Showing posts with label மரபு மருத்துவம். Show all posts
Showing posts with label மரபு மருத்துவம். Show all posts

மரபு மருத்துவம்: 11. நோயற்ற வாழ்வுக்கு வாழை இலை சாப்பாடு!

 

திருமணம், வீட்டு விசேஷங்களில் மட்டுமே வாழை இலையில் உணவு பரிமாறப்படுவதைப் பார்க்க முடிகிறது. சில இடங்களில் வாழையிலைகள் ஓரங்கட்டப்பட்டு, தீமை விளைவிக்கும் நெகிழித் தட்டுகளும் காகிதங்களும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், வாழை இலையின் மகத்துவத்தைப் பன்னெடுங்காலம் முன்பே உணர்ந்து, உடல் ஆரோக்கியம் காக்க அதை எல்லா வேளையிலும் பயன்படுத்திய பண்பாடு நம்முடையது.

அதைப் பதிவு செய்யும் வகையில், வாழை இலையில் உணவருந்துவதால் கிடைக்கும் ஏராளமான பலன்களைக் கீழ்க்காணும் அகத்தியர் குணவாகடப் பாடல் தெளிவுபடுத்துகிறது:  

தொக்கினுறு மின்னுஞ் சுகபோ கமுமன்னும்

அக்கினி மந்தம் பலமொடு திக்கிடுகால்

பாழை யிளைப்புமறும் பன்னுபித்த முஞ்சமனமாம்

வாழை யிலைக்குணரு வாய் 

தேகத்துக்கு தேஜஸ்

தேகத்தின் அழகைக் கூட்டுவதற்காகத் தினமும் விலை உயர்ந்த கிரீம்களையும் ஜெல்களையும் தவறாமல் பூசியும் பயனில்லையே என அங்கலாய்ப்பவர்கள், வாழை இலையில் சாப்பிடத் தொடங்கிவிட்டால் போதும், தேகம் பளபளப்படையும். வாழை இலையில் உணவருந்துவதால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடல் தூய்மையடையும். 

பித்த நோய்கள் மறைய

உடலில் பித்தத்தின் அளவை குறைக்கவும், உயர் ரத்தஅழுத்தம், தலைவலி, வயிற்றுப் புண், தோல் நோய்களின் தீவிரம் குறையவும் வாழை இலையில் உணவருந்தலாம். வாழை இலைக்குக் குளிர்ச்சியுண்டாக்கிச் செய்கை இருப்பதால், பித்தம் சார்ந்த நோய்கள் அனைத்தும் சாந்தப்படும். நோய்களைத் தவிர்க்க ஆசைப்படுபவர்களுக்கு ‘வாழை இலை உணவு’ அற்புதமான தேர்வு. 

செரிமானம் அதிகரிக்க

உண்ட உணவு செரிக்காமல் வயிற்றுக்குள் ஏற்படும் ‘கடமுட’ ஓசையை அடிக்கடி கேட்பவர்களும், சிறிதளவு சாப்பிட்டாலும் வயிறு உப்பிக்கொண்டு அவதிப்படுபவர்களும் வாழை இலையில் சாப்பிட்டுவந்தால் நல்ல செரிமானம் உண்டாகிப் பிரச்சினைகள் மறையும். மந்தத்தைப் போக்கும் குணம், வாழை இலைக்கு உண்டு. சூடான உணவு வகைகளை வாழை இலையில் வைத்துச் சாப்பிடும்போது, அதில் உண்டாகும் அற்புதமான இயற்கை மணமே பசி உணர்வைத் தூண்டிச் செரிமானச் சக்தியை அதிகரிக்கும். உணவின் மணத்துக்கும் பசி உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

நம்முடைய முதன்மை உணவான சோறும், மரக்கறி உணவு வகைகளையும் தாராளமாக வைத்துச் சாப்பிட வாழை இலையைத் தவிரச் சிறந்த உண்கலம் வேறு இல்லை. உணவு செரிமானத்துக்குத் தேவையான துணைப்பொருட்கள் அனைத்தும் வாழை இலையில் உண்டு. அதன் மற்ற உறுப்புகளான வாழைப் பூ, தண்டு, காய், பழம் ஆகியவற்றையும் சாப்பிட்டுவந்தால், பல்வேறு உடல் உபாதைகளிலிருந்து விடுதலை பெறலாம். 

நோய்களிலிருந்து விடுதலை

எந்தெந்த உணவுப் பொருட்களில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் கொட்டிக் கிடக்கிறது எனத் தேடுவதற்குப் பதிலாக, விரும்பும் உணவு வகைகளை வாழை இலையில் வைத்துச் சாப்பிட்டால், தேவைக்கு அதிகமாகவே ஆன்ட்டிஆக்ஸிடண்ட் கிடைக்கும். உடல் செல்களின் அழிவைத் தடுக்கக்கூடியதும், நோய்கள் வராமல் பாதுகாக்கக்கூடியதுமான சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடண்டான பாலி ஃபீனால்கள் (Epigallocatechin gallate) வாழை இலையில் பொதிந்திருக்கின்றன. அதிலுள்ள Polyphenol oxidase (PPO), நடுக்குவாத நோய் (பார்கின்சன் நோய்) வராமல் தடுக்கிறது.

உணவுப் பொருட்களின் சுவை தெரியாமல் திண்டாடும் ‘சுவையின்மை’ நோயாளிகளும் உடல் பலவீனமானவர்களும் வாழை இலையில் தொடர்ந்து புசித்துவந்தால், அறுசுவையையும் உணர்ந்து உடல் பலமடையும், விந்தணுக்களும் பெருகும்.

