மனம் எனும் மாய தேவதை! பாகம் 7 - இவன் அசாதாரணன்




பாகம் 7 : இவன் அசாதாரணன்


        னதை சரியாக கையாள்வது எப்படி... சரியாக சிந்திப்பது எப்படி... சிந்திக்கும் முறை என்பது என்ன... மனதை பயன்படுத்தி மனதை வளமாகுவது எப்படி என்பதை எல்லாம் பார்க்க போகிறோம்.

ஆனால் அதற்கு முன் இந்த மனதை பயன்படுத்தினால் அதை கட்டுப்படுத்த ஒருமுகப்படுத்த தெரிந்தால். வேறு விதமாக வாழலாம் என்பது வெறும் கற்பனை கூற்றா அல்லது அப்படி பயன்படுத்தி நம்மை விட சக்திவாய்ந்த மனதிற்கு சொந்தக்காரராக யாரும் நிஜத்தில் வாழ்ந்து இருக்கிறார்களா என்பதை பார்க்க போகிறோம்.

அப்படி நம்மை ஆச்சர்யப்படுத்தும் அளவு வலிமையான மனதையும் அறிவையும் கொண்ட ஒரு இந்திய நாட்டு அசாதாரணன் பற்றி தான் இப்போது நான் சொல்ல போகிறேன்.

அவர் பெயர் சுவாமி விவேகானந்தர்.

அவர் அமேரிக்கா சென்றார். அங்கு உலகமே வியக்கும் அளவு ஆன்மிகம் பரப்பினார். குழந்தைக்கும் புரியும்படி எளிமையாக ஆன்மிகத்தை விளக்கினார் என்பதை பற்றி எல்லாம் நான் இப்போது பேச போவதில்லை. மாறாக அவர் வாழ்வில் சில விசித்திரங்களை வரலாறு பதிவு செய்து இருக்கிறது. மனதின் ஆற்றலில் நம்மை போல சாமான்யனாக வாழ்ந்தவர் அல்ல அந்த வீர துறவி. அந்த ஆச்சர்யங்களை பற்றி தான் நான் இப்போது சொல்ல போகிறேன்.

நாம் பொதுவாக கேள்விப்பட்ட கதை ஒன்று உள்ளது. அது அவரது புத்தகம் படிக்கும் ஆற்றல் பற்றிய கதை. சாதாரணமாக நூலகத்தில் இருந்து தலையணை சைசில் பல புத்தங்களை வாங்கி செல்வார் அவர். மிக ஆச்சர்யமாக அடுத்த நாளே அவை எல்லா வற்றையும் கொடுத்து விட்டு வேறு வாங்கி செல்வார். 

ஒரு சாமான்ய மனிதன் அந்த புத்தகங்களை படிக்க குறைந்தது மாதக் கணக்கில் ஆகும். இவர் ஓரிரு நாளில் அதை திருப்பி கொடுப்பது எப்படி? பொறுத்து பார்த்த நூலகத்தார் ஒரு நாள் கேட்டே விட்டார். "அய்யா நீங்க என்ன எதுனா சீன் போடரதுக்குனே வாங்கிட்டு போறீங்களா ...இல்ல தெரியாம தான் கேக்கறேன் ஒரே நாளைல இத்தனை புத்தகங்களை எப்படிங்க படிக்க முடியும்"

அவனை பார்த்த விவேக்கானதார். அந்த புத்தகத்தில் தாம் விரும்பிய எந்த பக்கத்தில் இருந்து எந்த சந்தேகம் வேணாலும் கேளு என்றார். அவன் கேள்வி கேட்ட போது... அவன் குறிபிடும் வரிகளை அப்படியே சொன்னதோடு இல்லாமல் அந்த பக்கத்தின் நம்பரையும் சேர்த்து சொன்னார்.

இதில் ஏதோ தில்லுமுல்லு இருக்க வேண்டும் என்று நினைத்த நூலக பொறுப்பாளர் மீண்டும் மீண்டும் சோதித்து பார்க்க அனைத்தையும் அப்படியே இதே போல விடை சொன்னார். கேள்வி கேட்டவர் வாயை பிளந்தார். இது எப்படி சாத்தியம் இது ஒரு சாமான்ய மனிதனுக்கு மிக அந்நியப்பட்டு இருக்கே இந்த ஆற்றல் என வியந்தார். அய்யா இது எப்படி சாத்தியம் என தயவு செய்து சொல்லுங்கள் என்று அவரை வேண்டி கேட்டார். 

