்யூபில் யாரும் பார்க்கலாம். அலோபதி மருத்துவர்களின் அநியாயத்தையும் அறியாமையையும் பற்றி What Doctor Don’t Get to Study at Medical School என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிடும் சில நிகழ்வுகளையும் தகவல்களையும் இங்கே பகிர்ந்துகொள்வது அலோபதி பற்றிய நம் புரிதலை நிச்சயம் விரிவாக்கும்.



கேன்ஸர் என்பது ஒரு நோயா

கேன்ஸர் என்பது ஒரு பயங்கரமான நோயாகவே இன்று கருதப்படுகிறது. என் உறவினர் ஒருவர் சமீபத்தில் இறந்துபோனார். அவர் கேன்ஸரால் இறந்துபோனார் என்று சொல்லப்பட்டது. அவர் வாழ்ந்தபோது அவருக்கு கேன்ஸருக்கான சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. ஆனால் சித்தா, ஆயுர்வேதா, அலோபதி என்று மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். என் சகோதரி ஒருவர் கேன்ஸர் என்று தன் வாயால் சொல்லமாட்டார். அவருக்கு ‘மேப்படியான்’ வந்திருக்காம் என்பார்! மேற்படியான் என்றால் கேன்ஸர் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்! கேன்ஸர் என்பது அஞ்சப்படுகிற, வெறுக்கப்படுகிற, அது வந்தால் நிச்சயம் சாவுதான் என்று நம்பப்படுகிற ஒரு நோயாகவே பார்க்கப்படுகிறது. அது தொடர்பாக அலோபதி என்ன சொல்கிறது?

கேன்ஸர் பற்றி டாக்டர் ஹெக்டே கூறுவது நம் சிந்தனைக்கு உரியது. கேன்ஸர் என்ற பயங்கர நோயால் பலர் இறந்து போகிறார்களே என்றால், இறப்புக்கும் எந்த ஒரு நோய்க்கும் நேரடியான தொடர்பு ஒன்றுமில்லை. இறப்பு என்பது நிச்சயமானது. அது நிகழ்ந்துதான் தீரும். இறப்புக்கும் நோய்க்கும் பெரிய தொடர்பு ஒன்றுமில்லை என்கிறார் ஹெக்டே! 

உண்மைதானே? நோயே இல்லாமல் ஆரோக்கியமாக நாம் இருந்தாலும் ஒருநாள் இறந்து தானே ஆக வேண்டும்? என் தாத்தாவின் ஞாபகம் வருகிறது எனக்கு. தன் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருந்த அவர் தன் எண்பதுகளில் இறந்தார். ரொம்ப எளிதாக. தூக்கத்திலேயே! To cease upon the midnight, with no pain என்று கவிஞன் கீட்ஸ் தன் கவிதையில் சொன்னதைப்போல. அவருடைய வாழ்முறையின் விசேஷம் என்னவென்றால், அவர் மதிய உணவு எப்போதுமே நெய்ச்சோறு அல்லது பிரியாணிதான்!

சரி கேன்ஸருக்கு வருவோம். ஐ மீன், அந்தப் பிரச்னை பற்றித் தெரிந்துகொள்வோம். கேன்ஸர் என்பது ஒரு நோய் அல்ல, அது நம் உயிரணுக்கள் முதுமை அடையும் இயற்கையான ஒரு நிகழ்வு என்கிறார் ஹெக்டே. நமக்கு வயதாகி நாம் தொண்டுகிழவன் அல்லது கிழவியாவதைப் பற்றி ஹெக்டே இங்கே பேசவில்லை. நம் உயிரணுக்களுக்கு வயதாவதைப் பற்றிப் பேசுகிறார். நம் உயிரணுக்களுக்கு வயதாகும் பல்வேறு காலகட்டங்களை வைத்து அவற்றை Biological Cancer, Clinical Cancer, Symptomatic Cancer என்று மூன்று நிலைகளில் விளக்குகிறார். அதனால்தான் குழந்தைகளுக்குக்கூட கேன்ஸர் வருகிறது என்றும் கூறுகிறார்.


இந்த உலகிலிருந்து விடுதலை பெற்று போய்ச்சேர வேண்டிய ஒரு தேதி நம் அனைவருக்கும் ஆண்டவனால் விதிக்கப்பட்டிருப்பது போல, நமக்குள் உள்ள கோடிக்கணக்கான உயிரணுக்கள் ஒவ்வொன்றுக்கும் மரண தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக, ஒவ்வொரு நாளும் பல்லா யிரக்கணக்கான உயிரணுக்கள் இறந்து கொண்டும், பிறந்து கொண்டும் உள்ளன, நமக்குத் தெரியாமல்.

ஒரு உயிரணு தன் வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிவிட்டால், ‘ஏய், நீ நாளைக்கு ஐந்து மணிக்கு உயிரை விட வேண்டும்’ என்ற செய்தி அல்லது உத்தரவு அதற்கு அனுப்பப்படும்! அப்படியான செய்தியை / உத்தரவை அனுப்பும் உயிரணுவுக்கு ‘தற்கொலை ஜீன்’ (Suicide Gene) என்று பெயர்! அடடா, நம் உடம்புக்குள்ளேயே தற்கொலைப்படைகள்!

