நலம் நலமறிய ஆவல் - 12. கிருமிகள் வாழ்க!

 

   

       
எங்கெங்கு காணினும்

    எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற பாடல் நமக்குத் தெரியும். ஆனால், பாடல் மட்டும்தான் தெரியும். அது சொல்லும் உண்மையை நம்மில் பலர் இதுவரை உணராதிருக்கலாம். ஆனால், எங்கெங்கு காணினும் கிருமியடா என்பது மட்டும் எல்லோருக்கும் அனுபவத்தில் தெரிந்த ஒன்றாக உள்ளது. 

    கிருமிகளைப் பற்றிய பயம் அன்றாடம் நமக்குள் விதைக்கப்படுகிறது. விளம்பரங்கள், மருத்துவர்கள், மருந்துக் கம்பெனிகள், அரசாங்கங்கள் என இந்தப் பயத்தை உலகளாவத் தூவுவதில் அனைவருக்கும் பங்கு உண்டு. இதில் விளம்பரங்களை விட்டுவிடலாம். அவர்கள் தங்கள் பொருள் விற்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இது நாம் புரிந்துகொள்ளக் கூடியதே.

    ஆனால், மருத்துவர் முதல் அரசாங்கம் வரை இந்தக் காரியத்தை ஒரு கடமையாக, ஒரு தர்மமாகச் செய்து கொண்டிருக்கிறார்களே! இதில் மருத்துவர்களையும் மருந்துக் கம்பெனிகளையும்கூட விட்டுவிடலாம். அவர்களின் சிபாரிசின் பின்னாலும் பணம் இருப்பது சாத்தியமே. ஆனால் அரசாங்கங்கள்?! கிருமி பற்றிய அச்சத்தை ஏற்படுத்துவதால், அவர்களுக்கு என்ன வருமானமா கிடைக்கப்போகிறது? சிங்கப்பூரில் 13 இந்தியர்கள் ஜிகா (Zika) வைரஸ் பாதிப்புக்கு உள்ளானதாக தொலைக்காட்சி செய்திகள் சமீபத்தில் அழுதன. பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் மனிதர்களுக்கு ஒருவகை காய்ச்சல் வருவதாகவும் சொல்லப்பட்டது. ஜிகா வைரஸை இலவசமாகக் கொடுப்பதாக நம்பப்படும் கொசுக்களை ஒழிக்க ‘மெஷின் கன்’ மாதிரி எதையோ தூக்கிக்கொண்டு போவதையும் காட்டினார்கள். 

    எல்லா வகையான காய்ச்சல்களும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் எனும் கிருமியால் பரவுகிறது என்று நம்பப்படுகிறது. காய்ச்சல் மட்டுமல்ல, டெங்கு, டைஃபாய்டு, மலேரியா, பொன்னுக்கு வீங்கி, போலியோ முதல் எய்ட்ஸ் வரை மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களுக்கெல்லாம் காரணம் கிருமிகள்தான் என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞானிகள் என்று கருதப்படுபவர்களும் அப்படியே சொல்வதால், அரசாங்கங்களும் அதை நம்பி, மக்களைக் காப்பாற்ற ‘உரிய’ நடவடிக்கைகளை எடுக்கின்றன.

    நடந்துகொண்டிருப்பது இதுதான். ஆனால், கிருமிகளைப் பற்றிய உண்மை என்ன? அவற்றால் உண்மையிலேயே நோய்கள் உண்டாகின்றனவா? பரவுகின்றனவா? இக்கேள்விகளுக்கான பதிலை நாம் அனைவரும் விரிவாகவும், விளக்கமாகவும் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த உண்மைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியது என் கடமை. அதற்காகத்தான் இந்த பீடிகை. சரி, கிருமிகளைப் பார்க்கலாமா?!

கிருமிகள் ஓர் அறிமுகம்

    கிருமி என்று நாம் சொன்னாலும் பாக்டீரியா, வைரஸ், ஃபங்கஸ், ஆல்கே, ஜெ(ர்)ம் என நம் புறக்கண்களுக்குப் புலப்பலாத அந்தக் குட்டி உயிர்களுக்குப் பல செல்லப் பெயர்கள் உண்டு. நான் அன்றாடம் வாங்கும் பேஸ்ட், ஃபெனாயில், மௌத் வாஷ், சோப்பு, வியர்வை துர்நாற்றம் போக்க உதவும் டியோடரன்ட், டாய்லெட்டில் கறை போக்க உதவும் ஹார்பிக் போன்ற எல்லாமே கிருமி எனப்படும் நுண்ணுயிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றத்தான் என்று விளம்பரங்கள் கூறுகின்றன.

    நம் டாய்லட்டில் உள்ளதைவிட 400 மடங்கு அதிகமான கிருமிகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மேஜை மீது உள்ளதாம்! மொபைல் ஃபோன் பயன்படுத்துபவர்களுக்கு இன்னொரு முக்கியமான செய்தி உள்ளது. கழிவறையில் உள்ளதைவிட 18 மடங்கு அதிகமாக நமது கைப்பேசியில் கிருமிகள் உள்ளனவாம்! ஆனாலும் மொபலை நாம் ஹார்பிக் ஊற்றிக் கழுவ முடியாது! இதுமட்டுமா? சுத்தமான ஒரு மனித வாயில் ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை ஒவ்வொரு பல்லுக்குள்ளும் கிருமிகள் உள்ளனவாம்! ஒவ்வொரு டாலர் நோட்டிலும் 3000 வகையான பாக்டீரியாக்கள் உள்ளனவாம்! அப்போ நம் நாட்டு காந்தித் தாத்தா மேலே எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை!

    எல்லாவற்றுக்கும் உச்சமாக ஒன்று சொல்லப்படுகிறது. கமலஹாஸன்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சி தருவதாக இருக்கலாம்! இரண்டு பேர் ஆசையாக முத்தமிட்டுக் கொண்டால், ஒருவர் வாய் வழியாக இன்னொருவர் வாய்க்கு பத்து மில்லியனிலிருந்து ஒரு பில்லியன் பாக்டீரியா ஊடுறுவுமாம்! அடக்கடவுளே! இனிமேல் முத்தமே கொடுக்க முடியாதா? ச்சே, ச்சே, அப்படியெல்லாம் இருக்காது. வாய் துர்நாற்றம் கொண்ட பொறாமைப் புடிச்ச யாரோ ஒருவன்தான் இப்படிச் சொல்லியிருக்கான் என்று நான் நம்புகிறேன்! கிருமிகளின் முத்தப் பரிமாற்றத்தில்தான் கருமிக்குக்கூட இன்பம் என்பது நமக்குத் தெரிந்ததுதானே! முத்த வாசல் திறந்தால்தானே காதல் அரண்மனைக்குள் நுழைய முடியும்! 

    பயப்பட வேண்டாம். இவையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமான பொய்கள்! லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கிருமிகள் இருப்பது உண்மைதான். ஆனால், அவற்றால் நமக்கு எந்த ஆபத்துமில்லை என்பது மட்டுமல்ல, அவைதான் நம்மை ஆரோக்கியமாக வாழவைத்துக் கொண்டிருக்கின்றன என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இந்த உலகின் மெகா ஆச்சரியமும் மெகா உண்மையும் இதுதான். அது எப்படி என்று பார்க்கும் முன், கிருமிகள் என்று சொல்லப்படும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் பற்றிய மேலும் சில தகவல்களைப் பார்த்துவிடலாம்.

கிருமிகள் பற்றிய பொய்கள் 

    கிருமி எதுவும் நமது புறக்கண்களுக்குத் தெரியாது என்று நமக்குத் தெரியும். ஆனாலும் விளம்பரங்கள் என்ன சொல்கின்றன? எப்படிக் காட்டுகின்றன? உதாரணமாக லிஸ்டரீன் மௌத்வாஷ் விளம்பரம் உங்கள் பற்களுக்கு இடையில் இருக்கும் கிருமிகளைக் கொல்வதாகக் காட்டுகிறது. பற்களின் இடுக்குகளில் இருக்கும் ஏகப்பட்ட கிருமிகளையும் கருப்பு கருப்பாகக் காட்டுகிறது! ஹார்பிக் விளம்பரம் டாய்லெட்டில் கிருமிகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் போலவும், ஹார்பிக்கை ஊற்றியதும் அலறிக்கொண்டு அவை சாவதைப் போலவும் காட்டுகிறது. ‘‘கிருமிகளை பளீரென படம் பிடித்துக் காட்டும் ஒரு டார்ச் லைட் நமக்குக் கிடைத்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்? ஆனால் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் ஹீலர் உமர் ஃபாரூக்!

    கிருமிகளில் பாக்டீரியா, வைரஸ் என்று இரண்டு முக்கிய வகை உண்டு. அதில் பாக்டீரியாவை நாம் பார்க்க முடியும். ஆனால், அதற்கு நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கையான புறக்கண்கள் உதவாது. ஏனெனில், கிருமியின் ‘சைஸ்’ அப்படி! பாக்டீரியாவைவிட வைரஸ்தான் ரொம்பச் சின்னது. பாக்டீரியாக்களை எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலம் பார்க்கலாம். ஆனால், வைரஸை அப்படியும் பார்க்க முடியாது! ஒரு ஊசியின் தலை மீது ஐந்து லட்சம் வைரஸ்கள் பத்மாசனம் போட்டு உட்கார முடியும்! இந்த உலகத்தில் எவ்வளவு கிருமிகள் இருக்கும்? குத்து மதிப்பாக, 5X1000000000000000000000000000000 என்று சொல்கிறது விஞ்ஞானம்! (இது எவ்வளவு என்று நம்ம ஊர் ராமானுஜன்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்). இந்த உலகில், இந்தப் பிரபஞ்சத்தில், மனிதர்களைவிட அதிகமாக கிருமிகளே உள்ளன! நம் உடம்பில் மட்டும் 90 டிரில்லியன் கிருமிகள் இருக்கிறதாம்!

    அப்படியானால், விளம்பரங்களில் காட்டப்படுவது என்ன? சுத்தமான ஏமாற்று வேலை! ஒரு சோப்பு வாங்கவில்லை எனில் ‘பத்து ஸ்கின் ப்ராப்ளம்’ வந்துவிடும் என்று பயமுறுத்துவதுதான் அவர்களது தந்திரம். உண்மையில் வேதிப்பொருள் கலந்த ஒரு சோப்பை – அதாவது எல்லா சோப்புகளையும் – போடுவதால்தான் எல்லாவிதமான ஸ்கின் ப்ராம்பளமும் வரும்!

    சென்ற ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் ஸ்வைன் ஃப்ளூவுக்கு எதிரான பிரசாரம், நடவடிக்கைகள் வெகு தீவிரமாக நடந்தன. ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் என எல்லாரும் ஒரு துணிப்பையை மூக்கில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் சென்றார்கள். பன்றிக் காய்ச்சலை உருவாக்குவதாக சொல்லப்பட்ட H1N1 வைரஸ், அந்த ‘மாஸ்க்’குக்கு உள்ளே புகமுடியாமல் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுவிடும் என்று ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றார்கள்! 

    ஒரு வைரஸின் அளவு என்ன என்று பள்ளிக்கூடப் பிள்ளைகளைக் கேட்டால்கூடச் சொல்லிவிடுவார்கள். ஏனெனில் அவர்களது பாடத்திலேயே அது உள்ளது! ஒரு ஊசி முனையின் மேலே லட்சக்கணகான வைரஸ்கள் சொகுசாகப் படுத்து உறங்கமுடியும் என்றால், மூக்கை மூடிய ஒரு துணியில் (Mask) உள்ள ராட்சச ஓட்டைகள் வழியாக அந்த வைரஸ் உள்ளே நுழைய முடியாதா? யாரை ஏமாற்ற அந்தப் பிரசாரம்? நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளத்தான்! ஏமாற்றுவதிலும் ஏமாறுவதிலும் நம்மைவிடச் சிறந்தவர்கள் இந்த உலகில் உண்டா என்ன?! 

    இரண்டு சதவீத மனிதர்களே சிந்திக்கிறார்கள். மூன்று சதவீதம் சிந்திப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். 95 சதவீதம் பேர் சிந்திப்பதைவிட செத்துப்போவதே மேல் என்றிருக்கிறார்கள் என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சொன்னதுதான் எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!

