Showing posts with label Nocebo Effect. Show all posts
Showing posts with label Nocebo Effect. Show all posts

ப்ளேசிபோ விளைவு (Placebo effect) Vs நோசிபோ விளைவு (Nocebo effect)




ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) 





“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!.... 
இத்தனை நாட்போல் இனியும் நின் இன்பமே
விரும்புவன், நின்னை மேம்படுத்திடவே 
முயற்சிகள் புரிவேன்….” 

- மகாகவி பாரதியார் 

    டைவிடாமல் விஞ்ஞானிகளில் பலர் ஆர்வமுடன் ஆராய்ச்சி செய்யும் ஒரு துறை மனோசக்தியின் வலிமை பற்றியது! அவர்களே எதிர்பார்க்காத பிரமிப்பூட்டும் முடிவுகளை அவர்களின் ஆராய்ச்சிகள் தந்துள்ளன.

    இந்த மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஒன்று ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) என்பது.

ப்ளேசிபோ என்றால் என்ன? 

    ஆறுதல் மருந்து என்று தமிழில் கூறலாம். ஒரு நோயாளிக்கு மருத்துவர் ஒருவர் வியாதி ஒன்றுக்கு உரிய அபூர்வ மாத்திரை அல்லது மருந்தைத் தருவதாகச் சொல்லி விட்டு அவருக்கு சாதாரண மாத்திரை ஒன்றைத் தருவார், ஆனால் அதன் நல்ல விளைவுகளோ நோயாளியிடம் அபாரமாக இருக்கும். இது தான் ப்ளேசிபோ எபெக்ட்!

    பெயரளவில் மாத்திரையாக இருக்கும் ஒன்று உடல் ரீதியாக நோயாளி ஒருவரிடம் அபூர்வ விளைவை ஏற்படுத்த முடியுமா? தர்க்க ரீதியாக நிச்சயம் முடியாது என்று சொல்லி விட்டாலும் சோதனை செய்து பார்த்ததில் பல நோயாளிகள் நன்கு குணமடைந்து மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

    இதன் காரணம் மிக்க எளிமையான ஒன்று! நோயாளி அந்த மாத்திரை தன் உடலில் அற்புதமாக வேலை செய்கிறது என்று நினைப்பதனாலேயே அவர் குணமாகிறார்!

    இதை நிரூபிக்கும் விதத்தில் நூற்றுக் கணக்கான சோதனைகள் உலகளாவிய விதத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.

    இந்த ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றி வேடிக்கையான சோதனை ஒன்றை பிரின்ஸ்டன் பல்கலைக் கழக மாணவர்களில் சிலர் செய்து பார்த்தனர்.

    தங்கள் வகுப்புத் தோழர்களை அழைத்து ‘விசேஷமான பார்ட்டி’ ஒன்றை அவர்கள் தந்தனர். பார்ட்டி என்றாலே மதுபானம் உண்டல்லவா? அனைவரும் மனம் மகிழ்ந்து அதில் கலந்து கொண்டனர்.

    வழக்கமான பீரில் 5% ஆல்கஹால் இருக்கும். இவர்கள் கொடுத்த பானத்திலோ வெறும் 0.4% ஆல்கஹால் தான் “பெயருக்கு” இருந்தது. இந்தக் குறைந்த அளவு பானத்தை மதுபான வகையிலேயே சேர்க்க முடியாது. 

ஆனால் நடந்தது என்ன?

    இதைக் குடித்த தோழர்கள் வழக்கமான பானத்தை அருந்தியிருப்பதாக நினைத்தனர். ஆட்டமும் பாட்டமுமாக வழக்கமான பீர் பார்ட்டியின் ஆர்ப்பாட்டத்திற்கும் அதிகமாக அவர்களின் நடத்தை அமைந்தது.

    இந்த முடிவால் பதறிப் போன உலகின் பெரும் மருந்துக் கம்பெனிகள் நரம்பு மண்டலத்தில் ப்ளேசிபோ எந்த வித விளைவை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி ஆராய ஆரம்பித்து விட்டன!

    வெறும் சர்க்கரைக் கட்டிகள் பெரிய வேலையைச் செய்தால் அவர்கள் கம்பெனிகள் திவாலாகி விடுமே! உலகின் எண்ணெய் கம்பெனிகளை விட அதிகமாக விற்பனை செய்து லாபம் ஈட்டும் மருந்துக் கம்பெனிகள் பதறுவதில் வியப்பே இல்லை!

    சக் பார்க் என்பவர் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர். மனவிரக்தியால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த அவரால் வேலை செய்யவே முடியவில்லை. அவரிடம் மருத்துவர், “இதோ இது ஒரு சர்க்கரைக் கட்டி தான். சாப்பிடுங்கள் பலன் அளிக்கும்” என்று வேடிக்கையாகக் கூறியவாறே ஒரு ப்ளேசிபோ மாத்திரையைத் தந்தார்.

    ஆனால் அதைச் சாப்பிட்ட சக் பார்க்கோ, ‘மருத்துவர் விளையாட்டாக ஏதோ கூறுகிறார், தான் சாப்பிட்ட மாத்திரை சிறந்த ஒன்று’, என்று நினைத்தார்.

    விளைவு, அவர் மனச் சோர்வு போயே போனது! “நீங்கள் உண்மையிலேயே சர்க்கரைக் கட்டியைத் தான் சாப்பிட்டீர்கள்” என்று அவரிடம் கூறிய போது அவர் வியந்தே போனார்!