ஏதோ ஒரு காரணத்தினால் இந்தத் தற்கொலை ஜீன்கள் மரணச் செய்தியை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட உயிரணுவுக்கு அறிவிக்காமல் போனாலோ, அல்லது செய்தியைக் கொண்டு செல்கின்ற ‘என்ஸைம்’கள் சரியாகச் செயல்பட முடியாமல் போனாலோ, ‘செத்துப்போ’ என்ற உத்தரவு கிடைக்காத அந்த அதிர்ஷ்டக்கார உயிரணு தன் காலத்தை மீறி உயிர் வாழும்! ஆனால், முன்பு செய்து கொண்டிருந்த பிரதியெடுத்து பல்கிப் பெருகும் வேலையை அதனால் செய்யமுடியாது! அதுமட்டுமல்ல, சரியான நேரத்தில் செத்துப் போகாமல் தப்பித்துக் கொண்ட உயிரணு, தனது டி.என்.ஏ.வை ஒரு ‘ரவுடி டி.என்.ஏ.வாக’ (Rogue DNA) மாற்றிவிடும். இந்த ரவுடிகள்தான் பின்னாளில் கேன்ஸராக உருவெடுக்கும் சாத்தியம் கொண்டவை. இதைத்தான் ‘பயலாஜிகல் கேன்ஸர்’ என்கிறார் ஹெக்டே.

எனவே எல்லா மனிதர்களுக்கும் கேன்ஸர் வர வாய்ப்பிருக்கிறது! அது வந்தது தெரியாமல், ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு பல ஆண்டுகளுக்கு சந்தோஷமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது! என்ன, பயமுறுத்துவதுபோல் தோன்றுகிறதா? அப்படியில்லை. நம் மனநிலையும் வாழ்முறையும் சரியாக இருக்கும்பட்சம், நம் ஆரோக்கியம் கெடவே கெடாது.

மேலே குறிப்பிட்ட ரவுடி டி.என்.ஏ.க்கள் ஆயிரக்கணக்கில் தங்களைத் தாங்களே பிரதிகள் எடுத்துப் பல்கிப் பெருகி ஒரு கட்டியைப்போல உடலில் எங்காவது தங்கினால் / தேங்கினால் ‘இதோ, இங்கே கேன்ஸர் கட்டி உள்ளது’ என்று டாக்டரால் அடையாளப்படுத்த முடியும். இதைத்தான் ‘க்ளினிகல் கேன்ஸர்’ என்கின்றனர். ஆனால், இந்த ‘க்ளினிகல் கேன்ஸர்’ கூட இருப்பதே தெரியாமல், பிரச்னை பண்ணாமல் உள்ளேயே பல ஆண்டுகளுக்குத் தூங்கிக்கொண்டு கிடக்கும் வாய்ப்புண்டு. ஆனால், அது உடம்பின் பல பகுதிகளில் வேகமாக வளர்வதற்கும், ஆங்காங்கே பல தொந்தரவுகளைக் கொடுப்பதற்கும் முடிவுசெய்து அதை செயலாக்கவும் துவங்கிவிட்டால் அந்த நிலையை ‘அறிகுறிக் கேன்ஸர்’ (சிம்ப்டமேட்டிக்) என்று மருத்துவ உலகம் புரிந்துகொள்கிறது. இந்தநிலையிலும் இது பல ஆண்டுகளுக்குத் தெரியாமலே இருக்க வாய்ப்புண்டு.

எனவே, கேன்ஸரை நாங்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டோம் என்று கூறுவது, மருத்துவ உலகில் நிலவி வரும் ‘இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய பொய்யாகும்’ (The greatest myth of the century) என்று அடித்துக்கூறுகிறார் ஹெக்டே! எனவே, ‘ஆரம்ப நிலையிலேயே’ கண்டறியப்பட்ட கேன்ஸரும், உயிரியல் ரீதியாக பல மாமாங்கங்களுக்கு முன்பு உண்டானதாகவே இருக்கும்!

கேன்ஸரின் தொந்தரவுகளில் இருந்து கடுமைத் தணிவும் தாற்காலிக நிவாரணமும் (Palliation) கொடுக்கும் மருந்துகள்தான் ஆங்கில மருத்துவத்தில் உண்டே தவிர, கேன்ஸரை குணப்படுத்தும் மருந்தே கிடையாது என்றும் வெளிப்படையாகக் கூறுவதோடு ‘பெரும்பாலான கேன்ஸர்களை ஆங்கில மருத்துவத்தால் தடுக்கவோ குணப்படுத்தவோ முடியாது’ என்று நியூயார்க்கின் ஸ்லோன் கெட்டரிங் கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டின் (Sloane Kettering Cancer Institute) முன்னாள் தலைவர் தாமஸ் லீவிஸ் சொன்னதையும் மேற்கோள் காட்டுகிறார் ஹெக்டே. 

மருந்து மாத்திரைகள் ஏற்படுத்தும் ADR (Adverse Drug Reaction) எனப்படும் எதிர்விளைவுகளால்தான் பெரும்பாலானவர்கள் இறந்து போகிறார்கள் என்று துணிச்சலாகவும் நேர்மையாகவும் கூறுகிறார் ஹெக்டே.

ஆனால், கேன்ஸரிலிருந்து குணப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஒரு ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் ஆறு லட்சம் பெண்களுக்குக் கர்ப்பப்பை நீக்கப்படுகிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலையும் தருகிறார். அறுவை சிகிச்சைகள் செய்து கேன்ஸரை குணப்படுத்த முடியும் என்பது பொய் என்பதற்கான பல ஆதாரங்களை தன் நூலில் கொடுக்கிறார். உதாரணமாக, உலகப் புகழ்பெற்ற உளவியலாளரான சிக்மண்ட் ஃப்ராய்ட், தன் வாய்க்குள் இருந்த(தாக நம்பப்பட்ட) கேன்ஸருக்காக முப்பத்து மூன்று முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டார்! ஆனாலும் அவருடைய பிரச்னை தீரவில்லை!