    கிருமிகளால் மனிதர்களுக்கு எந்தப் பிரச்னையுமில்லை என்று நாளைக்கு உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டால் என்னாகும்? அவ்வளவுதான், சோப்புக் கம்பெனிகள், பேஸ்ட்டு கம்பனிகள், மௌத் வாஷ்கள், ஹாண்ட்வாஷ்கள், டாய்லட் க்ளீனர்கள், சுத்திகரிக்கப்பட்ட பொருள்கள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று எதையுமே நாம் வாங்கமாட்டோம்! கிருமி தாக்கிவிடுமோ என்ற பயத்தினால்தானே இவற்றையெல்லாம் மாற்றி மாற்றி வாங்கிக் கொண்டிருக்கிறோம்! வெளிநாட்டுக் கம்பெனிகளின் மொத்த வியாபாரமும் அடிபட்டுப் போகும். ஐந்தே ஆண்டுகளில் இந்தியா உலக வல்லரசாக மாறிவிடவும் வாய்ப்பு உண்டு!

    ஆஹா, அப்படியெல்லாம் விட்டுவிடுவோமா என்று வரிந்து கட்டிக்கொண்டு கம்பெனிகளும், விஞ்ஞானிகளும் வந்துவிடமாட்டார்களா? ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு அறிவு வந்துகொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்! சில நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் எந்தச் சத்துமே இல்லை, அது உயிரற்றது என்ற உண்மை சொல்லப்பட்டது! இப்படியே போனால், கிருமிகள் பற்றிய உண்மையும் பரவலாக வெளிவருதல் சாத்தியம்தான். 

    கிருமிகளின் மூலமாக நோய் வருமா? காற்றில், தண்ணீரில் என்று கிருமிப் பரவல் மூலமாக நோய் தொற்றுமா? இது உண்மையானால், உலக யுத்தங்கள் நடந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை! மெனக்கெட்டு ஹிரோஷிமா, நாகசாகி, ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் என்றெல்லாம் பறந்து சென்று குண்டுகளைப் போட்டு அழித்ததற்குப் பதிலாக, அந்தந்த நாடுகளுக்குச் செல்லும் நதிகளில் கோடிக்கணக்கான கிருமிகளை இறக்கிவிட்டிருந்தால் போதுமே! இந்நேரம் எதிரிகள் அனைவரும் கிருமிகளால் தாக்கப்பட்டு நோய்க்கு ஆளாகி செத்திருப்பார்களே! 

    சிந்து நதியின் வழியாகக் கிருமிகளை அவர்கள் அனுப்பியிருந்தால் நாமும், நாம் அனுப்பியிருந்தால் அவர்களும் செத்திருக்கலாமே? இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறையைத் தடுத்திருக்கலாமே! ரசாயன ஆயுதம் (கெமிகல் வெப்பன்) வைத்திருந்ததாகச் சொல்லி ஈராக்குக்கு ராணுவத்தை அமெரிக்கா அனுப்பியிருக்க வேண்டியதில்லையே! கிருமிப் படையை அனுப்பி சதாம் ஹுசைனை சாகடித்திருக்கலாமே!

    இப்படி உலக வரலாற்றில் எங்காவது கிருமிகள் அனுப்பப்பட்டு யுத்தம் நடத்தப்பட்டிருக்கிறதா? எங்குமே இல்லை. ஏன்? ஏனெனில், அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று அவர்களுக்கே தெரியும்! ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்களுக்காக வேண்டுமென்றால், சைனாவிலிருந்து ஒருவர் வந்து ஒரு நாயின் உடம்பில் கிருமியைப் புகுத்தி அது மக்களை பாதிக்குமாறு காட்டலாம். அதற்கும், மக்களுக்கு ஏற்கெனவே வந்துவிட்டிருந்த நோய்க்கு போதிதர்மர் மருந்து கொடுத்ததற்கும் தொடர்பில்லை. அது வேறு விஷயம். 

    உடல் நோயுற்ற ஒரு ஒட்டகத்தின் மூலம் மற்ற ஒட்டகங்களுக்கும் அந்த நோய் தொற்றிக்கொண்டது என்று ஒருமுறை நபிகள் நாயகத்திடம் சொல்லப்பட்டபோது, அப்படியானால் முதல் ஒட்டகத்துக்கு எப்படி அந்த நோய் வந்தது என்று அவர்கள் கேட்டதாகவும், தொற்று நோய் என்று எதுவும் இல்லை என்று அவர்கள் சொன்னதாகவும் ஒரு நபிமொழி உள்ளது. இந்த நபிமொழிக்கு பலவிதமான விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன. இந்த நபிமொழியை நான் நினைவுகூர்ந்ததற்கு ஒரு காரணம் உள்ளது. நபிகள் நாயகத்தின் காலம் ஏழாம் நூற்றாண்டு. கிருமிகள் உள்ளன, அவற்றால் நோய் தொற்றுகிறது என்று முதன்முதலாக லூயி பாஸ்டரால் சொல்லப்பட்டது 19-ம் நூற்றாண்டு! நாம் ஞானியாக இருக்கும்பட்சம், விஞ்ஞானிகள் உண்மை பற்றி உளறுவதற்கு முன்பே நமக்கு உண்மை தெரிந்திருக்கும் என்பதையே வரலாறு காட்டுகிறது. 

    விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல, சினிமாவில் காட்டப்படுவதுபோல, பிரசாரங்களில் காட்டப்படுவது அல்லது சொல்லப்படுவதுபோல கிருமிகளால் நோய்கள் பரவுவதே இல்லை என்பதுதான் சத்தியம். அப்படியானால் கிருமிகளால் நோய்கள் உருவாவதோ, பரவுவதோ இல்லையா, கெட்ட கிருமிகளே கிடையாதா என்ற கேள்விக்கான பதிலைக் கொஞ்ச நேரம் கழித்துப் பார்க்கலாம். ஏனெனில், கிருமிகளைப் பற்றி நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

    வாருங்கள், கிருமி லோகத்துக்குச் செல்லலாம்.


கிருமிலோகம் எது?

    ஹீலர் உமரின் கேள்வி நியாயமானதே. கிருமிகள் எங்கிருந்து வருகின்றன? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் நமக்கு கொசு ஞாபகம் வரலாம். ஏனெனில், கிருமியும் கொசுவும் இணைபிரியா ஜோடிகளாகவே ஜோடிக்கப்பட்டுவிட்டன! கொசுக்கள்தான் கிருமிகளை உருவாக்குகின்றனவோ என்ற சந்தேகம் வருவதும் இயற்கைதான். நீங்கள் எந்திரன் ரஜினி மாதிரி ‘மஸ்கிட்டோமோடு’க்குப் போய் கொசுக்களிடம் இதுபற்றி விசாரிக்க முடிந்தாலும், உங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்காது! ஏன்? கிருமிகள் பற்றி கொசுக்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவை பாவம்!

    ஒருவேளை எலி, பன்றி இவற்றில் இருந்து கிருமிகள் உருவாகின்றனவா? இந்தச் சந்தேகமும் அபத்தமானதே. கொசு, எலி, பன்றி, காற்று, தண்ணீர் இவை மூலமாகக் கிருமிகள் பரவுகின்றன என்றுதான் அறிவியல் சொல்கிறது. அவற்றிலிருந்து உருவாகின்றன என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னாலும் அது சரியல்ல என்பதுதான் சரி!

    கிருமிகள் இருக்கட்டும். இந்தக் கொசுக்கள் எங்கிருந்து வந்தன? பின்பு அவை எங்கு சென்றன? யாருக்கும் தெரியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குன்யா என்று ஒரு காய்ச்சல் வந்தது. உடனே எல்லா சந்து பொந்துகளிலும் போர்க்கால நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கப்பட்டது. இப்போது அந்தச் சிக்குன்குன்யா பற்றி சிக்கன் சாப்பிடும்போதுகூட யாரும் யோசிப்பதில்லை! சிக்குன்குன்யா எங்கே போனது? அதை உருவாக்கியதாகச் சொல்லப்பட்ட கொசுக்கள் எங்கே போயின? ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வந்து, நம்மையெல்லாம் கடித்து, சிக்குன்குன்யா வைரஸை நம் உடலுக்குள் செலுத்திவிட்டு, கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்ட, கடமையைச் செய்துவிட்ட திருப்தியில் கொசு ராஜாவின் உத்தரவுப்படி மீண்டும் திரும்பி அந்த படைவீரர்-கொசுக்களெல்லாம் தங்கள் உலகத்துக்கே போய்விட்டனவா? 


    இப்பொழுது கொசுவே இல்லையா? கொசுக்களை ஒழித்துவிட்டோமா? இந்தக் கேள்விக்கான நியாயமான பதில் இல்லை என்பதுதான். அப்படியானால் என்ன அர்த்தம்? கொசு மருந்துகளால் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை, ஒழிக்கவும் முடியாது என்றுதானே அர்த்தம்? அப்படியானால், ஒரு காலகட்டத்தில் நம்மைத் தாக்கிய சிக்குன்குன்யா இப்போது ஏன் இல்லை? அதுவே இப்போது டெங்குவாக மாறிவிட்டதா? ஒரே காய்ச்சலுக்குத்தான் டைஃபாய்டு, காலரா, சிக்குன்குன்யா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என்று மாற்றி மாற்றி வெவ்வேறு பெயர்களைச் சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டுள்ளோமா?

    மேலே சொன்ன காய்ச்சல்களைப்போல, காலரா கூடத்தான் வந்தது. அசுத்தமான நீரின் மூலம் கிருமிகள் நம் உடலுக்குள் சென்று சிறுகுடலை பாதித்து, கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி வாட்டியதாகச் சொல்லப்பட்டது. அந்தக் காலரா கிருமிகள் எங்கே சென்றன? ஏன் இப்போது அக்கிருமிகள் இல்லை? கிருமிகள், அவற்றை நமக்குக் கொடையளிக்கும் கொசுக்கள் இவற்றுக்கெல்லாம் சொற்ப காலத்தில் விதி முடிந்துபோய்விடுமோ? அல்லது அவற்றுக்கெல்லாம் விடுமுறைக்காலமோ?

    கொசுக்களையும், அவற்றின் வாய் வழியாக நம் ரத்தத்தில் கலக்கும் வைரஸ்களையும் ஒழிக்க ரொம்ப நேர்மையாகத்தான் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், அடிப்படையில் தவறு உள்ளது! அதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

என்ன தவறு?

    விளம்பரத்தில் ஒரு நடிகர் வெள்ளைக் கோட்டைப் போட்டுக்கொண்டு, கழுத்தில் ஒரு ‘ஸ்டெத்’தை மாட்டிக்கொண்டால் அவர் டாக்டர் என்று நாம் நினைக்க வேண்டும். ஆனால், அவர் உண்மையில் டாக்டர் இல்லை என்று நமக்குத் தெரியும். அதேபோலத்தான், அறிவியல் என்ற பெயரில் பல கவர்ச்சிகரமான பொய்கள் அன்றாடம் நமக்குள் திணிக்கப்படுகின்றன. நடிகரை டாக்டர் என்று நாம் நம்புவதில்லை. ஆனால், கிருமிகளையும் கொசுக்களையும் பற்றிய உண்மைகளை மட்டும் புரிந்துகொள்ளாமல், அவைதான் நோய்களைப் பரப்புகின்றன என்ற கருத்தை மட்டும் கேள்விகள், சந்தேகம் ஏதுமின்றி நாம் நம்பிவிடுகிறோம்

கிருமிகளின் வரலாறு!

    அப்படியானால், எல்லாக் கிருமிகளும் நல்லவையா? அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. இந்த உலகில் கோடிக்கணக்கான கிருமிகள் உள்ளன. அவற்றில் மிகமிகச் சிறிய மைனாரிட்டிதான் நமக்கு தீங்கு செய்ய வல்லவை!

    இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி உயிரினம் கிருமிதான் என்று நான் சொன்னால் நம்புவீர்களா? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி இந்தக் கிருமிகள்தான்! ஏழாம் அறிவை நோக்கி மனிதன் சென்று கொண்டிருக்கிறான். விலங்குகளுக்கு ஐந்தறிவு. புழுக்களுக்கு இரண்டே அறிவுதான். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்பே கிருமிகள் வந்துவிட்டன. 

    இயற்கை சுழற்சியின் ரகசியமே கிருமிகள்தான். இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே மாற்றமடைந்து கொண்டிருக்கிறது, நாம் உள்பட. இன்றைக்கு இருப்பது போலவே இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து இருப்பீர்களா? இருக்கமாட்டீர்கள். அப்படியானால் மாற்றம் எப்போது நடக்கிறது? பத்து ஆண்டுகள் கழித்து திடீரென்று ஒரு மாற்றம் நடக்கிறதா? இல்லை. இப்பொழுது, இக்கணத்தில், ஒவ்வொரு கணமும் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நமக்கு அது தெரிவதில்லை. அவ்வளவுதான். 