    பாஸிடிவ் திங்கிங் வேலை செய்யும் என்பதை புன்முறுவல் பூத்து மருத்துவர்கள் எள்ளி நகையாடுவது வழக்கம். ஆனால் பல சோதனைகள் நோயாளிகளைக் குணமாக்கியதைக் கண்டவுடன் அவர்கள் PET ஸ்கானர்கள், எம் ஆர் ஐ ஆகியவற்றின் மூலமாக இந்த சிகிச்சை முறையை ஆராய ஆரம்பித்தனர். சமீபத்திய ஆய்வு முடிவுகள் ப்ளேசிபோ மாத்திரையைச் சாப்பிட்ட ஒருவரின் மூளை அதிகமான டோபமைனைச் (Dopamine) சுரக்கிறது என்று கண்டுபிடித்துள்ளன. நோயாளிகள் ப்ளேசிபோ மாத்திரையை எடுத்துக் கொண்ட போது சரியான மாத்திரையைத் தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டவுடன் இந்த அபூர்வ விளைவு ஏற்படுகிறது!

    இதனால் சரியான மாத்திரை உண்மையில் என்ன விளைவை எப்போது ஏற்படுத்தும் என்பதை ஆராய்வதும் விஞ்ஞானிகளின் கடமையாக ஆகி விட்டது.

    மனோசக்தி உடலின் மீது பெரிய ஒரு வலுவான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்பதையே ப்ளேசிபோ சோதனை நிரூபிக்கிறது.

    கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் டார் வேகர் (Tor Wager), “ப்ளேசிபோ மூளையில் பல செய்முறைகளைத் தூண்டி உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை விளக்க ஒரு உதாரணத்தைக் கூறலாம். இரவு நேரத்தில் வாசலில் திடீரென ஒரு நிழலுருவம் தோன்றுகிறது. உடனே உங்கள் விழிகள் விரிகின்றன. உடல் எச்சரிக்கை நிலையை அடைகிறது; உடம்பெல்லாம் வியர்க்கிறது. ஆனால் கூர்ந்து கவனித்த மறு நிமிடம் அது உங்கள் கணவர் தான் என்று தெரிந்தவுடன் அரை வினாடியில் மகிழ்ச்சி மேலோங்கி உடல் பூரித்து பயம் போயே போய் விடுகிறது! நம்பிக்கை மாறியவுடன் உணர்ச்சிகள் மாறுகின்றன. ஆனால் இப்போது எதிர் கொள்ள வேண்டிய விஷயம் எப்படி இந்த அபூர்வமான வலிமை வாய்ந்த ‘நம்பிக்கை மாற்றத்தை’ ஏற்படுத்துவது என்பது தான்!” என்று விளக்கமாக இது பற்றி இப்படிக் கூறினார்!

    ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் தன்னார்வத் தொண்டர்களிடம் ஒரு விநோதமான சோதனை நடத்தப்பட்டது. லாரா டிப்பிட்ஸ் என்ற பெண்மணிக்கு வலது தோளிலும் கையிலும் தாங்கமுடியாத வலி. அவரை தானே நேரில் ப்ரெய்ன் வேவ்களை ஸ்கானரில் பார்க்க ஏற்பாடு செய்தனர். "வலி தசைகளில் இல்லை அல்லது காயம் அடைந்த கையில் இல்லை. அது மூளையில் இருக்கிறது” என்றார் அந்தப் பெண்மணி! “ஒரு சிக்னல் காயப்பட்ட இடத்திலிருந்து கிளம்பி மூளைக்குச் செல்கிறது. அதை மூளை வலி என்று “எடுத்துக் கூறுகிறது”! என்கிறார் அவருடைய மருத்துவர்.

    எந்த விதமான எண்ணம் வலியை உண்டாக்குகிறது, எது வலியை நீக்குகிறது என்பதையும் அவர் ஆராய ஆரம்பித்தார். மனச் சித்திரங்கள் ஓரளவு நல்ல பலனைத் தருகின்றன என்பது அவரது கண்டுபிடிப்பு.

    ஸ்கானரில் வலி ஏற்படும் மூளைப் பகுதிகளைப் பார்த்து நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியும் என்று நினைக்கும்போதே பாதி வலி போய் விடுகிறது. இது அதிசயமாக இருக்கிறது” என்றார் லாரா.

    ஆக அறிவியல் சோதனைகளின் முடிவுகளால் மருத்துவர்களும் கூட மனோசக்தி உடலின் மீது வலுவான நல்ல ஆதிக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று கூற ஆரம்பித்துவிட்டனர். அதாவது MIND OVER BODY என்பது நிரூபணமாகி வருகிறது! ஆறுதல் மருந்தான ப்ளேசிபோ அற்புத மருந்தாக அமைவது மனோசக்தியின் மூலமாகத் தான்!

   நன்றி : ச.நாகராஜன் மற்றும் பாக்யா இதழ்

    இப்போது புரிகிறதா எந்த வியாதியையும் குணப்படுத்த முடியாவிட்டாலும் ஆங்கில மருத்துவத்திற்கு ஏன் இவ்வளவு வாடிக்கையாளர்கள் என்று? எல்லாம் ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) இன் மகிமைதான்.
 

இந்த பதிவை வாசிக்க இங்கு 👇 செல்லவும் 

    
ஒரு குட்டிக் கதை...
 
    ஒரு விமானப் பயணத்தின்போது, 60 வயது முதியவர் ஒருவருக்குத் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் மனைவி பதறிப் போனார். செய்வதறியாது தவித்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு மத்தியில், ஒருவர் எழுந்தார். தான் ஒரு மருத்துவர் என்று கூறிக் கொண்டு முதியவருக்கு அருகில் சென்றார். சோதித்துப் பார்த்து விட்டு தன்னிடம் இதற்கு மருந்து கையிலேயே இருக்கிறது என்று ஆச்சர்யப்படுத்தினார். குப்பியிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்துக்கொடுத்து உடனே தண்ணீர் இல்லாமல் விழுங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். முதியவரும் பதறியபடி அதை விழுங்கினார். பத்து நிமிடத்தில் அவருக்குக் குப்பென்று வியர்த்தது. நெஞ்சு வழி நின்றிருந்தது. அந்த மருத்துவருக்கு அவர் நன்றி சொல்ல, எல்லோரும் கரவொலி எழுப்பினர். அந்த முதியவரின் மனைவி மருத்துவரிடம் வந்து தனியாக நன்றி கூறினார். அந்த மாத்திரைக்கு ஏதேனும் பணம் தர வேண்டுமா என்று வினவினார்.