கேன்ஸருக்கான சிகிச்சை என்ற பெயரில் செய்யப்படும் கீமோதெரபியும் ரேடியேஷனும் கேன்ஸர் வந்த உயிரணுக்களை மட்டுமின்றி, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் சாதாரண உயிரணுக்களையும் கொன்றுவிடும் என்று எச்சரிக்கிறார். இன்றையை காலகட்டத்தில், பயன்படுத்தப்படும் ஊசி மூலமாக உடல் திசுக்கள் ஆய்வு (Needle Biopsy) என்ற தொழில்நுட்பம் மூலம் கேன்ஸர் மேலும் பரவுவது மட்டுமின்றி, அது செய்யப்பட்ட பலர் செத்துப் போயிருக்கின்றனர் என்றும் கூறுகிறார்.

அப்படியானால் கேன்ஸரிலிருந்து ஒரு மனிதன் விடுபடுவதற்கு என்னதான் வழி?

சந்தோஷமாக இருப்பது, சக மனிதனை நேசிப்பது – இதுதான் வழி. நம்முடைய கோடிக்கணக்கான உயிரணுக்களும் ஒன்றை ஒன்று நேசிக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் உயிரும் அறிவும் உள்ளது. கோடிக்கணக்கான அறிவார்ந்த உயிர்களின் தொகுப்புக் காலனிதான் மனிதன்!
ஒரு பயோஃபோடோன் கேமராவினால் (Biophoton Camera) நம் உயிரணுக்களைப் படமெடுத்தால், அவை அனைத்தும் ஒன்றாக, ஒற்றுமையாக இயங்குவதைக் காணலாம். ஒற்றுமையாக இல்லையென்றால் நோயால் தாக்கப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தம். நம் உடலின் ஆற்றல் வடிவம் சிதைவுற்றிருப்பதன் அடையாளம் அது என்று ஹெக்டே சொல்லும்போது, You are a crowd என்று ஓஷோ சொல்வது நினைவுக்கு வருகிறது. அவர் வேறு அர்த்தத்தில் சொல்கிறார். ஹெக்டே சொல்வது உடலியல் ரீதியாக.

நாம் அடுத்தவரை வெறுக்கும்போது, அந்த வெறுப்பானது ப்ளேட்லெட்டுகள் என்று சொல்லப்படும் சிறிய ரத்தத்தட்டுக்கள் போன்ற அணுக்களில் சிறு உறைகட்டிகளை (Clot) ஏற்படுத்துகிறது என்று Grudgitis என்ற கட்டுரையில் கூறுகிறார் ஹெக்டே. ஆங்கிலத்தில் Grudge என்ற சொல்லுக்கு வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, உட்பகை, விரோதம் என்றெல்லாம் அர்த்தம். அலோபதியில் பல நோய்களின் பெயர்கள் –itis என்றுதான் முடியும். அப்பெண்டிசைட்டிஸ், ஆர்த்ரைட்டிஸ் இப்படி. எனவே Grudge-ம் பல நோய்களை ஏற்படுத்தும் ஒருவகை நோய்தான் என்று ஒரு புதிய சொல்லையே உருவாக்கியிருக்கிறார் படைப்பாளி ஹெக்டே!

நாம் அடுத்தவரை வெறுக்கும்போது நம் உயிரணுக்கள் தங்களையே வெறுக்க ஆரம்பிக்கின்றன. அதன் விளைவாகத்தான் கேன்ஸர் போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன. எனவே சந்தோஷமாக இருங்கள், யாரையும் வெறுக்காதீர்கள், சக மனிதர்களை நேசியுங்கள், இயேசு சொன்னதுபோல எதிரிகளையும் நேசியுங்கள். இப்படி நீங்கள் வாழ்ந்தால், உங்களுக்கு கேன்ஸரோ வேறெந்த நோய்களோ வராது. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்கிறது. உடலின் குணமாக்கும் கலைக்கு நமது வாழ்முறைகளால் நாம் உதவி செய்யலாம் என்கிறார் ஹெக்டே!

புகழ்வாய்ந்த ஒரு அலோபதி மருத்துவர் பேசுவது மாதிரியா இருக்கிறது? ஒரு சூஃபி அல்லது ஒரு சித்தர் பேசுவதைப்போல இருக்கிறது. ஆனால், தான் சொல்ல வரும் கருத்துகளுக்கு விஞ்ஞானப்பூர்வமான விளக்கமும் நிரூபணங்களும் காட்டுவது டாக்டர் ஹெக்டேயின் சிறப்பு.

முதல் மனித இதயமாற்று அறுவை சிகிச்சை


இது நடந்தது தென் ஆப்பிரிக்காவில். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பெயர் கிறிஸ்டியான் பர்னார்ட் (Christiaan Barnard). அமெரிக்காவிலும் லண்டனிலும் இதயவியல் படித்துவிட்டு வந்தவர். ஆள் கொஞ்சம் திமிர் பிடித்தவர். மருத்துவத் துறையில் யார் எதைச் செய்தாலும், தன்னாலும் அதே மாதிரி செய்யமுடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். ஒரு நாய்க்கு இரண்டு தலைகளை அறுவை சிகிச்சை செய்து பொருத்தியதாக ஒரு ரஷ்ய மருத்துவர் சொன்னபோது, அதைப் பொறுக்க முடியாத பர்னார்ட் அதேபோல இன்னொரு நாய்க்கு இரண்டு தலைகளை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி, தன்னாலும் அவ்வாறு செய்யமுடியும் என்று நிரூபித்தார்! நாய்கள் பாவம்! தன் நாய்த்தலை ‘சாதனை’யை வெகுவாக விளம்பரப்படுத்தவும் செய்தார் பர்னார்ட்.