    ஒன்று இன்னொன்றாக மாறும் அன்றாட transformation process-ல், கிருமிகளின் பங்கு மிக முக்கியமானது. தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று இறைவனைச் சொல்வார்கள். கிருமிகளுக்கும் அதைச் சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். ‘கிருமிகளின்றி அமையாது உலகு’ என்று "கிருமிகள் உலகில் மனிதர்கள்" நூலில் ஒரு அத்தியாத்துக்கு தலைப்பே கொடுத்திருக்கிறார் ஹீலர் உமர்! ஆமாம். எங்கும் கிருமி உண்டு, எதிலும் கிருமி உண்டு. நீரிலும், நிலத்திலும், காற்றிலும் கிருமிகளின் ராஜ்ஜியம்தான் என்று சொன்னால் அது மிகையல்ல. ஒரு understatement-ஆக வேண்டுமானால் இது இருக்கலாம். 


(இந்த புத்தகத்தை கட்டுரை வடிவில் இணையத்தில் படிக்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்கு செல்லுங்கள்.) 


    மிகப்பெரியதாக பரந்து விரிந்திருக்கும் கடலின் அடியிலுள்ள வெந்நீர் ஊற்றுகளிலும், நிலக்கரிச் சுரங்கங்களில் ஆழமாகத் தோண்டப்பட்ட கரிக்குழிகளிலும், பாறைகளிலும்கூட கிருமிகள் வாழ்ந்தபடியே இருக்கின்றன. மனிதர்கள் பயந்தோடும் எரிமலையின் லாவா குழம்புகளிலும்கூட கிருமிகள் வாழ்கின்றன” என்கிறார் ஹீலர் உமர்.

கிருமியின் சேவைகள்

    கிருமிகள் செய்யும் வேலைகள் எண்ணில் அடங்காதவை. அநேகம். முக்கியமாக, மேலே சொன்ன மாதிரி, இயற்கை மாற்றங்களுக்கு கிருமிகள் உதவுகின்றன. இந்த உலகில் எல்லாமே ஒன்று இன்னொன்றாக மாறிக்கொண்டே உள்ளது. நிரந்தரமானது மாற்றம் ஒன்றுதான். அதில் மாற்றமே இல்லை என்று சொல்வார்கள். விந்து உயிராகிறது, உயிர் உடலாகிறது, பின் உடலிலிருந்து மீண்டும் விந்து பிறக்கிறது. நீர் ஆவியாகிறது, ஆவி மீண்டும் நீராகிறது. நெருப்பு கரியாகிறது, கரி மீண்டும் நெருப்பாகும். பஞ்சபூதங்களால் ஆன நம் உடல் இறந்த பிறகு மீண்டும் மண்ணாகவோ, சாம்பலாகவோ மாறிவிடுகிறது. காலையில் எட்டு மணிக்கு நான் சாப்பிட்ட மூன்று இட்லிகள் மூன்று மணி நேரம் கழித்து நாகூர் ரூமியாகிவிடுகிறது! இப்படியாக வேதியியல், உயிரியல் சுழற்சிகள் நடந்துகொண்டே உள்ளன. அந்தச் சுழற்சி ஒழுங்காக நடப்பதற்குப் பிரதான காரணம் கிருமிகள்தான்!

    கிருமிகளின் இந்தச் சேவையை மரங்களோடு ஒப்பிடுகிறார் ஹீலர் உமர். அது உண்மைதான். மரங்கள் எப்படி நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை கொடுத்து, நமக்குத் தேவையில்லாத கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொள்கின்றனவோ அதேபோல, கிருமிகளும் இவ்வுலகில் நம் முட்டாள்தனமான அல்லது அறிவார்ந்த செயல்பாடுகளால் உருவாகும் கழிவுப் பொருள்களையெல்லாம் உண்டு, மறுசுழற்சி செய்து, அவற்றில் உள்ள நச்சுக்களை அகற்றி ‘டிடாக்ஸிஃபிகேஷன்’ செய்கின்றன! 


    கந்தக சல்ஃபைடு என்ற வேதியியல் விஷப்பொருளை கந்தக ஆக்ஸைடாக மாற்றும் வேலையைக் கிருமிகள்தான் செய்கின்றன. அக்கிருமிகள் கந்தகத்தை உணவாக எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. உலோகங்களை உண்ணும் கிருமிகளும் உண்டு. தங்கம், வெள்ளி போன்றவற்றை தரம் குறைந்த உலோகக் கலப்பிலிருந்து பிரித்தெடுப்பதற்கும் கிருமிகள் பயன்படுகின்றன! குறிப்பாக, ‘ஆல்கே’ (Algae) என்றவகைக் கிருமிகள், இவ்வகை உலோகப் பிரிப்புக்குப் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. 

    நிலத்தடியில், பாறைப் பிளவுகளில் கசியும் நீரில் செம்பு, யுரேனியம் போன்ற உலோகக் கலப்பு இருக்கும். அவற்றின் தாதுக்களைப் பிரித்தெடுக்க கிருமிகள் பயன்படுத்தப்படுகின்றன. மெக்ஸிகோ நாட்டின் ஆறுகளில் கலந்துள்ள தங்கத்தைப் பிரித்தெடுக்க, உலோகம் தின்னும் கிருமி வகையான க்ளோரல்லா வல்காரிஸ் என்ற கிருமி பயன்படுத்தப்படுகிறது. 

    அதுமட்டுமல்ல. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இரண்டு பிரச்னைகளை மேற்கத்திய உலகம் சந்தித்தது. ஒன்று, பெருகிய மக்கள் தொகை; இரண்டு, வறுமை. அந்த இரண்டு பிரச்னைகளையும் தீர்க்க உதவிய உணவுப்பொருள் க்ளோரல்லா வல்காரிஸ் என்றும் சி வல்காரிஸ் என்றும் சொல்லப்படும் அந்தக் கிருமிதான்! அந்தச் சூழ்நிலையில் அது ஒன்றுதான் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய, ப்ரோட்டீன், விட்டமின்களெல்லாம் அடங்கிய மனித உணவாகப் பயன்பட்டுள்ளது! 

    சோறு கிடைக்காதவர்களெல்லாம் சி வல்காரிஸ் கிருமியை உண்டு உயிர் பிழைத்திருக்கிறார்கள்! கிருமியையா? உணவாகவா? என்றெல்லாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. கிருமி என்றாலே அது நோயை உண்டாக்கும் சமாசாரமாகும் என்ற தவறான கருத்து நம் மூளையில் பதிந்துபோனதால் வரும் ஆச்சரியங்கள் அவை. அமெரிக்காவில் உள்ள கார்னகி இன்ஸ்டிடியூஷன், ராக்ஃபெல்லர் ஃபௌண்டேஷன் போன்றவை க்ளோரல்லா வல்காரிஸ் கிருமியின் பயன்கள் பற்றி ஆராய்ச்சிகள் செய்துள்ளன! அதுமட்டுமா? அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஆரோக்கியத்துக்கான துணை உணவாகவும் அது பயன்படுத்தப்பட்டது. சி வல்காரிஸ் மாத்திரைகள் கிடைத்தன! 

    விளைநிலங்களில் தொடர்ந்து பயிர் செய்யப்படும்போது மண் சோர்வடைந்துவிடும். அது சமயம், விவசாயிகள் பயறு வகைச் செடிகளை ஒருமுறை விளைவிப்பார்கள். அதனால் மண் வளம் புதுப்பிக்கப்படும். இக்காலகட்டத்தில், தாவர வேர்களில் உள்ள நைட்ரஜனை உரமாக மாற்றி மண்வளத்தைப் பெருக்க உதவுவது கிருமிகளே!

    கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இப்போதெல்லாம் சைவ ஓட்டல்களிலும் மஷ்ரூம் 65, வெஜ் ஃப்ரைடு ரைஸ் என்றெல்லாம் வைக்கிறார்கள். ஏன்? சிக்கன் 65, சிக்கன்/மட்டன் ஃப்ரைடு ரைஸ் போன்றவற்றுக்கு மாற்றாகத்தான்! சைவ நாக்குகளுக்கு ஒரு அசைவை உணவைச் சாப்பிட்ட மாதிரி ஒரு ‘ஃபீல்’ கொடுக்க! அப்படிப்பட்ட ‘சோயா மீல் மேக்கர்’கள் உற்பத்திக்கும் பயன்படுவது கிருமிகள்தான்!

    நாம் தூக்கி எறியும் ப்ளாஸ்டிக் குப்பைகளையெல்லாம் மண்ணால் மறுசுழற்சி செய்ய முடியாதென்று கூறுகிறோம். அதனால்தான் ப்ளாஸ்டிக் வேண்டாம் என்ற பிரசாரமும் நடக்கிறது. ஆனால், அவற்றையும் ‘ரீசைக்கிள்’ செய்யும் திறன் கிருமிகளுக்கு உண்டு. 

    இவ்வளவு ஏன்? இட்லி மாவு புளிக்க வேண்டுமா? பால் தயிராக மாற வேண்டுமா? அப்படி நடப்பதை ஆங்கிலத்தில் ‘ஃபெர்மென்டேஷன்’ (fermentation) என்று சொல்வார்கள். அந்தப் புளித்தல் நடக்காமல் குஷ்பு இட்லிகள் கிடைக்காது! இதெல்லாம் நடப்பதும் கிருமிகளால்தான்!

    இப்படி உலகெங்கிலும், கண்ணுக்குத் தெரியாத இடங்களிலும், மனிதர்களுக்காகக் கிருமிகள் உழைத்துக் கொண்டுள்ளன! மனிதர்களை உயிர்வாழ வைத்துக் கொண்டுள்ளன! ஆபத்பாந்தவா, அநாதரட்சகா என்று கிருமிகளைத்தான் அழைக்க வேண்டும். ஆனால், மனிதர்களைக் கிருமிகள் கொல்வதாக அல்லவா நாம் நினைத்துக் கொண்டுள்ளோம்! நினைப்புக்கும் நடப்புக்கும் இடையில்தான் எத்தனை இடைவெளி!

    இப்பூவுலகில் கிட்டத்தட்ட 85 லட்சம் வகைக் கிருமிகள் (85 லட்சம் கிருமிகள் அல்ல) இருப்பதாகவும், அவற்றில் மனிதர்களுக்குத் தீங்கிழைப்பவை என்று பார்த்தால் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவு என்றும் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். இந்த விஷயத்தில் விஞ்ஞானிகளை நம்பலாம்!

    அப்படியானால், இக்கிருமிகள் நம் உடலில் என்னதான் செய்கின்றன? பார்க்கத்தானே போகிறோம்…

எங்கெங்கும்…

    இணையத்தில் கிடைத்த இந்த மேற்கோளில் இயேசுவையும் கிருமியையும் ஒன்றாக இணைத்துச் சொல்லப்பட்டுள்ளது. இது மத நம்பிக்கையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஏற்படுத்தினால், கிருமிகளை அவர்கள் குட்டிச்சாத்தான்களாகப் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். ஒருவேளை எந்தக் கேள்வியும் இன்றி இந்த மேற்கோளை அவர்கள் மனம் ஏற்றுக்கொள்ளுமானால், கிருமிகளைப் பற்றிய சரியான கருத்தையே அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்! கடவுளும் கிருமியும் ஒன்றா என்று நீங்கள் கேட்கலாம். இது ஒப்புமை அல்ல. கடவுளைப்போல, காற்றைப்போல, கிருமிகளும் எங்குமிருக்கின்றன என்ற புரிந்துகொள்ளல். அவ்வளவுதான்.

    நீரில், நிலத்தில், ஆகாயத்தில் என்று கிருமிகள் எங்கும் வாழ்கின்றன என்று பார்த்தோம். கோடிக்கணக்கான கிருமிகள் இருக்கின்றன என்றும், அவற்றில் 85 லட்சம் வகை உள்ளன என்றும், அவற்றில் மனிதர்களுக்குத் தீமை செய்பவை ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவையே என்றும், இந்தப் பிரபஞ்சத்தில் ஒன்றை இன்னொன்றாக மாற்றும் அவசியமான இயற்கை நிகழ்வுக்கு (Biotransformation / Microbial Metabolism) உதவுகின்றன என்றும் பார்த்தோம்.

    எங்கும் நிறைந்திருக்கும் கிருமிகள் நம் உடம்புக்குள்ளும் இருக்குமல்லவா? ஆம். இருக்கின்றன. அதுவும் கோடிக்கணக்கில்! தொன்னூறு ட்ரில்லியன் கிருமிகள் ஒரு மனித உடலுக்குள் இருப்பதாக ஒரு குத்துமதிப்பான கணக்கு சொல்கிறது! ஒரு உயிரணு இருந்தால் அதற்குப் பகரமாக பத்து கிருமிகள் இருக்குமாம்!

