Showing posts with label மருந்தில் குணமடையாத 51 நோய்கள். Show all posts
Showing posts with label மருந்தில் குணமடையாத 51 நோய்கள். Show all posts

மருந்தில் குணமடையாத 51 நோய்கள்!


ருந்தில் குணமடையாத 51 நோய்கள்!
.
மருத்துவச் சட்டத்தின் எச்சரிக்கை!

 


ம்மை தினம் தினம் வாட்டி வதைக்கும் நீரிழிவு(சர்க்கரை), ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட 51 நோய்களைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ அலோபதி மருத்துவத்தில் மருந்து, மாத்திரைகள் கிடையாதுஎன்கிறது இந்திய மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகள், 1945. சோதனைக்குழாய் குழந்தைகளும் க்ளோனிங் உயிரினங்களும் சாதாரணமாகிவிட்ட இந்த நவீன யுகத்தில், இந்தச் சாதாரண நோய்களுக்கெல்லாம் மருந்தில்லாமல் இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு எழுகிறதா? நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தவும் தடுக்கவும் அலோபதி மருத்துவத்தில் மருந்தில்லை. ஆனால், அந்த நோய்களுக்கு விடாமல் வைத்தியம் பார்க்கிறார்கள். இம்மருந்துகள் நம் உடலில் பலவகையான பாதிப்புகளை உண்டாக்குகின்றன என்று தெரிந்தும் அவற்றை மருத்துவர்கள் நமக்கு பரிந்துரைக்க என்ன காரணம்? வணிகமாகிவிட்ட மருத்துவச் சேவைக்குள், மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளாகத்தான் அலோபதி’, ‘ஆங்கில மருத்துவம்என்றெல்லாம் நாம் அழைக்கும் நவீன மருத்துவமுறை அதிவேக வளர்ச்சியடைந்தது. ஒட்டுமொத்தமாக அறிவியல் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றமானது, மருந்துத் தயாரிப்பிலும், நோயறிதல் மற்றும் அறுவைச் சிகிச்சை முறையிலும் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தியது. ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய பாரம்பரிய மருத்துவ முறைகளும், ஹோமியோபதி, அக்குபங்க்சர், யுனானி போன்ற மாற்று மருத்துவ முறைகளும் இருந்தாலும், அலோபதி மருத்துவம் உலகம் முழுவதும் செல்வாக்கு செலுத்துகிறது. இதற்கு அடிப்படை, நவீன மருத்துவக் கருவிகளும் அறுவை சிகிச்சை முறைகளும். இதனாலேயே அறிவியல் பூர்வமான ஒரு சிகிச்சை முறையாக அலோபதி கருதப்படுகிறது. ஆனால், மருத்துவ அறிவியல் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், நோய்களின் தாக்கமும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்திருக்க வேண்டும். மாறாக, அவை அதிகரித்திருக்கின்றன. பெருகும் நோய்களைப் பார்க்கும்போது ஒரு கேள்வி எழுகிறது.

அலோபதி மருத்துவம் நோய்களைத் தீர்க்கிறதா அல்லது நோயாளிகளை உருவாக்குகிறதா?

இந்தியாவில் தயாரிக்கப்படும்/விற்கப்படும் மருந்துகள், மாத்திரைகள், மருத்துவச் சாதனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை இந்திய மருந்துகள் மற்றும் அழகுசாதனப்பொருட்கள் சட்டம், 1940 (The Drugs and Cosmetics Act, 1940) மற்றும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகள் 1945’ (The Drugs and Cosmetics Rules, 1945) ஆகிய சட்டங்கள். இந்த விதிமுறைகளில் உள்ள ஷெட்யூல் ஜெ, மருந்துகளால் குணப்படுத்த முடியாத அல்லது தடுக்க முடியாத 51 நோய்களைப் பட்டியலிட்டுள்ளது. ரத்த அழுத்தம், நீரிழிவு(சர்க்கரை) நோய், கருப்பை தொடர்பான நோய்கள் என பெருமளவு மக்களைப் பாதிக்கும் நோய்கள் அனைத்துமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

    ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒருவருக்காவது இந்தப் பட்டியலில் உள்ள ஒன்றிரண்டு நோய்கள் இருக்கும் என்பது நிச்சயம். இந்த நோய்களைக் குணப்படுத்தவும் தடுக்கவும் மருந்துகள் இல்லையென்றாலும், மருத்துவர் நம்மைத் திருப்பி அனுப்பப் போவதில்லை. ஒரு பக்கம் முழுவதும் மருந்து, மாத்திரைகள் எழுதி, உடன் சில டிப்ஸ்களையும் கொடுத்து அனுப்புவார். குணப்படுத்தும் திறனில்லாத மருந்துகளை உட்கொண்டபடி நீங்கள் வாழ்நாள் முழுவதும் நோயாளிகளாகவே இருக்க வேண்டியதுதான்.

மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகள், 1945 (ஷெட்யூல் J)

மருந்துகளால் தடுக்கவோ குணப்படுத்தவோ அல்லது தடுக்கவும் குணப்படுத்தவும் முடியும் என்று உறுதி கூறவோ முடியாத நோய்கள் மற்றும் சுகவீனங்கள் (எந்தப் பெயரில் வரையறுக்கப்பட்டிருந்தாலும்)

1. AIDS
  எய்ட்ஸ்

2. Angina Pectoris (Chest Pain)
    நெஞ்சுவலி

3. Appendicitis
   ‘அப்பெண்டிஸைட்டிஸ் என்னும் குடல் வால் நோய்

4. Arteriosclerosis (Block in Heart vessels)
    இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு

5. Baldness
    தலை வழுக்கை

6. Blindness
    கண்பார்வையற்ற நிலை

7. Bronchial Asthma
   ஆஸ்துமா

8. Cancer and Benign tumour (Cysts to Cancer tumors in body)
    உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை

9. Cataract
    கண்புரை

10. Change in colour of the hair and growth of new hair (Hair growth and grey hair removal)
     தலைமுடி வளர, நரையை அகற்ற

11. Change of Foetal sex by drugs (Changing the foetus to male or female)
 கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.

12. Congenital malformations
     பிறவிக் கோளாறுகள்

13. Deafness
     காது கேளாமை

14. Diabetes (Sugar Complaint)
     நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்)

15. Diseases and disorders of uterus. (All diseases related to uterus)
   கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்

16. Epileptic -fits and psychiatric disorders (Epilepsy and all mental diseases) 
     வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்

17. Encephalitis (Brain Fever)
    மூளைக்காய்ச்சல்.

18. Fairness of the skin (Changing the black skin to fair Colour)
     உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.

19. Form, Structure of breast (Development of breast)
     மார்பக வளர்ச்சிக்கு

20. Gangrene
     புரையோடிய புண்

21. Genetic disorders (DNA related diseases)
     மரபணு நோய்கள்

22. Glaucoma (Eye disease)
     க்ளாகோமா எனும் கண்வலி நோய்

23. Goitre (Thyroid)
     கழுத்து (தைராய்டு) வீக்கம்

24. Hernia
     ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்

25. High/low Blood Pressure (Hypo and hyper blood pressure)
     அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்

26. Hydrocele
     விரை வீக்கம்

27. Insanity (Madness)
     பைத்தியம்

28. Increase in brain capacity and improvement of memory (Absent-mindedness and improving it)
     ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.

29. Improvement in height of children/adults (To raise the height of children)
      குழந்தையின் உயரத்தைக் கூட்ட.

30. Improvement in size and shape of the sexual organ and in duration of sexual Performance (Prolong the size and stamina of penis)
     ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.

31. Improvement in the strength of the natural teeth (Treatment for protecting the teeth by calcium    drugs)
 பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.

32. Improvement in vision (Common eye diseases long sight, short sight)
 சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.

33. Jaundice/Hepatitis/Liver disorders (Yellow fever, hepatitis and all diseases related to liver)
 மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்

34. Leukaemia (Blood cancer)
      இரத்தப் புற்றுநேரய்.

35. Leucoderma 
     வெண் குஷ்டம்

36. Maintenance or improvement of the capacity of the human being for sexual pleasure. (Increasing stamina while intercourse)
      உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.

37. Mental retardation, subnormalities and growth (Less brain development)
     மூளை வளர்ச்சிக்குறைவு.

38. Myocardial infarction (Heart attack)
     மாரடைப்பு நோய்

39. Obesity (Obese to slim)
      குண்டான உடம்பு மெலிய

40. Paralysis
      பக்க வாதம்

41. Parkinsonism (Neurotic diseases – sympathetic)
     உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்

42. Piles and Fistulae (Piles and haemorrhoid)
     மூல நோய் மற்றும் பவுத்திரம்

43. Power to rejuvenate (Regaining youthfulness)
     வாலிப சக்தியை மீட்க

44. Premature ageing (Elderly appearance in youth)
      குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45. Premature greying of hair (Grey hairs in youth)
     குறைந்த வயதில் தலை நரை

46. Rheumatic Heart Diseases
     ரூமாட்டிக் இருதய நோய்

47. Sexual Impotence, Premature ejaculation and spermatorrhoea (Male impotency fast semen     discharge)
     ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்

48. Spondylitis (Cervical and pains of lumbar spondylosis)
   கழுத்து வலி மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்

49. Stammering
     திக்குவாய்

50. Stones in gall-bladder, kidney, bladder (Kidneys, Gall bladder and Urinary bladder stones)
     சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப்பை கற்கள்

51. Varicose Veins 
  காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.

Subs by GOI Notification No. G.S.R. 21(E) dt 11.1.1996.

Ref.
    The Drugs And Cosmetics Act, 1940 And The Drugs And Cosmetics Rules, 1945 as corrected up to the 30th April, 2003 (Page No. 444 under Schedule J)


    இந்தப் பட்டியலில் உள்ள நோய்களுக்கு ஸ்பெஷலிஸ்டுகள் (சிறப்பு மருத்துவர்கள்) என்று கூற கூடாது. காரணம் ஸ்பெஷலிஸ்டுகள் என்ற அடைமொழி ஆங்கில மருந்துக்களை கொண்டு அந்த வியாதியை குணப்படுத்த முடியும் என்ற எண்ணத்தை (மாயையை) படித்த / படிக்காத பாமர மக்களிடம் உருவாக்கும். எனவே மருத்துவமனைகளில் காணப்படும் போர்டுகளில் உள்ள இந்த அடைமொழிகளை கண்டு யாரும் ஏமார்ந்து விடாதீர்கள்.

ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் மருத்துவர், 120/80 mm Hg என்ற அளவைத் தாண்டினாலே உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று கூறி, வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடச் சொல்வார். சில உணவுக் கட்டுப்பாடுகளும் எச்சரிக்கைகளும் விதிக்கப்படும். அலோபதி மருத்துவரைப் பொறுத்தவரை இனி வரப்போகும் காலம் முழுவதும் நீங்கள் ரத்தக் கொதிப்பு நோயாளிதான். ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுப்பாட்டில் வைக்கலாம். வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரைகள் துணையுடன் நீங்கள் நார்மல் ஆக இருக்கலாம் என்பார், அவர்.

    நீங்கள் நீரிழிவு (சர்க்கரை) நோயாளியாக அடையாளம் காணப்பட்டுவிட்டால், நிலைமை இன்னும் மோசம். ‘இன்சுலின்’ மருந்து பரிந்துரைக்கப்படும். ஆயுளுக்கும் நீங்கள் ஊசி மூலமாகவோ, மாத்திரைகள் மூலமாகவோ அதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இதுதவிர, சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாகத்தான் இருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதித்துக் கொண்டிருக்க வேண்டும். மொத்தத்தில் நீங்கள் ஒரு நிரந்தர நோயாளியாகி, மருத்துவருக்கும் மருந்துக் கடைகளுக்கும் நிரந்தர வாடிக்கையாளராக மாறிவிடுவீர்கள். இதுதான் இன்றைய நடைமுறை. இந்த நோய்களுக்கு சிகிச்சை அளித்துக் குணப்படுத்த முடியாதென்றால், அதை நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவர்கள் ஏன் சொல்வதில்லை? அல்லது வேறு மருத்துவ முறைகளில் இவற்றைக் குணப்படுத்த வாய்ப்புகள் இருந்தால், ஏன் இவர்கள் அவற்றை சிபாரிசு செய்வதில்லை? ஏனென்றால், அப்படிச் செய்வது இவர்களின் தொழிலுக்கே வேட்டு வைத்துவிடும். இந்தியாவில் மட்டும் நீரிழிவு(சர்க்கரை), உயர் ரத்த அழுத்தப் பிரச்னை, உடல் பருமன், புற்றுநோய்கள், கருப்பைக் கோளாறுகள் என வாழ்க்கைமுறை மாறுதல்களால் ஏற்படும் நோய்களால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அலோபதி மருத்துவத்திற்கு நோயாளிகளே நுகர்வோர் என்பதாலும், அவர்களால்தான் அலோபதி மருத்துவத்துறை செல்வம் கொழிக்கும் தனியார் துறையாக மாறியுள்ளது என்பதாலும், மருந்தில்லாமல் வாழ்வியல் மாற்றங்களாலேயே சரியாகிவிடக் கூடிய சாதாரண லைஃப் ஸ்டைல் நோய்களுக்கும் அலோபதி மருத்துவர்கள் வீணாக வைத்தியம் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மருந்து எது தெரியுமா? நீரிழிவு (சர்க்கரை) நோய்க்கான மருந்து. மேலும், மேலே சொன்ன பட்டியலில் உள்ள நோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளே இந்திய மருந்துச் சந்தையில் 50% அதிகமான பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன. இந்த நோய்களை எந்த அலோபதி மருந்தும் குணப்படுத்தாது என்றும், குணப்படுத்தும் என்று சொல்லி இந்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது குற்றம் எனவும் சட்டம் எச்சரித்தும், இந்நோய்களுக்கான மருந்துகள் எப்படி இந்தளவுக்கு விற்பனையாகின்றன? மருத்துவர்கள் எப்படி அவற்றைப் பரிந்துரைக்கிறார்கள்?

    “இந்திய மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் விதிகள் 1945 ஷெட்யூல் ஜெ-படி, 51 நோய்களைக் குணப்படுத்த முடியாது என்பதே உண்மை. ஆனால், அலோபதி மருத்துவர்கள் சட்டத்துக்கு எதிரான தவறான சிகிச்சையை அளிக்கிறார்கள். மூட்டுவலியால் அவதிப்படும் ஒருவருக்கு அலோபதி மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைக்கிறார். அந்த மருந்துகள் மூட்டுவலி நோயைக் குணப்படுத்துமா என்றால், நிச்சயம் இல்லை. நம் உடலில் வலியை உணரும் இடம் மூளை. அதனால் மூளைக்கு செல்லக் கூடிய நரம்புகளை மருந்துகள் கொடுத்து மந்தமாக்கி விடுகின்றனர். 10 - 15 நாட்கள் கழித்து வலியின் தீவிரம் மீண்டும் அதிகரிக்கும். மருத்துவரிடம் சென்றால், அதிக வீரியமுள்ள மருந்துகளைக் கொடுப்பார்களே தவிர, குணமாக்க அவர்களிடம் எந்த வழியுமில்லை” என்கிறார் அக்கு ஹீலர் வி.ஜெ.எம்.கிப்சுர் ரகுமான்.