நாய்க்கு உபரியாக ஒரு தலை பொருத்திய சாதனையைவிட அரிய சாதனை ஒன்றைச் செய்யும் வாய்ப்பு அவருக்கு வந்தது. லூயி வாஷ்கன்ஸ்கி (Louis Washkansky) என்று ஒரு நோயாளி. ஒரு பலசரக்கு வணிகர். 54 வயது. தீவிரமான சர்க்கரை நோயாலும், தீர்க்க முடியாத (என்று சொல்லப்பட்ட) இதய நோயாலும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். டெனிஸ் டர்வால் (Denise Darvall) என்ற இளம் பெண்ணுக்கு ஒரு விபத்தில் அடிபட்டு மூளை பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு மூளைச்சாவு (Clinically Dead) என்று பர்னார்ட் முடிவு செய்தார். டர்வாலின் தந்தையிடமிருந்து இதயத்தை மாற்றி வைப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்ட பர்னார்ட், உடனே காரியத்தில் இறங்கினார். டர்வால் அடிபட்டது டிசம்பர் 2, 1967. இதயமாற்று அறுவை சிகிச்சை நடந்தது அதற்கு மறுநாள்!

ஆனால், மூளைச்சாவு என்று முடிவு செய்யப்பட்ட டர்வாலின் இதயம் துடித்துக் கொண்டுதான் இருந்தது! தன் டாக்டர் தம்பி சொன்ன யோசனையை உடனே ஏற்றுக்கொண்டு, டர்வாலுக்கு பொட்டாசியம் ஊசி போட்டு அந்த இதயத்தின் துடிப்பை நிறுத்தினார் பர்னார்ட்! அதன்பிறகு அந்த இதயத்தை எடுத்து லூயிக்குப் பொருத்தினார். அறுவை சிகிச்சை ஒன்பது மணி நேரம் நடந்தது! லூயியின் உடலில் புதிய இதயத்துக்கு எதிராக அவரது உடலின் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாமல் இருப்பதற்கான மருந்துகளையும் (Immunosuppressive Drugs) கொடுத்தார்! 

ஆபரேஷன் சக்சஸ், ஆனால் பேஷன்ட் டைடு! 

ஆமாம். சரியாக பதினெட்டு நாள்களுக்குப்பின் நிமோனியா வந்து லூயி இறந்துபோனார். ஆனால், அவர் இறந்த விஷயம் மீடியாவுக்குப் போகவில்லை! இந்தத் தகவல்களை, மேலே சொன்ன ஹெக்டேயின் நூலிலும் இணையத்திலும் காணலாம்.

உண்மையில், அங்கே இரண்டு கொலைகள் அரங்கேறியிருந்தன என்றே கூற வேண்டும். ஒன்று டர்வால் என்ற பெண்ணுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது என்று சொல்லி, இயங்கிக்கொண்டிருந்த அவரது இதயத்தை நிறுத்தியது. மூளைச்சாவு என்ற வரையறை, புரிந்துகொள்ளல் எப்போதுமே தவறானது. மூளைச்சாவு ஏற்பட்டதாகச் சொல்லி உறுப்புகள் பிடுங்கப்பட்டவர்கள், அப்படிச் செய்யப்படாமல் இருந்திருந்தால், நீண்டகாலம் ஆரோக்கியமாக உயிர் வாந்திருப்பார்கள்; மனித உடலானது உறுப்பு உறுப்பாக தனித்தனியாக செயல்படுவதில்லை. அது ‘ஒட்டுமொத்தமான பரிபூரணமாகவே’ செயல்படுகிறது என்று நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் மட்டுமல்ல, டாக்டர் ஹெக்டேயும் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல. தென் ஆப்பிரிக்காவில் விபத்தில் யாருக்குத் தீவிரமாக அடிபட்டாலும், அவர் மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளியாக்கப்பட்டு அவருடைய உறுப்புகளை டாக்டர் பர்னார்ட் மற்றவர்களுக்குப் பொருத்திப் புகழடைந்து கொள்வார் என்று கூறுவதோடு, பர்னார்ட் செய்த இன்னொரு அநியாயத்தையும் தன் நூலில் விவரிக்கிறார் ஹெக்டே. அது என்ன?

பார்க்கலாம்…


டாக்டர் ஃபிலிப் ப்ளைபெர்க் செத்தது எப்படி?

இது நடந்ததும் தென் ஆப்பிரிக்காவில்தான். நீச்சலுக்குப் போன ஒரு இளைஞர், உணர்வற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். டாக்டர் பர்னார்டின் செல்வாக்கினால் அந்த இளைஞருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லி கையெழுத்திடும்படி, பொறுப்பிலிருந்த டாக்டர் ரேமண்ட் வற்புறுத்தப்பட்டார். அவரும் வேறு வழியின்றி கையெழுத்திட்டார். என்ன பிரச்னை என்று கண்டுபிடிக்கமுடியாத இதய நோய்க்காக அம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இன்னொரு நோயாளியான டாக்டர் ப்ளைபர்க் என்பவருக்கு அந்த இளைஞரின் இதயம் பொருத்தப்பட்டது! அதைச் செய்தவர் டாக்டர் பர்னார்ட். அதுதான் உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை என்று விளம்பரப்படுத்தவும் பட்டது! “அது இன்னொரு பொய்” என்கிறார் டாக்டர் ஹெக்டே.