அதற்கு அவர் சொன்ன பதில் "இது அப்படி ஒன்னும் ஆச்சர்யமான விஷயம் அல்லவே மனதை சரியாக ஒருமுகப்படுத்த தெரிந்து கொண்டால். அதன் ஆற்றல் முன் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. இதை யார் வேணா தாராளமா செய்யலாம்" என்றார்.

அவரது இந்த ஆச்சர்யமான திறமை அவர் வாழ்க்கையில் பல இடங்களில் வெளிப்பட்டு இருப்பதை நாம் அவர் வரலாற்றில் பார்க்க முடிகிறது. ஒரு முறை வெளிநாட்டில் ஒரு நண்பர் வீட்டில் அவரை சந்திக்க சென்று இருந்தார். அப்போது அவர் வர கொஞ்சம் தாமதம் ஆனது. சரி என்று அதுவரை அங்கு வைக்கப்பட்ட ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினார். அடடே இது நண்பர் சிலாகித்து சொல்லும் புத்தகமல்லவா.

சில நிமிடங்கள் கழித்து அவர் நண்பர் வந்த போது விவேகானந்தர் "நண்பரே நீங்கள் சொன்னது போல் அப்படி ஒன்றும் இது விசேஷமாய் இல்லையே" என்றார்.

வந்த நண்பர் அதிர்ந்து போய் "நீங்க எப்போ இதை படித்தீர்கள்" என்று கேட்டார்.

"இதோ இப்போ காத்திருந்த நேரத்தில் தான்" என்றார் விவேக்கானதார்.

அதை கேட்டு நம்ப மறுத்த நண்பரிடம் விவேகானந்தர் சந்தேகம் என்றால் தன்னை பரிசோதித்து பார்த்து கொள்ளும் படி சொன்னார். அவர் அந்த புத்தகத்தில் எதேச்சையாக ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து கேட்க அந்த பக்கதில் என்ன உள்ளது என்று அப்படியே சொன்னதோடு இல்லாமல் "நீங்கள் ஏதாவது ஒரு பக்கத்தின் எண் ஐ சொல்லுங்கங்கள் போதும் என்னால் அதில் என்ன இருக்கிறது என சொல்ல முடியும்" என்றார்.

அந்த நண்பருக்கு மயக்கமே வந்து விட்டது. நமக்கு இப்போது திகைப்பாக இருபதை விட அந்த நண்பர் இன்னும் கூடுதலாக திகைத்தார். அவர் திகைத்ததற்கு இன்னுமொரு காரணமும் உண்டு.

பொதுவாகவே விவேக்கானதர் சிறு வயதிலேயே மனம் ஒருங்கினைவு தியானம் போன்ற சமாச்சாரங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் சிறு வயதில் விளையாட போனால்... தெரு முனையில் எங்காவது ஒரு ஓரமாய் போய் தியானத்தில் அமர்ந்து கொள்வாராம். அப்படி அமர்ந்து விட்டால் தன்னையும் வெளி புறத்தையும் காலத்தையும் அவர் மறந்து போவாராம். அவர் தாய் அவரை தேடி செல்லும் போது உடல் முழுக்க கொசுகளால் மூட பட்டு ஆனால் அதை குறித்த எந்த பிரகஞ்ஞையும் இல்லாத நரேந்திரனை காண்பாராம்.

பொதுவாக ஆன்மீகத்தில் ஒரு விஷயம் உண்டு அதில் ஆழ்ந்து செல்ல செல்ல மனதின் அளப்பரிய சக்தி பல சித்து வேலைகளை செய்ய வைக்கும். அந்த சித்து வேலைக்கு மயங்கி தனது ஆன்மீக பாதையை கோட்டை விட்டவர்கள் பலர். அவர்கள் கடைசி வரை நம்மை விட சற்று மாறுபட்டு ஏதேனும் சித்து வேலை செய்பவர்களாகவே கடைசி வரை வாழும் படி ஆகிவிடும். எனவே அந்த கவர்ச்சிக்கு இவர் ஆளாகிவிட கூடாது என்பதில் அவர் குரு ராமகிருஷ்ணன் மிக கவனமாக இருந்தார். மூளை செய்யும் சித்து வேளையில் அதிகம் நாட்டம் செலுத்தாதே என்று அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஒரு இலக்கு நோக்கிய பயணதில் வழியில் வரும் மலை... ஆறு.. காடுகளை ரசிக்கலாம் ஆனால் அதில் மயங்கி அங்கேயே இறங்கி கொண்டால். இலக்கை சென்று சேர முடியாது என்று அவருக்கு எடுத்து சொல்லி கொண்டே இருந்தார்.