வாழை இலைப் பொதிவு

வாழை இலையில் உணவைப் பொதிந்து கொடுத்த காலம் மாறி, தீமை விளைவிக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) பைகளில் உணவைப் பொதிந்து தருவது ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய அம்சம். தொலைவான பயணங்களின்போதும் ஹோட்டல்களிலிருந்து உணவை வாங்கி வரும்போதும், பிளாஸ்டிக்குக்குப் பதிலாக வாழை இலையைப் பயன்படுத்துவது நல்லது.

அதேபோலச் சம்மணமிட்டு வாழை இலையில் உணவருந்தும்போது, வயிற்றுப் பகுதிக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது. சிறுவயதிலேயே வாழை இலையில் சாப்பிடும் பழக்கத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால் செரிமானம் சார்ந்த நோய்களைத் தடுக்கலாம், பசி உணர்வும் அதிகரிக்கும். 

நெகிழியைத் தவிர்ப்போம்

தொடர்ந்து பல நாட்களுக்கு நெகிழித் தட்டுகளில் சூடான உணவை வைத்துச் சாப்பிட்டுவருவதால், அதிலுள்ள மெலமைன், பாலிவினைல் குளோரைடு போன்ற வேதிப்பொருட்கள் உணவுடன் கலந்து நச்சுத் தன்மையை ஏற்படுத்தக் கூடும். வாழை இலையைப் போல, மெழுகு சாயம் பூசப்பட்ட காகிதங்களும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உண்பதால் காகிதங்களில் உள்ள சாயம் உடலில் சிறிது சிறிதாக நச்சுத் தன்மையை ஏற்றும். அதற்குப் பதிலாகப் பசுமையான வாழை இலையில் வெதுவெதுப்பான சோறு, கமகமக்கும் குழம்பு, காய்கறி, கீரைகள், ரசம், மோரை நம் மரபு முறைப்படி சாப்பிடும்போது, ஆரோக்கியத்துக்கு எந்தக் குறைவும் வராது.

மேற்கத்தியக் கலாச்சார மோகத்தால் பஃபே முறையில் நின்றுகொண்டே சாப்பிடப் பழகிவிட்ட நாம், இனிமேலாவது பொறுமையுடன் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது நல்லது! இந்த மாற்றம் நம் உடலுக்கு அவசியம் தேவை.

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

மரபு மருத்துவம்: 10. வேண்டாமே, பழைய உணவு.

 


ற்றங்கரை நாகரிகம் முதல் கடந்த நூற்றாண்டுவரை மனித இனம் தனக்குத் தேவையான உணவை, அன்றன்றைக்கு சமைத்தே சாப்பிட்டு வருகிறது. ஆனால் குளிர்பதனப் பெட்டியின் அதிரடி வருகைக்குப் பின்னர், முந்தைய நாளில் சமைத்த உணவை சற்று அதிகமாக சாப்பிடத் தொடங்கிவிட்டோம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை, வீடுகளில் மீந்த பழைய உணவு கழனிப் பானைக்குச் செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக, மீதமான பழைய உணவு குளிர்பதனப் பெட்டிக்குள்ளும், பிறகு நம் இரைப்பைக்குள்ளும்தான் அடிக்கடி தஞ்சமடைகிறது. ஆழ்ந்து யோசித்தால், மீந்த உணவுப் பொருட்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கழனிப் பானையாக நம் இரைப்பை மாறியிருப்பதை உணரலாம். 

அமுதெனினும் வேண்டாம்

நோய் நம்மை நெருங்காமல் இருக்க, ‘முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்ற கருத்தை வலியுறுத்துகிறது சித்த மருத்துவர் தேரையரின் கூற்று. ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டதாக கூறப்படும் ‘திரிகடுகம்’ எனும் நூலும், பழைய உணவை சாப்பிடாமல், நாள்தோறும் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.

பணிச் சுமை, நேரமின்மை, அவசர வாழ்க்கை என செயற்கை காரணங்களுக்காக நேற்றைய உணவை பத்திரமாகப் பாதுகாத்து இன்று சாப்பிடுகிறோம். ஆனால், இந்தப் பழக்கம் தொடரும்போது வயிற்றுப்போக்கு, செரிமானமின்மை, தோல் நோய், வாந்தி என பல்வேறு நோய்களுக்கு வழி அமைத்துக் கொடுத்துவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. சிறுதுளி பெருவெள்ளமாய், நஞ்சானது நமக்கே தெரியாமல் சிறிது சிறிதாக நாளடைவில் பெரிய நோய் அறிகுறிகளை உருவாக்கும். 

மாறுபடும் இயற்கைத் தன்மை

‘நேற்றைய உணவை இன்று சூடேற்றித்தானே சாப்பிடுகிறோம், அதில் கிருமிகள் இருந்தாலும் அழிந்துவிடுகின்றன, வேறு என்ன பெரிய பாதிப்பு வந்துவிடப் போகிறது?’ என்பதே பெரும்பாலோரின் கேள்வி. ஆனால், பாதிப்பு உறுதியாக இருக்கிறது என்பதே இதற்கு பதில்.

ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் நோய் தீர்க்கும் குணம் உண்டு. ஒரு உணவுப் பொருளின் சுவை, தன்மை, ஆயுட்காலம், சமைக்கப்படும் முறை, செரிமானத்துக்கு பின், அதில் உண்டாகும் மாறுபாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே, அதன் நோய் போக்கும் தன்மை அமையும்.