டாக்டர் பர்னார்ட்

பல் மருத்துவரான டாக்டர் ப்ளைபர்க் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்தார். லூயி இறந்தது 18 நாள்களில். பாவம், பர்னார்ட் என்ற சனி அவர்களுக்கு பதினெட்டில் இருந்துள்ளது! டாக்டர் ப்ளைபர்க் நீச்சலடிக்கிறார், மனைவியோடு நல்ல முறையில் உடலுறவு கொண்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. உண்மையில் அவர் நீச்சலடிக்கவே இல்லையென்றும், ஒரு ‘ஹை-டெக்’ ஆம்புலன்ஸில் அவரை நீருக்குள் அமிழ்த்தி, ஒரு சில விநாடிகள் அவரை மட்டும் ஒளிப்படம் எடுத்து அப்படி விளம்பரம் கொடுத்தார்கள் என்று கூறும் ஹெக்டே, நல்லவேளையாக அவர் மனைவியோடு உறவு கொண்ட ஒளிப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை என்று முடிக்கிறார்!

டாக்டர் ப்ளைபர்க்

அலோபதியில் மூளைச்சாவு என்று சொல்லப்படும் விஷயம் பற்றி நாம் சிந்திக்கவேண்டி உள்ளது. மூளைச்சாவு என்பது உண்மையில் இறப்பல்ல. அது மூளையின் தூக்கம். எப்போது வேண்டுமானாலும் அது விழித்துக் கொள்ளலாம். டாக்டர்கள் சொல்லும் அந்த அயோக்கியத்தனமான கருத்தை நம்புபவர்களுக்குத்தான் மூளைச்சாவு!

டார்வால் என்ற அந்த அப்பாவிப் பெண்ணின் இதயம் இயங்கிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அவர் மூளைச்சாவு ஏற்பட்டு செத்துவிட்டார் என்ற முடிவுக்குத்தான் பர்னார்ட் போன்ற டாக்டர்கள் வந்தார்கள். ஏன்? அப்போதுதான் அவருடைய இதயத்தை எடுத்து இன்னொருவருக்கு வைத்து பர்னார்ட் புகழடைய முடியும்! எவ்வளவு குரூர மனத்தை அலோபதி கொடுத்திருக்கிறது! ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால் இதயம் மட்டும் இயங்கிக் கொண்டிருக்குமா? அது டார்வாலுக்கு துடித்துக் கொண்டிருந்தது என்றால் என்ன அர்த்தம்? மூளையின் கட்டுப்பாட்டில் முக்கியமான உள் உறுப்புக்கள் இல்லை என்றுதானே அர்த்தம்?

அடுத்து, இன்னொரு மனிதரின் உடலுறுப்புகளை நம் உடல் என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. இன்னொருவரின் ரத்தத்தைக்கூட நம் உடல் ஏற்றுக்கொள்வதில்லை! இது ஆச்சரியமூட்டும் விஷயமாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. பி பாசிட்டிவ் (+) குரூப் ரத்தம் தேவைப்படும் ஒருவருக்கு அதே க்ரூப் ரத்தம் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். முதலில் கொஞ்ச நேரத்துக்கு ரத்தம் ஏன் தேவைப்பட்டதோ அந்தப் பிரச்னை தீர்ந்துவிட்டதைப்போல இருக்கும். ஆனால், பிரச்னை அமுக்கி ஆழத்தில் வைக்கப்பட்டிருக்கும். நீருக்கு மேலே சுற்றிக்கொண்டிருந்த கப்பல்கள் இப்போது நீர்மூழ்கிக் கப்பல்களாகிவிட்டன என்று அர்த்தம். கொஞ்ச நாள் கழித்து எந்தப் பிரச்னையை ஒட்டி ரத்தம் கொடுக்கப்பட்டதோ அதே பிரச்னை திரும்ப வரும்!

எனவே, மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரின் கிட்னியை எடுத்து எனக்கு வைப்பீர்களேயானால் அந்த அந்நியப் பொருளை எதிர்த்து என் எதிர்ப்பு சக்தி தீவிரமாக வேலை செய்யும். அது அப்படி வேலை செய்தால் கதை கந்தலாகிவிடும் என்று அலோபதி மருத்துவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், இப்படியான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் நோய் எதிர்ப்பு சக்தியை மழுங்கடிக்கும் மருந்துகளை (Immunosuppressive Drugs) கொடுக்கிறார்கள்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மூலம் நீண்ட காலம் ஒருவர் உயிர் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. அது சாத்தியமும் இல்லை. ஜெருசலத்தில் ஒரு இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அது கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு மனிதரின் இதயத்தை இன்னொருவருக்கு மாற்றியதையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் இதுவரை பார்த்தோம். ஆனால் ஜெருசலத்தில் ஒரு இஸ்ரேலி அறுவை சிகிச்சை நிபுணரால் ஒரு மனிதருக்கு முதன்முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டது! அதுவும், உலகில் முதன்முதலில் நடந்த சாதனை என்றே பிரிட்டிஷ் ஆராய்ச்சி இதழ் செய்தி வெளியிட்டது. பன்னிரண்டு மணி நேரம் நடந்த அந்த ஆபரேஷனுக்குப் பிறகு மூன்றரை நாள்தான் அந்த நோயாளி உயிரோடு இருந்தார்!