இப்படித்தான் மருந்துகளால் குணமடைய வாய்ப்பில்லாத 51 நோய்களுக்கும் அலோபதி மருத்துவர்கள் ஏமாற்றுச் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏனெனில், அது அவர்களுக்கு கொள்ளை லாபத்தை பெற்றுத் தருகிறது. மருந்து கம்பெனிகள் தங்களின் மருந்துகளை விற்பதற்கு மருத்துவர்களை நேரடியாக அணுகுகின்றன. இதற்காக பரிசுகள் முதல் பணமழை வரை வழங்க அவர்கள் தயங்குவதில்லை. பேனா, கால்குலேட்டர், டின்னர் செட் என சில ஆயிரங்களில் தொடங்கி, உச்சக்கட்டமாக வெளிநாட்டுப் பயணம், சுற்றுலா, குடும்ப விழாக்கள் எனப் பல்வேறு வழிகளில் மருத்துவர்களைக் குளிர்விக்கின்றன மருந்து கம்பெனிகள். இதற்குப் பிரதி பலனாக அந்த நிறுவனங்களின் மருந்துகளையே மருத்துவர் சிபாரிசு செய்கிறார். ஒரே மருந்துக்கு நூற்றுக்கணக்கான பிராண்டுகள் இருக்கும் போது, அந்த பிராண்டுகளின் சொந்தக்காரர்களாக இருக்கும் நிறுவனங்கள், எப்படியாவது மருத்துவரை வளைத்து தங்கள் மருந்தை விற்பனை செய்துவிட எதைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். இந்த மருந்துகளை சிபாரிசு செய்வதன் மூலம் இன்னொரு வகையிலும் லாபமடைகின்றனர் மருத்துவர்கள். அதாவது, மருந்து விற்பனையில் குறிப்பிட்ட சதவீத கமிஷனும் மருத்துவர்களுக்கு கிடைக்கிறது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் அலோபதி மருத்துவர் வெங்கடேசன். “இந்த விதிகளில் பட்டியலிடப்பட்டுள்ள 51 நோய்களுக்காக தரப்படும் அல்லது விற்கப்படும் மருந்து, மாத்திரைகளால் அவற்றைக் குணப்படுத்தவோ, தடுக்கவோ முடியாது என்றுதான் கூறுகிறது. ஆனால், அவற்றுள் சில நோய்களை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். சிலவற்றுக்கு உறுப்புகளை மாற்றி அல்லது சரிசெய்யும்சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியும். சிலவற்றுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம். அதேபோல சில நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்” என்கிறார்.

ஆனால், நம் கேள்வி என்னவென்றால், அந்நோய்களுக்கு மருத்துவர்கள் ஏன் மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள் என்பதுதான். இந்த மருந்துகளை உட்கொண்டால் நோய் குணமடைந்துவிடும்என்ற நம்பிக்கை நோயாளிக்கு ஏற்படும். அதனால், ‘இந்த மருந்துகளைச் சாப்பிட்டால் நோய்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால், அதில் பக்க விளைவுகள் உண்டுஎன்பதை மருத்துவர்கள் தெளிவாக நோயாளிகளுக்கு விவரிக்க வேண்டும்.

அலோபதி மருத்துவம் என்றாலே அறுவைச் சிகிச்சை முறைதான். உதாரணத்திற்கு, கருப்பையில் கட்டி வருகிறது என்றால், கருப்பை எனும் உறுப்பை அறுத்து எறிவது சிகிச்சை அல்ல. அந்தக் கட்டி ஏன் வருகிறது? என்று கண்டறிந்து குணப்படுத்துவதே சிகிச்சை. எந்த உறுப்பையும் அறுத்தெறிவது சிகிச்சையாகாது. அறுவைச் சிகிச்சை என்பதே ஏமாற்று வேலைதான். பொதுவாகவே உடம்பின் இயற்கை ஆற்றலைப் புரிந்து கொள்ளக் கூடிய நிலை அலோபதி மருத்துவத்தில் இல்லை” என்கிறார் எழுத்தாளர்/ இயக்குநர் செந்தமிழன்.  

கருப்பை பிரச்னைகளை மருந்துகளால் குணப்படுத்த முடியாது என்று சட்டம் எச்சரித்தாலும், பலரும் அதற்கு சிகிச்சை அளித்தே வருகின்றனர். அலோபதி மருத்துவர்கள் தேவையில்லாத அறுவைச் சிகிச்சைகளைப் பரிந்துரை செய்கிறார்கள் என்பதற்கு பெரம்பூரைச் சேர்ந்த மேனகாவின் அனுபவத்தைக் கேளுங்கள்.