அதிகமாகச் சூடேற்றி அல்லது குளிர்மைப்படுத்தி, ஒரு உணவுப் பொருளை அதன் இயற்கை தன்மையிலிருந்து மாற்றும்போது, அதன் நோய் தீர்க்கும் பண்பும் மாறுபட்டு, நோய் உண்டாக்கும் காரணியாகிவிடும். அரிசியை அதிகக் கொதியில் சமைக்கும்போது குழைந்தோ, நசிந்தோ இயற்கை குணத்திலிருந்து மாறுபடுகிறது. அதைப்போல, ஒரு உணவை ஒரு முறை சமைத்து மறுநாள் சூடேற்றும்போது, உணவின் இயற்கைத் தன்மை மாறுபடும். அதில் ஒளிந்துக்கொண்டிருக்கும் கிருமிகள் முழுவதுமாக அழிந்துவிடுமா என்றால், அதுவும் இல்லை. 

பதப்படுத்தப்பட்ட உணவு

இன்றைய காலகட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் காரணமாக காலையில் சமைத்த சில வகை உணவு, அடுத்த வேளையே கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் அதை மறுநாள்வரை வைத்திருந்து சாப்பிடுவது உகந்ததல்ல. குளிர்பதன வசதி கொண்ட மிகப்பெரிய வணிக வளாகங்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவை (Canned and Tinned foods) முடிந்தவரை தவிர்த்துவிட்டு, தினமும் கிடைக்கும் கீரை, காய்களால் தயாரிக்கப்பட்ட உணவை அதிகமாக உட்கொள்ளலாம். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் நஞ்சு உண்டாவதற்கான சாத்தியம் மிக அதிகம். ‘சில நிமிடங்களில் ரெடி’ என விளம்பரப்படுத்தப்படும் சிற்றுண்டி வகைகளையும், அடைக்கப்பட்ட ‘ரெடிமேட்’ சூப் ரகங்களையும் சாப்பிடும்போது உடலில் அடிக்கடி விஷ உணவு அறிகுறிகள் உண்டாவது கவனத்துக்குரியது. 

விபரீதமாகும் பழைய அசைவம்

சைவ உணவைவிட அசைவ உணவைப் பதனப்படுத்தி சாப்பிடும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். கெட்டுப்போன அசைவ உணவில் கிருமிகள் மறைந்திருந்து, உடல் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்துவிடும். வீட்டுக்கு அருகே வாழும் கோழியையோ ஆட்டையோ அப்போதைக்குப் பிடித்து, யாரும் இன்றைக்கு அசைவ உணவைத் தயாரிப்பதில்லை.

மாறாக அதிக அறிமுகம் இல்லாத உணவகங்களில் சுவைத்துச் சாப்பிடும் இறைச்சி உணவு, எப்போது சமைக்கப்பட்டது என்பதிலும் நம்பகத்தன்மை இருப்பதில்லை. கெட்டுப்போன உணவின் மூலம் பூஞ்சைகளையும் (Mycotoxins), பாக்டீரியாவையும் இலவசமாக நம் உடலுக்குள் நுழைய அனுமதிக்கும்போது, உடனடியாகவோ சில நாட்கள் கழித்தோ விபரீத பாதிப்புகள் உண்டாகலாம்.

பழைய மீன் குழம்பு சுவையானது என்பதற்காக, ஒருவாரம்வரை வைத்திருந்துப் பயன்படுத்துவது அறிவுடைமை அல்ல.  


தேவையின்போது மட்டும்

வாரம் ஒரு முறையாவது உணவகங்களில் சாப்பிடப் பழகிவிட்ட மேல்தட்டுக் குடும்பங்கள், சுகாதாரமான மற்றும் நம்பகமான உணவகங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தேவை இருக்கும்போது மட்டும் உணவகங்களை நாடிச் செல்வது உசிதம். பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே போதுமான அளவு சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது. வீட்டிலேயே சமைக்கப்படும் உணவில் என்னென்ன பொருட்கள் சேர்கின்றன, அவற்றின் பயன்கள் என்ன என்பதை உணர்ந்து சாப்பிடுவது மனதுக்கும் உடலுக்கும் நல்லது என்கின்றன உளவியல் ஆய்வுகள். இதுவே நமது உணவுக் கலாசாரத்தின் பெருமை. அதை விடுத்து உணவகங்களில் சாப்பிடும் உணவில் என்ன கூறுகள் சேர்கின்றன என்பது தெரியாமல், வயிற்றுக்குள் அனுப்புவது திருப்திகரமான, முழுமையான உணவாக மாறாது.

நோய்களின் தொடக்கப் புள்ளி

சமைத்து பக்குவப்படுத்தப்பட்டு குளிர்ந்து பின்பு மீண்டும் சூடாக்கப்பட்ட உணவு, வயிற்றில் ஆமத்தை உண்டாக்கி பலவித நோய்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறது சித்த மருத்துவம். பழைய உணவைத் தொடர்ந்து சாப்பிடும்போது, செரிமான ஆற்றல் பாதிக்கப்படும். உணவைச் செரிப்பதற்கு தேவையான செரிமான அக்கினி (Digestive fire), கெட்டுப் போன உணவில் விஷமாக்கினியாக மாறாமல் இருக்க, தினமும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்.

நசிந்த பழைய உணவை உட்கொள்ளும்போது, நுண்கிருமிகளின் ஆதிக்கத்தால் விஷ உணவின் அறிகுறிகளான (Food poisoning) வாந்தி, சுரம், பேதி, மயக்கம் போன்றவை உண்டாகும். 