இங்கே நமக்கொரு கேள்வி எழுவது இயற்கை. செயற்கை இதயத்தால் ஒரு மனிதனை மூன்று நாட்களுக்கு உயிருடன் வைத்திருக்க முடியுமென்றால் அது ஒரு சாதனைதானே? அதையே இன்னும் கொஞ்சம் மேம்படுத்தினால் வாழ்நாளை நீடிக்க முடியும்தானே என்று தோன்றலாம். ஆனால், உண்மையில் அவரை மூன்றரை நாள்கள் வாழவைத்தது அந்த செயற்கை இதயமல்ல. அதை வைக்கும்போது அவருக்கு ஆண்டவன் கொடுத்த இதயம் இருந்த இடம் காலியாகவும் இல்லை. அவருடைய இதயம் இருக்கத்தான் செய்தது. ஆனால் கொஞ்சம் பிரச்னையோடு இருந்தது. மேலே சொன்ன செயற்கை இதயமானது, இயற்கையான மனித இதயத்தைத் தேவையற்றதாக ஆக்கும் ஒரு அமைப்பல்ல.

உண்மையில் அந்தச் செயற்கை இதய சாதனத்தின் பெயர் இரண்டாவது ஹார்ட் மேட் (Heart Mate II). தெர்மோ கார்டியோ சிஸ்டம்ஸ் என்ற ஒரு கம்பெனி அதை பிட்ஸ்பர்க்கிலும் பென்சில்வேனியாவிலும் வடிவமைத்து விற்பனை செய்துகொண்டிருந்தது. 350 கிராம் எடை மட்டுமே கொண்ட ஒரு சின்ன உபகரணம் அது. முதலில் அதை மிருகங்களுக்கு வைத்துப் பார்த்தார்கள். அபாரமாக வேலை செய்தது. அது வைக்கப்பட்ட மிருகங்கள் ரொம்ப நாளைக்கு உயிர் வாழ்ந்தன! மிகச் சின்னதான அந்த அமைப்பு மனித இதயத்துக்கான மாற்று அல்ல. இடது இதய அறைக்கு உதவி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு அது. அவ்வளவுதான். அதை வயிற்றில்கூட பொருத்தலாம். அங்கிருந்து அது ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட ரத்தத்தை இதயத்தின் இடது அறை வழியாக உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செலுத்த உதவும். மனித இதயத்தின் மற்ற அறைகள் அந்த அமைப்போடு இணைந்து செயல்படும். பெரும்பாலான இதயம் தொடர்பான பிரச்னைகளுக்குக் காரணம் இடது இதய அறை செயலிழப்பாகத்தான் உள்ளது. எனவே, இரண்டாம் ஹார்ட் மேட் என்ற இந்த குட்டி அமைப்பு ஒரு செயற்கை இதயம் மாதிரி செயல்படுவதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், விரைவிலேயே இவன் அந்நியன், நம் ஆளில்லை என்று உடல் உணர்ந்து கொள்ளும்போது பிரச்னை ஏற்படும்.

இயற்கையால் நம் உடலுக்குக் கொடுக்கப்பட்ட எதிர்ப்பு சக்திதான் நம்மை உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதை அடித்து உதைத்து படுக்கவைத்துவிட்டால் என்னாகும்? உயிர் போகும். அதுதான் மேலே பார்த்த இருவருக்கும் நடந்திருக்கிறது. என்ன, ஒருவருக்கு பதினெட்டு நாள்கள். இன்னொருவருக்கு பதினெட்டு மாதங்கள். இதில் ஏதோ சாதனை செய்துவிட்ட மாதிரியான புகழும் செல்வாக்கும் மட்டும் அந்தக் கொலைகளை நிகழ்த்திய ‘அறுவை’ மன்னர்களுக்கு! ஆண்டவன் எந்த உறுப்பையும் காரணமின்றி கொடுக்கவில்லை. யோசியுங்கள்.

டாக்டர் பி.கே. சென்

மும்பையைச் சேர்ந்த டாக்டர் பி.கே. சென், 1968-ல் இதய மாற்று அறுவை சிகிச்சையை ஒருவருக்கு வெற்றிகரமாகச் செய்தார். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே நோயாளி இறந்துவிட்டார். ஆனால், டாக்டர் சென் உண்மையான ஆராய்ச்சி மனமும் மனசாட்சியும் கொண்டவர். எனவே, அவர் பர்னார்டைப் போல எதுவும் சொல்லி மழுப்பாமல், ஆபரேஷன் முடிந்த உடனேயே நோயாளி இறந்துவிட்டார் என்று பத்திரிகையாளர்களிடம் நேர்மையாகக் கூறினார்.

1967 டிசம்பரில், தென் ஆப்பிரிக்காவின் ஒரு மருத்துவ ஆராய்ச்சி இதழில் டாக்டர் பர்னார்டை புகழ்ந்து பல ‘ஆராய்ச்சிக்’ கட்டுரைகள் வந்தன. தென் ஆப்பிரிக்க அரசு தன் செலவில் டாக்டர் பர்னார்டையும், அவரது மனைவியையும், ஒரு சிறு உதவியாளர் குழுவையும் உலகம் முழுவதும் சுற்றிப்பார்க்க அனுப்பியது! கொலைகார பர்னார்டுக்குப் பணமும் புகழும் சேர்ந்துகொண்டே போனது என்கிறார் ஹெக்டே.