    புன்முறுவலுடன் மருத்துவர், “அதெல்லாம் வேண்டாம். இது சாதாரண வைட்டமின் மாத்திரைதான். நெஞ்சு வலி மாத்திரை எல்லாம் இல்லை” என்று கூற முதியவரின் மனைவிக்கு அதிர்ச்சி.

    பெரும்பாலோனருக்கு இவ்வகை அபாயத்தின் போது நம்பிக்கை ஏற்பட்டாலே போதும், பாதி வியாதி ஓடிவிடும். நோய் பாதி என்றாலும், மீதி பாதிப்பிற்கு பதற்றமும், பயமும்தான் காரணம். உங்கள் கணவருக்கும் அதே பிரச்னைதான். நான் செய்தது முதலுதவி போலதான். ஊருக்குச் சென்றவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று முடித்தார் மருத்துவர். 

    இந்தக் கதையின் நம்பகத்தன்மை, மருத்துவ தர்க்கம் படி இது சரியா, இப்படி எல்லாம் நடக்குமா என்று நாம் ஆராயத் தேவையில்லை. ஆபத்தின் போது பதற்றமும் பயமும் வேண்டாம் என்ற செய்தியைச் சொல்ல மட்டுமே இந்தக் கதை பேசப்படுகிறது. சரி, இங்கே எதற்கு இந்தக் கதை?

    அந்த முதியவருக்கு அளிக்கப்பட்ட அந்தச் சாதாரண வைட்டமின் மாத்திரை ஒரு பிளாசிபோ போலதான். ஒரு நோய்க்கான மாத்திரையாக அளிக்கப்படும் இது உண்மையில் அந்த நோய்க்குத் தொடர்புடையதே அல்ல. நோயாளியின் மனத்திருப்தி, நாம் மாத்திரை சாப்பிட்டு விட்டோம், நமக்கு எந்த பாதிப்பும் இனி வராது என்ற நம்பிக்கையை விதைக்க மட்டுமே இது பயன்படுகிறது. பிளாசிபோ மாத்திரைகள் மட்டுமில்லை, டானிக் மருந்துகள் கூட இருக்கின்றன. இவ்வகை பிளாசிபோ மருந்துகளால் ஏற்படும் இந்த வகை பாசிட்டிவ் தாக்கத்தைத் தான் பிளாசிபோ எஃபக்ட் (Placebo Effect) என்கிறார்கள். இதன் மூலம் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.

இந்த முறை வெற்றியா?

    பொதுவாக, “டாக்டர் நைட் தூக்கமே வர்றதில்லை. ஏதாவது மாத்திரை குடுங்களேன்” என்று மருத்துவரிடமே நச்சரிப்பவர்களுக்கு, மருத்துவர்கள் ஒரு சில சமயம் பரிந்துரைப்பது பிளாசிபோ வகை மாத்திரைகளைத்தான். பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் இதில் எந்த வகை மருந்தும் கலந்திருக்க மாட்டார்கள். இதனால் எந்த பாதிப்பும் வராது. அவர்களும் மாத்திரை சாப்பிட்டு விட்டோம், நிச்சயம் தூக்கம் வந்துவிடும் என்று படுப்பதால்  தூக்கமும் வந்து விடும். உங்கள் மூளை ’இது சரியான மருத்துவம், உன்னை நீ சரி செய்துகொள்’ என்று உடலுக்குக் கட்டளையிட்டு விட்டால் போதும், உங்கள் உடல் தானாகவே சரி ஆகிவிடும். இதனாலே பிளாசிபோ வகை மருத்துவ முறை உளவியல் சார்ந்ததாகி விடுகிறது. இந்தக் கட்டுரை பிளாசிபோ வகை மருத்துவத்தைக் குறித்து விளக்க மட்டுமே.

    நன்றி - விகடன்

  

நோசிபோ எபெக்ட் (Nocebo effect) 

.


மனம் என்பது சக்தி வாய்ந்த ஒரு கருவி. வியாதிக்கு எதிரான இந்தப் போராட்டமானது அணு அணுவாக உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் ஆக இரண்டினாலும் ஆனது

 – டேவ் லினிகர்

    னோசக்தியின் வலிமைக்கு உதாரணமாக ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றிக் கூறும் போதே அதற்கு எதிர்ப் பக்கமான நோசிபோ எபெக்ட் (Nocebo effect) பற்றியும் அறிய வேண்டியது அவசியமாகிறது.

    18ஆம் நூற்றாண்டில் உருவான ப்ளேசிபோ என்ற சொல்லுக்கு “நான் இன்பம் தருவேன்” (I will please) என்று அர்த்தம். இதற்கு எதிர்மாறாக நெகடிவ் மனோநிலை ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பது நோசிபோ விளைவு என்று கூறப்படுகிறது. நோசிபோ என்ற லத்தீன் வார்த்தைக்கு அர்த்தம் ‘நான் தீங்கு விளைவிப்பேன்’ (I will harm) என்பதாகும். 

    கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டோர் கீமோதெராபிக்கு முன்னர் வாந்தி எடுப்பதையும் ஒரு சாதாரண செடியைத் தொட்டவுடன் விஷச் செடியைத் தொட்ட பாதிப்பு வந்தது போல் சிலர் அலறுவதும் இதற்கு உதாரணங்கள். 