    லட்சம், கோடி என்றால் நமக்குத் தெரியும். மில்லியன், பில்லியன், டிரில்லியன் எல்லாம் மேற்கத்திய உலகின் எண்ணிக்கை அளவுகள். ஒரு மில்லியன் எனில் பத்து லட்சம். ஒரு பில்லியன் எனில் நூறு கோடி! ஒரு டிரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி! அப்போ, 90 ட்ரில்லியன் என்றால்! தலை சுற்றுகிறது! எண்ணிலடங்காத கோடிக்கணக்கான கிருமிகள் நம் ஒவ்வொருவர் உடலுக்குள்ளும் இருக்கின்றன! நமது உடலே கிருமிகளால் ஆக்கப்பட்டதுதான் என்றுகூடச் சொல்லிவிடலாம். கிருமிகளின்றி அமையாது உலகு என்றார் ஹீலர் உமர். நான் சொல்கிறேன், கிருமிகளின்றி அமையாது உடல்!

கிருமித் தொழில்

    இவ்வளவு கிருமிகளும் நம் உடம்புக்குள் எதற்காகக் குடியிருக்கின்றன? கிருமிகளெல்லாம் தீமைதான் செய்யுமென்றால், இந்நேரம் மனித குலமே அழிந்துபோயிருக்க வேண்டுமே! ஆனால் அப்படி ஒன்று நடக்கவில்லையே! அப்படியானால் கிருமிகள் நம் உடலில் என்னதான் செய்கின்றன?

    இந்தப் பிரபஞ்ம் செய்யும் அதே வேலையைத்தான் நம் உடலுக்குள்ளும் செய்து கொண்டுள்ளன! அதுதான் ஏற்கெனவே சொன்னேனே, ஒன்றை இன்னொன்றாக மாற்றுகின்ற வேலை. இன்னொரு வகையில் சொன்னால், கெட்டதையெல்லாம் நல்லதாக மாற்றும் வேலை! ஆமாம். அதைத்தான் அனுதினமும், கணந்தோறும் அவை செய்துகொண்டே இருக்கின்றன. நம்மால் அவற்றுக்கு நன்றி என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லமுடியாது. ஏன்? ஒவ்வொரு கிருமிக்கும் ‘நன்றி’ என்று சொல்லவேண்டுமானால், நாம் பல கோடி ஆண்டுகள் வாழ்பவராக இருக்க வேண்டும். அப்போதுகூட அது சாத்தியமா என்பது சந்தேகமே!

அப்படி என்ன நன்மைகளை அவை நமக்குச் செய்கின்றன?

    ஒரு முக்கிய உதாரணத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு கிருமிக் கோடு மட்டும்தான் இங்கே போடமுடியும். கிருமி ரோட்டை நீங்கள்தான் போட்டுக்கொள்ள வேண்டும்!

    கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளதல்லவா? அதில் கார்பனும் ஆக்ஸிஜனும் உள்ளன. ஆனால், நாம் உயிர்வாழத் தேவை ஆக்ஸிஜன் மட்டும்தான். கார்பன்-டை-ஆக்ஸைடிலிருந்து அந்த ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்துக் கொடுப்பது கிருமிகள்தான்! அப்படியானால், நாம் உயிர் வாழ்வதற்குக் காரணமே கிருமிகள்தான்!

    மேற்கொண்டு பார்ப்பதற்கு முன், முக்கியமான இரண்டு கிருமி வகைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.

கிருமிகளின் வகைகள்

    உலகில் 85 லட்சம் வகைக் கிருமிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமானவையாக இருப்பவை பாக்டீரியாவும் வைரஸும்தான். பல நோய்களுக்கும் காரணம் வைரஸ்தான் என்று திரும்பத் திரும்பச் சொல்லிச்சொல்லி நாம் மூளைச்சலைவை செய்யப்பட்டுள்ளோம். எனவே, அவை பற்றிய உண்மையை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

    பாக்டீரியா, வைரஸ் என்று உலகில் உள்ள எந்தக் கிருமியையும் நம் கண்களால் பார்க்கமுடியாது. ஆனால், வைரஸைவிட பாக்டீரியா அளவில் பெரியது. அதனால், அதைமட்டும் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் வழியாகப் பார்க்கமுடியும். ஆனால், வைரஸை எந்த மைக்ராஸ்கோப்பாலும் பார்க்கமுடியாது. அவ்வளவு சின்னது அது. இதுபற்றி ஏற்கெனவே கொஞ்சம் பார்த்தோம்.

    பிசுபிசுப்பான களிமண்ணில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதில் கொஞ்சம் பாக்டீரியாவை விட்டு வளர்க்கமுடியும். இது ‘பாக்டீரியல் கல்ச்சர்’ என்று அறியப்படுகிறது. ‘மைக்ரோபயாலஜி லாப்’களில் மாணவ மாணவிகள் இக்காரியம் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். ஒருமுறை நான்கூட தெரியாமல் ஒரு பாக்டீரியல் கல்ச்சர் தட்டில் கை வைத்துவிட்டேன். ‘சார், சார், கையை டெட்டால் போட்டுக் கழுவிக் கொள்ளுங்கள்’ என்று அறிவுரை சொன்னார்கள். நான் எதுவும் செய்யவில்லை என்பது வேறு விஷயம். இப்போது மீண்டும் பாக்டீரியாவுக்கு வரலாம்.

    அந்தக் களிமண்ணையும் நீரையும் தனித்தனியாக வடிகட்டிப் பார்த்தால், அந்தக் களிமண்ணில் பாக்டீரியாக்கள் தங்கியிருப்பதைப் பார்க்கமுடியும். ஆனால், வடிகட்டப்பட்ட நீரில் அது இருக்காது. ஆனால், இதே மாதிரியான பரிசோதனையை வைரஸை வைத்துச் செய்தால், களிமண்ணில் வைரஸ் தங்காது. நீரின் வழியாகக் கீழே இறங்கிவிடும்.

    அப்படிக் கீழே இறங்கிய வைரஸ் உள்ள நீரைக் காயவைத்தால், அதில் வைரஸ் உறைந்திருக்கும். எகிப்திய ‘மம்மி’ மாதிரி வைரஸ் ‘மம்மி’ கிடைக்கும். அந்த வைரஸ் படிமத்தை எப்போது நீரில் கலந்தாலும் மம்மிக்கு மீண்டும் உயிர் வந்துவிடும்! ‘மம்மி ரிடர்ன்ஸ்’ என்பதுபோல!

கிருமி போஜனம்

    இப்படிச் சொன்னவுடன், ‘அந்நியன்’ படம் நினைவுக்கு வருகிறதா?! ஆனால், உணவு என்ற அர்த்தத்தில் மட்டுமே நான் இங்கே பேசுகிறேன். ரொம்பக் கஷ்டப்பட்டு உயிரைத் தக்கவைத்துக் கொள்ளும் கிருமிகளின் உணவுதான் என்ன? நமக்கு இட்லி, தோசை, பிரியாணி, இனிப்பு, ஐஸ்க்ரீம், பர்கர், பிட்ஸா என விருப்ப உணவு வகைகள் அதிகம். நாளுக்கு நாள் அவற்றின் வகையும் அளவும் கூடிக்கொண்டே போகும் வாய்ப்பு உண்டு! ஆனால், நம்மை வாழவைக்கும் கிருமிகளின் உணவு ஒரே வகைதான். அதன் பெயர் கழிவு!

    ஆமாம். நாம் வேண்டாமென்று தூக்கிப்போடும் மிச்சம் மீதியைக் கழிவுகள் என்கிறோம். அதேபோல, உயிர்ச்சத்துகளையெல்லாம் உறிஞ்சிக்கொண்டு, நம் உடல் வேண்டாம் என்று வெளித்தள்ளும் அனைத்தும் கழிவுகளே. ஹார்பிக் விளம்பரத்தில் டாய்லட்டில் ஹார்பிக் ஊற்றியவுடன் ஆ, ஊ என்று அலறிக்கொண்டு கிருமிகள் ஓடி மறையும் காட்சி நினைவுக்கு வருகிறதா? விளம்பரத்தில் கிருமிகள் கண்ணுக்குத் தெரிவதுபோலக் காட்டியது பொய். ஆனால், கழிவுகளை உண்டு அவை உயிர் வாழும் என்ற குறிப்பு சரி.

    இக்கழிவுகள், சாதாரணக் கழிவுகள், வேதியியல் கழிவுகள், அழுகிய கழிவுகள் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மூன்றாம் வகைக் கழிவுகளைப் பற்றி நாம் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். ஏனெனில், அவை நம் உடலில் இருப்பதால்தான் நமக்குப் பலவிதமான நோய்கள் வருகின்றன. அக்கழிவுகளை உணவாக உண்டு கிருமிகள் நம்மை அந்நோய்களில் இருந்து காப்பாற்றுகின்றன!

    ஆனால் நாம் என்ன செய்கிறோம்? கிருமிகள் என்றாலே அவை தீமை மட்டுமே செய்யும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அப்படி நம்புவதுதான் அறிவியல் என்றும் நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான், குழந்தைகளுக்குக் கூட ‘ஆண்ட்டிபயாடிக்ஸ்’ (Antibiotics) எனப்படும் நுண்ணுயிர்க் கொல்லிகளைக் கொடுத்து விழுங்க வைக்கிறோம்.

இந்த ஆண்ட்டிபயாடிக்ஸ் என்ன செய்யும்? 

    ‘ஆண்ட்டி’ என்றால் ‘எதிரான’ என்றும், ‘பயோ’ என்றால் ‘உயிர்தொடர்பான’ என்றும் அர்த்தம். ‘ஆண்ட்டிபயாடிக்ஸ்’ என்றால் உயிருக்கு எதிரான ஒரு மாத்திரை என்று பொருள். அதாவது, உயிரைக் கொல்லக்கூடியது. யாருடைய உயிரை? கிருமியின் உயிரை?

    சரி, உள்ளேபோகும் நுண்ணியிர்க்கொல்லி மாத்திரைகளுக்கு நல்ல கிருமி எது, கெட்ட கிருமி எது என்று பிரித்தறியத் தெரியுமா? நல்லது கெட்டதை பிரித்தறியும் அறிவு மனிதர்களுக்கே குறைந்துகொண்டு வரும்போது, மாத்திரைக்கு அறிவிருக்குமா என்ன?! தீவிரவாதியைப்போல முகமூடி அணிந்துகொண்டு ஒரு குழந்தை வந்தாலும். அதைத் தீவிரவாதியாக நினைத்து சுட்டுக்கொல்லும் ஒரு முட்டாளைப் போலத்தான் அது செயல்படும். ஆமாம். விழுங்கப்பட்ட ஆண்ட்டிபயாடிக்குகள் உடலுக்குள் சென்று அதன் கண்ணில் படும் கிருமிகளையெல்லாம் கொன்றுவிடும்!

    தாஜ்மஹாலை அல்லது துருக்கியில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஹேகியா சோஃபியா தேவாலயத்தைக் கட்டிக்கொண்டிருந்த ஆயிரக் கணக்கானவர்களில் ஒரு சிலர் கல்லைத் திருடி விற்றார்கள் என்பதற்காக, எல்லோரையும் வாளால் வெட்டிக்கொன்றுவிட்டால் என்னாகும்? நமக்குத் தாஜ்மஹாலும் கிடைத்திருக்காது, ஹேகியா சோஃபியாவும் கிடைத்திருக்காது. அப்படி ஒரு முட்டாள்தனத்தைத்தான் ‘ஆண்ட்டிபயாடிக்ஸ்’ உட்கொள்ளும்போது நாம் செய்கிறோம்.

ஹேகியா சோஃபியா

    நம் உடம்பிலிருக்கும் கோடிக்கணக்கான கிருமிகளில் ஒரு சில மட்டுமே நமக்குத் தீமை செய்ய வல்லவை. அதுவும், நம் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆனால், இந்த மாத்திரைகள் என்ன செய்கின்றன? போகும் வழியில் தென்படும் எல்லாக் கிருமிகளையும் சகட்டுமேனிக்குச் சாகடித்துவிடுகின்றன.

    லட்சக்கணக்கான நல்ல கிருமிகள் செத்துப்போவதால், அவை செய்துகொண்டிருந்த வேலைகளெல்லாம் அப்படியே நிற்கும்! அதனால் ஏற்படும் பின்விளைவுகளைத்தான் நாம் ‘‘மருந்துகளின் பின்விளைவுகள் என்று அழைக்கிறோம்” என்கிறார் ஹீலர் உமர்! அதோடு, சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சிறப்பு மருத்துவ மாநாட்டில், குழந்தைகளுக்கு ‘ஆண்ட்டிபயாடிக்ஸ்’ கொடுக்கக்கூடாது என்று ஆங்கில மருத்துவர்களே முடிவெடுத்தனர் என்ற முக்கியத் தகவலையும் அவர் தருகிறார்.