குழந்தையின்மைப் பிரச்னைக்காக அலோபதி மருத்துவரிடம் சென்றிருந்தேன். திருமணமாகி ஓராண்டுதான் ஆகியிருந்தது என்றாலும், வீட்டுப் பெரியவர்களின் வற்புறுத்தலால் மருத்துவமனைக்குச் சென்றேன். மகப்பேறு மருத்துவர் ஸ்கேன் செய்யச் சொல்லி எழுதிக் கொடுத்தார். எந்த சென்டரில் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கவும் செய்தார். ரூ.4500 செலவு செய்து ஸ்கேன் எடுத்துக்கொண்டு மருத்துவரைச் சந்தித்தேன்.

    ‘கருப்பையில் நீர்க்கட்டிகள் உள்ளன. அதனால்தான் உனக்குக் குழந்தையில்லை. மாத்திரைகள் எழுதித் தருகிறேன். அதில் கரைந்து போகவில்லை என்றால், லேசர் சிகிச்சை செய்யலாம்’ என்றார். விசாரித்ததில் அதற்கு ஏறக்குறைய ரூ.30,000க்கு மேல் செலவாகும் என்று தெரிந்தது. பின்னர், என் தோழியின் அறிவுறுத்தலின் பேரில் சித்த மருத்துவரை ஆலோசனைக்காக சந்தித்தேன். காலை வேளையில், கொழுந்து அரச இலையைப் பொடி செய்தோ, அரைத்தோ நாட்டுப் பசுவின் பாலில் கலந்து 3 மாதம் குடிக்கச் சொன்னார். மாதம் இருமுறை அடிவயிற்றில் மசாஜ் சிகிச்சையும் எடுத்துக் கொண்டேன். இப்போது மாதவிலக்குப் பிரச்னை சீரானது. சருமப் பிரச்னையும் இப்போது இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன்” என்கிறார் மேனகா.

பெரிய மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை சிபாரிசு செய்தல், சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனைக்கு அனுப்புதல் மூலமாக மருத்துவர்கள் கமிஷன் பெறுவதும் நடக்கிறது. வெளி மார்க்கெட் விலையைவிட அதிகமாக விலைகொண்ட, மருத்துவமனைக்குள் இருக்கும் மருந்தகத்திலேயே நோயாளிகள் மருந்துகள் வாங்கவைக்கப்படுகிறார்கள் என்றும், மருந்துகளின் பொதுப் பெயர்களான ஜெனரிக்’ பெயர்களை எழுதாமல், எப்போதும் ப்ராண்ட் பெயர்களையே மருந்துச் சீட்டில் எழுதித் தருகிறார்கள் என்றும் மருத்துவர்கள் மேல் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட ப்ராண்ட் பெயரை எழுதுகிறார் என்றால், அதை சிபாரிசு செய்கிறார் என்றுதானே அர்த்தம்?

நோயை அறிவதிலும் சரி, நோயைத் தீர்ப்பதற்கான வழிமுறையிலும் சரி. பெரும் குழப்பத்தைக் கொண்டுள்ளது அலோபதி மருத்துவமுறை என்கின்றனர் அந்த மருத்துவத்தால் பாதிக்கப்பட்டவர்கள். ஒரே பிரச்னையை ஒவ்வொரு மருத்துவரும் வெவ்வேறு விதமாக அணுகுகின்றனர். வெவ்வேறு தீர்வுகளை அளிக்கின்றனர். திட்டவட்டமான தீர்வுகள் என்பதே கிடையாது. அரக்கோணத்தைச் சேர்ந்த மதுவின் அனுபவம் இதை உணர்த்துகிறது.

19வது வயதில் எனக்கு ஒற்றைத் தலைவலி பிரச்னை தொடங்கியது. என் அப்பா அருகிலிருக்கும் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பவர் கண்ணாடி போடச் சொல்லி மருத்துவர் எழுதிக் கொடுத்தார். முன்பைவிட வலி மேலும் அதிகரித்தது. ரூ.6000 வரை செலவழித்து கண்ணாடியை மாற்றினேன். ஓராண்டு தொடர்ந்து கண்ணாடி அணிந்தும் வலி நிற்கவில்லை. மற்றொரு மருத்துவரிடம் ஆலோசனைக்குச் சென்றேன். உங்களுக்கு சைனஸ் மற்றும் ஒற்றைத் தலைவலி இரண்டும் இருக்கிறது. அதனால் விட்டமின் சி மாத்திரையை மூன்று கோர்ஸாக 9 மாதத்திற்கு சாப்பிடுங்கள்என்று சொன்னார். விலை அதிகமாக இருந்ததால், என்னால் தொடர்ந்து வாங்கிச் சாப்பிட முடிய வில்லை. அடுத்தாக, மற்றொரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றேன். அவர்கள் தொண்டையில் சதை வளர்ந்துள்ளது. அதை அறுவைச் சிகிச்சை செய்து எடுத்துவிட்டால் வலி இருக்காது என்றனர். அறுவைச் சிகிச்சைக்கு தயக்கமாக இருந்தது. இறுதியாக, நண்பர் ஒருவர் பரிந்துரைக்க, அக்குபங்சர் (சிங்கிள் டச்) என்ற மாற்று மருத்துவச் சிகிச்சையை எடுத்துக் கொண்டேன். 8 ஆண்டுகளாக வாட்டி வதைத்த ஒற்றைத் தலைவலி போயே போய்விட்டது. இந்தச் சிகிச்சைக்கு செலவே ரூ.100 மட்டும்தான்” என்று தனது நீண்ட பயணத்தை விவரிக்கிறார் மது.