    இதனால் பாதிக்கப்படுவோர் ஏராளம். உதாரணமாக, அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கேஸ் உலகெங்கும் பிரபலமாகப் பேசப்படுகிறது. இந்தச் சம்பவம் நியூ ஸயின்டிஸ்ட் இதழில் பதிவு செய்யப்பட்ட ஒன்று.

    அலபாமாவைச் சேர்ந்த வான்ஸ் என்பவர் கல்லறை ஒன்றுக்குச் சென்று மந்திரவாதி ஒருவரைப் பார்த்தார். மந்திரவாதி, வான்ஸிடம் ‘நீ சீக்கிரமே சாகப் போகிறாய்’ என்று கூறி விட்டார். இதை நம்பி விட்ட வான்ஸுக்கு உடல்நலம் சில வாரங்களிலேயே படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. இறக்கும் நிலைக்கு வந்து விட்ட வான்ஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் உடல்ரீதியாக அவருக்கு எந்த நோயும் இல்லை என்று உறுதியாகக் கூறினர். வான்ஸின் மனைவி டாக்டர்களிடம் வான்ஸ் கல்லறைக்குச் சென்று மந்திரவாதியைச் சந்தித்ததையும் அவன் வான்ஸை சீக்கிரமே இறக்கப் போகிறாய் என்று கூறியதையும் சொன்னார். 

    டாக்டர்களின் ஒருவரான டாக்டர் டோஹெர்டிக்கு ஒரு யோசனை உதித்தது. மறுநாள் வான்ஸ் தம்பதிகளை அழைத்த டாக்டர் டோஹெர்டி, தான் முதல் நாளன்று கஷ்டப்பட்டுத் தேடி மந்திரவாதியைச் சந்தித்ததாகவும் என்ன செய்தாய் என்று அவனை மிரட்டியதாகவும், கடைசியில் அவன் பயந்து போய் நடந்ததைக் கூறி விட்டான் என்றும் கூறினார். மந்திரவாதி ஒரு பல்லியை வான்ஸின் உடலுக்குள் செலுத்தி விட்டதாகவும், உடலின் உள்ளே இருக்கும் பல்லி படிப்படியாக வான்ஸின் உடலை அரிப்பதாகவும் டாக்டர் டோஹெர்டி கூறினார். அதற்கு மாற்று மருந்தைத் தான் தயாரித்திருப்பதாகவும் அந்த இஞ்ஜெக்‌ஷனை இப்போது போடப் போவதாகவும் கூறினார். வான்ஸுக்கு இஞ்ஜெக்‌ஷன் போடப்பட்டது. என்ன ஆச்சரியம், கஷ்டப்பட்டு பச்சையான பல்லி ஒன்றை வான்ஸின் உடலிலிருந்து எடுத்த அவர் அதை வான்ஸ் தம்பதியினரிடம் காண்பித்து இனி மந்திரவாதியின் பல்லி ஒன்றும் செய்ய முடியாது என்று சந்தோஷத்துடன் உரக்கக் கூவினார்.

    வான்ஸ் அமைதியாக அன்று இரவு உறங்கினார். மறுநாள் காலையில் எழுந்த வான்ஸுக்கு ஒரே பசி. உடலில் வியாதியே இல்லை. சில நாட்களிலேயே பழையபடி ஆனார் வான்ஸ். டாக்டர் சொன்னது முழுப் பொய். பல்லியும் பொய், மாற்று மருந்தான இஞ்ஜெக்‌ஷனும் பொய், உடலில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறிய பச்சைப் பல்லியும் பொய். பெரிய டிராமாவை நன்கு ‘செட்-அப்’ செய்து போட்டிருந்தார் டாக்டர்.

    இந்த சம்பவத்தை வேறு நான்கு பேரும் உறுதி செய்த பின்னர் இது அந்த பிரபல விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டது. வூடு என்னும் மந்திரவாத வித்தை இப்படித் தான் மனதளவில் ஒருவரை வாட்டி வதைத்துக் கொல்கிறது. இந்த விளைவைத் தான் நோசிபோ எபெக்ட் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    ப்ளேசிபோ விளைவு சர்ஜரியைத் தவிர்க்கிறது. பருக்கள் மற்றும் தோல் மீது வரும் கட்டிகளைப் போக்குகிறது. காயங்களைக் குணப்படுத்துகிறது. இதற்கு மாறான நோசிபோ எபெக்ட் எதிரமறையான மனோசக்தியைத் தூண்டி விட்டு வாந்தி, காதில் இரைச்சல், பயம், நரம்புத் தளர்ச்சி, நினைவாற்றல் இழப்பு போன்றவற்றைத் தருகிறது.

    இன்னொரு ஆய்வில் இறக்கப் போகிறோம் என்று நினைத்தவர்களையும், வியாதியினால் இறக்க மாட்டோம், மீண்டு வீட்டுக்கு போவோம் என்பவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இறக்கப் போகிறோம் என்று நம்பியவர்கள் இறந்தே போயினர்.

    இதய நோய் வந்துவிட்டது என்று நம்பும் பெண்களுக்கு சாதாரண இதய நோய் உள்ளவர்களை விட நான்கு மடங்கு அதிகம் இறக்கும் அபாயம் ஏற்படுகிறது. சீரான இரத்த அழுத்தம் மற்றும் நல்ல உடல்நிலையைக் கொண்டிருந்தாலும் இறப்பதன் காரணம் எதிர்மறை மனோசக்தியாக தாங்கள் இறக்கப் போகிறோம் என்ற அவர்களது (அவ)நம்பிக்கையே இதற்குக் காரணம்!