கிருமிகள் செய்யும் தீமையைத் தடுப்பது எப்படி?

    மிகக்குறைந்த அளவிலான கிருமிகள், மனிதர்களுக்குத் தீமை செய்கின்றன என்பது உண்மைதான். அப்படி கிருமியால் ஒரு பாதிப்பு நமக்கு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? மூன்று வழிகள் உள்ளன.
    1. தீமை செய்யும் கிருமிகள் நம் உடலுக்குள் இருக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டால், அவற்றுக்கு விஷம் வைத்துக் கொல்லலாம். அதாவது, ஆங்கில மருந்துகளை உட்கொள்ளலாம்!
    2. உலகில் உள்ள தீமை செய்யும் கிருமிகள் அனைத்தையும் அழித்துவிடலாம். அப்போது யாருக்கும் கிருமிகளால் தீமையே ஏற்படாதல்லவா? ஆனால் பாவம், நமக்கு இது சாத்தியமே இல்லை!
    3. தீமை செய்யும் கிருமிகள் நுழையமுடியாத அளவுக்கு நம் எதிர்ப்பு சக்தியை பலமாக வைத்துக்கொள்ளலாம்.
    கிருமிகளைப் பற்றி நமக்குத் தெரியவேண்டியதில்லை. ஆனால் எதிர்ப்பு சக்தி பற்றித் தெரிந்துகொண்டு அதை பலப்படுத்தினால் போதும். ஹீலர் உமர் தன் நூலில் ஒரு அழகான கதையைச் சொல்கிறார்.

    ஒரு வேதியியல் பேராசிரியர், அமிலங்களைப் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு குடுவையில் இருந்த அமிலத்தைக் காட்டி, இது அரிக்கும் தன்மையுடையதா இல்லையா என்று கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து, ‘இதை நான் இப்போது இந்த அமிலம் உள்ள குடுவையில் போடப்போகிறேன். இந்தக் காசை இந்த அமிலம் அரித்துக் கரைத்துவிடுமா, கரைக்காதா?’ என்று கேட்டார். ஒரு மாணவர் மட்டும் கையை உயர்த்தினார். சொல் என்று பேராசிரியர் அனுமதி கொடுத்ததும், ‘அந்தக் காசு அந்த அமிலத்தில் கரையாது’ என்று மாணவர் சொன்னார்.

    சந்தோஷப்பட்ட பேராசிரியர், ‘எப்படிக் கண்டுபிடித்தாய்? இந்த அமிலம் பற்றி உனக்கு மேற்கொண்டு என்னென்ன தெரியும் சொல்லு’ என்றார்.

    ‘சார், இந்த அமிலம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், உங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அந்தக் காசு உண்மையிலேயே அந்த அமிலத்தில் கரையுமானால், அதை உள்ளே போட நீங்கள் நிச்சயம் முன்வந்திருக்கமாட்டீர்கள்’ என்றான்!

    ஆஹா, ஒன்று அமிலத்தைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும், அல்லது ஆசிரியரைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்! ஒன்று கிருமிகளைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும், அல்லது நம் உடலின் எதிர்ப்பு சக்தியைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும், அவ்வளவுதான்! ஆமாம். நம் உடலின் எதிர்ப்பு சக்தி சரியாக, பலமாக இருக்குமானால், தீமை செய்யும் கிருமிகள் நம் உடலுக்குள் புக முடியாது. எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும், பலவீனமானவர்களையும்தான் வைரஸ்களும் பாக்டீரியாக்களும் பாதிக்கும்.

    ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும், செயல்பாடுகளும் நமக்கு இருக்குமானால் அதுவே போதும். கிருமிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இதுதான் எளிமையான, நமக்குச் சாத்தியமான வழியுமாகும். கோடிக்கணக்கான கிருமிகளில் எவையெவை தீமை செய்பவை என்று கண்டுபிடித்து, அவை ஒவ்வொன்றுக்கும் விஷம் கொடுத்து கொன்றுகொண்டிருக்கத் தேவையில்லை. அப்படிச் செய்வது சாத்தியமும் இல்லை.


    மருந்துக் கம்பெனிகளுக்கு நம் மீது எந்த அக்கறையும் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி நினைப்பதுகூட அபத்தமானதே. ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்து உருவாக்குவதற்கு சுமாராக 1600 கோடி ரூபாய் தேவைப்படுகிறதாம்! அவ்வளவு செலவு செய்து ஒரு மருந்தைத் தயாரிக்கும் ஒரு கம்பெனி அதை லாபத்துடன் விற்பனை செய்வதைப் பற்றி யோசிக்குமா அல்லது நம் வீட்டு இட்லி தோசையின் மூலமாகவே நம் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த முடியும் என்று யோசனை சொல்லுமா! நாம்தான் யோசிக்க வேண்டும்.

    இரண்டு காரியங்கள் தம் முன்னே இருந்தால், அதில் எது இலகுவானதோ, எது எளிமையானதோ அதையே நபிகள் நாயகம் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களாம். தீமை செய்யும் கிருமிகள், எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவது என்ற இரண்டு காரியங்களில் மனிதர்களால் செய்ய முடிகிற இலகுவான, எளிமையான காரியம் பின்னதுதான். இந்த விஷயத்தில் நாம் நபிகள் நாயகத்தின் ஞானத்தைப் பின்பற்றலாமே!

    கிருமிகள் நம் உடலுக்குள் நிகழ்த்தும் அற்புதத்தை அறிந்துகொண்டால், அவற்றின் மீது நமக்கு ஒரு மரியாதையே வந்துவிடும். அதற்கு முன், கிருமிகளைப் பற்றிய விஞ்ஞானப்பூர்வமான வரலாற்றுப் பொய்களைக் கொஞ்சம் பார்க்கவேண்டி உள்ளது. பார்த்துவிடலாமா?


லூயி பாஸ்டரும் கிருமிகளும்

    மனிதர்களுக்கு வரலாறு இருப்பதைப்போல கிருமிகளுக்கும் வரலாறு உண்டு! அதைக் கொடுத்தவர்களும் மனிதர்களே! மனிதர்களைப் பற்றிய வரலாற்றில் உண்மைகள் மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் சொல்லப்பட்டிருப்பதைப்போல, கிருமிகளின் வரலாற்றிலும் இந்த அரசியல் உண்டு! அதற்கும் காரணம் மனிதர்களே! மனிதர்கள் இருந்தாலே அரசியல் வரத்தானே செய்யும்!

கிருமிகளின் வரலாற்றில் கதாநாயகன் ஒரு ஃப்ரெஞ்சு வேதியியல் நிபுணர். அவர் பெயர் லூயி பாஸ்டர். இன்றைக்கு உலகெங்கிலும் உள்ள மைக்ரோபயாலஜி எனப்படும் நுண்ணியிரியல் பாடத்தின் கதாநாயகன் அவர்தான். ஏன்?


    1860-64-ம் ஆண்டுகளில் லூயி பாஸ்டர் சிலபல பரிசோதனைகளைச் செய்தார். அதன் விளைவாக, கிருமிகள் காற்றின் மூலமாகப் பரவுகின்றன, அவற்றால் ஆரோக்கியம் கெட்டுப்போகிறது, அவை நோய்களை உண்டாக்குகின்றன என்ற கற்பனையை முதன்முதலாக உலகெங்கிலும் பரப்பிய பிதாமகர் அவர்தான்!

    அவர் காலத்தில் வாழ்ந்த ஃப்ரெஞ்சு விஞ்ஞானியான அந்துவான் பீச்சாம்ப் என்பவரின் கருத்துகளைத் திருடி தனதென்று வெளியிட்டார் என்றும் லூயி பாஸ்டர் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், எல்லாவற்றையும் மீறி தனது பெயரை வரலாற்றில் தக்கவைத்துக் கொண்டார் லூயி பாஸ்டர். பீச்சாம்ப்பை ஓரங்கட்டிவிட்டு முதலிடத்திலேயே லூயி பாஸ்டர் இருக்க முடிந்தததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன. ஒன்று, அந்தக் கால ஆங்கில மருத்துவம் செத்துக்கொண்டிருந்தது. ஏனெனில், இன்று அது கொழுத்துப் பிழைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணங்களாக உள்ள அறுவை சிகிச்சை, ஆண்ட்டிபயாடிக்ஸ் போன்ற சமாசாரங்களெல்லாம் அப்போது உருவாகி இருக்கவில்லை. அல்லது பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை. எனவே, லூயி பாஸ்டரை அலோபதி பயன்படுத்திக் கொண்டது என்று சொல்லலாம். அலோபதியை லூயி பாஸ்டர் பயன்படுத்திக்கொண்டார் என்றும் சொல்லலாம்.

    இரண்டாவது காரணம், அவர் அன்றைய ஃப்ரான்ஸ் நாட்டு மன்னர் மூன்றாம் லூயி நெப்போலியனின் நண்பராக இருந்தார்! ஆஹா, இது ஒன்று போதாதா? மோசமான, அநீதியான ஆட்சியாளர்களின் ஆதரவில் இருந்தவர்களால் மனிதகுலம் பட்ட பாடு வரலாறு நெடுகிலும் கொட்டிக்கிடக்கிறதே!

    நுண்ணுயிரியலின் தந்தை’ என்றும் லூயி பாஸ்டர் கருதப்படுகிறார்! உணவுப் பொருள்கள் புளித்துப்போதல், நொதித்தல் போன்றவற்றுக்கு நுண்ணுயிரிகள்தான் காரணம் என்ற கோட்பாடும் இவரது பரிசோதனைகள் மூலம் உறுதியானது. (ஆனால் Fermentation என்ற ஆங்கிலச் சொல்லால் குறிக்கப்படும் அது, மனிதர்களுக்கு நன்மை செய்வது என்பது அவர்களுக்குப் புரியவில்லை).

    போகட்டும், 1860-களில் அவர் அப்படி என்னதான் பரிசோதனை செய்தார்? ஒன்றுமில்லை, திறந்திருந்த ஒரு குடுவையில் இறைச்சித்துண்டுகளை வைத்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு அது அழுகிப்போனது. அந்த இறைச்சி கெட்டுப்போவதற்குக் காரணம், காற்றின் வழியாக வந்த கிருமிகள்தான் என்று அவர் ‘கண்டுபிடித்துக்’ கூறினார்! அதை உலகுக்கு ஆணித்தரமாக அடித்துச் சொன்னார். அங்கேதான் பிரச்னை ஆரம்பமானது. உடனே இன்னின்ன கிருமிகளால் இன்னின்ன நோய்கள் உண்டாகின்றன என்ற பட்டியல், அட்டவணைகள் உருவாக, அவரது அறிவிப்பு உதவியது. பென்சிலின் போன்ற கிருமிக்கொல்லி மருந்துகள் (ஆண்ட்டிபயாடிக்ஸ்) உருவாக்கப்பட்டன. அவை பரவலான புழக்கத்துக்கும் வந்தன.

    உதாரணமாக, மலேரியா நோய்க்கு ப்ரோட்டோஸோவா என்ற வகைக் கிருமிகள் காரணம் என்றும், கொசு மற்றும் கொறித்துத் தின்னும் எலி போன்ற விலங்குகள் மூலமாக அது பரவுகிறது என்றும் கூறப்பட்டது.


    அலோபதியில் அடிப்படையே தவறாக உள்ளது என்று புரிந்துகொண்ட சாமுவேல் ஹானிமன், ஹோமியோபதியை உருவாக்கி சின்ங்கோனா என்ற மரத்தின் பட்டை மூலமாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடித்து 1795-லேயே வெற்றிக்கொடி நாட்டினார். ஆனால், லூயி பாஸ்டர் போன்றவர்களால் கிருமிக்கொள்கை உருவாக்கப்பட்டது 1880-களில்!

    கிருமிகளால்தான் நோய்கள் ஏற்படுகின்றன என்ற கருத்தை அல்லது கொள்கையை லூயி பாஸ்டர் 1881-ம் ஆண்டு வெளியிட்டார். அதை எதிர்த்து ஃப்ரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர். உலகப் புகழ்பெற்ற மருத்துவ இதழான ‘லான்செட்’ (Lancet), லூயி பாஸ்டரின் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்தது. அவரது கருத்துகள் முன்னுக்குப்பின் முரணாகவும், பொருத்தமற்றதாகவும் இருப்பதாக அது வெளிப்படையாகவே சொன்னது.

    இவ்வளவு ட்ராமாவும் எதற்கு? ஏற்கெனவே மருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நோய்க்கு இதுதான் காரணம் என்று 70 ஆண்டுகள் கழித்து ஒருவர் சொன்னதற்கு என்ன காரணம்? எல்லாம் புகழ் மீதான போதையும், அரசியலும்தான் வேறென்ன?