பொதுவாக சிறந்த ஞானிகள் அதிசயங்கள் அற்புதங்களை செய்ய பிரியபடுவதில்லை (சில விதி விலக்குகள் உண்டு) அதற்கு காரணம் இரண்டு. 

ஒன்று இந்த மந்திர வேலைகளில் நாட்டம் சென்றால் தன்னை முழுதாக அறியும் ஒரு பயணமாகிய ஆன்மீக இலக்கை தவற விட நேரும்.

இரண்டாவது காரணம் மிக நுட்பமானது. அதாவது வாழ்வை ..ஆழமாக புரிய புரிய அவர்களுக்கு அற்புத செயல் சாதா செயல் என்று இரண்டு இல்லை என்று புரிதல் உண்டாகிறது. நாம் பார்க்கும் அனைத்திலும் அற்புதம் அடங்கி உள்ளது. ஒரே ஒரு மணல் துளியில் உள்ள அனைத்து ரகசியத்தையும் இன்று வரை அறிவியல் விளக்க முடியவில்லை.

பிரபஞ்சத்தில் அற்புதம் அல்லாதது என்று எதுமே இல்லை. சாதா செயல் என்று ஒன்று கூட இல்லை. நமக்கு நன்கு புரிவதை நாம் சாதாரணமாக நினைக்கிறோம். நமக்கு புரிபடாததை அற்புதம் என்கிறோம் அவ்ளோதான். சில நூறு ஆண்டுகளுக்கு முன் யாராவது பூமியின் அடுத்த முனையில் உள்ளவர்களை இங்கேயே தொடர்பு கொள்ள முடியும் என்று சொன்னால் அதை அற்புதம் என்று தான் சொல்லி இருப்போம் ஆனால் இன்று அது அற்புதம் அல்ல.

எனவே ஞானிகளைப் பொறுத்தவரை இரண்டே பார்வை தான். ஒன்று ...எதுவுமே அற்புதம் அல்ல எல்லாம் இயல்பானது. அல்லது எல்லாமே அற்புதம் தான் எதுவுமே சாமான்யமானது அல்ல. எனவே ராமகிருஷ்ணர் அற்புதம் செய்வதில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.

ஒரு முறை அவர் சீடர்களிடம் உரையாடி கொண்டிருந்த போது. ஒரு சீடர் ஓடி வந்தார். சுவாமி ஒரு அற்புதம்... "நம்ம ஊருக்கு தண்ணீரில் நடக்கும் யோகி ஒருவர் வந்து இருக்கார். ஆற்றில் இங்கே இருந்து அடுத்த கரை நடந்தே செல்கிறார். 30 வருட கடும் யோக பயிற்சியால் இது சாத்தியப்பட்டது என்கிறார்" என்று ஆச்சர்யபட்டு பேசினான்.

ராம கிருஷ்ணர் சிரித்து விட்டு "நம்ம ஓட காரன் ஆற்றில் இங்கே இருந்து அங்கே கொண்டு போய் விட எவ்ளோ வங்கரான்" என்று கேட்டார்.

"3 பைசா சாமி " என்றார் சீடர்.

அதற்கு ராம கிருஷ்ணர்...

"ஒருத்தன் 3 பைசா பெருமானமுள்ள வித்தையை 30 ஆண்டுகளா கத்துகிட்டு வந்திருக்கான் முட்டாள் அந்த நேரத்துக்கு வேற எதுனா உருப்படியா பன்னி இருக்கலாம். இந்த வித்தையால யாருக்கு என்ன பயன்" என்றார்.

மிக சில ஞானிகளே மக்களுக்காக அற்புதம் செய்ய பிரியப்பட்டவர்களாக இருக்கிறார்கள் பெரும்பாலானவர்கள் அப்படி ஒன்று இருப்பதையே வெளிக்காட்டாமல் எச்சரிக்கையாக இருந்தார்கள்.

உதாரணமாக புத்தர். அவர் மனம் செய்யும் மந்திரத்தில் யாரும் மயங்க கூடாது என்பதில் மிக குறியாக இருந்தார். ஆனால் அவரை மீறி ஒரு இடத்தில் மக்கள் இடம் மாட்டி கொண்டார்.