    சாஸ் என்ற பெண் மருத்துவரின் சகோதரர் ஸ்டீவ். நுரையீரலில் கட்டி இருப்பதைக் கண்டு பிடித்த அவரது டாக்டர் தற்போது பயமில்லை என்றும் இன்னும் ஐந்து வருடங்கள் அவர் உயிர் வாழ்வார் என்றும் ஆறுதலாகக் கூறினார். ஸ்டீவ் டாக்டரை நம்பினார். சரியாக ஐந்து வருடங்கள் கழித்து ஒரு நாள் அவர் மாவி என்ற கடற்கரையில் நினைவின்றிக் கிடந்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் நான்கு நிமிடங்கள் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லாமல் இருந்ததால் இறந்து போனார். அவரது நம்பிக்கையே அவரை ஐந்து வருடங்கள் உயிர் வாழ வைத்தது. அதுவே ஐந்து வருடங்கள் முடிந்தவுடன் அவரை “வழி அனுப்பி” வைத்தது.

    இப்படி “நாள் குறித்துஆறுதல் சொல்லும் டாக்டர்கள் நோயாளிக்கு நல்லது செய்வதில்லை. பொதுவாக அவர்கள் தீங்கையே விளைவிக்கிறார்கள்.

    இன்ஸ்டிடியூட் ஆஃப் நோயடிக் ஸயின்ஸஸ் (The Institiute of Noetic Sciences) ஆராய்ந்து பதிவு செய்த 3500க்கும் மேற்பட்ட கேஸ்கள் கூறுவது ஒரே ஒரு உண்மையைத் தான்! தீர்க்க முடியாத வியாதி என்று ஒரு வியாதி உலகத்திலேயே இல்லை. ஆனால் நமக்கு இந்த வியாதி குணமாகாது என்று மனிதன் நம்பும் நம்பிக்கையே அவனது வியாதியைக் குணமாக்காது செய்து விடுகின்றது.

    டாக்டர் லிஸா ரான்கின் என்பவர் மைண்ட் ஓவர் மெடிசின்: ஸயிண்டிஃபிக் ப்ரூஃப் தட் யூ கேன் ஹீல் யுவர்செல்ஃப் (Mind Over Medicine: Scientific Proof That You Can Heal Yourself – Dr Lissa Rankin) என்ற தனது நூலில் மனத்தின் ஆதிக்கம் உடலில் அதிகம் உண்டு; அது தீராத வியாதிகளையும் தீர்த்து வைக்கும். நம்புங்கள், குணப்படுவீர்கள் என்கிறார்.


இந்த புத்தகத்தை வாசிக்க 👇


    ஆக ப்ளேசிபோ எபெக்ட் மற்றும் நோசிபோ எபெக்ட் பற்றி அறிந்து கொண்டோர் தெரிந்து கொள்ளும் ஒரு அறிவியல் உண்மை – மனோசக்தி மூலம் ஒருவர் சீரான உடல்நலத்தைப் பெற்று ஆக்கபூர்வமாக முன்னேறலாம் என்பதையே!

நன்றி : ச.நாகராஜன் மற்றும் பாக்யா இதழ்

நலம் நலமறிய ஆவல் - 02. நோய் முதல் நாடி



   




    ஒரு புகழ்பெற்ற மருத்துவரும் அவரது நண்பரும் ஒருநாள் காரில் போய்க் கொண்டு இருந்தனர். திடீரென்று நண்பருக்கு கடுமையான வயிற்றுவலி. துடித்தார். ஏதாவது மாத்திரை கொடு, நீதான் டாக்டராயிற்றே என்று புலம்ப ஆரம்பித்தார்.

’அடடா, நான் மருந்து ஒன்னும் எடுத்துவரலியே’ என்று முதலில் சொன்ன மருத்துவர், கொஞ்ச நேரம் கழித்து, ‘சரி, ஒரு அற்புதமான வெளிநாட்டு மாத்திரை ஒன்னு இருக்கு. அது ரொம்ப காஸ்ட்லி. கண்ண மூடு, வாயைத்திற, மாத்திரையை நாக்கில் வைக்கிறேன். இருபது வினாடிகள் வைத்திரு. வயித்துவலி போயிடும். அப்புறமா மாத்திரையை நா எடுத்துடுவேன். அதை கழுவிட்டு மறுபடி நான்கூட பயன்படுத்திக்கலாம். சரியா?’ என்று சொல்லிவிட்டு அவர் நாக்கில் சட்டென ஒரு மாத்திரையை வைத்து அழுத்தினார். சரியாக இருபது வினாடிகள். என்ன அற்புதம்! வயிற்று வலி போயே விட்டது!

நண்பருக்கு ரொம்ப சந்தோஷம். ’நீ உண்மையிலேயே அற்புதமான மருத்துவன் தான்டா’ என்று நண்பரைப் புகழ்ந்தார். அந்த அற்புத மாத்திரையைப் பார்க்க ஆசைப்பட்டார்.

‘பாக்கணுமா? இரு, காட்றேன்’ என்று சொல்லி ஜேபியிலிருந்து மாத்திரையை எடுத்தார் மருத்துவர். அது அவரது சட்டை பட்டன்!

சட்டை பட்டனைத்தான் சத்தான மாத்திரை என்று பொய்சொல்லி அவர் நாக்கில் வைத்துக் கொஞ்சநேரம் அழுத்திவிட்டு மீண்டும் எடுத்துக்கொண்டார் அந்த மருத்துவர். ஆனால் உண்மையான மாத்திரை என்ன செய்யுமோ அதை அந்த பட்டனும் செய்தது! இதற்கு மருத்துவ உலகில் ’ப்ளேசிபோ இஃபக்ட்’  (Placebo Effect)  என்று பெயர்.