    இருக்கட்டும், ஆனால் லூயி பாஸ்டர் சொன்னது உண்மையா? அதை நாம் அந்துவான் பீச்சாம்பிடம்தான் கேட்க வேண்டும். பீச்சாம்ப், லூயி பாஸ்டர் காலத்தில் வாழ்ந்த ஒரு ஃப்ரெஞ்சு விஞ்ஞானி, பேராசிரியர் மற்றும் மருத்துவர். ஃப்ரான்ஸில் இருந்த லில் நார்டு (Lille Nord) மருத்துவப் பல்கலைக் கழக ‘டீன்’ ஆக இருந்தவர். லூயி பாஸ்டர் சொல்வதெல்லாம் கற்பனை என்பதை நிரூபித்தவர். சபாஷ், சரியான போட்டி என்ற வசனத்துக்குப் பொருத்தமானவர். அவர் என்ன சொன்னார்?

    காற்றில் நுண்ணுயிர்கள் வளர்கின்றன. அவற்றை வளர்க்க காற்று பயன்படுகிறது. ஆனால், அவ்வுயிர்களை வேறு உயிர்களுக்குக் காற்று கடத்துவதில்லை என்று பீச்சாம்ப் கூறினார். கிருமிகளுக்கு அவர் வைத்த பெயர் மைக்ரோஸைமாஸ் (Microzymas). இதில் ‘ஸைமாஸ்’ என்ற பகுதி ‘என்ஸைம்’ என்ற சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணுக்குப் புலப்படாத ‘குட்டி என்ஸைம்கள்’ என்று இதை அர்த்தப்படுத்தலாம். ‘என்ஸைம்’ எனப்படும் ப்ரோட்டீன்கள் நமக்கு நல்லது செய்பவை என்பது ஏற்கெனவே நிரூபணமாகிவிட்ட உண்மையாகும். இதை மனத்தில் கொண்டு இந்தப் பெயரைப் பார்த்தால், ‘கண்ணுக்குத் தெரியாத நன்மை செய்யும் குட்டி உயிர்கள்’ என்று கிருமிகளின் தன்மையை பீச்சாம்ப் விளக்கியிருப்பது புரியும்.

    இதுமட்டுமல்ல. லூயி பாஸ்டர் செய்த பரிசோதனையை தவறு என்று அவர் நிரூபித்தார். எப்படி? அதே பரிசோதனையைக் கொஞ்சம் மாற்றி அவர் செய்தார். அது என்ன? திறந்த குடுவைக்குப் பதிலாக காற்றுப் புகாத ஒரு குடுவைக்குள் மாமிசத்தை வைத்து பரிசோதித்தார். சில மணி நேரம் கழித்து அதுவும் கெட்டுப்போனது! அப்படியானால் என்ன அர்த்தம்? மாமிசம் கெட்டுப்போனதற்குக் காரணம் காற்றில் இருந்த கிருமிகள் என்று லூயி பாஸ்டர் சொன்னது தவறு என்பதுதானே! கிருமிகள்தான் மாமிசம் அழுகிப்போவதற்குக் காரணம் என்றால், காற்று புகாத இடத்தில் எப்படி கிருமிகள் வந்தன என்று அவர் கேட்டார். நியாயமான கேள்வி!

    தேங்குகின்ற கழிவுகளில் இருந்துதான் கிருமிகள் உண்டாகின்றன. அவற்றால் உருவாவதாகச் சொல்லப்படும் நோய்களின் ஆரம்ப கட்டத்தில் கிருமிகளே இருப்பதில்லை என்ற முக்கியமான உண்மையையும் அவர்தான் சொன்னார்.

    ஆனால், பீச்சாம்ப்பின் கண்டுபிடிப்புகள் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டன. உண்மையான ஹீரோ ஓரங்கட்டப்பட்டார். வில்லன் ஹீரோவாக்கப்பட்ட மாதிரி, லூயி பாஸ்டர் உருவானார். Bechamp or Pasteur: A Lost Chapter in the History of Biology என்று இருவரைப் பற்றியும் ஒரு புத்தகமே எழுதப்பட்டது. ஆனால் அதுவும் உலகுக்குத் தெரியாமல் அமுக்கப்பட்டது. 
(இந்த ‘Bechamp or Pasteur: A Lost Chapter in the History of Biology’ புத்தகத்தை Telegram ஆப் மூலம் இ-புத்தக வடிவில் பதிவிறக்கம் செய்து படிக்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்கு செல்லுங்கள்.) 


    பீச்சாம்ப் எழுதிய ‘The Blood and Its Third Element’ என்ற முக்கியமான நூலும் வரலாற்றில் முக்கியத்துவம் பெறவில்லை. ‘நோய்களின் தொடக்கமல்ல கிருமிகள்; நோய்களின் முடிவே அல்லது விளைவே கிருமிகள்’ என்ற அவரது மிகமுக்கியமான கண்டுபிடிப்பு, வரலாற்றில் கிடப்பில் போடப்பட்டது.


(இந்த ‘The Blood and Its Third Element’ புத்தகத்தை Telegram ஆப் மூலம் இ-புத்தக வடிவில் பதிவிறக்கம் செய்து படிக்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்கு செல்லுங்கள்.) 


    ‘காற்றில் உள்ள கிருமிகளால் பாதிக்கப்படாவிட்டால், உயிருள்ள பொருள் எதுவுமே தானாக கெட்டுப்போகாது, அழுகாது என்ற பாஸ்டரின் தவறான கருத்து விஞ்ஞானத்தை மிகவும் கீழான நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது’ என்று பீச்சாம்ப் மிகச்சரியாகச் சொன்னார்.

    பீச்சாம்ப் சொன்னது உண்மைதான் என்பதை பெட்டின்காஃபர் (Pettenkofer) என்ற இன்னொரு டாக்டர் ஒரு அதிரடி பரிசோதனை மூலம் நிரூபித்தார். அவர் ஒரு டாக்டர் மட்டுமல்ல, பவேரியா நாட்டைச் சேர்ந்த நுண்ணுயிரியல் விஞ்ஞானியும்கூட. அப்படி என்ன அதிரடி பரிசோதனையை அவர் செய்தார்?

    ஒன்றுமில்லை. தன் உயிரை பணயம் வைத்து ஒரு ஆய்வை அவர் மேற்கொண்டார்! ஆமாம். அவர் ஏன் அப்படிச் செய்தார்? அவருக்குத் தெரியும், அப்படிச் செய்வதன் மூலம் அவர் உயிர் போகாது என்று! பொதுமக்கள் முன்னிலையில் அவர் பரிசோதனை நிகழ்த்திய நாள் 1892, அக்டோபர் 07. ராபர்ட் கோச் என்ற நுண்ணியிரியல் நிபுணரிடமிருந்து காலராவை உண்டாக்கும் கிருமிகள் என்று சொல்லப்பட்ட கிருமிகள் அடங்கிய ஒரு டெஸ்ட் ட்யுப் அல்லது பாட்டிலைப் பெற்றுக்கொண்டார்! பொதுமக்கள் மற்றும் உலக விஞ்ஞானிகள் முன்னிலையில் அதை நீரில் கலந்து ஏதோ ஆப்பிள் ஜூஸ் குடிப்பது மாதிரி காலரா கிருமி ஜூஸ் குடித்தார்!

    அந்த நேரம், காலரா தாக்கி மியூனிச் நகரிலும் இன்னும் பல ஊர்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பெட்டின்காஃபர் அப்படியொரு பரிசோதனையைச் செய்தார். மனுஷனுக்கு ரொம்பத்தான் துணிச்சல். அவர் நிச்சயம் செத்துவிடுவார் என்று எல்லோரும் நினைத்தனர். ஏனெனில், காலரா கிருமிகள் உடலுக்குள் புகுந்தவுடன் தாமதமின்றி தங்கள் வேலையைத் துவக்கிவிடும் என்று அந்தக்கால விஞ்ஞானிகள் நம்பினர்! நவீன மருத்துவமும் அப்படித்தான் கூறுகிறது!

    ஆனால், அவர்களுக்கெல்லாம் ஏமாற்றம்தான் காத்திருந்தது. பெட்டின்காஃபருக்கு பல நாட்கள் ஆகியும் ஒன்றும் ஆகவில்லை! மனிதர் இன்னும் கொஞ்சம் தெம்பேறி இருந்தார்! கொஞ்ச நாள் கழித்து எந்தப் பாதிப்பும் இல்லாமல் வேறு ‘லொகேஷனில்’ அதே பரிசோதனையை நிகழ்த்தக் கிளம்பிவிட்டார் அவர்! கிருமிகள் உயிரைக் குடிக்கும் என்பது உண்மையானால், பெட்டின்காஃபரை ஏன் விட்டுவைத்தது? அவர் மீது மட்டும் ஏன் கிருமிகளுக்கு கருணை பிறந்தது?!


    உலகில் இருந்த ஊர் பேர் தெரியாத பல விஞ்ஞானிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நம்ம ஊர் விஞ்ஞானி தமிழ்வாணன், இதுபற்றி ரொம்ப காலத்துக்கு முன்பே மிகச்சரியாக கிருமிகளின் தன்மை பற்றி ‘இயற்கை வைத்தியம்’ என்ற நூலில் எழுதியுள்ளார். நம்மில் எத்தனை பேருக்கு அது தெரியும்? அந்த நூல் இன்னும் கிடைக்கிறது. அவர் அதில் ஒரு அழகிய உதாரணம் தருகிறார். அது என்ன?


(இந்த ‘இயற்கை வைத்தியம்’ புத்தகத்தை Telegram ஆப் மூலம் இ-புத்தக வடிவில் பதிவிறக்கம் செய்து படிக்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்கு செல்லுங்கள்.) 


    நாய் கடித்துத் தெருவில் செத்துக்கிடக்கும் பெருச்சாளியின் அழுகிய உடலில் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்குமல்லவா? அந்தப் புழுக்கள்தான் பெருச்சாளியைக் கொன்றன என்று சொன்னால் அது எவ்வளவு அபத்தம்? அதைப்போன்றதுதான் நோய்க்கிருமிகளால் நோயாளி இறந்துவிட்டார் என்று ஒரு மருத்துவர் சொல்வதும் என்று அவர் கூறுகிறார்! சாதாரண மக்களுக்கும் புரியும்படி இந்த நூலை அவர் எழுதியது 1960-களில்! பெருச்சாளி என்பது மனித உடலையும், புழுக்கள் கிருமிகளையும் குறிக்கின்றன என்பதையும் நான் சொல்ல வேண்டுமா என்ன?

    இதுவரை கிருமிகளின் வரலாற்றைக் கொஞ்சம் பார்த்தோம். அவை மனிதனுக்கு நோயை ஏற்படுத்துகின்றன என்று சொன்னவர்களைப் பற்றியும், அப்படியில்லை என்று சொன்னவர்களைப் பற்றியும் பார்த்தோம். கிருமிகளால் மனிதனுக்குத் தீமை ஏற்படுவதில்லை, நன்மைதான் ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்பதற்கு முன், ஒரு முக்கியமான கேள்வியோடு இந்த அத்தியாயத்தை முடித்துக்கொள்ளலாம்.

    ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். காய்ச்சல் வந்த முதல் நாள் ரத்தப் பரிசோதனை செய்தால் ரிசல்டில் ஒன்றும் தெரியாது. சாதாரண காய்ச்சல்தான், ரெண்டு மூணு நாள் மருந்து எடுத்தால் சரியாயிடும் என்று சொல்லி மருந்து மாத்திரைகளை மருத்துவர் கொடுப்பார். முதலில் காய்ச்சல் சரியாகிவிட்ட மாதிரி இருக்கும். இரண்டு மூன்று நாட்களில் திரும்ப வரும். அல்லது மாலை நேரங்களில் மறுபடியும் வந்துவிடும். காய்ச்சலுக்கு மாலை நேரம்தான் பிடிக்குமோ என்னவோ!

    மறுபடியும் டாக்டரிடம் ஓடுவோம். ஐந்து நாள் ஆகியிருக்கும். இப்போது மறுபடியும் ரத்தப் பரிசோதனை. ஆனால் இந்த முறை ரிசல்ட் சாதாரணமாக இருக்காது. அதைப் பார்த்துவிட்டு டாக்டர், ‘உங்களுக்கு டெங்கு வந்திருக்கிறது. உடனே அட்மிட் ஆகிவிடுங்கள். தினமும் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொல்வார். டெங்கு என்பது DENV எனப்படும் வைரஸால் கொசு மூலம் பரவுகிறது / ஊடுருவுகிறது என்று நம்பப்படுகிறது, சொல்லப்படுகிறது.