புத்தர் வாழ்வில் அவர் வரலாறு பதிவு செய்துள்ள ஒரே இயல்புக்கு மாறான நிகழ்வு இது தான். அதாவது ஆற்றில் வெள்ளம் வந்தபோது பக்கத்து கிராமத்திற்கு போக முடியாமல் அனைவரும் தவித்தனர். புத்தருக்கோ அவர் போதனைக்கு கண்டிப்பாக செல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். எனவே பல பேர் பார்த்து கொண்டு இருக்கும் போதே ஒரு காரியத்தை செய்தார். தீடீரென டிரான்ஸ்மிட் ஆகி போனார். இக்கரையில் மறைந்து அக்கரையில் அவர் தோன்றியதை பல பேர் சாட்சியாக பார்க்க நேர்ந்தது. (டிஸ்கவரியில் வெளியான Ancient Alien நிகழ்ச்சியில் இந்த சம்பவத்தை பற்றி பதிவு செய்திருக்கிறார்கள்)

எனவே மனதின் சக்தி அது தரும் அசாத்திய ஆற்றல் இதில் தனது சீடன் அதிகம் கவனம் செலுத்த கூடாது என்று ராமகிருஷ்ணர் ஒரு காரியம் செய்தார். ஒரு முறை விவேகானந்தரை அவர் நண்பர்களுடன் அழைத்தார். தனது மனம் பற்றிய ஆற்றலில் அதிகம் கர்வம் கொண்டிருந்த விவேகானந்தரிடம் ஒரு சாதுவின் முகவரி கொடுத்து அவரை போய் பாரு. உன் மனதில் இருப்பதை அவர் படிக்க முடியும் என்று சொல்லி அனுபினார். அற்புதங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட விவேகானந்தர் அதிக ஆர்வதோடு நண்பர்களுடன் அவரை பார்க்க சென்றார். இவர்களை வரவேற்ற அந்த பாபா இவர்கள் சென்ற உடன் ஒரு விசித்திர காரியம் செய்தார். ஆளுக்கு ஒரு துண்டு சீட்டு எழுதி இதை இப்ப படிக்க வேணாம் என்று கூறி அவர்கள் பாக்கெட்டில் வைக்க சொன்னார்.

பிறகு ஒரு அரைமணி நேர உரையாடலுக்கு பின் விவேகானந்தர் விஷயத்துக்கு வந்தார். "மனதை படிக்கும் அற்புதங்கள் உங்களிடம் உள்ளது என்று கேள்விப்பட்டு பார்க்க வந்தோம்" என்றார்.

அந்த பாபா அவர்கள் அனைவரையும் மனதில் எதையாவது ஒன்றை நினைத்து கொள்ளச் சொன்னார். நண்பர்கள் தங்களுக்குள் திட்டமிட்டு அவர் கொஞ்ச கூட கணிக்க முடியாதபடி ஒரு நண்பர் தனக்கு தெரிந்த வேறு மொழியில் ஒரு வார்த்தை நினைத்து கொண்டார்கள். விவேகானந்தர் தனக்கு தெரிந்த மிக கடினமான சமஸ்கிருத சுலோகம் ஒன்றை நினைத்து கொண்டார். இப்படி ஆளாளுக்கு ஒன்றை நினைத்து கொண்டு "நாங்க என்ன நினைத்தோம் சொல்லுங்க பார்போம்" என்றார்கள்.

அதற்கு அந்த பாபா நான் அரைமணி நேரம் முன்பு உங்களுக்கு எழுதி கொடுத்த சீட்டை இப்போ எடுத்து பாருங்க என்றார். எடுத்து பார்த்த நண்பர்கள் அதிர்ந்தார்கள். இவர்கள் நினைத்ததைத்தான் அங்கே அவர் அரைமணி நேரம் முன்னவே எழுதி கொடுத்திருந்தார்.

இதை லாஜிக் இல் அடக்கமுடியாமல் விவேகானந்தர் தவித்தார். ஆனால் மனதின் சித்து வேளையில் கர்வமும் ஆர்வமும் கொள்ள கூடாது இந்த விஷயத்தில் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்றும் இது வெறும் ஒரு வித்தை என்றும் குரு நமக்கு உணர்த்த தான் இங்கே அனுப்பி உள்ளார் என்றும் புரிந்து கொண்டார்.

ஒரு முறை தேம்ஸ் நதிக்கரையில் விவேகானந்தர் உலாவிக் கொண்டிருந்த போது அங்கே இளைஞர்கள் சிலர் ஆற்றில் மிதந்து வரும் முட்டை ஓட்டை சுடும் பயிற்சி மேற்கொண்டு இருந்தார்கள். அவர்களை உற்று கவனித்த விவேகானந்தர் அவர்களிடம் துப்பாக்கி கேட்டு வாங்கி அதை சுட்டு பார்த்தார். ஒரு குறி கூட தவறாமல் அனைத்தையும் அடித்ததை பார்த்த இளைஞர்கள், "எத்தனை வருட பயிற்சி அய்யா" என்று கேட்டார்கள்.

"நான் துப்பாக்கி பிடிப்பது இதான் முதல் தடவை" என்றார் விவேகானந்தர்.