சேமிப்புக் கிடங்கு அல்ல

அறிவியல் வளர்ச்சியான குளிர்பதனப் பெட்டியை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதையே உணவின் சேமிப்புக் கிடங்காக நெடு நாட்களுக்குப் பயன்படுத்துவதுதான் பிரச்சினை.

சாப்பிடத் தகுந்த ஒரே பழைய உணவு எதுவென்றால், இரவில் சாதத்தோடு நீர் சேர்த்து, மறுநாள் காலையில் நலம் பயக்கும் பாக்டீரியாவுடன் உண்ணத் தயாராக இருக்கும் ‘நீராகாரம்’ மட்டுமே. தேவைக்குப் போக மீந்த உணவை குளிர் பதனப் பெட்டியில் அடைத்து வைக்காமல், பசியால் வாடுபவர்களுக்கு அன்றே தானம் செய்யலாம். அதிகளவில் மீந்த உணவைப் பெற்றுக்கொள்ள நிறைய தொண்டு நிறுவனங்களும் உள்ளன. 

ஆயுட்கால நிர்ணயம்

கம்பு, சோளம், நெல் வகைகள் போன்ற மூலப்பொருட்களை பதனப்படுத்தும் முறைகள் நம் பாரம்பரியத்தில் அதிகம். ஆனால் சமைக்கப்பட்ட உணவை நீண்ட நாட்கள் பதனப்படுத்திப் பயன்படுத்துவது, நமது பாரம்பரிய உணவு முறைக்கு எதிரானதே. நாம் சாப்பிடும் உணவின் ஆயுட்காலத்தை தரநிர்ணயம் செய்தால், உணவு நமது ஆயுட்காலத்தை நிர்ணயம் செய்யும். வயிற்றின் மென்தசைகளுக்கும், அதன் செரிமானச் சுரப்புகளுக்கும் கெட்டுப் போன கழிவு உணவுக்குப் பதிலாக, புதிதாகச் சமைத்த உணவைப் பரிசளித்தால் உடல்நலமும் புத்துணர்ச்சியும் புத்துயிரும் பெறும்.

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

மரபு மருத்துவம்: 09. தூக்கம் எங்கே போனது?

 



சைந்தாடும் சோளக் கதிர்களின் ஆட்டம், அவ்வப்போதுக் களைப்பைப் போக்கப் பகல் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு, மதிய வெயிலில் புங்கை மரப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மலர் படுக்கையில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, மாலையில் வீசும் தூய்மையான தென்றல் காற்றுடன் உறவாடிவிட்டு, இரவில் கோரைப் பாயில் மனிதன் நிம்மதியாகத் தூங்கிய காலம் ஒன்று இருந்தது!

கட்டுப்பாடின்றி விரைந்துகொண்டிருக்கும் வாகனங்களின் இரைச்சல் காதைத் துளைக்க, பகல் முழுதும் மூளை உழைப்பைச் செலுத்திவிட்டு, மதிய நேரத்தில் சிறிது நேரம் இளைப்பாற, ‘புஷ்-பேக்இருக்கையிலேயே சாய்ந்து விட்டு, உடலும் மனமும் புழுங்க மாலை வேளையிலே மாசுபட்ட காற்றுடன் உறவாடிவிட்டுஇரவில் மெதுமெதுவென்று இருக்கும் மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை தேட வேண்டிய நிலையே இன்றைக்குப் பலருக்கும் வாய்த்திருக்கிறது. 

என்ன தீர்வு?

நிம்மதியான தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் விபரீதங்களும், தூக்கத்தை மீட்பதற்கான வழிமுறைகளும்தான் என்ன?

கடுமையான மன அழுத்தம், நெருக்கடியான வாழ்க்கைச் சூழல், அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகள், எண்ணிலடங்கா மருந்து-மாத்திரைகள் போன்றவைதான் தூக்கம் பாதிக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணம். இரவு நேரங்களில் தூங்காமல் நைட் டியூட்டி பார்க்கும் பணியாளர்களுக்கும் வெகு விரைவில் தூக்கமின்மை பிரச்சினை வருவது உறுதி. 

இரவின் கொடை ‘மெலடோனின்

உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைத் தரும் நிலவின் மடியான இரவு நேரத்தில் உறங்குவதே சிறப்பு. இரவு நேரத்தில் அதிகமாகச் சுரக்கும் ‘மெலடோனின்’ ஹார்மோன், நம்முடைய தூக்கம், விழிப்பு நிலைகளை (Sleep-Wake cycle) கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

அதேநேரம் தூக்கமின்மையால் ஏற்படும் உடலியல் மாறுபாடு காரணமாகத் தலைபாரம், உடல் வலி, சோம்பல், உண்ட உணவு செரிக்காமல் இருப்பது, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், இதய நோய்கள், மயக்கம், உடல் பருமன், தெளிவற்ற மனநிலை ஆகியவை உண்டாகின்றன. 

நோய்களுக்கு வரவேற்பு

தூக்கம் பாதிக்கப்படும்போது, நமது உடலில் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் ‘லெப்டின்’ (Leptin) ஹார்மோனின் அளவு குறைந்தும், பசியை அதிகமாகத் தூண்டும் ‘கெர்லின்’ (Ghrelin) எனும் ஹார்மோனின் அளவு அதிகரித்தும் உடல் பருமனை உண்டாக்குகிறது. மேலும் ‘குளுகோஸ்’ வளர்சிதை சக்கரம் பாதிக்கப்பட்டு, நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

தூக்கம் சார்ந்து இன்றைக்கு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள செய்திகளை, பல ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் எழுதிய ‘சித்திமய கஞ்செறியும் ஐம்புலத் தயக்கம்' எனும் வரிகள் நித்திரை பங்கத்தால் மயக்கமும் உடல் சோர்வும் ஏற்படும் என்று சொல்கின்றன. 