    நான் சொன்ன முக்கியமான கேள்வியை இப்போதுதான் கேட்க வேண்டும். ஒரு வைரஸ் மூலமாக ஒரு நோய் வந்துவிட்டதாக டாக்டர் சொன்னால், அவரிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும். அது என்ன கேள்வி?

    வைரஸால் ஒரு நோய் வந்துவிட்டது என்றால், எது முதலில் வர வேண்டும்? வைரஸா அல்லது நோயா? இதுதான் கேள்வி. இதன் அறிவுப்பூர்வமான பதில் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இட்லி மாவு மூலம் இட்லி வந்தது என்றால் மாவு முதலில் இருக்க வேண்டுமா அல்லது இட்லியா? ஆரம்பம் எது என்று தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். காரணம், விளைவு என்பதில் காரணிதான் முதலில் இருக்க வேண்டும். அது இல்லாமல் எப்படி அதை ஏற்படுத்தும் விளைவு வரும்? இப்படி யோசிக்க நாம் ‘நோய் நாடி, நோய் முதல் நாடி’ என்று சொன்ன வள்ளுவர்போல பெரிய மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. படித்தவரும் படிக்காதவரும், யாரும் இதைப் புரிந்துகொள்ளலாம். புரிந்துதான் வைத்திருக்கிறோம். ஆனாலும் ஏமாற்றப்படுகிறோம். முக்கியமான நேரத்தில் கோட்டை விட்டுவிடுகிறோம். அங்கேதான் பிரச்னை ஆரம்பமாகிறது.

    குறிப்பிட்ட ஒரு நோயை குறிப்பிட்ட ஒரு வைரஸ் உருவாக்குகிறது என்றால், முதலில் நம் உடலுக்குள் அந்த வைரஸ்தானே வர வேண்டும்? தர்க்கரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் அதுதானே சரி? முதல் நாள் காய்ச்சல் சாதாரண காய்ச்சல் என்று ரிப்போர்ட் சொல்கிறது. ஆனால், ஐந்தாறு நாள் கழித்து அது டைஃபாய்டு என்றோ டெங்கு என்றோ சொல்கிறது. சாதாரண சளி என்ற சொன்ன டாக்டர் கொடுத்த இருமல் மருந்துகளையும் சளி மாத்திரைகளையும் சாப்பிட்ட பல நாட்களுக்குப் பிறகும் இருமலும் சளியும் குறையாமல் மீண்டும் பரிசோதிக்கும்போது அது சாதாரண சளியல்ல, காசநோய் என்று டாக்டர் ஏன் சொல்கிறார்? ஏன் அவருக்கு அது முதல் நாளே தெரியவில்லை? முதல் நாள் சளியில் ஏன் காச நோய்க் கிருமிகள் இல்லை? இப்படியான கேள்விகளை கேன்ஸர் வரை எல்லா நோய்களுக்கும் கேட்கலாம்.

    முதலில் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. சில நாட்களுக்குப் பிறகு, தொந்தரவுகள் நீடிக்கும்போது கிருமிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஏன் நோயை ஏற்படுத்தும் கிருமிகள் முதலில் உடலில் காணப்படுவதில்லை? ஒரு வாரத்துக்கு அவை ஒளிந்துபிடித்து உடலுக்குள் விளையாடிக் கொண்டிருக்குமா?

    கிருமி ஏன் முதலிலேயே வரவில்லை என்ற கேள்விக்கான பதிலில்தான் கிருமிகளின் தன்மை, சேவை பற்றிய எல்லா உண்மைகளும் மறைந்து கிடக்கின்றன. மனிதனைக் காப்பாற்ற அவை என்னென்ன செய்கின்றன என்று அறிந்துகொண்டால் ரொம்ப வியப்பாக இருக்கும். பார்க்கத்தானே போகிறோம்…



கிருமிகள் பிறக்கும் இடமும் காலமும்

    கிருமிகளால் நோய் வருவதாகச் சொல்லப்பட்டாலும் ஒரு நோய் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகுதான் உடலில் கிருமிகள் இருப்பதை பரிசோதனைகள் சொல்கின்றன என்பதுவரை பார்த்தோம். அப்படியானால், கிருமிகள் நோயை உண்டாக்கி இருக்க முடியாதென்ற தர்க்கமும் நமக்குப் புரியத்தான் செய்கிறது. ஒரு காய்ச்சல் வந்த ஐந்தாறு நாள் கழித்து கிருமி வருவதன் காரணம் என்ன? அதுவரை அது எங்கிருந்தது? இப்போது ஏன் வந்தது? இதையெல்லாம் புரிந்துகொள்வது மிக முக்கியமானதாகும். ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது ‘லைஃப் பாய்’ என்று விளம்பரம் சொன்னாலும், ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது கிருமிகள்தான்! அதைத்தான் எப்படி என்று இப்போது சொல்லப்போகிறேன். அதற்காகத்தான் கிருமிகளின் பிறப்பிடத்தைப் பற்றிப் பேசவேண்டி உள்ளது.

    கிருமிகளின் பிறப்பிடம் நம் உடல்தான். அது எந்தப் பகுதியாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால், உடலில் ஏற்படும் கழிவுகள். ஆமாம். கழிவுகள்தான் கிருமிகளின் பிறப்பிடம். நம் உடலில் ஏற்படும் கழிவுகளில் பல வகை உண்டு. அவற்றை உருவாக்குவது நாம்தான்! நமக்கே தெரியாமல்!

    முதலில் கழிவு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? சிறுநீர், மலம், வியர்வை, சளி, பொடுகு, அழுக்கு போன்றவை மட்டும் கழிவுகளல்ல. நம் கண்ணுக்குத் தெரியாமல் உடலுக்கு உள்ளேயே உருவாகும் கழிவுகள் பல வகை. அவை உடலுக்குள் உருவாவதற்கும் நாம்தான் காரணமாக இருக்கிறோம். நம்முடைய தவறான வாழ்முறை, தவறான உணவுகள் போன்றவைதான் காரணங்களாகின்றன.

கழிவுகள் ஏன் தோன்றுகின்றன?

    நம்மால்தான் கழிவுகள் தோன்றுகின்றன. எப்படி? பசி, தாகம், ஓய்வு, தூக்கம் போன்றவற்றை முறையாகப் பேணாமல் இருந்தால் கழிவுகள் உருவாகும். இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேனே.

    நாம் பல நேரங்களில் பசிக்கும்போது சாப்பிடாமல் இருக்கிறோம். சீரியலில் முக்கியமான வில்லன் கதாநாயகி கையால் அறை வாங்குவதைப் பார்க்கும் ஆர்வத்தில் இருந்துவிடலாம். அல்லது டிவி பார்த்துக்கொண்டே என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாமல், எதையோ எடுத்து எப்படியோ வாய்க்குள் போட்டு விழுங்கலாம். அல்லது ஐயய்யோ ஆபீஸுக்கு நேரமாகிவிட்டது என்று பசிக்காதபோது அவசர அவசரமாக சிலபல இட்லிகளை விக்க விக்க விழுங்கிவிட்டுச் செல்லலாம். அல்லது நாக்குக்கு அடிமையாகி ருசிக்காக மட்டும் சாப்பிடலாம். ஆஹா, ஆம்பூர் பிரியாணின்னா பிரியாணிதான் என்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிடலாம். பழக்கத்தின் காரணமாக கண்ட நேரத்திலும் எதையாவது கொரித்துக்கொண்டே இருக்கலாம்.

    நான் வேலை பார்த்த ஊரிலிருந்து பக்கத்து ஊருக்கு பஸ்ஸில் போகும்போது ரயில்வேகேட் போட்டிருந்தால் கொஞ்ச நேரம் பஸ் அங்கே நிற்கும். அப்போது ‘டைம் பாஸ், டைம் பாஸ்’ என்று சொல்லிக்கொண்டே நிலக்கடலையை ‘பாக்கெட்’ போட்டு விற்பார்கள். மக்களும் அதை வாங்கி பஸ் மீண்டும் நகரும் வரை கொரித்துக் கொண்டிருப்பார்கள். பசிக்கு உணவு உண்ட காலம் போய், நேரத்தைக் கடத்தக்கூட சாப்பிடுகின்ற மனநிலைக்கு மனிதர்கள் வந்துவிட்டது எனக்கு ஆச்சரியமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. கலிகாலம் என்பது அதுதானோ!

    தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிக்க மாட்டோம். அல்லது தாகம் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்று தவறானதொரு நீர் ஆரோக்கியக் கோட்பாட்டை வைத்துக்கொண்டு, காலையில் வெறும் வயிற்றில் பாட்டில் பாட்டிலாக தண்ணீரை வயிற்றுக்குள் ஊற்றுபவர்கள் உண்டு. காய்ச்சல் வந்தால் சாப்பிடாமல் ஓய்வெடுத்தால் சீக்கிரம் குணமாகும். ஆனால், நம்ம வீட்டுப் பெரிசுகள் என்ன செய்யும்? ஐயய்யோ, வயிறு ஒட்டிப்போச்சே, வெறும் வயித்துல படுக்கக் கூடாதுப்பா, ஓட்ஸ் கஞ்சியாவது குடிப்பா, ரசம் சோறுதாம்ப்பா, கொஞ்சூண்டு சாப்பிடுப்பா, ரெண்டு தோசை சாப்ட்டு படு கண்ணு - இப்படியான பாச வசனங்களின் மூலம் உடல் நிலை சரியில்லாதபோதும் வயிற்றுக்குள் எதையாவது போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

    இப்படி பசி, தாகம், தூக்கம் போன்ற அத்தியாவசியமானவற்றை அவசியம் கருதி கொடுக்காமல், விருப்பத்துக்கு ஏற்றவகையில் மாற்றிக் கொண்டிருப்பதால் உடலில் கழிவுகள் தோன்றும்.

    கழிவுகள் தோன்றும்போது உடனே ரசாயனம் கலந்த மாத்திரைகளைக் கொடுத்து அவற்றை அடக்க முயல்கிறோம். உதாரணமாக இருமல், சளி, மூக்கொழுகல் போன்றவை நிகழும்போது உடனே மாத்திரைகள் விழுங்கி அவற்றை நிறுத்த முயற்சிக்கிறோம். இவ்வகையான தவறான காரியங்களால் அக்கழிவுகள் உள்ளேயே தங்கி, தேங்கி, தேக்கமுற்ற கழிவுகளாக தன்மை மாற்றம் அடைகின்றன.

    இப்படி உடலுக்குள் அடக்கி வைக்கப்படும் கழிவுகள் உடலை விட்டு வெளியேற முடியாத நிலையில், அவற்றை நீக்க அக்கழிவுகளில் இருந்து கிருமிகள் பிறக்கின்றன. அவை அக்கழிவுகளை உணவாக உண்டு அவற்றை நீக்குகின்றன. பின்னர் உணவு இல்லாமல் அவை இறந்துபோகின்றன. அதாவது, இல்லாமல் போகின்றன.

    உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். ஆனால் இதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டி உள்ளது.


    கழிவுகள்தான் தொந்தரவுகளாக வெளிப்படுகின்றன. காய்ச்சலின்போது நமது எதிர்ப்பாற்றல் உடலை உஷ்ணப்படுத்தி தேங்கிய கழிவுகளை வெளியேற்றும். ஆனால் நாம் அதை ஒரு தொந்தரவாக, நோயாகப் பார்க்கிறோம். மாத்திரை மருந்துகள் உட்கொள்கிறோம். அதனால் அக்கழிவு வேறு தன்மை அடைகிறது. சாதாரண காய்ச்சல் டைஃபாய்டு காய்ச்சலாக மாறுகிறது.

    அந்த நேரத்தில் அங்கே டைஃபாய்டு கிருமிகள் தோன்றி அதை குணப்படுத்துகிறது. ஆனால், நாம் அதை ஊசி அல்லது ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகள் கொடுத்துக் கொன்றுவிடுகிறோம். அதனால் காய்ச்சல் இன்னும் தீவிரமடைகிறது. அல்லது வேறு நோயாகப் பரிணமிக்கிறது.

உருவங்கள் மாறலாம்

    கழிவுகளில் இருந்து கிருமிகள் உருவாகும் என்றால், அவை ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்? ஏன் டைஃபாய்டு கிருமி ஒரு மாதிரியாகவும், டெங்கு கிருமி வேறு மாதிரியாகவும், மஞ்சள்காமாலைக் கிருமி ஒரு மாதிரியாகவும் உள்ளது?