இந்த மருந்துகள் பிரச்னையைக் குணப்படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை. அவை புதிது புதிதாக பல நோய்களை உருவாக்கி, நோயுற்றவரை மேலும் துயரத்திற்கு ஆளாக்குகின்றன. அமெரிக்காவில் ஓர் ஆண்டுக்கு சரியான பரிந்துரையில் அளிக்கப்பட்ட மருந்துகளின் பின்விளைவால் இறந்தவர்கள் ஆண்டுக்கு 1,00,000 பேர். எதிர்பாராத ஓவர்டோஸ் அல்லது தவறான பரிந்துரையால் உயிரிழப்பவர்கள் இன்னொரு லட்சம் பேர். எல்லா நோய்களுக்கும் மருந்தில்லை என்பது எவ்வளவு நிச்சயமோ, அதைவிட நிச்சயம் ஒவ்வொரு மாத்திரையின் பின்னும் நோய் வருகிறது என்பது. இந்தியாவில் 60,000க்கும் மேற்பட்ட மருந்து வகைகள் (ஃபார்முலேஷன்ஸ்) கிடைக்கின்றன. இவற்றில் ஒருசில மட்டுமே அவசியமான, உயிர்காக்கும் மருந்துகள். பெரும்பாலானவை ஒன்றுக்கு மாற்று அல்லது ஒன்றுக்குப் பதிலானவை. . 

கோடிக்கணக்கில் செலவுசெய்து பல்லாண்டுகளுக்குப் பிறகு பல சோதனைகளைக் கடந்துதான் ஒரு மருந்து சந்தைக்கு வருகிறது. அதில் எப்படி தவறு நடக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, மருந்து நிறுவனங்களுக்கு இதுவொரு பிசினஸ் என்பதை. தயாரிப்பின்போதே ஆய்வு முடிவுகளை மாற்றும் வல்லமை கொண்டவையாக மருந்து கம்பெனிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. தாங்கள் விரும்பும் முடிவுகளை அடைய அவை முறைகேடுகள் செய்யவும் தயங்குவதில்லை. மருந்து கம்பெனிகளோடு போட்டி போட்டு பல தனியார் மருத்துவர்கள் மருந்துப் பரிந்துரைகளில் முறைகேடுகள் செய்கின்றனர்.

1995இல் கட்ஸ் இண்டர்நேஷனல் (CUTS) என்னும் அமைப்பு, மே.வங்கம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களின் நுகர்வோர் குழுக்களிடம் இருந்து, 2000க்கும் அதிகமான மருத்துவர்கள் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டுகளை வாங்கி ஆராய்ந்தது. அதில் 60% மருந்துகள் ஏதோ ஒருவிதத்தில் நோயாளியின் உடல்நிலைக்குப் பொருந்தாதவை, தவறானவையாக இருந்தது தெரியவந்தது. புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் துறை அண்மையில் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து அனுப்பப்பட்ட ப்ரெயின் ஸ்ட்ரோக் நோயாளிகளின் மருந்துச் சீட்டுகளை ஆய்வு செய்தது. அதில் 48% பேருக்கு அங்கீகாரம் இல்லாத மருந்து பரிந்துரைக்கப் பட்டிருந்தது. ஒன்று, அந்த மருத்துவர் அதைப்பற்றி அறியாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது தெரிந்தே, சுய லாபங்களுக்காகப் பரிந்துரைத்திருப்பார். இந்த இரண்டு கோணத்திலும் பாதிக்கப்படுபவர் நோயாளிதான். அண்மைக்கால ஆய்வுகளின்படி, மருந்துகளைச் சரியாக, முழுவதுமாக சாப்பிடுபவர்கள் வெறும் 23% மட்டுமே. 77% பேர் மறந்து விடுதல், சோம்பேறித்தனம், அலட்சியம் போன்றவற்றால் அவற்றைச் சாப்பிடுவதில்லை. இதனாலேயே நம்மில் பலரும் உயிர் பிழைத்திருக்கிறோம் போலும்.

இப்படியாகக் கொழுத்த முதலீடு செய்து பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளை நிறுவும் முதலாளிகள், மருந்து நிறுவனங்கள், கோடிக் கணக்கில் செலவழித்து மருத்துவப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் - இப்படி இவர்கள் அனைவரும் லாபமடைய வேண்டுமானால், அதற்கு முதல் தேவை நிறைய நோயாளிகள். நோயாளிகள் இருந்துகொண்டே இருந்தால்தான் இவர்கள் அனைவரின் இலக்கும் நிறைவேறும். அதற்காக இவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஒரு வணிக சூழ்ச்சியே, தேவையற்ற மருந்துகளையும் சோதனைகளையும் நம் தலையில் கட்டுவது.