அதெப்படி சாத்தியம் என்று திகைத்து போய் கேட்டவர்க்கு "இது ஒன்னும் அற்புதம் அல்ல மனதை ஒருங்கிணைக்க கற்று கொண்டால் யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம்" என்றார்.

வேகமாக செல்லும் ஒரு ரயிலில் இருந்து கொண்டு வெளியில் உள்ள ஒரு பெயர் பலகையை ஒரு அப்பாவும் பையனும் படிக்கிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள். நீண்ட பெயர்களை பைய்யன் படிக்க முடியாமல் கஷ்டப்படுவான். ஆனால் அந்த ஒரு வினாடி பார்வையில் கடந்து செல்லும் பெயர்களை அப்பாவின் மூளை உள்வாங்கி இருக்கும் அல்லவா. அப்படி அந்த திறன் நம்மை விட மிக அதிக அளவில் கொண்டிருந்தவர் விவேக்கானதார். எந்தளவு என்றால் ஒரு புத்தகத்தின் பக்கத்தை சும்மா பார்த்த மட்டில் அதில் உள்ள அனைத்து தகவலையும் அவர் கண்கள் வாயிலாக மூளை உள்வாங்கும் அளவு.

விவேகானந்தரின் இந்த திறமை எதோ ஒரு அற்புதம் அது தெய்வ சக்தியால் தான் முடியும் என்று நினைப்பவர்களுக்கு மட்டும் நான் இக்காலத்து ஆட்கள் ஒரு மூணு பேரை அறிமுகம் செய்கிறேன்.

1) "Anne Jones" ஹரி பாட்டரின் Deathly Hallows புத்தகத்தை வெறும் 47 நிமிடத்தில் படித்தவர். (சாதாரண ஆட்களுக்கு மாத கணக்கில் ஆகும்)

2) "Stephen Wiltshire" இவர் ஒரு ஓவியர். சிக்கலான தெருக்கள்.. ரயில்வே ஸ்டேஷன்கள்...அல்லது இயற்கை காட்சியை ஒரு முறை பார்ப்பார் அவளோதான் அதன் அனைத்து தகவல்களும் மூளையால் படம் பிடிக்கப்பட்டு அதை அப்படியே படம் வரைந்து விடுவார்.

3) "Kim Peek" அசாதாரண முறையில் புத்தகம் படிபவர். இவரது இடது கண் புத்தகத்தின் இடது பக்கத்தையும். வலது கண் வலது பக்கத்தையும் தனி தனியாக உள்வாங்கி மூளை அதை ஒரே நேரத்தில் உணர கூடியது.

இவர்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது. படித்து பாருங்கள்.

இப்போது விவேகானந்தரின் புத்தகம் படிக்கும் தன்மை பற்றி நமக்கு ஓரளவு புரிகிறதல்லவா... சரி அந்த வெளிநாட்டு நண்பர் விவேக்கானதர் அந்த புத்தகம் படித்ததை பார்த்து திகைத்ததற்கு வேறு ஒரு காரணம் இருந்தது என்று சொல்லி நிறுத்தினேன் அல்லவா. அது என்ன என்று இப்போது சொல்கிறேன். அந்த புத்தகம் விவேகானந்தர் சற்றும் அறியாத ஜெர்மன் மொழி புத்தகம்.

"இதை எப்படி நீங்கள் படித்தீர்கள் உங்களுக்கு தான் ஜெர்மன் மொழி தெரியாதே" என்று கேட்டதற்கு "இந்த புத்தகம் வாயிலாக நான் இதை எழுதியவனின் மனதை படித்து கொண்டிருந்தேன்" என்றார் விவேகானந்தர்.

நண்பர் மேலும் திகைத்து "அது எப்படி முடியும்" என்று கேட்டதற்கு...

"அது ஒன்னும் பெரிய அற்புதம் இல்ல.. மனதை ஒருங்கிணைக்க முடிந்தால் இதை யார் வேண்டுமானாலும்... ஏன் நீங்களே கூட பண்ணலாம்" என்றார்.

சரி விவேக்கானதர் அளவு எல்லாம் நாம் போக வேண்டாம். மனதை பயன்படுத்தி நமது அன்றாட வாழ்வை மாற்றி அற்புதம் செய்ய வைக்க முடியுமா... அதற்கென ஏதும் சிந்திக்கும் வழிமுறைகள் உள்ளனவா?

ஆம் உண்டு நாமே செய்ய முடிய கூடிய அற்புதம் அதை பற்றி அடுத்த பாகத்தில் தொடர்ந்து சிந்திப்போம்...






இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண













No comments:

Post a Comment