    இதற்கு நம் வீட்டில் தயாரிக்கும் மசாலாப் பொடி, மிளகாய்ப் பொடியை உதாரணம் காட்டுகிறார் ஹீலர் உமர். வீட்டில் தயாரிக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட நீண்ட நாள் பயன்படுத்தப்படாத மிளகாய்ப் பொடியோ மசாலாப் பொடியோ கெட்டுப்போகும்போது அதில் வண்டுகள் அல்லது பூச்சிகள் உருவாகும். ஏன்? கெட்டுப்போன பொடிகளின் கழிவுகளை உண்டு அதை சுத்தப்படுத்த அவை உருவாகின்றன. அவற்றை உன்னிப்பாகப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். மசாலாப்பொடி வண்டு ஒரு மாதிரியாகவும், மிளகாய்ப்பொடி வண்டு வேறு மாதிரியாகவும் இருக்கும். ஒன்று அம்பியாக இருந்தால் இன்னொன்று அந்நியனாக இருக்கலாம்.


    கிருமிகளும் அதைப்போலத்தான். உடலில் உருவாகும் கழிவுகள் அல்லது நோய்களின் தன்மைக்கு ஏற்ப, அவை தன் உருவத்தை மாற்றிக்கொள்ளும். உருவங்களை மாற்றிக்கொள்வதில் எல்லா வைரஸ்களும் அந்நியனைவிடத் திறமையானவை. அதனால்தான் அவற்றை அழிக்க மருந்து கண்டுபிடிப்பதும் மருத்துவ உலகுக்கு சவாலாக உள்ளது!

    சூழலுக்கு ஏற்றவாறு மனிதனும் மிருகங்களும் தன்னை மாற்றிக்கொள்கின்றன. ஐஸ்லாந்து நாட்டில் மேயிலிருந்து ஜூலை வரை மூன்று மாதங்களுக்கு சூரியன் அஸ்தமிப்பதே இல்லை! மூன்று மாதங்களும் இரவே கிடையாது! அதேபோல ஸ்வீடனில் நள்ளிரவில்தான் சூரியன் அஸ்தமிக்குதாம்! மீண்டும் காலை நாலு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுமாம்! ஃபின்லாந்தில் கிட்டத்தட்ட 73 மணி நேரங்களுக்கு வெயிலடித்துக் கொண்டே இருக்கும்! அங்கெல்லாம் மனிதர்கள் வாழவில்லையா?

    எப்போதுமே வெயிலடிக்கும் வேலூரில் உள்ள நாயைக் கொண்டுபோய் மூணாறில் விட்டுவிட்டால் சீக்கிரமே அங்குள்ள குளிரைத் தாங்குவதற்காக அதன் உடம்பில் முடி வளர ஆரம்பித்துவிடும். கிருமிகள் சமாசாரமும் இப்படிப்பட்டதுதான். சூழலுக்கும் கழிவுக்கும் ஏற்றவாறு அவற்றின் உருவமும் மாறிக்கொண்டே இருக்கும்.



கழிவுகள் பலவிதம்

    நாம் உண்ட உணவு செரித்தபின் நமக்குத் தேவையான சத்துகளையெல்லாம் அதிலிருந்து உடல் உருவாக்கிக்கொள்கிறது; உள்வாங்கிக்கொள்கிறது. தேவையில்லாத மீதி சமாசாரங்களையெல்லாம் அது தனியாகப் பிரித்து வைத்துவிடுகிறது. அவைதான் கழிவுகள்.

    இது அன்றாடம் இருபத்தி நாலு மணி நேரமும் நடப்பதுதான். (நாம்தான் இருபத்தி நாலு மணி நேரமும் எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டே இருக்கிறோமே)! நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் சாப்பிடுகிறது, கொட்டாவி விடுகிறது, உச்சா போகிறது, கக்கா போகிறது - எல்லாம் செய்கிறது. அவற்றின் காரணமாகப் பிரித்தெடுக்கப்படும் தேவையற்ற சமாசாரங்களான கழிவுகள் உருவாகிக்கொண்டே இருக்கும்.

    இவை சாதாரண கழிவுகள். முதல் நிலைக் கழிவுகள். இவை தினமும் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கும். இவை பற்றி நாம் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. இவற்றை சிறுநீர், மலம், வியர்வை - இப்படி உடலே வெளியேற்றிவிடும். இது முதல் நிலை.

    ஆனால், வெளியேற வேண்டிய ஒன்று வெளியேறாமல் தங்கிவிட்டால்? உதாரணமாக, ரெண்டு நாளாக ரெண்டுக்கே போகவில்லை என்றால்! மலச்சிக்கல் என்று சொல்வோம். அவை வெளியேறாத கழிவுகள். வெளியேறுவதில் ஏதோ பிரச்னையைச் சந்தித்த கழிவுகள். வெளியேறாமல் உடலிலேயே தேங்கிவிடும் கழிவுகள்.

    இப்படிக் கழிவுகள் உடலில் தேங்கிவிடும்போது அவை சில தொந்தரவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கின்றன. ஆனால், தொந்தரவு என்ற சொல்கூட சரியில்லை. ‘நம் உடலைச் சீர்படுத்துவதற்காகவும், தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்காகவும் ஏற்படும் மாற்றங்கள்தான்’ அவை என்கிறார் ஹீலர் உமர். அந்த மாற்றங்களைத்தான் நாம் தொந்தரவுகள் அல்லது நோய்கள் என்று கருதுகிறோம்!

    நம்முடைய தவறான வாழ்முறையினால் கழிவுகள் நம் உயிரணுக்களிலேயே தேங்கியிருந்தாலும் அவற்றை எப்படியாவது வெளியேற்றவே அவை முயற்சி செய்கின்றன. அப்போதுதான் நாம் தொந்தரவுகளை உணர்கிறோம்.


    கண்ணிலிருந்து கழிவுகள் வெளியேறினால் கண்ணீர் வடியும். மூக்கிலிருந்து வெளியேறும்போது மூக்கிலிருந்து திரவமாக சளி வெளியேறும். நுரையீரலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படும்போது தும்மல், இருமல் எல்லாம் வரும். தோலில் இருந்து கழிவுகள் வெளியேறினால் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். இப்படி எல்லாவிதமான உடல் ரீதியான தொந்தரவுகள் அனைத்துமே கழிவுகளின் வெளியேற்றம்தான்.

ரசாயனக் கழிவுகள்

    இப்படி சாதாரண, முதல் நிலைக் கழிவுகள் வெளியேறி மறைந்துபோகும் தன்மை கொண்டவை. அவை வெளியேற நாம் துணை செய்தோமென்றால், அவை சீக்கிரமாகவும் எளிமையாகவும் வெளியேறும். ஆனால், அவற்றை நோய் என்று நினைத்து அவை வெளியேறுவதைத் தடை செய்யும் விதத்தில் நாம் ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’களில் ஈடுபட்டோமென்றால் - அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம் - சாதாரண கழிவுகள் தேக்கமுற்ற கழிவுகளாக மாறும். தொந்தரவுகள் அதிகமாகும்! அவற்றையும் நாம் மேலும் ‘அடக்க’ முயற்சிக்கும்போது, தேக்கமுற்ற இரண்டாம் நிலைக் கழிவுகள் மூன்றாம் நிலையில் ரசாயனக் கழிவுகளாக மாறிவிடும். ‘‘எல்லாப் பொருள்களையும் சேமிக்க விரும்புவதைப்போலவே கழிவுகளையும் சேமிக்கிறோம்’’ என்று குத்தலாகக் கூறுகிறார் உமர்!.

    ஆனால், மூன்றாம் நிலைக் கழிவுகளான ரசாயனக் கழிவுகளையும் நமது செல்கள் வெளியேற்ற முயற்சி செய்யாமல் இருக்காது. அந்த முயற்சி ‘‘ஆங்கிலப் படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு இணையானது’’ என்கிறார் அவர்! நம் உடலின் அற்புதத் தன்மைகளில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள அது உதவும். அது என்ன அப்படி அற்புதமான செயல்?

    ரசாயனக் கழிவுகளை வெளியேற்றுவதில் நம் செல்களுக்கு ஒரு ‘டெக்னிகல்’ பிரச்னை உள்ளது. அவற்றை செல்லுக்கு உள்ளேயே வைத்திருந்தால், அது செல்லையே பாதித்துவிடும். செல்லுக்கு வெளியே தூக்கிப்போட்டால், அது மற்ற செல்களை பாதிக்கும்! அப்ப என்னதான்யா செய்வது? இங்கேதான் ஒரு அற்புதத்தை நம் செல்கள் நிகழ்த்துகின்றன. அது என்ன?


    The 36th Chamber of Shaolin என்று ஒரு படம். அதில் தற்காப்புக் கலை சொல்லித்தரும் ஒரு கல்லூரியில் ஒரு மாணவன் – கதாநாயகன் - சேருவான். அங்கே 35 அறைகள் அல்லது துறைகள் இருக்கும். ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு விதமான தற்காப்புக் கலை சொல்லித்தரப்படும். ஆனால், கதாநாயகன் புதிதாக தனக்கென ஒரு சிறப்புக் கலையை, மூன்று பிரிவாக மடியும் ஒரு கழியை அவனே வடிவமைத்து, அதில் அவனை யாரும் ஜெயிக்க முடியாதாபடி 36-வது அறையை உருவாக்குவான். அதேபோல, உள்ளேயும் ரசாயனக் கழிவை வைத்துக்கொள்ள முடியாமல், வெளியேயும் அனுப்ப முடியாமல் தவிக்கும் நம் செல்கள் ஒரு புதிய உத்தியைக் கையாள்கின்றன.

லைசோசோம்கள்
    36-வது சேம்பர் ஆஃப் ஷாவோலின் படத்தில் 36-வது அறையை உருவாக்க உதவும் மூன்று மடிப்புகள் கொண்ட கழியைக் கதாநாகயன் உருவாக்குவதுபோல, ரசாயனக் கழிவுகளை அழிக்க நமது ‘செல்’ ஒரு புதிய தற்கொலைப்படையை உருவாக்குகிறது! ஆம். அந்த புதிய உயிரின் பெயர் லைசோசோம். ‘செல்’ சுவரின் அருகில் தூசி மாதிரி அவை ஒட்டிக்கொண்டிருக்கும். ரசாயனக் கழிவுகள் ‘செல்’ திரவத்தில் கலந்துவிடாதபடி ‘செல்’லில் கழிவுகள் இருக்குமிடத்தைச் சுற்றி ஒரு சவ்வு போன்ற ஒரு அமைப்பை அவை ஏற்படுத்துகின்றன. கழிவு ரசாயனம் செல் திரவத்தில் கலந்துவிடாமல் அந்த சவ்வு காப்பாற்றும். ஆனால், இது தாற்காலிக ஏற்பாடுதான்.

    கழிவுகளின் தன்மையையும் அளவையும் பொறுத்து இந்த லைசோசோம்கள் வளர்கின்றன. கழிவு ஒரு கோலியாத்தாக இருந்தால் லைசோசோம் டேவிட்டைப் போல் கவண் எறியாது. கோலியாத்தைவிட பெரிய கோலியாத்தாக வளர்ந்து கொல்லும்! ஆம், ‘செல்’லில் ஆரோக்கியமான சூழ்நிலை நிலவும்போது கழிவுகளைத் தாக்கிக் கொன்று தானும் அழிந்து போகும்!

    செல்லில் ஆரோக்கியமான சூழ்நிலையா? அப்படீன்னா என்ற கேள்வி எழுவது நியாயமே. நாம் விரதம் / நோன்பு பிடித்திருந்தால் அது ஆரோக்கியமான சூழ்நிலை. நாம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தால் அதுவும் ஆரோக்கியமான சூழ்நிலைதான். இப்படிக் கழிவுகளைத் தாக்கி, தானும் அழிந்து போய்விடும் தியாகிகள் லைசோசோம்கள். ஒரு நுண்ணிய கழிவுத்துகள்கூட மிஞ்சாமல் அழித்துவிடுவார்கள். ஆமாம். லைசோசோம்களும் தனி உயிர்கள்தான். நாம் என்பது கோடிக்கணக்கான உயிர்களின் தொகுப்பு என்று ஹெக்டே கூறுகிறார். ‘எண்ணற்ற உயிர்களால் ஆனதுதான் மனித உடல்’ என்கிறார் ஹீலர் உமர். சத்தியமான வார்த்தைகள்.

    இதுவரை மூன்று வகையான கழிவுகளைப் பார்த்திருக்கிறோம். சாதாரணக் கழிவுகள், தேக்கமுற்ற கழிவுகள், ரசாயனக் கழிவுகள். இன்னும் முடிந்துவிடவில்லை. நான்காவது நிலைக் கழிவுகள்தான் கிருமிகள் உருவாவதற்குக் காரணமாக உள்ளது.

    அதையும் பார்க்கத்தானே போகிறோம்.