ஹெக்டேயின் அனுபவம்

முன்னர் குறிப்பிட்ட ஹெக்டேயின் நூலில், டாக்டர் ஹெக்டே தன் அனுபவம் ஒன்றை எடுத்துரைக்கிறார். லண்டனில் உள்ள மிடில் செக்ஸ் ஹாஸ்பிடல், நேஷனல் ஹார்ட் ஹாஸ்பிடல் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூலின் பீட்டர் பெரெண்ட் பிரிகாம் ஹாஸ்பிடல் போன்ற உலகின் தலைசிறந்த கல்லூரிகளில் இதயவியல் படித்தவர் ஹெக்டே. ஒருநாள், முப்பதுகளில் இருந்த ஒரு இளைஞர், கடுமையான மாரடைப்பு வந்து ஹெக்டே வேலைபார்த்த மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். ஆனால், ஹெக்டேயால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த இளைஞர் இறந்துபோனார். அவரது மனைவி ஐ.சி.யு.வில் ஹெக்டேயின் கால்களைக் கட்டிக்கொண்டு கதறி அழுதார். ‘என் கணவர் ஏன் இறந்தார்?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அந்தக் கேள்வி ஹெக்டேயை உலுக்கியது. எப்படி இறந்தார் என்று கேட்டால் மணிக்கணக்கில் விளக்கியிருக்க முடியும். ஆனால் ஏன் இறந்தார் என்ற கேள்விக்கு ஹெக்டேயிடம் பதிலில்லை.

அந்தக் கேள்வி ஹெக்டேயின் மனத்தை அரித்தது. ஒரு மனைவியின் எளிமையான கேள்விக்குத் தன் மருத்துவ அறிவால் பதில் சொல்ல முடியவில்லையே என்று ஹெக்டே கூசிப்போனார். தன்னுடைய படிப்பறிவெல்லாம் பயனற்றதாகிவிட்டதாகத் தோன்றியது அவருக்கு. அதுவரை அவர் மீது பொழியப்பட்டு வந்த புகழுரைகளெல்லாம் அர்த்தமற்றதாகத் தோன்றியது. மனித உடல் பற்றியும் அதன் இயக்கம் பற்றியும் அதுவரை அவர் சேமித்து வைத்திருந்ததெல்லாம் வெறும் தகவல்கள்தான் என்பது முதன்முறையாக அவருக்கு உரைத்தது. மனித உடலும் இந்தப் பிரபஞ்சமும் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது புரியாத புதிராகிப்போனது. எல்லா நோய்களுக்கும் பின்னால் மனம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டதாக ஒப்புக்கொள்கிறார் ஹெக்டே.

நோய் குணமாவதற்குக் காரணம், உடலின் குணப்படுத்தும் அமைப்புதான். ஒரு டாக்டர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே அந்த அமைப்பு வேலை செய்கிறது. ‘ஒவ்வொரு மருத்துவருக்குள்ளும் காயம்பட்ட ஒரு நோயாளியும், குணப்படுத்துபவர் ஒருவரும் உள்ளனர். ஒவ்வொரு நோயாளியும் ஒரு குணப்படுத்துபவராக ஆகக்கூடிய சாத்தியம் உண்டு. பெரியம்மையைக் கொடுப்பவளும் குணப்படுத்துபவளும் தேவிதான் என்பதுபோல. ஒரு நோயாளிக்கு உள்ளே உள்ள ஹீலரை, குணப்படுத்துபவரை நவீன மருத்துவம் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை’ என்கிறார் ஹெக்டே.

ஆங்கில மருத்துவத்தின் மனசாட்சியாக தீபக் சோப்ரா, ஹெக்டே போன்ற மருத்துவர்களை எடுத்துக்கொள்ளலாம். மனசாட்சி எப்போதுமே பொய் சொல்லாது.

எல்லாம் வியாபாரம்

அப்படியானால், இந்த மருந்து அதைக் குணப்படுத்தும், அந்த மருந்து இதைக் குணப்படுத்தும் என்றெல்லாம் சொல்லப்படுவது பொய்யா? ஆமாம். சுத்தமான நெய்யில் வறுத்தெடுக்கப்பட்ட சுவையான மொறுமொறு பொய்கள்! 

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறேன் என்று சொல்லி மருந்துகள் விற்கும் கம்பெனிகள் மட்டும், ஆண்டொன்றுக்கு 15 முதல் 18 பில்லியன் டாலர்கள் (ஏறக்குறைய 1 லட்சத்துக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்) லாபம் சம்பாதிக்கின்றன! 

இதய அறைகளில் பொருத்தப்படும் ‘கார்டியாக் ஸ்டென்ட்’ தயாரிப்பதற்குப் பத்து டாலர்களே செலவாகிறது. ஆனால், இரண்டாயிரம் டாலர்களுக்கு அது விற்கப்படுகிறது. 

மாரடைப்பு வந்து அலோபதி டாக்டரிடம் ஆலோசனை கேட்டால், ‘நீங்கள் ஒரு எரிமலையின் மீது இப்போது அமர்ந்திருக்கிறீர்கள். அது எந்த நேரமும் வெடிக்கலாம். உடனே ஆபரேஷன் செய்தாக வேண்டும்’ என்பார். ‘நான் வீட்டுக்குப் போய் என் குடும்பத்தாரிடம் கேட்டுவிட்டு வரவா?’ என்று கேட்டால், ‘அது ரொம்ப ஆபத்து. நீங்கள் போகும் வழியிலேயே இறந்துபோகலாம்’ என்று பயமுறுத்துவார்கள். ஏனெனில், ‘அப்படியொரு பலியாடு வெளியே போனால் திரும்பி வராமல் போகலாம்’ (If the ‘bakra’ goes out, he may not come back again”) என்று கிண்டலாகச் சொல்கிறார் ஹெக்டே!