வேண்டாம் பகல் உறக்கம்

பகலில் அதிக நேரம் உறங்குவதால், பல வகை வாத நோய்கள் வரலாம் என ‘பதார்த்த குண சிந்தாமணி’ என்னும் நூல் தெரிவிக்கிறது. பகல் உறக்கம் காரணமாக, மரபணுக்களில் மாற்றம் நிகழ்வதாகச் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக உறங்குவதால், இதய நோய்கள் வர வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் தேக அசதி, பசி மந்தம், மலக்கட்டு ஆகிய நோய்களும் உண்டாகலாம். 

சிகிச்சை

    • அமுக்கரா கிழங்கு பொடி, ஜாதிக்காய் தூள் ஆகியவற்றைத் தனித்தனியே பாலு டன் கலந்து இரவு நேரத்தில் அருந்தலாம்.
    • சிறிது கசகசாவைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
    • பாலும் தேனும் அதிகமாக உட்கொள்ளலாம்.
    • திராட்சை, தக்காளிப் பழங்களில் ஓரளவு ‘மெலடோனின்’ இருப்பதாலும், அன்னாசி, வாழைப்பழம், ஆரஞ்சு பழம் போன்றவை ‘மெலடோனின்’ உற்பத்தியைத் தூண்டுவதாலும், நல்ல தூக்கம் வர அதிகளவில் பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
    • அசைவ உணவு வகைகளில் முட்டை, மீன் வகைகளைச் சாப்பிடலாம்.
    • மருதாணிப் பூவைத் தலையணை அடியில் வைத்துத் தூங்கலாம்.
    • எண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளிப்பது நல்ல பலனைத் தரும்.
    • மனதை அமைதிப்படுத்தத் தியானப் பயிற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில யோகா சனங்கள், நடைப்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.
    • மனதுக்கு இதமான இசையை ரசிக்கலாம்.
    • தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே லேப்-டாப் மற்றும் தொலைக் காட்சியில் மூழ்குவதைத் தவிர்க்கலாம்.

அதி நித்திரையைத் தவிர்த்து, பகல் தூக்கத்தைத் தொலைத்து, குறை உறக்கத்தை வெறுத்து, வயதுக்குத் தகுந்த நேரம் மனஅமைதியுடன் மென்மையாக இமைகளை மூடுவோம். மற்றதெல்லாம் தானாக நடக்கும். 

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

குழந்தைகள் பத்து முதல் பதினைந்து மணி நேரமும், ஐந்து முதல் பதினைந்து வயதுவரை உள்ளவர்கள் எட்டு முதல் பத்து மணி நேரமும், பதினாறு முதல் முப்பது வயதுவரை உள்ளவர்கள் ஏழு மணி நேரமும், முப்பது முதல் ஐம்பது வயதுவரை உள்ளவர்கள் ஆறு மணி நேரமும், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் எட்டு மணி நேரமும் அவசியம் தூங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது சித்த மருத்துவம்.

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

08. இயற்கை தரும் அற்புத அழகு

10. வேண்டாமே, பழைய உணவு.


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

மரபு மருத்துவம்: 08. இயற்கை தரும் அற்புத அழகு



வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கரும்புகையும், ஊட்டச்சத்து இல்லாத உணவு வகைகளும், ரசாயன நுண்துகள்களும் முகத்தின் இயற்கைப் பொலிவைப் பெருமளவில் குறைத்துவருவதால், முகத்துக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் ஃபேஷியல் இந்தக் காலத்தில் தேவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அது இயற்கை பூச்சுகளைக் கொண்டு செய்யப்படுவதா அல்லது செயற்கை கிரீம்களின் உதவியுடன் செய்யப்படுவதா என்பதுதான் கேள்வியே. 

செயற்கை ஃபேஷியல்

‘எங்கள் கிரீம்களில் பழச்சாறு நிரம்பி இருக்கிறது’ என்று செயற்கை கிரீம் நிறுவனங்களே விளம்பரப்படுத்துவதற்கு இயற்கையின் துணையை நாடும்போது, பயனாளிகளான நாம் இயற்கையை நேரடியாகத் தேர்வு செய்வதுதானே சிறந்தது. ‘இயற்கையான நிறத்தை மாற்றி, செயற்கை சிவப்பழகைத் தருவோம்’ என்று நடைமுறையில் சாத்தியமற்ற பிரச்சாரத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள், அதே கிரீம்களால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி மூச்சே விடுவதில்லை. செயற்கைக் கலவைகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தும்போது தோல் சுருக்கம், நிற மாறுபாடு, கருந்திட்டுக்கள் போன்றவை உண்டாக வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிரீம்களில் இருக்கும் ரசாயனக் கலவைகளுக்கு, இயற்கை தந்த கொடையான நம் சருமத்தை எதற்காகப் பலி கொடுக்க வேண்டும்? இயற்கை முகப்பூச்சுகளை நாடுவோம்: 

பப்பாளி

செலவில்லா ஃபேஷியலைப் பப்பாளி பழம் தரும். பப்பாளிப் பழக் கூழை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள்வரை முகத்தில் பூசி வைத்து, பிறகு இளஞ்சூடான வெந்நீரில் முகத்தைக் கழுவினால் போதும். பழத்தில் உள்ள பப்பாயின் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தைப் பளிச்சிட வைக்கும். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பப்பாளித் தோலின் அடிப்பகுதியைத் தோலில் பூசிவர, சருமம் நீரோட்டம் பெற்றுப் பொலிவடையும். 