மோஸ்லீ பரிசோதனை

டாக்டர் மோஸ்லீ என்ற அறுவைசிகிச்சை நிபுணர் ஒரு பரிசோதனை செய்தார். அறுவை சிகிச்சையில் ப்ளேசிபோ இஃபக்ட்-டுக்கெல்லாம் வேலை கிடையாது என்று அவருக்குத் தெரியும். கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையை அவர் செய்ய இருந்தார். அவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து அவற்றில் இரண்டு குழுக்களுக்கு உண்மையாகவே அறுவை சிகிச்சை செய்தார். மூன்றாவது குழுவில் இருந்த நோயாளிகளுக்கு மற்றவர்களைப் போலவே மயக்க மருந்து (லோகல் அனஸ்தீஸியா) கொடுக்கப்பட்டது. 

ஆனால் அவர்களுக்கு உண்மையில் அவர் ஆபரேஷன் எதுவும் செய்யவில்லை. முட்டியின்மீது மூன்று இடங்களில் லேசாக வெட்டி வைத்தார். முறையான ஆபரேஷனுக்கு முன் அப்படிச் செய்வது வழக்கம்தான். அது ஒரு முன்னேற்பாட்டு ’இன்சிஷன்’ (வெட்டு) மட்டுமே.

அதன் பின் உண்மையாகவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களிடம் பேசுவது போலவே அவர்களிடம் பேசினார். நாற்பது நிமிடங்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்து முடித்துவிட்ட மாதிரி, அவர் போட்ட லேசான இன்சிஷன்களை அவரே தைத்தும் விட்டார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் எல்லா ’போஸ்ட்-ஆபரேட்டிவ்’ கவனிப்புகளும், மரியாதைகளும் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டன.

விளைவுகள் ஆனந்த அதிர்ச்சியைக் கொடுப்பதாக இருந்தன. ஆம். உண்மையிலேயே மூட்டு ஆபரேஷன் செய்யப்பட்டவர்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. அவர்கள் எந்தப் பிரச்சனையும் இன்றி நடந்து போனார்கள், கூடைப்பந்து விளையாடினார்கள். அறுவை சிகிச்சைக்கு முன்னர் செய்ய முடியாததையெல்லாம் இப்போது செய்தார்கள்.

அறுவை சிகிச்சை செய்த மாதிரி காட்டப்பட்ட மூன்றாவது குழுவில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களைப் போலவே குணமடைந்தார்கள்! அவர்களும் நடந்தார்கள், கூடைப்பந்து ஆடினார்கள், தங்கள் பேரக் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிச் சென்றார்கள்!

அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவே இல்லை என்ற உண்மை சொல்லப்படாமலே அவர்களுடைய நடவடிக்கைகள் இரண்டு ஆண்டுகளாக கவனிக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளாகியும் அவர்களுக்கு மூட்டில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை! அதன் பிறகு அவர்களுக்கு உண்மை சொல்லப்பட்டது. அப்போதும் அவர்களுக்கு எதுவும் மாற்றம் ஏற்படவில்லை!

”எனது அறுவை சிகிச்சை அனுபவமானது தேவையே இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது. மனிதர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் நம்பிக்கை மட்டுமே. அறுவை சிகிச்சைகூட ஒரு ப்ளேசிபோ இஃபக்ட்-தான் என்பது உறுதியாகிவிட்டது” என்றார் டாக்டர் மோஸ்லீ! இந்த நிகழ்ச்சியை டாக்டர் வெய்ன் டயர் தனது ’Stop the Excuses, Excusus Begone'  போன்ற நூல்களில் குறிப்பிடுகிறார்!


இந்த ப்ளேசிபோ இஃபக்டுகள் சொல்லும் செய்தி என்ன? விஷயம் மருந்தில் இல்லை. மனதில்தான் உள்ளது. மருந்து கிடைத்துவிட்டது என்று மனம் நம்பிவிட்டால், உடலைக் குணப்படுத்தும். அந்த எண்ணம் ஒன்றே போதுமானது. மனதின் இந்த அற்புத ஆற்றலைப் பற்றித்தான்

நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்று வள்ளுவரும் அழகாகச் சொன்னார்.  இதைவிட சிறப்பாக உலகில் வேறுமொழியில் நோய் பற்றி சொல்லப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே.

மருத்துவ உலகின் தந்தை என்று கொண்டாடப்படும் ஹிப்போக்ரேடஸ் கூட வள்ளுவனுக்கு நிகரில்லை. ஆனால் வள்ளுவன் சொன்னதை அவரும் கொஞ்சம் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது மேலே உள்ள மேற்கோளைப் பார்த்தால் புரியும். நோய் வந்த மனிதனுடைய ’காரக்டர்’, குண நலன்கள் என்ன என்று பார்ப்பது அவசியம் என்பதை அவர் சுட்டுகிறார். ’நோய் முதல் நாடி’ என்று வள்ளுவன் குறிப்பிடும் ரகசியத்தை நோக்கி அவரும் நகர்ந்திருக்கிறார். அது என்ன ரகசியம்?

அதுதான் மனம் என்னும் ரகசியம்! ஆம். மனம் என்பது கண்ணுக்குத் தெரியாத உடல். உடல் என்பது கண்ணுக்குத் தெரியும் மனம் என்றுகூடச் சொல்லலாம். ஓஷோ அப்படித்தான் சொன்னார். ஆமாம். மனம் என்பது எங்கோ மூளைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் சமாச்சாரம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. உண்மையில் மனம் என்ற ஒன்று உடல் முழுக்க வியாபித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். நம் நகக் கண்களில் கூட மனம் இருக்கிறது!


உண்மையில் மனம் என்பதும் உடல் என்பதும் ரயில்பெட்டிகள் மாதிரி தனித்தனியாக இல்லை. இதோ இங்கே உடல் முடிகிறது, இதோ இங்கேதான் மனம் ஆரம்பிக்கிறது என்றெல்லாம் சொல்லமுடியாது. ஏனெனில் கண்ணுக்குத் தெரியாத சக்தியால் நாம் ஆக்கப்பட்டிருக்கும்போது, உடலென்ன, மனமென்ன? எல்லாம் ஒன்றுதான். அல்லது ஒன்றுக்குள் ஒன்றுதான். 