    “தேவையில்லாத மருந்துகளை எழுதித் தருவது, பரிசோதனைகளை செய்யச் சொல்வது போன்றவை மருத்துவர்களுக்கு கமிஷனை கொண்டு வருவதால் மருத்துவர்கள் இவ்வாறு செய்கின்றனர். விபத்தில் தலைக் காயமடைந்த நண்பரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ‘தலையில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்; 2-3 லட்சங்கள் ஆகும்’ என்றனர். அங்கிருந்து அழைத்துவந்து மற்றொரு தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தோம். அங்கிருந்தவர்கள், ‘தலையில் ரத்தம் கட்டியிருக்கிறது, அறுவைச் சிகிச்சையெல்லாம் தேவையில்லை’ என்று சொல்லி விட்டனர். நாங்கள் பார்த்த இருவரும் அலோபதி மருத்துவர்கள்தான். அலோபதி முறையில் தவறில்லை. மருத்துவர்களைப் பொறுத்து தான் பாதிப்புகள் எனலாம். எக்ஸ்-ரே, ஸ்கேன் போன்றவை சிகிச்சைக்குத் தேவைப்பட்டால் மட்டுமே எடுக்கலாம். கமிஷன் வருகிறது என்ற நோக்கத்தில் தலைவலி பிரச்னைக்கெல்லாம் ஸ்கேன் செய்ய எழுதிக் கொடுக்கக் கூடாது. ஸ்கேனுக்கு ரூ.5000 செலவாகும் என்றால், ரூ.2000 மருத்துவருக்கு கமிஷனாக வருகிறது” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார் சமூகச் செயல்பாட்டாளர் ரகுநாத்.

ஆனால், கமிஷனுக்காக தேவையில்லாத சோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனே ஒப்புக் கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்பதே உண்மை. எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், வழக்கமான நோய்க்குறியியல் சோதனை போன்றவற்றுக்கு 30-50% வரை மருத்துவர்கள் கமிஷன் வாங்குவதாக ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் ஸ்டிங் ஆப்பரேஷன் மூலம் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்தே அமைச்சரின் இந்த அறிவிப்பு.

    அலோபதி மருத்துவர்கள் நோயாளிகளின் மனநிலையையே மாற்றிவிட்டிருக்கின்றனர். எந்த உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், அதற்கு எது காரணமாக இருந்தாலும், மாத்திரை அல்லது மருந்து எடுத்துக் கொண்டால்தான் நோய் குணமாகும் என்ற தவறான நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்துவிட்டனர். பெரிய மருத்துவமனை, நிறைய பணம் வசூலித்தால் அவர்கள் நல்ல மருத்துவர்கள் என்று நினைக்கின்றனர்.

 

நிறைய சோதனைகள் எழுதிக் கொடுத்தால் இதுதான் சரியான சிகிச்சை முறை என்கின்றனர். தனியார் மருத்துவமனைகள் பணம் சம்பாதிக்கின்றனர் என்றால், அதற்கான வாய்ப்புகளை மக்கள்தான் தருகின்றனர். லட்சக்கணக்கில் பணம் வாங்குபவரெல்லாம் நல்ல மருத்துவர் இல்லை. 30 ரூபாய் ஃபீஸ் வாங்கும் மருத்துவரும் நல்ல மருத்துவர்தான்” என்கிறார் அக்குபங்சர் மருத்துவர் சாம் நூர்தீன்.

நவீன மருத்துவம் என்ற பெயரில் பேராபத்தாக வளர்ந்திருக்கும் மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்து கம்பெனிகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றின் கூட்டணி விரிக்கும் வலையில் வீழ்ந்து, உடல் நலத்தையும் பணத்தையும் இழக்காமல் இருக்க வேண்டுமானால், ஆரோக்கியம் பற்றிய நமது அணுகுமுறை மாறவேண்டும். பிரபல மருத்துவரும், மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவருமான பத்மபூஷன் விருது பெற்ற அலோபதி மருத்துவர் பி.எம்.ஹெக்டே ஹெல்த் செக்கப் தேவையில்லாதது என்கிறார்..


 

    ஆரோக்கியமாக இருப்பவர் எதற்கு ஹெல்த் செக்கப் செய்ய வேண்டும்? அதிகம் குடிப்பவர்கள் மற்றும் புகைப்பவர்கள், உடல் சமிக்ஞைகளைக் காட்டும்போது உடலைச் சோதித்துக்கொள்வது நல்லது. ஆனால், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு அது தேவையல்ல. தன்னைச் சரிசெய்து கொள்ளும் திறன் பழுதுபட்டாலோ, நோயெதிர்ப்பு ஆற்றல் பாதிக்கப்பட்டாலோதான் உடல் அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும். தவறான வாழ்க்கை முறையும் அதற்கு காரணமாகும். அப்படியானால், நான் நன்றாகத்தான் இருக்கிறேன். என்று எப்படி அறிவது? என்று பொதுமக்களுக்கு சந்தேகம் வரலாம். வேலை செய்வதற்கான உற்சாகமும் இரக்கம் கொள்வதற்கான உத்வேகமும் இருக்கும்போது ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார்” என்கிறார் ஹெக்டே.