வெள்ளரி

வெள்ளரிக் காய்களை நறுக்கிக் கண்களில் வைத்துக் கட்டக் கண்கள் பிரகாசம் அடைவதோடு, கண் எரிச்சலும் மட்டுப்படும். கணினி முன்னால் அதிக நேரம் குடியிருக்கும் மென்பொருள் இளைஞர்கள் ‘கண்களின் மேல் வெள்ளரி’யை வைத்துக்கொள்வது சிறந்தது. அதேபோல, வெள்ளரிக்காயை அரைத்துப் பூசினால் தோலில் உள்ள இணைப்பு திசுக்கள் ஊட்டம் பெறுவதோடு, சூரிய வெப்பத்தால் உண்டாகும் எரிச்சலும் குறையும். கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைய வெள்ளரிக்காய் வளையத்தை வைப்பதோடு, விளக்கெண்ணெயையும் தடவலாம். நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தைப் போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள். 

கற்றாழை

முகத்தில் கற்றாழைக் கூழைத் தடவிவந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம். கிருமிநாசினி செய்கையும் வீக்கமுறுக்கி செய்கையும் கொண்ட கற்றாழை, தோலில் உண்டாகும் சுருக்கங்களைத் தடுக்கிறது. வணிகச் சந்தையில் உலாவரும் ஆன்டி-ஏஜிங்’ கிரீம்களில் கற்றாழைக்கு இலவச அனுமதி உண்டு. முகச்சவரம் செய்து முடித்த பிறகு ரசாயனம் கலந்த செயற்கை கிரீம்களுக்குப் பதிலாக, ‘தேங்காய் எண்ணெய் - கற்றாழைக் கலவையை’ (After shave mix) தடவுவதால் சவரம் செய்யும்போது உண்டான சிறு சிராய்ப்புகள் விரைவாகக் குணமடையும்; முகமும் பிரகாசமடையும்.

எண்ணெய்ப் பசை சருமத்தைக் கொண்டவர்களுக்குக் கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு. இன்றும் கிராமத்துச் சிறுவர்களின் இயற்கை ஒப்பனைப் பொருள் குளுகுளு கற்றாழைதான்! 

சந்தனம்

சந்தனச் சாந்தை நெற்றியில் தடவும் (‘தொய்யில் எழுதுதல்’) வழக்கம், சங்க கால மக்களிடம் இருந்துள்ளது என்னும் செய்தியைப் பரிபாடல் நமக்குத் தெரிவிக்கிறது. முகத்தை மெருகேற்ற நம் மரபோடு பயணித்த சந்தனத்தை மிஞ்ச, எந்த சிந்தடிக் கிரீம்களாலும் முடியாது. பாக்டீரியாவை அழிக்கும் தன்மையுடைய சந்தனத்தை நீருடன் கலந்து முகப்பருக்களில் தடவிவந்தால், விரைவில் குணம் கிடைக்கும். தோலுக்கு அடியில் உள்ள ரத்தத் தந்துகிகளில் செயல்புரிந்து தோலை மென்மையாக்குகிறது சந்தனம். 

தக்காளி


முகத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கவும் தடுக்கவும் தக்காளி ஃபேஷியல் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் தோலுக்கு ஊட்டம் தருகிறது. விளம்பரங்களில் வரும் ஆறு வாரச் சிவப்பழகைத் தர முடியாவிட்டாலும், வாரத்துக்கு இரண்டு முறை தக்காளியை மசித்துத் தயிரோடு சேர்த்துத் தடவிவந்தால், விரைவில் முகப்பருக்கள் நீங்கி முகத்தில் களிப்பு உண்டாகும்.

சத்தான உணவு

செயற்கை முகச்சாயங்களும் பியூட்டி பார்லர்களும் இல்லாத அந்தக் காலத்திலேயே கிளியோபட்ரா போன்ற பேரழகிகளை நமக்குப் பரிசளித்தது, இயற்கையின் கிளைகளான பழங்களும், காய்கறிகளும், உற்சாக வாழ்க்கை முறையுமே!

நிறைய தண்ணீர் அருந்துவது மேனியை அழகாக்கும் என்பது காலம்காலமாகத் தொடர்ந்துவரும் அழகுக் குறிப்பு. முகத்தை நிரந்தரமாக அழகுபடுத்த வெளிப்பூச்சோடு சேர்த்துப் பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழவகைகளை உட்கொள்ள வேண்டும்.

அதிகரிக்கும் மன அழுத்தம் முகப் பொலிவைப் பெருமளவு பாதிக்கும். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும், அழகை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தி. அத்துடன் செயற்கைப் பொருட்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு, வாழ்க்கையோடு இயற்கையை இணைத்துக்கொண்டு பொலிவோடு பயணிப்போம்! 

அழகூட்டும் இயற்கைப் பொருட்கள்

    • முல்தானிமட்டியை தயிரில் கலந்து பூச, சருமத் துவாரங்களில் உள்ள அழுக்கு நீங்கி முகம் புத்துணர்வு பெறும்.
    • சித்த மருந்தான திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து, முகம் கழுவிவந்தால் கிருமிகள் அழியும்.
    • தேனீக்களின் கடின உழைப்பால் உருவான தேன் சிறந்ததொரு ஒப்பனைப் பொருள். புண்ணாற்றும் செய்கையும் கிருமிகளை அழிக்கும் செய்கையும் இனிப்பான தேனுக்கு உண்டு.
    • அவ்வப்போது தயிரைக் கொண்டு முகத்தில் லேசாக மசாஜ் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளின் தீவிரம் குறையும்.
    • அரிசி மாவை முகத்தில் தடவ 'பளிச்’ வெண்மை முகத்துக்குக் கிடைக்கும். ஜப்பானியக் கலைஞர்கள் தங்கள் சருமத்தை மென்மையாக்க அரிசி மாவையே பயன்படுத்துகின்றனர்.
    • நன்றாகக் கனிந்த வாழைப்பழத்தை மசித்துப் பாலோடு கலந்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் வசீகரம் பெறும்.
    • அதேபோல, மற்றொரு சித்த மருந்தான சங்கு பற்பத்தைப் பன்னீரில் குழைத்து முகப்பருக்களின் மேல் தடவலாம்.

மரபு மருத்துவம்: 07. ‘மணம்’ நிறைந்த வாழ்க்கைக்கு!

 


வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல மனம் மட்டும் போதுமா? நறுமண உடலும் தேவை என்பது ‘கார்பரேட்’ கலாச்சாரத்தில் கட்டாயம்! எனவே வியர்வை நாற்றத்தைத் தடுக்க, தோலுக்கு மென்மையைக் கொடுக்க, உடல் அரிப்பைக் குறைக்க, பிஞ்சுக் குழந்தைகளுக்கு, வளர்ந்த குழந்தைகளுக்கு, ஆண்களுக்கு, பெண்களுக்கு எனத் தனித் தனி சோப்புக் கட்டிகள் இப்போது மிடுக்காக வணிகச் சந்தையில் வலம் வருகின்றன.

இது மட்டுமில்லாமல் சோப்புகளின் தூரத்து உறவினர்களான பாடி வாஷ், ஃபேஷ் வாஷ், பாடி லோஷன், மாய்ச்சரைஸர், கிளன்சர் போன்றவைக்கும் இப்போது இளைஞர்களிடையே ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவற்றின் அதிரடி வருகைக்கு முன், நம்முடைய தோலுக்குப் பளபளப்பையும் வளத்தையும் தந்து, நறுமணம் மூலம் மனதுக்கு இதம் கொடுத்துவந்தவை மரபு மூலிகைக் கலவைகளே! எந்தவித ரசாயனத்தின் பங்களிப்பும் இன்றி அவற்றிலிருந்து மனதை அள்ளும் வாசனை உருவாவது இயற்கையின் சிறப்பு. 

தோல் நோய்களைத் தவிர்க்க…

குழந்தைகள் முதல் முதியோர்வரை தோல் நலத்தை மேம்படுத்துவதில் மூலிகைக் குளியல் பொடி வகைகள் நிச்சயமான பலனைத் தரக்கூடியவை. அக்காலத்தில் குழந்தைகளுக்குப் பயத்த மாவு, இளைஞர்களுக்குச் சந்தனத் தூளோடு ரோஜா, செம்பருத்தியின் செவ்விதழ்களைக் கலந்து உலர வைத்த குளியல் பொடி, பெண்களுக்கு மஞ்சள் பொடி, அனைவருக்கும் ‘நலங்கு மாவு’ கலவை என செயற்கைக் கலப்படம் இல்லாத குளியல் பொடி வகைகள் பரிந்துரைக்கப்பட்டன.

இன்றோ, ரியல் எஸ்டேட் வர்த்தகத்தால் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதுபோல, சோப்பு வணிகத்தால் மூலிகைக் குளியல் பொடி வகைகளின் பயன்பாடு முடக்கப்பட்டுவிட்டது. முற்றிலும் மூலிகைப் பொடிகளை மறந்து, சோப்புக் கலாச்சாரத்துக்குப் பழகிப் போய்விட்டோம் நாம். இந்தப் பின்னணியில் அவ்வப்போது மூலிகைக் குளியல் பொடிகளைப் பயன்படுத்துவதன் மூலம், பல விதமான தோல் நோய்களைத் தவிர்க்க முடிவதோடு, தோலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் முடியும். 

இயற்கையான ‘ஸ்கிரப்’ 

பழங்காலம் முதல் மக்களின் முதன்மைக் குளியல் கலவையாக ‘நலங்கு மா’ பயன்பட்டு வருகிறது. பாசிப்பயறு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, கிச்சிலிக் கிழங்கு ஆகிய மூலிகைகளின் தொகுப்பே நலங்கு மா. இவற்றைத் தனித்தனியே உலர்த்திப் பொடி செய்து ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளலாம்.

இதை நீரில் குழைத்துக் குளிப்பதால் நாள் முழுக்க மணம் கமழும் நறுமணம் உண்டாகும். தோலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும். இதையே குளிக்கும்போது நீர் சேர்க்காமல், உலர்ந்த பொடியாகவே ஒரு முறை உடலில் தேய்த்து ‘ஸ்கிரப்’பாகப் பயன்படுத்த, மேனியில் அடைப்பட்ட துவாரங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, உடல் புத்துணர்ச்சி பெறும்.

நலங்கு மா கலவையைக் கொண்டு குளித்துவந்தால், தனியாகச் செயற்கை நறுமணப் பூச்சுக்கு அவசியம் இருக்காது. பெண்கள் பயன்படுத்தும்போது ‘நலங்கு மா’ கலவையில் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் தேவையற்ற இடங்களில் தோன்றும் முடி வளர்ச்சி அகற்றப்படும். 