எப்படி என்கிறீர்களா? நான் சொல்லவில்லை. விஞ்ஞானம் சொல்கிறது. நம் மூளைக்குள் ஒரு கருத்து தோன்றுமானால் உடனே ’நியூரோபெப்டைட்ஸ்’ என்ற ஒரு சமாச்சாரம் சுரக்கும். நியூரோபெப்டைடுகள் மூலமாகத்தான் மூளையில் உள்ள இரண்டு உயிரணுக்கள் பேசிக்கொள்கின்றன! நமக்கு தமிழ் மாதிரி அணுக்களுக்கு நியூரோபெப்டைடுகள். அணுக்களுக்கு மத்தியில் அணு அணுவாக நடக்கும் காதலும், கோபமும், காமமும் – எல்லாமும் இந்த நியூரோபெப்டைடுகள் மூலம்தான்.


ஆனால் இது மூளைக்கு மட்டும் சொந்தமான பிரத்தியேகமான சமாச்சாரமல்ல. நம் நகத்தை நாம் வெட்டிவிட்டால் மீண்டும் வளர்வதற்கும், நகம் ஒன்று வெட்டப்பட்டுவிட்டது, அந்த இடத்தில் அது மீண்டும் வளர வேண்டுமென்ற செய்தியைச் சொல்வதற்கும் பயன்படும் மொழி நியூரோபெப்டைடுதான்! ஆக, உடல்தான் மனம், மனம்தான் உடல் என்றோ, உடல் முழுக்க மனதின் ஆதிக்கம் உள்ளதென்றோ இப்போதைக்குப் புரிந்துகொள்ளலாம்.

அது சரி. இதனால் என்ன என்கிறீர்களா? இன்பங்களின் பொக்கிஷப் பெட்டியின் சாவியும் மனம்தான். துன்பங்களில் பாண்டோராப் பெட்டியைத் திறக்கும் சாவியும் மனம்தான்! அதுதான் பிரச்சனையே. பிரச்சனை நமக்குத்தான். மருத்துவர்களுக்கோ, மருந்துக் கம்பனிகளுக்கோ அல்ல. நம்முடைய அச்சம்தான் அவர்களின் மூலதனம். ஏனெனில் பயந்துவிட்டால் போதும், அவர்கள் சொல்வது உண்மைதான் என்று நம்பும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். அச்சம் என்பது மரணத்தையும் கொடுக்கும். வீரன் ஒருமுறைதான் சாகிறான். பயந்தாங்கொள்ளிகளே ஆயிரம் முறைகள் சாகிறார்கள் என்று ஷேக்ஸ்பியர் சொன்னதும் நமக்காகத்தான். அச்சம் அவ்வளவு கொடூரமானதா? ஆமாம். எப்படி? இதோ இப்படித்தான்.

ஒரு ஊருக்குக் காலரா வந்தது. அந்த ஊரில் ஒரு ஞானி வாழ்ந்து வந்தார். அவர் காலராவைக் கூப்பிட்டு, “ஏய், இந்த ஊருக்கெல்லாம் வரக்கூடாது. இங்கே நான் இம்மக்களுக்குக் காவலாக இருக்கிறேன். போய்விடு” என்று உத்தரவிட்டார்.

”இல்லை ஐயா, ஆண்டவனின் உத்தரவின்பேரில்தான் நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னது காலரா.

“அப்படியா, சரி. ஆனால் மூன்று பேருக்கு மேல் நீ சாகடிக்கக்கூடாது. இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டால் உன்னை உள்ளே அனுமதிப்பேன். இல்லையேல் கடவுளிடம் நான் பேசிக்கொள்கிறேன்” என்று மிரட்டினார். காலராவும் அப்படியே செய்வதாக வாக்குறுதி அளித்து ஊருக்குள் நுழைந்தது.

முதல் நாள்  மூன்று பேர் காலராவில் இறந்தார்கள். ஆனால் இரண்டாவது நாள் இருபது பேரும், மூன்றாவது நாள் ஐம்பது பேரும் இறந்துபோனார்கள். கடுப்பாகிப் போனார் ஞானி. மூன்றாவது நாளின் முடிவில் காலராவை அழைத்து, ‘ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று கேட்டார்.

“ஐயா, நான் ஒன்றும் செய்யவில்லை. நான் மூன்று பேரை மட்டும்தான் கொன்றேன்” என்றது காலரா.

“அப்படியானால் மற்றவர்களெல்லாம் எப்படி இறந்தார்கள்?” என்று அதட்டினார் ஞானி.

“ஐயா, அவர்களெல்லாம் பயத்திலேயே இறந்து போனார்கள்” என்று சொன்னது காலரா!

ஜிகா வைரஸ் வந்துவிட்டது, ஜிகுஜிகு வைரஸ் வந்துவிட்டது என்று கூப்பாடு போடப்படும் நம் அன்றாட வாழ்க்கையிலும் நடந்துகொண்டிருப்பது இந்த அச்ச வியாபாரம்தான். அச்சத்தால், ஒரு தவறான நம்பிக்கையால் அமெரிக்காவில் நடந்த ஒரு மோசமான நிகழ்ச்சியையும் பார்த்துவிடலாம் வாருங்கள்.