மருந்துகள் பக்கவிளைவுகளையும், பரிசோதனைகள் பண இழப்பையும் உண்டாக்குவதால், ஒரு மாத்திரையை விழுங்குவதற்கு முன் நாம் பலமுறை யோசித்துச் செயல்பட வேண்டும். பதட்டப்படாமல் மாற்று மருத்துவரிடமோ, தேவையற்ற மருந்துகளை எழுதித்தராத அலோபதி மருத்துவரிடமோ செகண்ட் ஒப்பீனியன் கேட்கலாம். நம்மைப் பாதிக்கும் பெரும்பாலான நோய்களை, நம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலமாகவே தவிர்க்கலாம். மருந்தால் குணமடையாத 51 நோய்களில் பல இதில் அடங்கும்.

அப்படிப் பாதிப்புகள் ஏதேனும் வந்தாலும் நம்பகமான, தரமான ஆயுர்வேதம், சித்த மருத்துவம், நாட்டு மருத்துவம், அக்குபங்க்சர், இயற்கை மருத்துவம், யுனானி போன்ற பாரம்பரியமான மருத்துவ முறைகளில் சிகிச்சை பெறலாம் (கவனம்: இதிலும் போலிகள் உண்டு. நல்ல மருத்துவரை விசாரித்து தேடி கண்டுபிடியுங்கள்). பொதுவாக, மாற்று மருத்துவம் உடலின் சமநிலையை மீட்டெடுக்கவே சிகிச்சை அளிக்கிறது. இதனால் உடல் தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்கிறது. மேலும், உடலை முழுமையான முறையில் அணுகுவதால், நோயாளியின் உடல் மற்றும் மனநிலையில் நேர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மாற்று மருத்துவமுறைகள் நோயாளியின் உடலுடன் ஒத்திசைந்து வேலை செய்கின்றன. மருத்துவர் நோயாளியுடன் அதிக நேரம் செலவிடுகின்றார். அவரது வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துகின்றார். இது நோயாளியை ரிலாக்ஸாக உணரவைத்து, குணமாக்குதலை துரிதப்படுத்துகிறது. எல்லாவற் றுக்கும் மேலாக செலவும் குறைவு. அலோபதி மருத்துவத்தால் கைவிடப்பட்ட பலரை மாற்று மருத்துவமுறை காப்பாற்றியுள்ளது.

அவசர மருத்துவ உதவிக்கு ஆங்கில மருத்துவம் தானே கைகொடுக்கிறது என்று கூறுவது மாற்று மருத்துவத்தைப் பற்றியோ, உடலின் இயல்பைப் பற்றியோ தெரியாதவர்களின் கூற்று என்கிறார் அக்குஹீலரான கிப்சுர் ரகுமான்.

எமெர்ஜென்ஸி சூழல்களையும் மாற்று மருத்துவர்களால் எளிதாகச் சமாளிக்க முடியும். அதற்குத் தேவை உடலைப் பற்றிய அடிப்படைப் புரிதல். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நல்ல மருத்துவரைக் கண்டறிவதுதான். ஏனென்றால், போலிகள் எல்லா இடத்திலும் இருக்கின்றனர். எது எதற்காகவோ மெனக்கெடும் நாம், நமக்கான நல்ல மருத்துவரைக் கண்டறியவும் சிரத்தை எடுக்கலாமே” என்று நம்பிக்கை அளிக்கிறார்.

இன்று நாம் கவலைப்படும் கடைசி விஷயமாக உடல்நலன் இருக்கிறது. ஆனால், மனித இனத்திற்கு அதுதான் அடிப்படை. நாம் உடலைக் கவனிப்பதில்லை. இயற்கையான அதன் உயிர் ஆற்றலை அறிந்து கொள்ளாமல், அதை இயந்திரத்தைப் போல அலட்சியமாகக் கையாள்கிறோம். முழுவதுமாக வெட்டெறியப்பட்ட ஒரு மரம், அதன் வேரில் இருந்து துளிர்த்து வருவதில்லையா? அதுபோலத்தான் மனித உடலும். உடலுக்கு எதிரான பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டாலே அது சிறப்பாக இயங்கும்.

அலோபதி மருந்து வர்த்தகச் சூழ்ச்சிக்கு நாமும் ஒரு எலியாக பலியாகிவிடாமல் இருக்க, மருந்துகளைவிட்டு விலகி நிற்போம்.

 

நன்றி

புதிய வாழ்வியல் மலர் செய்திக் குழு



    இந்த புத்தகத்தை இ-புத்தக வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால் இந்த 👇 முகவரிக்கு செல்லுங்கள்.

https://t.me/OurBodyItselfaDoctoreBooks/1278


    இதுவரை நான் ஆரோக்கியம் தொடர்பாக எழுதிய / வெளியிட்ட பகிர்ந்துகொண்ட அனைத்து இ-புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த 👇 Google Drive லிங்கிற்கு செல்லுங்கள்.

https://goo.gl/GBKHAb


இப்படிக்கு,

விழிப்புணர்வு வினீத்


கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!