கிருமிநாசினி சந்தனம்

கிச்சிலிக் கிழங்கு, நல்ல வாசனையைத் தரக்கூடியது. தோலில் உள்ள புண்களைக் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. கோரைக் கிழங்குப் பொடி சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களை நீக்கும். வியர்வை நாற்றத்தைத் தடுக்கும் குணமும் இதற்கு அதிகம். பாசிப்பயறு தூளை உடலில் தேய்த்துக் குளிக்க, உடல் குளிர்ச்சி அடையும். கார்போகரிசியைப் பால் விட்டு அரைத்து, தேய்த்துக் குளிக்க படர்தாமரை போன்ற தோல் நோய்களின் தீவிரம் குறையும். காளாஞ்சகப்படை (Psoriasis) எனும் தோல் நோய்க்கு, கார்போக அரிசியிலிருந்து செய்யப்படும் வெளிமருந்து பயன்படுகிறது.

தேமல், அரிப்பு போன்றவற்றை அழிக்கும் தன்மை சந்தனத் தூளுக்கு இருக்கிறது. கிருமிநாசினி (Anti-microbial) குணம் சந்தனத்துக்கு இருப்பதால், தோலில் உள்ள நுண்கிருமிகள் அனைத்தும் மடியும். உடலில் அதிகரித்த பித்தத்தை வெட்டிவேர் தணிக்கும். உடலில் தோன்றும் சிறு கொப்பளங்கள், கட்டிகளை வெட்டிவேர் குறைக்கும். வியர்க்குருவுக்கு வெட்டிவேர் பொடி சிறந்தது. மனம் மயக்கும் மணத்தைத் தரும் விலாமிச்சை வேரும் உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. 

காயம் ஆற்றும் துவர்ப்பு

நலங்கு மா கலவையில், கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, உலர்ந்த ரோஜா இதழ்கள், வேப்பிலை, ஆவாரம்பூ, வெந்தயம், ஏலரிசி, அகிற்கட்டை ஆகியவற்றைத் தேவைக்கேற்பச் சேர்த்தும் பயன்படுத்தலாம். அகில், சந்தனச் சாந்தை சங்க கால மக்கள் குளியல் கலவையாகப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தை ஈன்ற தாய்மார்களின் உடலமைப்பு மீண்டும் பழைய நிலைக்கு விரைவாகத் திரும்ப, கேரளத்தின் சில பகுதிகளில் குளியல் பொடி வகைகளை மட்டுமே உபயோகிக்கின்றனர்.

நெல்லிப் பொடி, கடுக்காய்ப் பொடி போன்ற துவர்ப்புப் பொருட்களை கிராம மக்கள் குளியலுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். துவர்ப்புச் சுவையுள்ள பொடி வகைகள், புண்களை விரைவில் குணப்படுத்தும் என்பது மருத்துவ அறிவியல். சித்த மருத்துவத்தில் உள்ள திரிபலா சூரணம், ஏலாதி சூரணம் போன்றவற்றையும் குளியல் பொடியாக மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காய் உணவாக மட்டும் இல்லாமல், குளிக்கும் நாராகவும் நெடுங்காலமாகப் பயன்பட்டு வருகிறது. முற்றி உலர்ந்த பீர்க்கங்காயின் நார்ப் பகுதிக்குள் மூலிகைப் பொடி வகைகளை வைத்து, மேற்புறத்தில் தேய்த்துக் குளிக்க, தோல் பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, தோலும் பொலிவடையும்.

உடலுக்கு நன்மை தரும் எண்ணெய்க் குளியலை மேற்கொள்ளும்போது, எண்ணெய்ப் பசையை முழுமையாக நீக்க சோப்பைவிட, குளியல் பொடிகளே உதவும். ஆனால் சோப்புகளின் வருகைக்குப் பின்னர், எண்ணெய்க் குளியல் முறை வெகுவாகக் குறைந்துவிட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம். மூலிகைக் கலவைகளைக் கொண்டு குளிப்பதால், கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஜவ்வாது மலைவாசிகள்.

சோப்புகளை மாற்றாதீர்

குழந்தைகளுக்குப் பல வித ‘பேபி சோப்’களைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்ளும் நாம் பாசிப் பயறு, கடலை மாவு, நலங்கு மாவு போன்றவற்றை மையாக அரைத்து நீரில் நன்றாகக் குழைத்துப் பயன்படுத்தினால், மூலிகை வாசனையோடு குழந்தையின் இயற்கை வாசமும் சேர்ந்து அற்புதமான நறுமணத்தைக் கொடுக்கும். பாசிப்பயறைத் தேங்காய்ப் பாலோடு சேர்த்து குழந்தைகளுக்கு லேசாகத் தேய்த்துக் குளிப்பாட்டுவதால் அவர்களின் தோல் பொலிவடையும். குழந்தைகளுக்கு அவ்வப்போது உண்டாகும் தோல் நோய்கள் தலை காட்டாது.

அடிக்கடி சோப்புக் கட்டிகளை மாற்றுவது பலரின் வழக்கம். இப்படி சோப்புகளை மாற்றிக்கொண்டே இருப்பதால், தோலின் சமநிலை பாதிப்படையும். அதற்கு பதிலாக மேற்குறிப்பிட்ட மூலிகைக் கலவைகளைப் பயன்படுத்திப் பாருங்கள். ‘மண’ மாற்றத்தை உணர்வீர்கள்!

தொடரும்...


இந்தத் தொடரின் பிற பாகங்களைக் காண


05. பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?  

06. காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

08. இயற்கை தரும் அற்புத அழகு

09. தூக்கம் எங்கே போனது?

10. வேண்டாமே, பழைய உணவு.


நன்றி - அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் மற்றும் இந்து தமிழ் திசை

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!