நோசிபோ இஃபக்ட்

ஒரு நம்பிக்கை உயிரணுக்களின் அமைப்பையே மாற்றுகிறது என்பது ஒரு விஞ்ஞான உண்மை. நல்ல நம்பிக்கைகளைத்தான் மருத்துவத்துறை ’ப்ளேசிபோ இஃபக்ட்’ என்று கூறுகிறது. மோசமான, தவறான, உயிர்குடிக்கும் கருத்துக்களையும் உங்களுக்குள் ஒருவர் திணிக்கலாம் அல்லவா? அப்படித் திணிக்கப்பட்ட கருத்துக்கள் செய்யும் வேலையை ’நோசிபோ இஃபக்ட்’ (Nocebo Effect) என்று கூறுகிறார்கள். சாம் லோண்டேயின் கதை அப்படி ஒரு நோசிபோ பற்றியதுதான்.


அமெரிக்காவில் நாஷ்வில் என்ற ஊரில் சாம் லோண்டே என்றொருவர் இருந்தார். ஷூ விற்கும் வேலையைச் செய்துவந்த அவர் வயதாகிவிட்டதால் வேலையிவிட்டு ஓய்விலிருந்தார். அவருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் வந்திருப்பதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறினார்கள். க்ளிஃப்டன் மெடர் என்ற தலைமை மருத்துவர்தான் அவரைப்பரிசோதித்து அப்படிச் சொன்னார். உணவுக்குழாய் புற்றுநோய் வந்தால் உயிர் பிழைக்க முடியாது என்றே கருதப்பட்டது. என்றாலும் சாமின் அனுமதியின்பேரில் அவருக்கு மருத்துவம் செய்யப்பட்டது. மருத்துவர்கள் நம்பியது போலவே, சாமும் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்ட சில வாரங்களில் இறந்து போனார்.

ஆனால் விஷயம் அங்கே முடிந்துவிடவில்லை. அதற்குப் பிறகுதான் ஆரம்பமே ஆகிறது! சாமின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் அந்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தன. அப்படி என்ன அதிர்ச்சி? டாக்டர்கள் அஞ்சியதுபோல அவருடைய உணவுக்குழாயில் புற்றுநோய் எதுவும் இல்லை என்பதுதான் அது! அவரது கல்லீரலில் இரண்டு புள்ளிகளும், நுரையீரலில் ஒரு புள்ளியும் இருந்தது. அவ்வளவுதான். உணவுக்குழாய் புற்றுநோய் எதுவுமே அவருக்கு இல்லை!


அப்படியானால் சாம் எதனால் இறந்தார்? டாக்டர்கள் கொடுத்த ஒரு தவறான நம்பிக்கையால்! அவருக்குள் திணிக்கப்பட்ட ஒரு தவறான கருத்தால்! இதை மரபணு உயிரியல் மருத்துவரான ப்ரூஸ் லிப்டன் Destructive Interference என்று வர்ணிக்கிறார். சாமின் உணவுக்குழாயில் புற்றுநோய் இருந்ததாக டாக்டர்கள் நினைத்தார்கள். அந்த தவறான நம்பிக்கையை அவருக்கும் அவர்கள் ஏற்படுத்தினார்கள். அது அவரது உயிரையே குடித்தது!

அவரது உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதாக நான் நினைத்தேன். அவரும் அப்படித்தான் நினைத்தார். என்னைச் சுற்றியிருந்த டாக்டர்களும் அப்படித்தான் நினைத்தார்கள். நாங்களெல்லாம் நம்பிக்கையை அவருக்குக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டோமோ?” என்று மனசாட்சி உறுத்த டாக்டர் மெடர் ஒரு பேட்டியில் கூறினார்.


இந்த நிகழ்ச்சியை தன் நூலில் குறிப்பிடும் டாக்டர் ப்ரூஸ், மருத்துவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் நம்பிக்கையைத்தான் ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவர்களால் ஒரு நம்பிக்கையை நீக்கவும் முடியும். அது மிகவும் ஆபத்தானது என்று கூறுகிறார். எவ்வளவு உண்மை!

நம்பிக்கை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு எத்தனையோ நிகழ்ச்சிகளையும் உதாரணங்களையும் நான் படித்துள்ளேன். என் வாழ்க்கையிலும் பல உதாரணங்களைப் பார்த்துள்ளேன். ஆனால் சாம் லோண்டேயின்  வாழ்க்கையில் நடந்தது எனக்கு மிகுந்த அதிர்ச்சியூட்டிய ஒரு நிகழ்ச்சி. நம்பிக்கை ஒருவனை வாழவும் வைக்கும், கொல்லவும் செய்யும் என்பதற்கு இதைவிடச் சிறந்த, அதாவது இதைவிட மோசமான உதாரணத்தை நான் இதுவரை பார்க்கவில்லை.

சில்வியாவின் இதயத்துக்கு என்னானது?

சில்வியா என்ற ஒரு பெண்ணுக்கு இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்குப் பிறகு அவருக்கு திடீரென்று ’பீர்’ குடிக்க வேண்டும், ’சிக்கன் நக்கட்ஸ்’ சாப்பிட வேண்டும், வேகவேகமாக ’பைக்’ ஓட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்றெல்லாம் அடங்காத ஆசை வந்தது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தனக்கு இதயமும், நுரையீரலும் தானம் செய்தவரின் குடும்பத்துக்குச் சென்று விசாரித்திருக்கிறார். அவருக்கு அவற்றை தானமாகக் கொடுத்த செத்துப் போன அந்த பதினெட்டு வயது இளைஞர் ஒரு மோட்டர் சைக்கிள் பைத்தியம் என்றும், அவருக்கு ’பீர்’ குடிக்கும் பழக்கமும், ’சிக்கன் நக்கட்ஸ்’ சாப்பிடுவதில் மிகுந்த ஆர்வமும் இருந்தது தெரிய வந்தது! தான் எழுதிய A Change of Heart என்ற நூலில் சில்வியாவே இதையெல்லாம் சொல்லியிருக்கிறார்


ஆஹா, மனதுக்குத்தான் எத்தனை சக்தி! இன்னும் பார்க்கலாம்.