இறுதியாக

The Drugs and Cosmetics Act 1940 என்று ஒரு சட்டம் உண்டு. இந்திய அரசு இயற்றிய அந்தச் சட்டத்தை மெடிகல் கௌன்ஸில் ஆஃப் இந்தியாவும், மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆண்டுக்கு ஆண்டு அச்சட்டம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, சீர் செய்யவும் படுகிறது. அதன்படி, 51 வகையான நோய்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நோய்களை ஆங்கில மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்துகிறோம், வராமல் தடுக்கிறோம், குணப்படுத்துகிறோம் என்று சொன்னால், அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்! அந்த லிஸ்ட்டுக்கு ஷெட்யூல் ஜே (Schedule J) என்று பெயர். அந்த நோய்களின் வரிசை இதோ:

1. எய்ட்ஸ்

2. நெஞ்சுவலி (Angina Pectoris)

3. அப்பென்டிசைட்டிஸ் (Appendicitis) என்னும் குடல் வால் நோய்

4. இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு (Arteriosclerosis)

5. தலை வழுக்கை

6. கண்பார்வையின்மை

7. ஆஸ்துமா

8. கட்டிகள் முதல் புற்று நோய் வரை

9. கண் புரை (Cataract)

10. தலை முடி வளர, நரை அகற்ற

11. கருவில் உள்ள குழந்தையை பால் மாற்றம் செய்வோம் என்று சொல்வது

12. பிறவிக் கோளாறுகள்

13. செவிட்டுத்தன்மை

14. நீரிழிவு நோய் (Diabetes)

15. கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகள்

16. வலிப்பு மற்றும் மனநோய்கள்

17. மூளைக்காய்ச்சல்

18. உடல் கருப்பு நிறத்தை மாற்றுதல்

19. மார்பக வளர்ச்சி

20. புரையோடிய புண் (gangrene)

21. மரபணு நோய்கள்

22. க்ளாக்கோமா எனப்படும் கண் நோய்

23. தைராய்டு (கழுத்து) வீக்கம்

24. ஹெர்னியா (குடலிறக்கம்)

25. அதிக மற்றும் குறைவான ரத்த அழுத்தம்

26. விரை வீக்கம்

27. பைத்தியம்

28. ஞாபக மறதி, அது தொடர்பானவை

29. குழந்தையின் உயரம் கூட்டுதல்

30.  கிட்டப்பார்வை, தூரப்பார்வை முதலியவை

31. ஆணுறுப்பு வளர்ச்சி, வீரியம்

32. பற்களை உறுதிப்படுத்துதல்

33. மஞ்சள் காமாலை

34. ரத்தப் புற்றுநோய்

35. வெண்குஷ்டம்

36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்

37. மூளை வளர்ச்சிக் குறைவு

38. மாரடைப்பு

39. குண்டான உடம்பு மெலிய

40. பக்கவாதம்

41. நடுக்குவாதம் எனப்படும் பார்க்கின்ஸன்ஸ் (Parkinson’s Disease)

42. மூல நோய், பவுத்திரம்

43. வாலிப சக்தியை மீட்க

44. இளவயதில் முதுமைத் தோற்றம்

45. இளநரை

46. ருமாட்டிக் இருய நோய்

47. விரைவில் ஸ்கலிதம்

48. முதுகுத்தண்டில் ஏற்படும் வலிகள்

49. திக்குவாய்

50. சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள்

51. காலில் ரத்த நாளங்கள் வீக்கம், புடைத்தல்

அப்பாடா, லிஸ்ட் முடிந்துவிட்டது. நாம் எந்தெந்த நோய்களுக்காக அலோபதி டாக்டர்களையும் மருத்துவமனைகளையும் அனுதினமும் அணுகிக் கொண்டிருக்கிறோமோ அந்த நோய்களைத்தான் ஷெட்யூல் ஜெ வரிசைப்படுத்திக் கூறுகிறது! நாம் எவ்வளவு முட்டாளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறதா?!
இது தொடர்பான விளக்கங்கள் அடங்கிய காணொளியை யூடுப்பில் காண விரும்பினால் "08. நாம் தவிர்க்க வேண்டியது வெளிநாட்டு பொருட்களை மட்டும் தானா?" பதிவைப் 👇 பாருங்கள்

ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஸ்கேன் மையங்களிலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரிந்துகொள்வது சட்டப்படி குற்றம் என்று போர்டு வைக்கிறார்கள் அல்லவா? ஆனால், ஷெட்யூல் ஜெ-யை ஏன் வைப்பதில்லை?

‘‘ஆங்கில மருத்துவம் ஒரு பிணம் தின்னும் மருத்துவம்” என்றும் ‘‘ஆடு, மாடு, கழுதைகள், குரங்குகள் போன்ற மிருகங்களும் மனிதர்களும் ஒன்றுதான் என்ற அளவில் வைத்தியம் பார்க்கும் ஒரே மருத்தும் ஆங்கில மருத்துவம்தான்” என்றும் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் சொல்வது உண்மையில் குரலாக ஒலிக்கிறதா? சிந்தியுங்கள்.

தொடரும்...

இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண